பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இம்மாதம் 20ஆம் தேதியோடு முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. 19.02.2026 கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் காலை 1100 மணிக்கு நடந்த இத்தாலி, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கொழும்புவில் இலைங்கை ஜிம்பாபே அணிகளுக்கு இடையே மதியம் 0300 மணிக்கு நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாபே 6 விக்கட்டுகள் வித்தியாசதில் வென்று குரூப் B பிரிவில் முதலிடத்தைப் பெற்றது. சென்னையில் இரவு 0700 மணிக்கு ஆஃப்கானிஸ்தான் கனடா அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 20.02.2026 அன்று நடந்த கடைசி முதல் சுற்று ஆட்டத்தில், கண்டி, பல்லகெலே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி ஓமன் அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
சூப்பர் 8 ஆட்டங்களுக்காக முதல் சுற்றில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்கள் பெற்ற அணிகள் இரண்டு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1 – இந்தியா, ஜிம்பாபே, மேற்கு இந்தியத்தீவுகள், தென் ஆப்பிரிக்கா
குரூப் 2 – பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து
இதில் முதல் ஆட்டம் 21.02,2026 அன்று கொழும்புவில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது. ஆனால் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படவில்லை. அதனால் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
22.02.2026 அன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. பல்லகலேயில் மதியம் 0300 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் அகமதாபாத்தில் இரவு 0700 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையே நடந்தது. பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்கத்தில் மூன்று மட்டையாளர்களை இழந்த அந்த அணி அதன் பின்னர் சுதாரித்துக்கொண்டு, சிறப்பாக ஆடியது. எய்டன் மர்க்கரம் (4 ரன்), க்விண்டன் டி காக் (6 ரன்), ரியன் ரிக்கிள்டன் (7 ரன்) ஆகிய மூவரும் அர்ஷதீப் சிங், பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் டிவால்ட் ப்ரூவிஸ் (45 ரன்), டேவிட் மில்லர் (63 ரன்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (44 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. பும்ரா மூன்று விக்கட்டுகள் எடுத்தார்.
இரண்டாவதாக ஆடவந்த இந்திய அணியில் இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்), அபிஷேக் ஷர்மா (15 ரன்), திலக் வர்மா (1 ரன்), சூர்யகுமார் யாதவ் (18 ரன்), வாஷிங்டன் சுந்தர் (11 ரன்) என வரிசையாக அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சிவம் துபே (42 ரன்) சற்று நிலைத்து ஆடினார். ஹிருதிக் பாண்ட்யா (18 ரன்) அவருக்கு கொஞ்ச நேரம் கம்பனி கொடுத்தார். ரிங்கு சிங் 2 பந்துகளில் பூஜ்யம் ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 18.5 ஓவர்களில் அனைத்துவிக்கட்டுகளையும் இழந்து 111 ரன் எடுத்தது. எனவே தென் ஆப்பிரிக்க அணி 76 ரன் களில் அபார வெற்றி பெற்றது.
இன்று (23.02.2026) மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பூவாதலையா வென்ற ஜிம்பாபே அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாட வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (9 ரன்) மற்றும் ஷாய் ஹோப் (14 ரன்) விரியவில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய ஹெட்மயர் (85 ரன்) மற்றும் ரோமன் போவெல் (59 ரன்) இருவரும் அதிரடியாக ஆடினர். அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ரூதர்போர்ட் (31 ரன்), ஷெப்பர்ட் (21 ரன்), ஜேசன் ஹோல்டர் (13 ரன்) ஆகியோரும் அதிரடி ஆட்டத்தைத் தொடர, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கட் இழப்பிற்கு 254 ரன் எடுத்தது. இது டி20 உலகக் கோப்பை ஆட்டங்களிலேயே இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த உலகக் கோப்பை ஆட்டங்களில் இதுவே அதிகமான ஸ்கோர். இந்த 254 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 19 சிக்சர்கள் அடித்தது.
இரண்டாவதாக ஆடிய ஜிம்பாபே அணி 17.4 ஓவர்களில் 147 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மே.இ. தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நாளை (24.02.2026) இரவு 0700 மணிக்கு இலங்கை கண்டியில், பல்லேகலே மைதானத்தில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகுிறது. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி என உள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில், சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தலைமை தேர்தல் ஆணையம் 2025ல் தொடங்கியது. இதற்காக எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்றது.
இதன் பின்னர் டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில், 97.30 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதன்பின் 5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் இருந்தனர்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும் கடந்த 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்க்க 22.8 லட்சம் மனுக்கள்; பெயர் நீக்க 2 லட்சம்; திருத்தம் செய்ய 9.90 லட்சம் மனுக்கள் என மொத்தம் 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதை அடுத்து, அந்த மனுக்களை பரிசீலித்து, இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்கள் இன்று பட்டியலை வெளியிட்டனர். அதன்படி,
தென்காசி: தென்காசி மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 12,64,411 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,18,063 பேரும், பெண் வாக்காளர்கள் 6,46,180 பேரும், மூன்றாம் பாலினம் 168 பேரும் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று 23ம் தேதி மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை- 11,92,194 காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,76,299 வாக்காளர்களும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,96,052 வாக்காளர்களும் உள்ளனர். ஸ்ரீபெரும்புதூர்- 3,75,921, உத்திரமேரூர்- 2,43,922, ஆலந்தூர்- 2,9,052 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை- 15,10,550 ஆக உள்ளது,. இவர்களில், ஆண்கள்- 7,51,016 ; பெண்கள்- 7,59,390 ; 3ம் பாலினம்- 144
* தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் இளம் பகவத் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் படி, வாக்காளர்கள் எண்ணிக்கை- 13,6,624. ஆண்கள்- 6,71,742 பெண்ள்- 7,0,689 3ம் பாலினத்தவர்-193 வாக்காளர்ள் உள்ளனர்.
*செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை- 22,60,03 ஆண்கள்- 11,04,511 பெண்கள்- 11,55,144, 3ம் பாலினம்- 381 வாக்காளர்கள் உள்ளனர்.
* விருதுநகர் மாவட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் படி, வாக்காளர்கள் எண்ணிக்கை- 14,97,417. ஆண்கள்- 7,28,539 பெண்கள்- 7,68,62 3ம் பாலினம்- 246 வாக்காளர்கள் உள்ளனர்.
* நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள், 6,35,299, பெண் வாக்காளர்கள், 6,75,452, இதரர், 200, மொத்தம்: 13,10,951. நீக்கம் செய்யப்பட்டவர்கள், 1,43,321 பேர்.
* சிவகங்கையில் ஆண் வாக்காளர்கள் -5,44,035, பெண் வாக்காளர்கள்- 5,66,526, மூன்றாம் பாலினத்தவர்கள்-38, மொத்த வாக்காளர்கள்-11,10,599.
* சேலத்தில் ஆண் வாக்காளர்கள் – 13,70,962, பெண் வாக்காளர்கள்- 13,84,548, மூன்றாம் பாலினத்தவர்கள்-320, மொத்த வாக்காளர்கள்-27,55,830.
* திருச்சியில் ஆண் வாக்காளர்கள் – 10,31,354, பெண் வாக்காளர்கள்- 10,94,642, மூன்றாம் பாலினத்தவர்கள்-307, மொத்த வாக்காளர்கள்-21,26,303.
* கடலூரில் ஆண் வாக்காளர்கள் – 9,91,527, பெண் வாக்காளர்கள்- 10,23,979, மூன்றாம் பாலினத்தவர்கள்-293, மொத்த வாக்காளர்கள்-20,15,196.
* மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 7,29, 216, இதில் ஆண் வாக்காளர்கள் 3,60,493, பெண் வாக்காளர்கள் 3,68,676, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 பேர் இடம் பெற்றுள்ளனர்.
* கோவையில் ஆண் வாக்காளர்கள் – 13,00,889, பெண் வாக்காளர்கள்- 13,95,396, மூன்றாம் பாலினத்தவர்கள்-528, மொத்த வாக்காளர்கள்- 26,96,813.
* சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை- 27,55,830. ஆண்கள்-13,84,548 பெண்ள்- 13,70,962 3ம் பாலினத்தவர்- 320 பேர் உள்ளனர்.
தொடர்ந்து மாவட்டம் வாரியான புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன. மாநிலம் முழுதும் உள்ள இறுதி வாக்காளர் விவரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடுகிறார்.
‘மனதின் குரல் (131ஆவது பகுதி)’ ஒலிபரப்பு நாள் : 22.02.2026 தமிழில்/குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
உலகை ஈர்த்த வெற்றிகரமான ஏஐ மாநாடு
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம். இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit – உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது. பல நாடுகளின் தலைவர்கள், தொழில்துறையின் ஜாம்பவான்கள், புதுமைகள் படைப்போர், தொடக்கத்தொழில் துறையோடு தொடர்புடையவர்கள் எல்லாம் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டில் பங்கெடுக்க வேண்டி, பாரத் மண்டபத்தில் குழுமினார்கள். வரவிருக்கும் காலத்திலே செயற்கை நுண்ணறிவுச் சக்தியின் பயன்பாட்டினை உலகம் எந்தவகையில் மேற்கொள்ளும் என்ற வகையிலே இந்த உச்சிமாநாடு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, உச்சிமாநாட்டின் போது உலகத் தலைவர்கள், தொழில்நுட்பத் துறையில் முன்னணி வகிப்போர் ஆகியோரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. செயற்கை நுண்ணறிவின் கண்காட்சியிலே, உலகத்தலைவர்கள் ஏராளமான பொருட்களைக் காட்சிப் படுத்தினார்கள். இவற்றில் குறிப்பாக நான் இரண்டு விஷயங்கள் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
உச்சி மாநாட்டிலே இந்த இரு பொருட்களும் உலகெங்கிலிருந்தும் வந்திருந்த தலைவர்களை மிகவும் கவர்ந்தன. முதல் பொருள் அமூலின் அரங்கத்தில் இருந்தது. விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதிலே எப்படி செயற்கை நுண்ணறிவு உதவிகரமாக இருக்கிறது என்று இதிலே கூறப்பட்டிருந்தது. மேலும் எப்படி 24 மணி நேர உதவியால், விவசாயிகள் தங்களுடைய கால்நடை மற்றும் விலங்குகளின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்கிறார்கள் என்பதும் விளக்கப்பட்டிருந்தது.
நண்பர்களே, இரண்டாவது விஷயம் நம்முடைய கலாச்சாரத்தோடு தொடர்புடையது. எப்படி செயற்கை நுண்ணறிவின் உதவியோடு நாம் நம்முடைய பண்டைய நூல்களை, நமது தொன்மையான ஞானத்தை, நமது கையெழுத்துப் படிகளை எப்படிப் பாதுகாத்து வருகிறோம், இன்றைக்கும் தலைமுறைக்கு உகந்தபடி அதைக் காத்து வருகிறோம் என்பதை உலகெங்கிலுமிருந்தும் வந்திருந்த தலைவர்கள் கவனித்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
நண்பர்களே, கண்காட்சியின் போது வெளிப்படுத்தப்பட சுச்ருத சம்ஹிதை தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல்படியாக, தொழில்நுட்பத்தின் துணை கொண்டு நாம் கையெழுத்துப் படிகளின் படத்தரத்தை மேம்படுத்தி அவற்றைப் படிக்க உகந்ததாக எப்படி ஆக்குகிறோம் என்பது ஒன்று. அடுத்த கட்டமாக இந்தப் படங்கள் இயந்திரத்தால் படிக்கும் வகையிலான எழுத்துக்களாக மாற்றப்பட்டன. அடுத்த படியாக, இயந்திரம் வாயிலாகப் படிக்கக்கூடிய உரையை செயற்கை நுண்ணறிவின் மாதிரி படித்தது. அதோடு கூடவே அடுத்தபடியாக தொழில்நுட்பத்தின் இந்த விலைமதிப்பில்லாத ஞானம் இந்திய மொழிகள் மற்றும் அந்நிய மொழிகளில் எப்படி மொழியாக்கம் செய்யப்படுகிறது என்பதும் செயல்படுத்திக் காட்டப்பட்டது. பாரதநாட்டின் தொன்மையான ஞானம், நவீன வடிவத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ள உலகத் தலைவர்கள் மிகவும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.
நண்பர்களே, இந்த உச்சிமாநாட்டிலே செயற்கை நுண்ணறிவுத் துறையிலே பாரதத்தின் அற்புதமான திறமைகளை உலகால் பார்க்க முடிந்தது. இந்த வேளையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று செயற்கை நுண்ணறிவு மாதிரிகளும் வெளியிடப்பட்டன. இதுவரையிலான மிகவும் பெரிய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடாக இது இருக்கிறது. இந்த உச்சி மாநாடு தொடர்பாக இளைஞர்களின் உற்சாகமும், ஊக்கமும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. நான் நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த உச்சி மாநாட்டின் வெற்றிக்காக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக அணிகளில் பாரத வீரர்கள்!
நண்பர்களே, யார் விளையாடுகிறார்களோ அவர்கள் மேம்படுகிறார்கள் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. விளையாட்டுக்கள் நம்மை இணைக்கின்றன. இப்போது நீங்கள் உலகக்கோப்பை டி20 ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கூட ஏதோ ஒரு சிறப்பான ஆட்டக்காரர் மீது உங்கள் கவனம் நிலைத்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஜெர்சி வேண்டுமானால் வேறோர் நாட்டினுடையதாக இருக்கலாம், ஆனால் பெயரைக் கேட்டவுடனேயே, அட, இவரு நம்ம நாட்டுக்காரரு இல்லையா என்று தோன்றும். அப்போது மனதின் ஓரத்தில் லேசாக ஒரு சந்தோஷம் மலரும்.
ஏனென்றால், அந்த விளையாட்டு வீரர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர், அவருடைய குடும்பம் வசிக்கும் அந்த நாட்டிற்காக விளையாடுகிறார் அவர். கானடா, அமெரிக்கா, ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல நாடுகளின் அணிகளில் இன்று பாரத வம்சாழியினர் விளையாடி வருகின்றார்கள். இவர்கள் தங்கள் தங்கள் நாடுகளுடைய மேல்சட்டைகளை அணிந்து கொண்டு களமிறங்குகிறார்கள், முழு ஈடுபாட்டோடு அந்த நாட்டின் பிரதிநிதிகளாக விளையாடுகிறார்கள். அந்த நாட்டவர்களுக்கு அவர்கள், அவர்கள் நாட்டுடைய நாயகர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய பெயர், அவர்களுடைய மொழி, அவர்களுடைய நடைமுறை ஆகியவற்றில் எங்காவது பாரத நாட்டு மணம் கண்டிப்பாக வீசும்.
கானடா அணியில் மிகவும் அதிக அளவிலே இந்திய வம்சாவழியினர் விளையாடுகிறார்கள். அணியின் கேப்டன் தில்ப்ரீத் பாஜ்வா பிறந்தது பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நகரிலே. நவ்நீத் தாலீவால் சண்டீகர் நகரைச் சேர்ந்தவர். இந்தப் பட்டியலில் ஹர்ஷ் டாகர், ஸ்ரேயஸ் மோவா போன்ற பல பெயர்கள் உண்டு, இவர்கள் கானடா நாட்டோடு சேர்த்து, பாரதத்துக்கும் கௌரவம் ஈட்டித் தருகிறார்கள். அமெரிக்க அணியிலே பல முகங்கள் பாரத உள்நாட்டுக் கிரிக்கெட்டிலிருந்து வெளியானவை. அமெரிக்க அணியின் கேப்டனான மோனாங்க் படேல், குஜராத்தின் 16 வயதுக்கு உட்பட்டவர்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் விளையாடியிருக்கிறார். மும்பையின் சௌரப், ஹர்மீத் சிங், தில்லியின் மிலிந்த் குமார் என இவர்கள் அனைவரும் அமெரிக்க அணியின் பெருமைகள். ஓமான் அணியிலே இன்று பல முகங்கள், முன்னதாக பாரதத்தின் பல்வேறு மாநிலங்களுக்காக விளையாடியவர்கள். ஜதிந்தர் சிங், விநாயக் சுக்லா, கரன், ஜய், ஆஷீஷ் போன்ற வீரர்கள், ஓமான் கிரிக்கெட்டின் பலமான தூண்கள்.
நியூசீலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலியின் அணிகளிலும் பாரத வம்சாவழியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களுக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எத்தனையோ பாரத வம்சாவழியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களுடைய நாட்டின் பெருமையை அதிகரித்து வருகிறார்கள். அங்கேயிருக்கும் இளைய விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார்கள். பாரத நாட்டுத் தன்மையின் சிறப்பு அம்சமே இதுதான். மேலும் தங்களுடைய கர்ம பூமி, அதாவது எந்த நாட்டிலே வசிக்கிறோமோ அதன் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
உறுப்பு தானங்களால் உயிர் வாழ்பவர்கள்!
எனதருமை நாட்டுமக்களே, எந்தவொரு தாய் தந்தைக்கும் தங்களுடைய குழந்தைகளை இழப்பதை விடப் பெருந்துயரம் தரும் விஷயம் வேறொன்றும் இருக்க முடியாது. சிறு வயதுக் குழந்தையை இழக்கும் துக்கம் இன்னும்கூட ஆழமாக இருக்கும். சில நாட்கள் முன்பாக, கேரளத்தின் இளம் குழந்தையான ஆலின் ஷெரின் ஆப்பிரகாமை நாம் இழந்து விட்டோம். வெறும் பத்து மாதங்களேயான இந்தச் சேய் நம் உலகை விட்டுப் பறந்து போனது. கற்பனை செய்து பாருங்கள்!! நெடிய வாழ்க்கை வாழ வேண்டிய குழந்தை, திடீரென முடிவுக்கு வந்தது. எத்தனையோ கனவுகள்-சந்தோஷங்கள் எல்லாம் நிறைவேறாமல் கருகின. அந்தக் குழந்தையின் பெற்றோர் கடந்திருக்கும் வலியையும், துயரையும், நம்மால் வார்த்தைகளில் அடைக்க முடியாது. ஆனால் இத்தனை துக்கத்துக்கு இடையேயும் ஆலினுடைய தகப்பனாரான அருண் ஆப்பிரஹாமும், அவளுடைய தாய் ஷெரினும் மேற்கொண்ட ஒரு தீர்மானம், நாட்டு மக்கள் அனைவரின் இதயங்களிலும் அவர்களின்பால் பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.
அவர்கள் ஆலினுடைய உடல் உறுப்புக்களைத் தானம் செய்யத் தீர்மானித்தார்கள். இந்த ஒரு தீர்மானத்தால் அவர்களுடைய எண்ணம் எத்தனை பெரியது, அவர்களுடைய ஆளுமை எத்தனை விசாலமானது என்பது தெளிவாகிறது. ஒருபுறத்திலே தங்களுடைய மகளை இழந்து துக்கத்தில் வாடிக் கொண்டிருந்தார்கள், ஆனால் மறுபுறத்திலோ மற்றவர்களுக்கு உதவும் உணர்வு அவர்களுக்கு உள்ளே நிரம்பியிருந்தது. இப்படிப்பட்ட ஒரு நாளை எந்த ஒரு குடும்பமும் சந்திக்கக்கூடாது என்று அவர்கள் கருதினார்கள். ஆலின் ஷெரின் ஆப்பிரஹாம் இன்று நம்மிடையே இல்லாமல் போனாலும் அவருடைய பெயர் தேசத்தின் மிகக்குறைவான வயதுடைய உடல் உறுப்புதானம் செய்தோரின் பட்டியலில் சேர்ந்து விட்டது. நண்பர்களே, இப்போதெல்லாம் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக யாருக்கு உறுப்புகளுக்கான தேவை இருக்கிறதோ அவர்களுக்கு உதவிகள் கிடைத்து வருகின்றன. இதோடு கூடவே மருத்துவ ஆய்வுகளுக்கும் பேருதவியாக இருக்கிறது. இந்தத் திசையிலே பல நிறுவனங்களும், மக்களும் அசாதாரணமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
நண்பர்களே, கேரளாவின் ஆலினைப் போலவே, உறுப்பு தானம் வாயிலாக பலரும் மற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்கையை அளித்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக தில்லியின் லக்ஷ்மி தேவி அவர்கள் கடந்த ஆண்டு கேதார்நாத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டார். இதன் பொருட்டு இவர் 14 கி.மீட்டர் தொலைவு கால்நடையாகப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இவருடைய இந்த யாத்திரையை இருதயமாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு பேராச்சரியத்தை அளிக்கலாம். இவருடைய இருதயம் வெறும் 15 சதவீதம் மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்செயல் நிகழ்வாக இவருக்கு உறுப்புதானம் செய்த, இறந்த ஒருவருடைய இருதயம் கிடைத்தது. இவருடைய வாழ்க்கையே பிறகு மாறிப்போனது. மேற்கு வங்கத்தின் கௌராங்க் பேனர்ஜி அவர்கள் இருமுறை நாதூலா சென்றிருக்கிறார். இந்த இடம் கடல்மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் இருப்பது. இதில் விசேஷம் என்னவென்றால், இவர் இந்தச் சாதனையை நுரையீரல் மாற்றுக்குப் பிறகு மேற்கொண்டிருப்பது தான். ராஜஸ்தானின் சீகரைச் சேர்ந்த ராம்தேவ் சிங் அவர்களுக்கு சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இன்று சிறப்பான வகையிலே விளையாட்டுக்களில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
நண்பர்களே, இப்படிப்பட்ட உத்வேகமளிக்கும் எடுத்துக்காட்டுகள் உங்களுக்கு ஏராளமானவை கிடைக்கும். யாரோ ஒருவருடைய நல்ல முன்னெடுப்பு, எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கிறது என்பதைத் தான் இவையெல்லாம் மீண்டும் நிரூபிக்கின்றன. இப்படிப்பட்ட பிரமாதமான செயலைச் செய்த இவர்கள் அனைவருக்கும் நான் என் இதயப்பூர்வமான போற்றுதல்களை அளிக்கிறேன்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சுதந்திரத்தின் அமுதக்காலத்தின் போது செங்கோட்டையிலிருந்து நான் ஐந்து உறுதிப்பாடுகள் குறித்துப் பேசியிருந்தேன். அவற்றிலே ஒன்று, அடிமை மனோபாவத்திலிருந்து விடுதலை. இன்று தேசம், அடிமைத்தனத்தின் அடையாளங்களைத் துறந்து, பாரதத்தின் கலாச்சாரத்தோடு இணைந்த விஷயங்களுக்கு மகத்துவம் அளிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நோக்கில், நமது குடியரசுத் தலைவர் மாளிகையும் கூட, ஒரு மகத்துவமான முன்னெடுப்பைச் செய்திருக்கிறது. நாளை, அதாவது 23 ஃபிப்ரவரியன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் ராஜாஜி உற்சவம் கொண்டாடப்படும் சந்தர்ப்பத்திலே, குடியரசுத்தலைவர் மாளிகையின் மையப் பகுதியில், C. ராஜகோபாலாச்சாரி அவர்களுடைய உருவச்சிலை திறந்து வைக்கப்படும்.
இவர் தான் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தார். அதிகாரத்தைப் பதவியாக அல்லாமல், சேவையாகப் பார்த்த மனிதர்களில் ஒருவர் இவர். பொதுவாழ்விலே இவருடைய நடத்தை, ஒழுங்குமுறை மற்றும் சுதந்திரமான நிலைப்பாடு ஆகியன இன்றும்கூட உத்வேகம் அளிக்கவல்லவை. துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரிட்டன் நாட்டு ஆட்சியாளர்களின் உருவச்சிலைகள் வைத்திருக்கப்பட்டன, ஆனால் தேசத்தின் மகத்தான திருமகன்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
பிரிட்டிஷ் கட்டடக் கலைஞரான எட்வின் லுட்யன்ஸின் உருவச்சிலை கூட குடியரசுத்தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த உருவச்சிலையின் இடத்திலே ராஜாஜி அவர்களின் உருவச்சிலை வைக்கப்படும். ராஜாஜி விழாவின் போது, ராஜகோபாலாச்சாரி அவர்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியும் இடம்பெறும். இந்தக் கண்காட்சி ஃபிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெறும். சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு நீங்களும் இதைக் கண்டிப்பாகக் காணுங்கள்.
டிஜிட்டல் கைது ஏமாற்றுவேலை! எச்சரிக்கை!
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில், நான் டிஜிட்டல் கைது பற்றி விரிவான முறையிலே பேசியிருக்கிறேன். இதன் பிறகு டிஜிட்டல் கைது மற்றும் டிஜிட்டல் மோசடி தொடர்பாக நமது சமூகத்திலே கணிசமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றாலும், நமக்கருகே நடைபெறும் சில சம்பவங்கள் மன்னிக்க முடியாதவை. அப்பாவி மனிதர்கள் டிஜிட்டல் கைது மற்றும் நிதி மோசடிக்கு இரையாக்கப்படுகிறார்கள். மூத்த குடிமக்களுடைய வாழ்நாள் சேமிப்புகள் சூறையாடப்பட்டன என்ற செய்தியை நாம் பலமுறை கேள்விப்படுகிறோம். குழந்தைக்களுக்கான பள்ளிக்கட்டணம் செலுத்த சேமித்து வைக்கப்பட்டிருந்த பணம் கூட சில வேளைகளில் களவாடப்பட்டிருக்கிறது.
வியாபாரிகள் ஏமாற்றப்பட்டிருக்கும் செய்திகளையும் நாம் காண்கிறோம். யாரோ ஒருவர் தொலைபேசியில் அழைத்து, நான் ஒரு பெரிய அதிகாரி, நீங்கள் சில தகவல்களைப் பகிர வேண்டும் என்கிறார். அதன் பிறகு அப்பாவி ஜனங்கள் அவர்கள் கூறுவது போலவே நடந்து கொள்கிறார்கள். இப்படி இவர்கள் நடந்து கொண்டவுடனேயே இவர்களுடைய பல்லாண்டுக்கால கடினமான உழைப்பின் பணம் நொடிப்பொழுதிலே காணாமல் போகிறது. பல வேளைகளில் அயல்நாடுகளில் அமர்ந்திருக்கும் குற்றவாளிகள் கூட இப்படிப்பட்ட சைபர் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள், இவர்களைப் பிடிப்பது மிகவும் கடினமான செயல். ஆகையால் நீங்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும், எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், இது மிகவும் அவசியம்.
சலிக்காமல் கேஒய்சி புதுப்பியுங்கள்!
நண்பர்களே, நீங்கள் அனைவரும் KYC – Know Your Customer அதாவது உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் செயல்முறை பற்றித் தெரிந்து வைத்திருப்பீர்கள் இல்லையா? சில நேரங்களில் உங்களுடைய வங்கியிடமிருந்து KYC புதுப்பிக்குமாறோ, மீண்டும் KYC யை செய்யச் சொல்லியோ தகவல் வரும் போது மனதில் ஒரு கேள்வி எழும் – நான் தான் முன்பேயே KYC செய்தாகி விட்டதே, மறுபடிமறுபடி ஏன் செய்ய வேண்டும்? தயவு செய்து ஆத்திரப்பட வேண்டாம் என்று நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன், இவை அனைத்தும் உங்கள் பணத்தைப் பாதுகாப்பாய் வைத்திருக்கவே செய்யப்படுகின்றன. இப்போதெல்லாம் ஓய்வூதியம், காப்பீடு, மானியங்கள், யுபிஐ அனைத்துமே வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்களனைவரும் நன்கறிவீர்கள். இதன் காரணமாகத் தான் வங்கிகள் அவ்வப்போது மீண்டும் KYCயை செய்கிறார்கள், இதனால் உங்கள் வங்கிக் கணக்கு பாதுகாப்பாய் இருப்பதை உறுதி செய்யத்தான்.
இதிலும் கூட நீங்கள் ஒருவிஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குற்றவாளிகள் மோசடி அழைப்பை விடுக்கும் போது, எஸ் எம் எஸ் அல்லது இணைப்பை அனுப்புகிறார்கள். ஆகையால் நாம் தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், அப்படி ஏமாற்றுபவர்களின் வலையிலே விழக்கூடாது. KYC அல்லது மீண்டும் KYC என்பது உங்கள் வங்கியின் கிளை அல்லது அதிகாரப்பூர்வமான செயலி அல்லது அதிகாரப்பூர்வமான முறையில் மட்டுமே செய்ய வேண்டும். ஒரு முறை அனுப்பப்படும் கடவு எண் – ஓடிபி, ஆதார் எண் அல்லது வங்கிக்கணக்கு தொடர்பான தகவல்களை யாருக்கும் அளிக்க வேண்டாம், மிகவும் முக்கியமான விஷயம், உங்களுடைய கடவுச்சொல்லை அவ்வப்போது கண்டிப்பாக மாற்றி வரவும். ஒவ்வொரு பருவநிலையின் போது நமது உணவுப் பழக்கம் எப்படி மாறுகிறதோ, உடுத்தும் உடை மாறுகிறதோ, அதே போல சில நாட்களுக்கு ஒருமுறை உங்களுடைய கடவுச்சொல்லையும் கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்ற விதிமுறையையைப் பின்பற்றுங்கள்.
நண்பர்களே, தற்போது தான் இந்திய ரிசர்வ் வங்கி இந்த விஷயங்கள் குறித்து நிதிசார் விழிப்புணர்வு இருவார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிதிசார் விழிப்புணர்வு பற்றிய இந்த இயக்கம் இப்போது ஆண்டு முழுவதும் நடைபெற்றுவரும். ஆகையால் இந்திய ரிசர்வ் வங்கியின் செய்திகளை கவனமாகப் பின்பற்றவும், உங்களுடைய KYCயை புதுப்பித்து வரவும்.
நினைவில் கொள்ளுங்கள் – சரியான KYC, காலாகாலத்தில் மீண்டும் KYC செய்வது கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்கும், நிதிசார் விழிப்புணர்வுடைய குடிமகனாக மாறுங்கள், ஏனென்றால் நல்ல விவரமான குடிமக்களால் தான் பலமான தற்சார்புடைய பாரதம் உருவாகும்.
வெற்றிகரமான விவசாயிகள்
என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது விவசாயிகள் நமக்கு உணவளிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் மண்ணை வழிபடுபவர்கள். மண்ணை பொன்னாக ஆக்குவது என்றால் என்ன என்பதை நாம் நமது விவசாயிகளிடமிருந்து தான் கற்க வேண்டும், நமது இன்றைய விவசாயிகள் எல்லாம் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டின் துணையோடு பயணிக்கிறார்கள். நமது விவசாயிகள் விளைச்சல் மட்டுமல்ல, தரம், மதிப்புக்கூட்டுதல் மற்றும் புதிய சந்தைகள் மீதும் கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள் என்பது எனக்கு மிகுந்த உவப்பை அளிக்கிறது.
ஓடிஷாவின் ஹிரோத் படேல் என்ற ஒரு இளைய விவசாயியோடு தொடர்புடைய தகவல்கள் உண்மையிலேயே கருத்தூக்கம் அளிக்கவல்லவை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் முன்புவரை இவர் தன்னுடைய தந்தையார் சிவ்சங்கர் படேலோடு பாரம்பரியமான முறையில் நெல் பயிர் செய்து வந்தார்; ஆனால், விவசாயத்தைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினார். தனது வயலில் இருக்கும் குளத்தின் மீது இவர் பலமான வலைப்பின்னல் அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மீது கொடியில் வளரக்கூடிய காய்கறிகளை விளைவித்தார், குளத்தின் நாலாபுறங்களிலும் வாழை, மாதுளை, தென்னை ஆகியவற்றை நட்டார், குளத்திலே மீன்களையும் வளர்க்கத் தொடங்கினார். அதாவது ஒரே இடத்திலேயே பாரம்பரியமான வேளாண்மை நடக்கிறது, காய்கறிகளும், பழங்களும், மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இதனால் நிலம் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது, நீர் சேமிக்கப்படுகிறது, கூடுதல் வருவாயும் கிடைக்கிறது. இன்று தொலைவான தூரத்திலிருந்தும் விவசாயிகள் இவருடைய மாதிரியைக் காண வருகிறார்கள்.
நண்பர்களே, கேரளத்தின் திரிசூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்திலே ஒரே ஒரு வயலில் மட்டும் 570 வகையான நெல் பயிர் செய்யப்படுகின்றன. இதிலே உள்ளூர் ரகங்களும் உண்டு, மூலிகை ரகங்களும் உண்டு, பிற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ரகங்களும் உண்டு. இது வெறும் வயல் அல்ல, விதைகளின் மரபைப் பாதுகாக்கும் பேரியக்கம் ஆகும். நமது விவசாயிகளின் உழைப்பின் பலன் எண்ணிக்கையிலும் காணப்படுகிறது. பாரதம் இன்று உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக ஆகி விட்டது. 15 கோடி டன்களுக்கும் மேலாக அரிசி உற்பத்தி என்பது சிறிய சாதனை அல்ல. நாம் நமது தேவைகளை நிறைவேற்றி வருகிறோம், உலகின் உணவுக்கூடைக்கும் பங்களிப்பு அளித்து வருகிறோம்.
நண்பர்களே, இப்போது விவசாய விளைபொருட்கள் விமானங்கள் வாயிலாகவும் அதிக சுலபமாக அயல்நாடுகளைச் சென்றடைகின்றன. கர்நாடகத்தின் நஞ்ஜன்குடின் வாழையும், மைசூரூவின் வெற்றிலையும், இண்டி எலுமிச்சையும் மாலத்தீவுகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த விளைச்சல் எல்லாம் தங்களுடைய சுவை மற்றும் தரத்திற்காக புகழ் பெற்றவை, இவற்றுக்குப் புவிசார் குறியீடும் கிடைத்திருக்கிறது. நண்பர்களே, இன்றைய விவசாயி தரத்தையும் விரும்புகிறார், அளவையும் அதிகரிக்கிறார், தனது அடையாளத்தையும் ஏற்படுத்தி வருகிறார். நீங்கள் உங்கள் அருகே இப்படிப்பட்ட நூதனமான விவசாய சகோதர சகோதரிகள் இருந்து அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் கண்டிப்பாகத் தெரியப்படுத்துங்கள். ஏனென்றால் விவசாயி முன்னேறும் போது, நமது தேசமும் முன்னேறுகிறது.
கேரளத்தை மகிமைப்படுத்திய கும்பமேளா
என் கனிவான நாட்டுமக்களே, கடந்த ஆண்டு, இதே நேரத்தில் மகாகும்பமேளாவின் அற்புதமான காட்சிகளை நீங்கள் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பீர்கள். சங்கத்தின் கரையில் பெருகியோடிய மக்கள் சமுத்திரம், நம்பிக்கையின் அளவில்லாத பெருக்கு, மற்றும் முழுக்காட்டின் புனிதமான கணங்களில், ஏதோ பாரதம் தனது சனாதன விழிப்புணர்வால் ஞானம் பெற்றது போன்றதொரு உணர்வு. நண்பர்களே, மகாகும்பமேளாவின் அதே பெருக்கு, அதே மாக மாதம், அதே சிரத்தையின் கீதம், வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பெருக்கெடுக்கும் போது, ஒரு புதிய அடையாளம் ஏற்படுகிறது. அந்த அடையாளம் தான் கேரளத்தின் கும்பமேளா.
நண்பர்களே, கேரள பூமியிலே, பாரதப்புழை நதிக்கரையின் திருநாவாயிலே பல நூறாண்டுகள் பழமையான பாரம்பரியம் இருந்து வருகிறது, அதுதான் மாமாங்கம். இதைப் பலர் மகாமக மஹோத்சவம் அல்லது கேரளத்தின் கும்பமேளா என்றும் அழைக்கிறார்கள். மாக மாதத்தின் போது பவித்திரமான நதியிலே நீராடி, அந்தக் கணத்தை வாழ்க்கையின் மறக்கவொண்ணா நினைவாக ஆக்குவதுதான் இதன் ஆன்மா. காலப்போக்கிலே இந்தப் பாரம்பரியம் காணாமல் போனது. கிட்டத்தட்ட 250 ஆண்டுக்காலமாக இந்த ஏற்பாடு முன்னர் நடந்த அந்தக் கோலாகலத்தோடும், மகோன்னதத்தோடும் நடக்கவில்லை. ஆனால் இன்று நம்முடைய பாரம்பரியத்தை மீண்டும் அடையாளம் கண்டுவரும் நமது தேசத்திலே, வரலாறு மீண்டும் மாறத் தொடங்கியிருக்கிறது. இந்த முறை எந்தவொரு பெரிய அறிவிப்பும் இல்லாமல் கேரளத்தின் கும்பமேளா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கென எந்தவொரு சிறப்பான செய்திப்பரப்பும் செய்யப்படவில்லை. மக்கள் வாய்மொழி வாயிலாக ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டார்கள், செவிவழிச் செய்தியாக தகவல் பரிமாறப்பட்டது, பார்த்துக் கொண்டிருக்கும் போதே பக்தர்கள் திருநாவாயா வரத் தொடங்கினார்கள்.
நண்பர்களே, மகாகும்பமாகட்டும், கேரளத்தின் கும்பமேளாவாகட்டும் அல்லது வெறும் நீராடும் திருநாளாகட்டும். இது நமது பண்டைய நினைவுகளின் விழிப்பு. இது கலாச்சாரத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தல். வடக்கு முதல் தெற்கு வரை, நதிகள் வேறாக இருக்கலாம், கரைகள் வேறாக இருக்கலாம், ஆனால் நம்பிக்கையின் பெருக்கு ஒன்றுதான், இதுதான் பாரதம்.
மகத்தான தலைவர் ஜெயலலிதா
நண்பர்களே, நமது தேசத்திலே சிலர் எப்போதும் மக்களின் இதயங்களில் குடிகொண்டிருப்பார்கள், அவர்கள் சமூகநலனுக்காக செயலாற்றியவர்களாக இருப்பார்கள். தங்களுடைய நற்காரியங்கள் வாயிலாக மக்களுக்கு முதன்மை அளித்திருப்பார்கள். அம்மா ஜெயலலிதா அவர்கள், மக்கள் நேசிக்கும் இப்படிப்பட்ட ஒரு தலைவர்.
பிப்ரவரி 24ஆம் தேதி இவருடைய பிறந்த நாளாகும். தமிழ்நாட்டு மக்களுக்கு இவரிடம் இருக்கும் ஈடுபாடு எந்த அளவுக்கு ஆழமானது என்றால், இன்றும்கூட நான் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இது நன்கு தெரிகிறது. அம்மா ஜெயலலிதா அவர்களின் பெயரை நான் குறிப்பிட்டவுடனேயே, தமிழ்நாட்டு மக்களின் முகங்கள் மலர்கின்றன. நமது தாய்க்குலம் குறிப்பாக அவருடன் ஆழமாக இணைந்திருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று சொன்னால், அரசு அதிகாரத்தில் இருந்த வேளையிலே, இவர் பெண்கள்-தாய்மார்கள்-சகோதரிகளுக்காக பாராட்டுக்குரிய பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீராக வைத்திருக்க சிறப்பான வழிமுறைகளைக் கடைப்பிடித்தார். அவரிடத்திலே தேசபக்தி உணர்வு மிகவும் செறிவாக இருந்தது. இதோடு கூடவே, பாரதத்தின் கலாச்சாரப் பாரம்பரியம் மீதும் அவருக்கு மிகுந்த பெருமிதம் இருந்தது. அம்மா ஜெயலலிதா அவர்களுடனான என்னுடைய ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு உரையாடலும் எனது மனதிலே இன்றும்கூட நன்கு பசுமையாகப் பதிந்திருக்கின்றன. அவர் குஜராத்திலே 2002 மற்றும் 2012ஆம் ஆண்டிலே நடந்த என்னுடைய பதவியேற்பு விழாவிலே கலந்து கொண்டார். நாங்கள் இருவரும் எங்களுடைய மாநிலங்களின் முதல்வர்களாக அப்போது இருந்த வேளையில், நல்லாளுகை போன்ற விஷயங்களில் அடிக்கடி எங்களுக்கிடையே உரையாடல் நடைபெற்று வந்தது.
அவருடைய எண்ணம் மிகவும் தெளிவாக இருந்தது, கருத்துக்கள் மிகவும் நிறைவாக இருந்தன. இதுதான் அவருடைய மிகப்பெரிய சிறப்பு. பல ஆண்டுகள் முன்பாக அவர் பொங்கல் திருநாளன்று மதிய உணவு அருந்த சென்னைக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவருடைய அந்த நட்புணர்வை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. ஒருமுறை மீண்டும் நான் அவருக்கு என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.
ஜெயலலிதா அவர்களுக்கு என் நினைவாஞ்சலிகள். சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும்.
மாணவர்களே மனஅழுத்தமின்றிப் படியுங்கள்!
எனதருமை நாட்டுமக்களே, இப்போது நான் நம்முடைய அழகான, அன்பான, சின்னஞ்சிறு புத்திசாலிக் குழந்தைகளோடு பேச இருக்கிறேன், இந்தக் குழந்தைகளின் தேர்வுகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எல்லோரும் இந்த மாதத் தொடக்கத்திலே, பரீக்ஷா பே சர்ச்சா-தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், அதிலே நீங்கள் ஏதாவது கற்றிருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன். ஆனால் மறுபடி நான் உங்களிடம் கேட்கிறேன், படிக்கும் வேளையில் அதிக அழுத்தம்-டென்ஷன் கொள்ளாமல் தானே இருக்கிறீர்கள்?!
என் கண்மணிக் குழந்தைகளே, நீங்கள் அனைவரும் exam warriors – தேர்வுப் போர்வீரர்கள். நீங்கள் அனைவரும் முழு ஈடுபாட்டோடு தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆங்… இப்படிப்பட்ட சமயத்திலே மனதில் கொஞ்சம் சந்தேகம் எழுவது இயல்பானதுதான். படித்ததெல்லாம் நினைவில் இருக்குமா இருக்காதா என்று சில சமயம் தோன்றும். சில சமயம், நேரம் குறைந்துபட்டால் என்ன ஆவது என்றும் தோன்றும். இன்னும் சில சமயங்களில், நான் தனியாக இருக்கிறேனே என்றும் தோன்றும். நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய மதிப்பு என்னவென்பதை உங்களுடைய தேர்வுத்தாள் மதிப்பெண் தீர்மானம் செய்யாது. ஆகையால் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.
நீங்கள் படித்ததை, முழுமனத்தோடு எழுதுங்கள். எது தெரியவில்லையோ, அந்த ஒரு கேள்வி உங்கள் மனதில் பரவி வியாபிக்க விடாதீர்கள். மேலும் ஒரு விஷயம், உங்களுடைய பெற்றோர், உங்களுடைய ஆசிரியர்களோடு தொடர்ந்து உரையாடி வாருங்கள். அவர்கள் உங்களுடைய மதிப்பெண்களால் அல்ல, உங்களுடைய முயற்சியால் உங்களை அடையாளம் காண்பார்கள், உங்களுடைய உழைப்பால் மகிழ்வார்கள். நீங்கள் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவீர்கள், உங்களுடைய வாழ்க்கையிலும் வெற்றிகளின் புதிய சிகரங்களைத் தொடுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
சுதேசியைக் கைக்கொள்ளுங்கள்
நண்பர்களே, இப்போது ரமலான் நடைபெற்று வருகிறது. நான் இந்தப் புனிதமான மாதத்தில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். சில நாட்களுக்குப் பிறகு ஹோலிப் பண்டிகையும் வரவிருக்கிறது. அதாவது வண்ணங்கள், வண்ணப்பொடிகள், சந்தோஷம்-கொண்டாடம் நிறைந்த சூழல் வரவிருக்கிறது. நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பம், உங்கள் சுற்றத்தாரோடு சந்தோஷமாக அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடி மகிழுங்கள். அப்புறம்….. சில மந்திரங்களை எப்போதும் நினைவில் வைத்திருங்கள், அதாவது உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பது, ஊக்கமளிப்பது, சரிதானே? நமது ஹோலிப் பண்டிகைகளாகட்டும், வேறு எந்தப் பண்டிகையாகட்டும், பலவகையான அயல்நாட்டுப் பொருட்கள் நுழைந்து விட்டன. இவற்றை நமது பண்டிகைகளிலிருந்து விலக்கி வையுங்கள், ஹோலியிடமிருந்து தள்ளி வையுங்கள், சுதேசியைக் கைக்கொள்ளுங்கள். நாம் சுதேசிப் பொருட்களை வாங்கும் போது, நமது தேசத்தை தற்சார்புடையதாக ஆக்கும் இயக்கத்திற்கும் உதவிகரமாக இருக்கும்.
நண்பர்களே, ஒவ்வொரு மாதமும் மனதின் குரலுக்காக எனக்கு ஏராளமான கடிதங்கள்-ஆலோசனைகள் வருகின்றன. நீங்கள் அனுப்பும் செய்திகளால் தேசத்தின் அனைத்து மூலைகளில் கூட மறைந்திருக்கும் அற்புதமான திறமைகள் பற்றித் தெரிய வருகிறது. சுயநலத்தைத் தாண்டி, சமூகத்திற்காக ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பல உள்ளெழுச்சியளிக்கும் சம்பவங்கள் எல்லாம் உங்கள் வாயிலாக நாடெங்கிலும் இருக்கும் மக்கள் வரை சென்று சேர்கின்றது. நீங்கள் இப்படியே உங்களுடைய முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுடைய தகவல்களுக்காக நான் காத்திருப்பேன். மீண்டும் ஒருமுறை உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்தாருக்கும், வரவிருக்கும் அனைத்து பண்டிகைகளுக்குமான பலப்பல நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.
புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் செயல் அறுவறுக்கத்தக்கது என அரசியல் மட்டத்தில் பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன. ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் நடத்தியது தேசிய அவமானம் என்று பாஜக கூறியுள்ளது.
தில்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர், தங்கள் சட்டைகளை கழற்றிவிட்டு இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் பலவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
சர்வதேச அளவிலான செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுப் பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் உள்ள ஓர் அரங்குக்குள் நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், தங்கள் சட்டைகளைக் கழற்றிவிட்டு இந்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக, இந்தியா – அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அங்கே கூடியிருந்த இளைய தலைமுறையினர் சிலர் அடித்து விரட்டினர். இந்த வீடியோ சமுகத் தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இளைஞர் காங்கிரசின் தேசிய செயலாளர் கிருஷ்யா ஹரி, பிஹார் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் குந்தன் யாதவ், உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அஜய் குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதை உலகமே பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், இதைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் கட்சி தனது குண்டர்களை அனுப்பி ஏஐ உச்சிமாநாட்டில் கொஞ்சமும் அடிப்படை நாகரிகமின்றி, நமது நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் நோக்கில் மேலாடையைக் கழற்றி கையில் சுழற்றிக் கொண்டு பொறுக்கித்தனம் செய்து உலக அரங்கில் தங்கள் எதிர்க்கட்சி மானத்தை கப்பலேற்றினர்.
ஆளும் அரசினை, பிரதமரை நேரடியாக அறிவாலும், ஆற்றலாலும் ஜனநாயக முறையிலும் வெற்றி கொள்ள முடியாத விரக்தியில், ராகுலும் அவரது இளைஞர் காங்கிரஸ் அடியாட்களும் மூளை மழுங்கி பைத்தியம் முற்றிவிட்டது போல நடந்து கொண்டது இந்திய அளவில் பொதுமக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர்தான், நாடாளுமன்றத்தில் பெண் எம்பி.,க்களைக் கொண்டு பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த முயன்று, காங்கிரஸ் மற்றும் ராகுலின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்த ஆத்திரத்தில், பல நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஒரு மாநாட்டில் இன்று இப்படியொரு ஆபாச நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது காங்கிரஸ்.
இந்திய வரலாற்றில் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய அவமான அடையாளம் நேற்றைய சம்பவம். இடம், பொருள், வெட்கம், மானம் இவற்றில் எதுவும் கடுகளவு கூட காங்கிரஸாருக்கு கிடையாது என்பதற்கு இது ஒரு சான்று. தேசப்பற்று இல்லாமல் போகும் தேசவிரோதிகளுக்குத் தான் இது போன்ற கேவலமான எண்ணங்கள் தோன்றும். நாடு முன்னேறுவதை ஒரு துளியும் சகிக்க மாட்டாத இவர்கள் எதிர்க்கட்சியின் வரிசையில் அமர்ந்து கூட இருக்கத் தகுதியற்றவர்கள் என்ற கருத்தை விதைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டித்துள்ளார். புது தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
தில்லியில் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் சிறப்பாக செயல்படுவதாக புகழ்ந்து பேசினர். இது பெருமைக்குரிய தருணம். பிரதமர் மோடி தலைமையில் உலக நாடுகளை இந்தியாவின் தலைமையின் கீழ் கொண்டு வர வலுவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முக்கிய நபர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். ஆனால், அதே நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், ஒரு அவமானகரமான செயலை செய்துள்ளனர். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து எத்தனை கண்டனங்கள் முன்வைத்தாலும் போதாது.
அவர்கள் செய்தது தவறு அல்ல, ஒரு குற்றம். காங்கிரஸ் உறுப்பினர்கள் நாட்டுக்கு எதிராக செய்த ஒரு செயல். நாட்டை பற்றிய சிறிதளவேனும் அக்கறை இருந்திருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் தங்களை சுயபரிசோதனை செய்து மன்னிப்பு கேட்கும் என்று நம்பினோம். ஆனால், மன்னிப்பு கேட்பதற்கு பதில், நியாயப்படுத்தி இது கோபத்தின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறுகின்றனர். உலக நாடுகள் முன், நம் நாட்டை அவமானப்படுத்த கோபத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினால் அதைவிட வெட்கக்கேடானது என்று எதுவும் இருக்க முடியாது. – என்று கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.
ஏஐ உச்சிமாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் நடத்தையை 24 மணி நேரத்திற்கு மேலாகியும் ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன்? என்று, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி தன்னை நாட்டின் தலைகுனிவு என மீண்டும் நிரூபித்துவிட்டது. ஏஐ உச்சிமாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் நடத்தையை 24 மணி நேரத்திற்கு மேலாகியும் ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன்? ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்த ஒரு நிகழ்வில் நாட்டை அவமானப்படுத்தும் முயற்சியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏஐ உச்சிமாநாடு 250 பில்லியன் டாலருக்கு மேலான முதலீடுகளையும், 20 பில்லியன் அதிகமான தொழில்நுட்ப முதலீடுகளையும் ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டால் இவ்வளவு தொழில்நுட்ப முதலீடுகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், இந்தியாவின் எதிர்காலத்தின் மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கை இதுதான். இந்தியாவின் ஏஐ எதிர்காலத்தில் உலகம் நம்பிக்கை வைத்த போது, காங்கிரஸ் கட்சி நாட்டு நலனுக்கு மேலாக நாடகத்தை தேர்ந்தெடுத்தது – என்று கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் நடந்த ஏ ஐ மாநாட்டில் காங்கிரஸ் இளைஞரணி உறுப்பினர்கள் நாகரீகமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் போராட்டம் நடத்தியது வெட்கக்கேடானது; காங்கிரஸ் இளைஞர் அணி உறுப்பினர்களால் இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் நடந்த முக்கிய மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது; இந்தியாவின் வளர்ச்சியையும் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியையும் சீர்குலைக்க முயலும் காங்கிரசின் இதுபோன்ற அநாகரிகமான செயல்பாடுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என்று அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் நடந்த ஏ ஐ உச்சி மாநாட்டை தங்களின் அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் இளைஞர் அணி பயன்படுத்தியது முற்றிலும் வருந்தத்தக்கது. அரசியல் கருத்து வேறுபாடுகளைக் காட்டுவதற்கு சர்வதேச உச்சி மாநாட்டை பயன்படுத்த முடியாது என்று பி ஆர் எஸ் செயல் தலைவர் கே டி ராமராவ் கூறியுள்ளார்.
தில்லியில் நடந்த ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் இளைஞர் அணி உறுப்பினர்களின் செயலால் அனைவரும் வெட்கப்பட வேண்டும். அரசியல் வித்தியாசங்களைக் கடந்து உலகத்துக்கு முன்னால் நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு தடை விதித்தது அமெரிக்க நீதிமன்றம். டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது; எமர்ஜென்சியை பயன்படுத்தி வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது என்று தெரிவித்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக அளவில் போட்ட வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க சட்டப்படி வரி விதிக்க பார்லிமென்ட்டுக்கே அதிகாரம் உள்ளது. டிரம்ப்புக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது வர்த்தக பற்றாக்குறையைக் காரணம் காட்டி வரிகளை விதித்தார். இதற்கு அந்நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் டிரம்ப்பின் வரி விதிப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளதாவது: அமெரிக்க சட்டமான சர்வதேச அவசரநிலை பொருளாதார சட்டத்தின்படி வரி விதிக்க டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை. அமெரிக்க சட்டப்படி, வரிவிதிக்க பார்லிமென்டுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை.
நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு கூறிய நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பெரிய அளவில் ஏற்றம் கண்டன. இது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?
இன்றைக்குத் தமிழ், செம்மொழி என்ற தகுதியோடு துலங்குகிறது என்றால் அதற்கு மூலகாரணம் இந்த கும்பகோணம் அகத்தியர்தான். நமது செந்தமிழ் செம்மொழி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கான பழந்தமிழ் ஆதாரங்கள் வேண்டுமே! அழிவு நிலையில் இருந்த நமது பழந்தமிழ் இலக்கியங்களை ஊர் ஊராய்த் தேடித் தேடிச் சென்று திரட்டி, அவற்றை ஒப்புநோக்கி, பிழை நீக்கி, சாகா வரம் பெற்ற நூல்களாய் அச்சிட்டவர் அந்த நவீன அகத்தியர்.
இப்போது புரிந்திருக்குமே அந்த நவீன அகத்தியர் யார் என்பது? ஆம்! நமது தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர்தான் அவர். இதை நான் சொல்லவில்லை. மகாமகோபாத்யாய பட்டம் பெற்ற உ.வே.சா. அவர்களை வாழ்த்தி 1906-இல் வாழ்த்துப் பா இயற்றியபோது மகாகவி பாரதியார் இப்படிப் பாராட்டியிருக்கிறார். “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று உ.வே.சா. அவர்களைக் குறிப்பிடும் பாரதி, “பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்கு வாயே” என்று அவரை வாழ்த்தியுள்ளார்.
அக்கால இன்குபேட்டர் போன்ற) குடத்தில் இருந்து பிறந்தவர் என்று கூறப்படுவதால் அகத்தியருக்கு கும்பமுனி என்று பெயர். கும்பமேளாவை ஒத்த மகாமகம் நடைபெறும் குடந்தை நகரமும் கும்பத்தில் இருந்து தோன்றியதால் அதற்கு கும்பகோணம் என்று பெயர். அந்த கும்பகோணம் அருகே சூரியமூலை என்ற சிறிய கிராமத்தில் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தோன்றியவர் சாமிநாதர்.
அவரது தந்தையின் பெயரான உத்தமதானபுரம் வேங்கடசுப்ரமணியன் என்ற பெயரையும் சேர்த்து உ.வே. சாமிநாத ஐயர் என்று அழைக்கப்பட்டார். சூரியமூலையில் பிறந்த அவர்தான் மூலை முடுக்குகளில் பதுங்கியிருந்த பழந்தமிழ் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து, அதன் புகழொளியை உலகெங்கும் பாய்ச்சினார். அதனால்தான் தமிழ் வாழும் காலம் முழுவதும் புலவர்களால் பாராட்டப்பட்டு அமரனாக வாழ்வாய் என்று மகாகவியால் உ.வே.சா. வாழ்த்தப்பட்டார்.
அப்படிப் புகழும் அளவுக்கு என்ன செய்தார் உ.வே.சா? ஓலைச் சுவடிகளிலும், ஏடுகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் பதுங்கியிருந்த பழந்தமிழ் இலக்கியங்களையும் தேடிக் கண்டுபிடித்து, புதுப்பித்து, நூலாகப் பதிப்பிப்பதற்கு தம் வாழ்நாளில் ஏறத்தாழ 60 ஆண்டுக் காலத்தை மட்டுமின்றி, தன் சொத்துகளையும் செலவழித்தவர் உ.வே.சா. தீயிலும், ஆற்று வெள்ளத்திலும், அருமை தெரியாமலும் அழிவின் விளிம்புக்குச் சென்ற பழந்தமிழ் இலக்கியங்களை அச்சு வாகனமேற்றி அழகுபார்த்தார் உ.வே.சா.
இவ்வாறாக 90 பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார் உ.வே.சா. அவற்றுள் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும், திருமுருகாற்றுப்படை தொடங்கி மலைபடுகடாம் வரையான பத்துப்பாட்டு நூல்கள் முழுவதும், புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், ஐங்குறுநூறு, குறுந்தொகை ஆகிய எட்டுத்தொகை நூல்களும் அடங்கும். இதுபோக புறப்பொருள் வெண்பா மாலை, நன்னூல் உரை போன்ற இலக்கண நூல்களையும், பல்வேறு புராணங்கள், சிறு காப்பியங்கள் உள்ளிட்ட நூல்களையும் அவர் தேடிக் கண்டுபிடித்து அச்சு நூல்கள் ஆக்கியுள்ளார்.
மகாவித்வான். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சீடராகத் தமிழ் பயின்ற உ.வே.சா., கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும் பின்னர் சென்னைக் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் இடைக்காலத் தமிழிலேயே அதிகத் தேர்ச்சி பெற்றிருந்த உ.வே.சாமிநாதையரை சங்கத் தமிழின்பால் நாட்டம் கொள்ளச் செய்ததோடு, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பிப்பதை தமது வாழ்வின் லட்சியமாகவும் அவர் ஆக்கிக் கொள்ள வழிவகுத்தது சேலத்தில் இருந்து பணிமாற்றலாகி வந்திருந்த அரசு அதிகாரியும் தமிழன்பருமான இராமசாமி முதலியார் என்பவருடனான சந்திப்புதான். இராமசாமி முதலியார் கொடுத்த கையெழுத்துப் பிரதியான சீவக சிந்தாமணிதான் உ.வே.சா. அவர்களின் வாழ்வில் திருப்புமுனையாய் அமைந்தது.
1874-ஆம் ஆண்டு தொடங்கி, தாம் மறைந்த 1942 ஆம் ஆண்டு வரையில் தமிழ் நூல்களை அச்சேற்றும் அரும் பணியை அயராது செய்து வந்தார் உ.வே.சா. அவரது இத்தமிழ்த் தொண்டில் சி.வை. தாமோதரம் பிள்ளை என்ற தமிழறிஞரும் உதவிகரமாகச் செயல்பட்டார்.
சங்கத் தமிழ் நூல்களை பொக்கிஷமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தந்ததுடன் மட்டுமின்றி, இன்றைக்குத் தமிழிசைத் தழைத்திடவும் காரணமாக அமைந்தவர் உ.வே.சா. சுமார் 4 நூற்றாண்டுக் காலமாக தமிழ்நாட்டில் தெலுங்கு, சம்ஸ்கிருத கீர்த்தனைகளே கோலோச்சி வந்த நிலையில், உ.வே.சா. தேடிக் கண்டுபிடித்து அச்சேற்றிய சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் மூலம், அவற்றில் காணப்படும் தமிழின் பழங்காலப் பண்கள் மீண்டும் வெளியுலகைப் பார்த்தன. உலகைத் தம் வசம் மீண்டும் ஈர்த்தன.
ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.
வருகிற மார்ச் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகை புரிய உள்ளார் . அப்போது புதிய வழித்தடங்களில் ரயில் சேவைகளையும் துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
✓ சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி காரைக்குடி வழியாக இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும்
✓ நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மதுரை வழியாக ஹைதராபாத் சார்லபள்ளி வரை அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் சேவையும்
✓ மங்களூரில் இருந்து சோரனூர் பாலக்காடு பொள்ளாச்சி பழனி மதுரை வழியாக இராமேஸ்வரம் வரை வாராந்திர ரயிலும்
✓ பொள்ளாச்சி பழனி வழியாக தாம்பரம் மங்களூர் அம்ரித் பாரத் ரயில் சேவையும்
எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலத்தின் ஜோக்பானி வரை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும்
துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. நிகழ்ச்சி தொடர்பான உத்தேச தகவல்கள் இன்றைய கேரள செய்தித்தாளில் தகவலாக வெளியிடப்பட்டுள்ளது .
மேலும் தற்போது இயங்கி வரும் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயிலை தினசரி ரயிலாகவும் எர்ணாகுளத்தில் இருந்து செங்கோட்டை விருதுநகர் வழி ராமேஸ்வரத்திற்கு வாரம் மூன்று முறை விரைவு ரயில் இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு கொல்லம் செங்கோட்டை வழியாக ஈரோடு கோயமுத்தூருக்கு தினசரி விரைவு ரயில் இயக்கமும் ரயில்வே துறை முடிவு செய்து வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த செய்தியில் பொள்ளாச்சி வழியாக தாம்பரம் மங்களூர் மற்றும் இராமேஸ்வரம் மங்களூர் ரயில்கள் தனது பயணத்தை துவங் கஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
விரைவில் இது தொடர்பான முழு அறிவிப்பு வழியாகவும் எதிர்பார்க்கப்படுகிறது . மார்ச் ஒன்றாம் தேதி கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது …. எனவே புதிய ரயில் சேவைகள் துவக்கம் நடைபெறப்போவது உறுதியாகியுள்ளது .
அதே நேரத்தில் எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் செல்லும் இன்ப தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்படும்
திருச்செந்தூர் – தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை!
18 கி.மீ இணைக்கப்பட்டால் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்!
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தற்போதைய சிக்கல் என்ன? தற்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் நெல்லை வழியாகச் சுற்றிச் செல்வதால், 138 கி.மீ கூடுதல் பயண தூரமும், சுமார் 3 மணி நேர கூடுதல் பயண நேரமும் ஆகிறது.
தீர்வு என்ன? திருச்செந்தூரில் இருந்து ஆறுமுகநேரி வரையிலும், மறுபுறம் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து ஸ்பிக் நகர் வரையிலும் ஏற்கெனவே ரயில் பாதைகள் உள்ளன. எனவே, ஆறுமுகநேரிக்கும் – ஸ்பிக் நகருக்கும் இடையே வெறும் 18 கி.மீ தூரத்திற்குப் புதிய ரயில் பாதை அமைத்தால் மட்டுமே போதும்! இதன் மூலம் தூத்துக்குடி – திருச்செந்தூர் முழுமையான ரயில் இணைப்பைப் பெறும்.
திட்டத்தின் பயன்கள்: பயண நேரம் மற்றும் தூரம் கணிசமாகக் குறையும். ஆத்தூர், பழையகாயல், புன்னக்காயல் மற்றும் ஸ்பிக் நகர் பகுதி மக்களுக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும். வாஞ்சி மணியாச்சி மற்றும் மதுரை வழியாகப் புதிய மாற்று வழித்தடம் உருவாகும்.
தென் மாவட்ட மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ரயில்வே துறை விரைந்து நிறைவேற்றுமா என விருதுநகர் மதுரை திண்டுக்கல் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி 11, 12ஆம் நாள்கள் 17 & 18.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
17.02.2026 அன்று முதல் ஆட்டம் சென்னையில் காலை 1100 மணிக்கு கனடா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் பல்லேகலேயில் மதியம் 0300 மணிக்கு அயர்லாந்து, ஜிம்பாபே அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தத்லிக்கப்பட்டது. இதனால் குரூப் B பிரிவில் ஜிம்பாபே அணி சூப்பர் 8 கட்டத்திற்கு தேர்வானது. மூன்றாவது ஆட்டம் இரவு 0700 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நேபாளம், ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் நேபாள அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் பாகிஸ்தான் நமீபிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 102 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றிபெற்று சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறியது. மூன்றாவது ஆட்டம் இந்திய, நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கு அகமதாபாத்தில் நடந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, குரூப் அளவில் நான்கு ஆட்டங்கலிலும் வென்று 8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியல் 18.02.2026 அன்று மூன்றாவது ஆட்ட முடிவில்
குரூப் A
வ. எண்
அணி
ஆட்டம்
வெற்றி
தோல்வி
முடிவு இல்லை
புள்ளிகள்
1
இந்தியா
4
4
0
0
8
2
பாகிஸ்தான்
4
3
1
0
6
3
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
4
2
2
0
4
4
நெதர்லாந்து
4
1
3
0
2
5
நமீபியா
4
0
4
0
0
குரூப் B
வ. எண்
அணி
ஆட்டம்
வெற்றி
தோல்வி
முடிவு இல்லை
புள்ளிகள்
1
இலங்கை
3
3
0
0
6
2
ஜிம்பாபே
3
2
0
1
5
3
அயர்லாந்து
4
1
2
1
3
4
ஆஸ்திரேலியா
3
1
2
0
2
5
ஓமன்
3
0
3
0
0
குரூப் C
வ. எண்
அணி
ஆட்டம்
வெற்றி
தோல்வி
முடிவு இல்லை
புள்ளிகள்
1
மே.இ. தீவுகள்
3
3
0
0
6
2
இங்கிலாந்து
4
3
1
0
6
3
ஸ்காட்லாந்து
4
1
3
0
2
4
இத்தாலி
3
1
2
0
2
5
நேபாளம்
4
1
3
0
2
குரூப் D
வ. எண்
அணி
ஆட்டம்
வெற்றி
தோல்வி
முடிவு இல்லை
புள்ளிகள்
1
தென் ஆப்பிரிக்கா
4
4
0
0
8
2
நியூசிலாந்து
4
3
1
0
6
3
ஆஃப்கானிஸ்தான்
3
1
2
0
2
4
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
4
1
3
0
2
5
கனடா
3
0
3
0
2
நாளை (19.02.2026) முதல் ஆட்டம் கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் காலை 1100 மணிக்கு இத்தாலி, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் இலைங்கை ஜிம்பாபே அணிகளுக்கு இடையே மதியம் 0300 மணிக்கு நடைபெறும். மூன்றாவது ஆட்டம் சென்னையில் இரவு 0700 மணிக்கு ஆஃப்கானிஸ்தான் கனடா அணிகளுக்கு இடையே நடைபெறும்.
Dr. B.R.J.கண்ணன் MD., DM (Cardio) இதயநோய்நிபுணர், வடமலையான் மருத்துவமனை, மதுரை
உணவே மருந்து
நம் உணவில் உள்ள சத்துக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. மாவுச்சத்து 2. புரதம் 3. கொழுப்பு
இதில் எது நமக்குத் தீங்கு விளைவிக்கிறது என்று கேட்டால், தயங்காமல் கொழுப்பு என்று கூறுவீர்கள். நீங்கள் மட்டுமல்ல பெரும்பாலான மருத்துவர்களும் உலக மக்களும் கடந்த 50 ஆண்டுகளாக இதைத்தான் உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள், இனி மேற்கொண்டு படிக்கும் முன்பு உணவு பற்றிய உங்கள் அபிப்ராயத்தை உங்கள் மூளையில் இருந்து முழுவதுமாக அகற்றிவிட்டு, திறந்த மனதுடன் படிக்கவும்.
நாம் எந்த மாதிரி உணவு எடுக்க வேண்டும்? சரிவிகித உணவு. ஆங்கிலத்தில் இதை BALANCED DIET என்று கூறுவார்கள். அதாவது உணவில் 50 முதல் 55% வரை மாவுச்சத்தும், 20% புரதச்சத்தும், 25% கொழுப்புச்சத்தும் இருக்க வேண்டும். ஆனால் முழு நாளும் நீங்கள் உண்பது பெரும்பாலும் மாவுச்சத்துள்ள உணவுகளே, உடம்பிற்கு வேண்டிய புரதமும் கொழுப்பும் எங்கே? நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
மாவுப்பொருட்கள் என்றால் எவை?
அரிசி கோதுமை, கேப்பை, சிறு தானியங்கள், ஓட்ஸ் மற்றும் அவைகளால் செய்த உணவுகள் இட்லி, தோசை சாதம், சப்பாத்தி உப்புமா என நாம் அன்றாடம் உண்ணும் எல்லாமே. இவை செரிமானம் ஆகி சர்க்கரையாக மாறுகிறது. இவைகளைத்தான் சிம்பிள் டயட் என்று உண்டு வந்திருக்கிறோம். ஆனால் நோய்கள் பெருகியுள்ளதே ஒழிய குறையவில்லை.
மாவுச்சத்து சாப்பிட்டால் நம் உடம்பில் என்ன நடக்கிறது?
1. போதும் என்ற எண்ணத்தைக் கொடுப்பதில்லை. குழம்பு சாதம், ரச சாதம், தயிர் சாதம் என்று உண்ட பின்பும் பாயாசமும், ஐஸ்கீரீமும் உண்ண முடியும். நம் இரைப்பை வீங்கி மேற்கொண்டு இடமில்லை என்றவரை நம்மை சாப்பிடத் தூண்டும். ஆகையால் சர்க்கரை அளவு எளிதாகக் கூடுகிறது.
2. ரத்தத்தில் ஏறும் சர்க்கரையில் ஒரு குறுகிய அளவே அப்படியே சேமித்து வைக்க முடியும். மீதமுள்ள சர்க்கரையை நம் ஈரல் கொழுப்பாக மாற்றிவிடும். உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு எல்லாம் மாவுச்சத்து உண்டதால் வந்ததே அன்றி கொழுப்பு உண்டதால் அல்ல.
3. நீங்கள் எவ்வளவு உண்டிருந்தாலும் அடுத்த 2 அல்லது 3 மணி நேரத்தில் மறுபடியும் பசி ஏற்படும். மேலும் மாவுப்பொருட்களை உண்ணத் தூண்டும்.
மாவுச்சத்து அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன தீமைகள் உண்டாகும்?
1. நீரிழிவு நோய் இதனாலேயே வருகிறது. 2. குடல் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு காரணியாக அமைகிற்து. உதாரணம்: எருக்களிப்பும், ஏப்பமும், குடல் புண்ணும் இதனாலேயே வருகிறது. 3. உடல் பருமன் எப்படி என்று ஏற்கனவே மேலே விளக்கப்பட்டுள்ளது. 4. இதய நோய், இன்னும் பிற நோய்களுக்கு காரணியாகவோ, கிரியாவூக்கியாகவோ இருக்கிறது. 5. பல ஒவ்வாமை சம்பந்தப்பட்ட நோய்கள், Auto Immune நோய்கள், தைராய்டு போன்றவற்றில் இது பெரும்பங்கு வகிக்கிறது.
ஆக அரிசி, கோதுமை, கேழ்வரகு, ஓட்ஸ் என எல்லாமும் விடவேண்டும் என்றால் என்னதான் சாப்பிடுவது? அதிக புரதங்களையும், கொழுப்பு உணவுகளையும் உண்ண வேண்டும். என்னது? கொழுப்பு அதிகம் உண்ண வேண்டுமா? என்று நீங்கள் திகைப்பது தெரிகிறது.
நல்ல கொழுப்பு எவை? தேங்காய், நெய், வெண்ணெய், பன்னீர், முழுக்கொழுப்பு பால், தயிர், முட்டை (மஞ்சட்கருவுடன்), இறைச்சிகள் (மீன், சிக்கன், மட்டன், நண்டு) பாதாம், முந்திரி பருப்பு போன்றவைகள். இவைகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் ஏறி, மாரடைப்பு வரும் என்பதுதானே உங்கள் பயம். இல்லவே இல்லை. (தினசரி அசைவம் சாப்பிட்டால் மட்டுமே இந்த அளவை மீற முடியும்.) நிர்ணயிக்கப்பட்ட 25% ஐ நம்மால் தாண்ட முடிவதில்லை.
நிறைய நான்-வெஜ் சாப்பிட்டு குண்டாகி விட்டேன் கேள்விபட்டிருப்பீர்கள். அசைவம் எப்படி உண்கிறீர்கள்? ஒரு கையளவு என்று சோற்றை உள்ளே தள்ளி, பின்னர் சிறிது மாமிசத்தை உண்கீறீர்கள். ஒரு பிளேட் நான்-வெஜ்-ஐக் காலி செய்ய அரைக்கிலோ சோறு தேவைப்படுகிறது 200 கிராம் பன்னீருக்கு 4 அல்லது 5 சப்பாத்தி சாப்பிடுகிறீர்கள். உண்ட சோறும் சப்பாத்தியும் தான் எடையைக் கூட்டுகிறது. பாவம் செய்தது இந்த மாவுப்பொருட்கள். ஆனால் பழி விழுவதோ கொழுப்புமேல், அசைவம் சாப்பிடாத ஆனால் உடல்பருமனோடு உள்ளவர்களை நீங்கள் பார்த்ததில்லையா?
இப்பொழுது உங்கள் தட்டை திருப்பி வைக்கவும். 300 கிராம் சமைத்த பன்னீரை நடுவில் இடவும். அதைத்தான் உண்ண வேண்டும். அதை அப்படியே உண்ண முடியவில்லை என்றால் குழைத்து சாப்பிட சிறிதளவு சோற்றையோ, அரை சப்பாத்தியையோ எடுத்துக் கொள்ளலாம். புரதமும் கொழுப்பும் போதும் என்ற எண்ணத்தை விரைவாகவே உண்டாக்கும். உங்களால் அதிகமாக உண்ணவே முடியாது. முட்டை உண்ண வேண்டுமா?
2 முட்டைகளால் ஆம்லேட் செய்தோ, பொறியல் செய்தோ உண்ணலாம். அதை மட்டும், அதன்பின், மேலும் பசி இருக்கிறதா? ஒரு குவளை தயிர் எடுத்துக் கொள்ளலாம். அதாவது சைடு டிஷ் என்று கூறுவதையே மெயின் டிஷ் ஆக சாப்பிட வேண்டும். ஒரு உணவுப் பட்டியல் மாதிரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வேண்டியவாறு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
காலை : இரண்டு முட்டையும் (மஞ்சளுடன் சேர்த்து) பாலும். அல்லது முளை விட்டபயறு / அவித்த பருப்பு / பயறு, ஒரு கைப்பிடி அளவு பாதாம் பருப்பு போன்றவை. இட்லியை விட முடியாதவர்கள் ஒன்றை மட்டும் போட்டுக்கொண்டு நிறைய நெய்யை அதன்மேல் ஊற்றி கொஞ்சம் பொடி தூவியோ, தேங்காய் சட்னியுடனோ உண்ணலாம். பழங்கள், தயிர் மட்டுமே கூட காலை உணவாக எடுக்கலாம்.
மதியம் கட்டாயமாக நிறைய காய்கறிகள், கீரை வகைகள் சேர்க்க வேண்டும். அவற்றை நிறையவும் சிறிதளவு சோற்றையும் உண்ணவும், கட்டித் தயிரோடு காய்கறிகளை உண்டு சோறை அறவே தவிர்க்க முடிந்தாலும் சரியே.
இரவு ஒரு கப் சுண்டல், காராமணி, மொச்சை, பட்டர் பீன்ஸ், காளான், பன்னீர், என்று ஏதாவது அல்லது எண்ணை கத்திரிக்காய், புடலங்காய் என ஏதாவது ஒன்று. அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, 200கிராம் கோழி, மீன், மட்டன் என்று ஏதாவது எடுக்கலாம் உடன் வெங்காயமோ தயிரோ சேர்க்கலாம். இதே உணவை மதியத்திற்கும் சாப்பிடலாம்.
காப்பி அல்லது டீ குடித்தால், சிறிதளவு இனிப்பு (சர்க்கரை வெல்லம், கருப்பபட்டி) சேர்க்கலாம், மாத்திரை வேண்டாம். நிறைய தண்ணீர் / இளநீர் / மோர் / எலுமிச்சை சாறு – நாள் முழுக்க குடிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள், இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்றவைகளை அன்றாடம் உண்ணும் உணவுப் பட்டியலிருந்து நீக்கி, என்றைக்காவது உண்ணும் பட்சணமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
இரவு உணவுக்கும், அடுத்தநாள் காலை உணவுக்கும் 12.00 மணி நேர இடைவெளி வேண்டும். ஆகையால் இரவு உணவை முடிந்த அளவு சீக்கிரம் எடுத்துக்கொள்வது நல்லது. ஏதேனும் சாப்பிடவேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் வெள்ளரி, கேரட், தேங்காய் துண்டுகள், தயிர், உலர்பழங்கள், பாதாம், முந்திரி, கடலை பட்டாணி, போன்றவைகள் எடுத்துக் கொள்ளலாம்.
பிஸ்கட், சிப்ஸ், போன்றவைகளை அறவே தவிர்க்க வேண்டும். இம்முறையில் கீரைகளையும், காய்களையும் உண்பது கட்டாயமாவதால் விட்டமின்களும், மற்ற தாதுப்பொருட்களும் நம் உடம்பிற்கு அதிகமாகவே கிடைக்கும்.
இம்மாதிரி செய்தால் மட்டுமே, ஒரு உணவு சரிவிகித உணவு (Balanced Diet) ஆக இருக்கும். இந்த முறையை பின்பற்றுவது கடினம் இல்லை. மாவுச்சத்துப் பொருட்களையே உண்டு. பழகியதால் முதலில் சில அசௌகரியங்கள் சிலபேருக்கு உண்டாகலாம். பின்னர், நம் உடம்பு பழகிக்கொள்ளும். உடம்பு ஒத்துழைத்தாலும் மனதை அடக்குவது தான் பெரும் பிரச்சனை. முழு மனதோடு முழுவதுமாகவும் பின்பற்றினால் தான் முழுப்பலன் கிடைக்கும்.
பேருக்கு முயற்சிசெய்துவிட்டு இதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று விடுவர் அநேகர். ஒன்றிரண்டு மாதங்கள் இதைப் பின்பற்றியவர்கள் இதன் பலனைக் கண்டுவிட்டால் பின்னர் பழைய நிலைக்குத் திரும்புவதே இல்லை. சுய கட்டுப்பாடு வந்துவிடுகிறது. தேவையின்றி எதையும் உண்பதில்லை. ஏனென்றால் புரதமும் கொழுப்பும் உள்ள பொருட்கள் பசியை அடக்கும் குணம் கொண்டவை.
இந்த முறையில் உடல் எடை குறைந்து பயனடைந்தோர் ஏராளம். நிரிழிவு நோயாளிகள், இன்சுலின் ஊசியை நிறுத்தி இருக்கிறார்கள். மாத்திரை மட்டும் உண்டவர்கள் அதை அறவே துறந்தும் இருக்கிறீர்கள். உடலும், மனதும் சோர்வில்லாமல் இது வைத்துக் கொள்ளும் என்பதால் இந்தநாள் வரை எந்த உடற்பயிற்சியும் செய்யாதவர்கள் இப்பொழுது செய்யத் தொடங்குகிறார்கள். இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.
ரம்ஜான் நோன்புக்காக கூடுதல் செலவினம் எனக் கூட பாராமல் தாராள நிதி ஒதுக்கீடு!! இந்து கோவில்கள் என்றால் மட்டும் பாரபட்சம்! என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆளும் திமுக அரசு வருகின்ற முஸ்லிம்களின் பண்டிகையான ரம்ஜான் நோன்பிற்காக 8,700 மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் 20 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக துவங்கப்பட்ட காலம் முதல் சிறுபான்மையினர் நலன் மீது அதீத அக்கறை செலுத்துவார்கள் என்பது எல்லோரும் அறிந்ததான். ஆண்டுதோறும் ரம்ஜான் நோன்பிற்காக பல்லாயிரக்கணக்கான மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அதைவிட அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்து கோவில்களின் பராமரிப்பு பணிகளுக்காக, ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கோவில்களுக்கு அந்த நிதி இன்றுவரை ஒதுக்கப்பட்டதா என்றால் இதுவரை இல்லை.
பல தொன்மை வாய்ந்த பெரிய கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் வரை பழுதடைந்த நிலையிலேயே இருக்கிறது. இதையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை கண்டு கொள்வதில்லை.
பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துகின்றோம் என்ற பெயரில் அவசர கதியில் கோவில்களினுடைய பராமரிப்பு பணிகளும் முறையாக நடைபெறாமல் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படுகிறது.
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தில் பல்வேறு வகையான குளறுபடிகள் ஏற்பட்டது. அங்கே கட்டிட வேலையின் போது உயிரிழந்த இளைஞருக்கு கூட தமிழக அரசு நிதி உதவி செய்யவில்லை.
பிரபல தொழிலதிபர் சிவநாடார் அவர்கள் திருச்செந்தூர் திருக்கோவிலின் கட்டிடப் பணிக்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். இதையெல்லாம் வாங்கிக்கொண்டு ஏதோ திமுக தனது சொந்த பணத்தில் கும்பாபிஷேகம் நடத்தியதாக பெருமை பேசிக்கொள்கிறது.
கோவில் சிலைகள் ஒரு பக்கம் களவு போகின்றன. பல கோவில்களில் திருத்தேர்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.
பல கோவில்களின் கும்பாபிஷேகத்தின் போது பொது மக்கள் அனுமதிக்கப்படாமல் அரசியல் கட்சிபிரமுகர்கள், அரசாங்க ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்ட சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
கோவில்களின் உண்டியல் பணத்தை மட்டுமே பெரிதாக எடுத்துக் கொள்ளும் அறநிலையத்துறை. பக்தர்களின் வசதிக்காக எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை.
கடந்த வார தைப்பூச நிகழ்வில் கூட திருச்செந்தூர், பழனி போன்ற முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையெல்லாம் தாண்டி ஆகம விதிகளுக்கு எதிராக பிரேக்கிங் தரிசன கட்டண முறையை அறிமுகப்படுத்தவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பக்தர்களின் தொடர் எதிர்ப்பால் அந்தத் திட்டம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடவுளை காட்சிப் பொருளாக்கி கட்டண தரிசன முறையில் மட்டும் கரிசனமாக நடந்து கொள்ளும் திமுக அரசுக்கு, இந்து கோவில்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
ஆனால் கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை புனரமைக்க முதலமைச்சர் அவர்கள் 20 கோடி ஒதுக்குகிறார். இந்த அரசு கிறிஸ்துவ சமுதாயத்திற்கு அரணாக நிற்கும் எனவும் பேசி வருகிறார்.
முஸ்லிம் சமுதாயத்திற்காக ஹஜ்யாத்திரை செல்லும் பயணிகளுக்கு அரசாங்க நிலத்தில் கட்டிடம் கட்டப்படுகிறது. இப்படியாக பெரும்பான்மை இந்து கோயில்களை பற்றி கவலைப்படாமல் சிறுபான்மை முஸ்லிம், கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களுக்கு சலுகை காட்டும் திமுகவின் போக்கு இந்துக்களை கோபமடையச் செய்திருக்கிறது.
17,000 இந்து கோவில்களில் ஒருவேளை பூஜை செய்யக் கூட வசதி இல்லை என தமிழக அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்கிறது. ஆனால் இந்து கோவில்களின் மூலம் வரும் வருமானத்தைக் மட்டும் எடுத்துக்கொள்கிறது.
தற்பொழுது ரம்ஜான் நோன்பிற்காக வழங்கப்பட்ட நிதி என்பது முழுக்க முழுக்க தேர்தலை கவனத்தில் கொண்டு முஸ்லிம் ஓட்டுகளை பெறுவதற்கான தி.மு.கவின் திட்டமே என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.
இந்து கோவில்கள் விஷயத்தில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படி இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..