Home Blog Page 8

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

nirmala seetharaman in thiruchuzhi sports - 2026

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எஸ்.பி.ஐ வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேஸ்கட் பால்,வாலிபால்,டென்னிஸ்,டேபிள் டென்னிஸ்,செஸ் மற்றும் கேரம் ஆகிய விளையாட்டு மைதானங்கள் அடங்கிய உள் விளையாட்டு அரங்கினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் திருச்சிழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அரங்கத்தை பார்வையிட்டு கல்வெட்டை திறந்து வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரை மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

மேலும் மாணவ மாணவிகள் தமிழக பாரம்பரிய கலைகளான கரகாட்டம் காவடி ஆட்டம் தப்பாட்டம் மற்றும் சிலம்பாட்டம் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இந்த உள் விளையாட்டு அரங்கம் மாணவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மாணவிகளை சொல்லச்சொல்லி கேட்டறிந்த அமைச்சர், கிராமப்புற மாணவர்களின் தெளிவான நோக்கத்தை கேட்டறிந்து மாநில அளவில் சாதிக்க இந்த மைதானம் உதவும் என்று சொன்ன அவர்களை பாராட்டி அவர்கள் விளையாடுவதை கண்டு ரசித்து உற்சாகப்படுத்தி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசிய அவர்,ரமண மகரிஷி பிறந்த ஊர் திருச்சுழி என்பதாலும் முன்னேற விழையும் மாவட்டமான இங்கு கிராமப்புற மாணவர்கள் அதிகம் உள்ளதால் அவர்களுக்கான விளையாட்டு வசதியை செய்து கொடுக்க கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதை நிறைவேற்றிய எஸ்பிஐ நிர்வாகத்திற்கும் எஸ்பிஐ பவுண்டேஷனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், ஒரு காலத்தில் காமன்வெல்த் விளையாட்டு என்றால் ஊழல் என்று இருந்தபோது மோடி அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததால் தான் ஆசிய விளையாட்டுகளை நாம் நடத்தும் நிலைக்கும் கிலோ விளையாட்டுப் போட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி ஒலிம்பிக் செல்லம் அளவிற்கு நாம் நம் இளைஞர்களை தயார் படுத்தி வருகிறோம் என்றார்.

முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகரில் அடிப்படை வசதிகளான சுகாதாரம்,கல்வி போன்றவற்றில் முன்னேற்றம் கண்டாலும் விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் இல்லை என்பது ஒரு குறையாகப்பட்டதால் இந்த விளையாட்டு அரங்கம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.எப்போதும் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு என்றார்.

தேர்தல் நேரத்தில் இதை திறந்து வைத்திருந்தால் அதை அரசியல் ஆக்கியிருப்பார்கள் என்றும் அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி முறையாக பராமரித்து அடுத்து வருபவர்களுக்கும் வாய்ப்பு வழங்கி ரமண மகரிஷி பிறந்த ஊரை விளையாட்டுத்துறையிலும் இந்த ஊர் பெயர்பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

nirmala seetharaman in viruthunagar district indoor sports complex - 2026

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சென்னிலைகுடியில் பரமக்குடி கூட்டுப் பண்ணையியல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி ஆதரவுடன் அமைக்கப்பட்ட சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு முன்னிலையில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இங்கிருந்து விருதுநகர் மிளகாய் மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றுமதிக்கு உகந்த மிளகாய் என சான்று பெற்றுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.பூச்சி மருந்துகள் குறைவாக பயன்படுத்துவதால் அமெரிக்காவுக்கும் நம்மால் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன் என்றார்.மேலும் விவசாயிகளுக்கு விவசாயத்தின் மூலம் மட்டுமின்றி உள்ளூரில் உள்ள இது போன்ற நிறுவனங்களில் விவசாயம் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதாலும் வருமானம் கிடைக்கிறது. இந்த நிறுவனம் ஒரு முன் மாதிரி நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.கிராமப்புற தொழில்முனைவு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதில் சிட்பியின் (SIDBI) அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

“2036 ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே தயாராக வேண்டும்; சாம்பியன்களை உருவாக்கட்டும்!” – உள் விளையாட்டு அரங்கத் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசு மற்றும் எஸ்பிஐ வங்கியின் நிதிப் பங்களிப்பின் கீழ் ரூ. 4.50 கோடி மதிப்பில் அதிநவீன உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் முன்னாள் தமிழ்நாடு நிதி அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, ற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில்,

“பிரதமர் நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஆரம்பத்தில் ‘டாப்’ (TOPS – Target Olympic Podium Scheme) என்ற திட்டத்தை அறிவித்தார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய இளைஞர்கள் பதக்க மேடையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக, சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளைத் நேரடியாக வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் ஒரு பகுதியாகவே நாடு முழுவதும் விளையாட்டு அரங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

2024-இல் பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு, நம் நாட்டில் மீண்டும் காமன்வெல்த் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார். 2010 காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் முறைகேடுகளால் அந்தப் போட்டியின் மீதே மக்களுக்கு ஒரு கசப்புணர்வு ஏற்பட்டது. ஆனால், தற்போதைய அரசு அந்தத் தவறுகளைத் தவிர்த்து, வெளிப்படைத்தன்மையுடன் காமன்வெல்த் போட்டிகளைத் தாயகத்திற்குக் கொண்டு வர முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக, 2036-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளைப் இந்தியாவில் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் அதிரடி முயற்சிகளையும் பிரதமர் எடுத்து வருகிறார்.”

“இந்திய இளைஞர்களை விளையாடத் தூண்டும் விதமாக ‘கேலோ இந்தியா’ (Khelo India) திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்காக ‘சான்சத் கேள் கும்ப்’ (Sansad Khel Kumbh) என்ற விளையாட்டுத் திருவிழாவை நடத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். வட இந்தியாவில் கும்பமேளா, தென்னிந்தியாவில் மகாமகம் மற்றும் புஷ்கரம் போன்ற ஆன்மீகத் திருவிழாக்கள் எப்படிப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல விளையாட்டையும் ஒரு கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

தமிழகத்தில் மாற்று அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்குப் பெரிதாக ஒத்துழைப்பு தராததால் கிராமப்புற மாணவர்களுக்கான இந்த வாய்ப்பு தடைப்பட்டது வருத்தமளிக்கிறது. விளையாட்டு என்பது கட்சி, அரசியல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. இளைஞர்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”

“விருதுநகர் மாவட்டம் என்பது மத்திய அரசின் ‘ஆஸ்பிரேஷனல் டிஸ்ட்ரிக்ட்’ (Aspirational District – முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள்) பட்டியலில் உள்ள ஒரு மாவட்டமாகும். இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், ஜல் ஜீவன் இயக்கம் (Jal Jeevan Mission) மூலமாகக் குடிநீர் வசதி, மருத்துவமனை மேம்பாடு மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்துணவுத் திட்டங்கள் முறையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

ஆனால், இந்த ஆஸ்பிரேஷனல் மாவட்ட மேம்பாட்டில் விளையாட்டுத் துறைக்கான பங்களிப்பு சற்று குறைவாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதன் விளைவாகவே, எஸ்பிஐ வங்கியிடம் பேசி, இந்த அரசு கலைக் கல்லூரியில் உடற்பயிற்சிக் கூடம், வாலிபால், த்ரோபால் மற்றும் நவீன பிக்கல்பால் போன்ற அனைத்துப் போட்டிகளுக்கும் உகந்த உள் விளையாட்டு அரங்கத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.

“ஒரு விளையாட்டு அரங்கத்தை நிதி கொடுத்துக் கட்டி முடிப்பது எளிது. ஆனால், அதைப் பராமரிப்பது (Maintenance) மிகக் கடினம். இந்த அரங்கம் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டுமானால், அதற்குத் தனிப்பட்ட முறையில் நானும், அமைச்சர் தங்கம் தென்னரசுவோ அல்லது எஸ்பிஐ அதிகாரிகளோ தினமும் இங்கே வர முடியாது.

அதேபோல், கல்லூரி நிர்வாகமும் பயிற்சியாளர்களும் (Coaches) மாணவர்களுக்கு முறையான, திட்டமிட்ட பயிற்சிகளை வழங்கி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். இங்கிருந்து தேசிய அளவிலான அணிகளுக்கு மாணவர்கள் தேர்வாக வேண்டும்.”

“திருச்சுழி என்ற உடனே உலகளவில் அனைவருக்கும் ரமணர் பிறந்த புண்ணிய பூமிதான் நினைவுக்கு வரும். அவரது ஆன்மீகச் சிந்தனைகள் இன்றும் உலகை வழிநடத்துகின்றன. அதேபோல், இனிவரும் காலத்தில் விளையாட்டுத் துறை என்று எடுத்தால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் ‘திருச்சுழி’ தான் நினைவுக்கு வர வேண்டும்.

அன்று கேரளாவில் பி.டி.உஷா என்ற ஒற்றை ஓட்டப்பந்தய வீராங்கனை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார். அதேபோல, இந்தத் திருச்சுழி மண்ணிலிருந்தும் சர்வதேச அளவிலான சாம்பியன்களும், ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வீரர்களும் உருவாக வேண்டும். இதுவரை ‘விருதுநகர் என்றால் வியாபாரம்’ என்றுதான் உலகிற்குத் தெரியும்; ஆனால் இனி, ‘விருதுநகர் பிள்ளைகள் விளையாட்டிலும் சாம்பியன்கள்’ என்ற புதிய பெருமையைப் பெற்றுத் தர வேண்டும்” என பேசினார்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

karkataka first day vizha - 2026

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் ‘ஆனையூட்டு’ விழா மிக பிரபலமான சமூக விழாவாகும். இந்த ஆண்டு இன்று ஆடி முதல் நாள் நடந்த இந்த விழாவில் 60 யானைகளுக்கு உணவளிக்கும் நிகழ்வு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.

கேரள மாநிலம் திருச்சூர் ஸ்ரீ வடக்குநாதன் கோவிலில் மலையாள மாதமான கற்கடகத்தின் ஆடி முதல் நாளில் ஆனையூட்டு விழா யானைகளுக்கு உணவளிக்கும் விழா) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் 60க்கும் மேற்பட்ட யானைகளுக்குச் சிறப்பு உணவுகள் வழங்கி, பக்தர்கள் அவற்றை வழிபடுவர். யானைகளுக்கு நெய், தேன், கரும்பு, அவல், அரிசி மற்றும் பாரம்பரிய மூலிகைகள் கலந்த ஊட்டச்சத்து மிக்க பிரத்யேக உணவு உருண்டைகள் (அஷ்டகூர்) வழங்கப்படுகின்றன.

விநாயகப் பெருமானின் வடிவமாகக் கருதப்படும் யானைகளுக்கு உணவளிப்பதன் மூலம், தடைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

புகழ்பெற்ற திருச்சூர் பூரம் நடைபெறும் இதே வடக்குநாதன் கோவில் வளாகத்தில்தான் இந்த விழாவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இன்று காலை இங்குள்ள ஸ்ரீ வடக்குநாதன் கோவிலின் வருடாந்திர ‘அனயூட்டு’ விழாவில் 60க்கும் மேற்பட்ட யானைகளுக்கு உணவளிக்கப்பட்டது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

விநாயகப் பெருமானை மகிழ்விப்பதற்காக, யாகத் தீயில் புனிதப் பொருட்களை அர்ப்பணிக்கும் ‘அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்’ சடங்கின் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெற்றது. இந்த ஹோமத்திற்காக சுமார் 1,000 கிலோ அவல், 10,000 தேங்காய்கள், 2,000 கிலோ வெல்லம், 200 கிலோ நெய் மற்றும் 50 கிலோ தேன் பயன்படுத்தப்பட்டன.

கோவில் மேல்சாந்தி யானைக்கு தீவனம் வழங்கி, ‘ஆனையூட்டை’ துவக்கி வைத்ததும் ஏராளமான பக்தர்கள் யானைகளுக்கு உணவு வழங்கினர்.

யானைகளுக்கு வெல்லம், நெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்த அரிசி வழங்கப்பட்டது. மேலும், அவற்றுக்குத் தேங்காய், கரும்பு, அன்னாசிப்பழம், வாழைப்பழம் மற்றும் வெள்ளரிக்காயும் உணவாக அளிக்கப்பட்டன.

அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் யானைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில், அந்த பிரம்மாண்ட விருந்தின் முடிவில் ‘அஷ்ட சூரணம்’ என்ற மூலிகை செரிமானப் பொடியும் வழங்கப்பட்டது.பொதுவாக கேரளாவில் ஆடி மாதம் கஷ்டமான மாதம் என்ற ஐதீகம் நிலவுவதால் பக்தர்கள் யானைகளுக்கு உணவு வழங்கியும் கோயில்களில் ராமாயண பாகவதம் பாடி வருவதும் உண்டு

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

vanchinathan statue garlanding in sengottai - 2026

இன்று வீரவாஞ்சியின் பிறந்த தினம் என்று அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி நாமும் அவரது சிலைக்கு மாலை சாற்றி மரியாதை செய்து வணக்கமிட்டு வருகிறோம்.

வரலாற்றுப் பாடங்களில், 1885 டிசம்பர் 28ல் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம், டபிள்யு சி பானர்ஜி ஆகியோரால், மேற்குத் தொடர்ச்சி மலையின் வடபகுதியில் உள்ள -பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சம்ஸ்க்ருதக் கல்லூரியில் வைத்து இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு தொடங்கப்பட்டது என்பதைப் படித்திருப்போம். அதாவது, 1857 முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனியின் வசம் இருந்து, பிரிட்டிஷ் ராணியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இங்கே அரசாட்சி அமைந்தபின், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்புகள் – ஆயுதம் தாங்கிய மோதல்கள் – ஆங்கிலேயரின் உயிரிழப்புகள் – இவற்றைத் தவிர்க்கவும், மட்டுப் படுத்தவும், இந்திய மக்களின் எதிர்ப்புணர்வை ஆயுதமற்ற அமைதி வழி எதிர்ப்பாக மடைமாற்றவும் இந்த காங்கிரஸ் அமைப்பு தொடங்கப்பட்டது.

என்றாலும், இந்த நிகழ்வுக்கு அடுத்த ஆறே மாதங்களில் – ஆங்கிலேயரின் சதிவலைக்கு எதிர்ப்பாக – 1886ல் – அதே மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் – செங்கோட்டையில் பாரதத் தாய் ‘சங்கரன்’ எனும் தன் வீரப் புதல்வனை ஈன்றெடுத்தாள். காங்கிரஸ் ஒரு புறம் சமாதானப் பேச்சுக்காக இந்தியர்களை மேலும் மேலும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்படுத்தும் வேலையில் ஈடுபட்ட போது, அதே பம்பாயில் தோன்றிய மராட்டியச் சிங்கம் பால கங்காதர திலகரின் வழியில் வீரமிகு எதிர்ப்புணர்வு எழுச்சியை பெரும்பான்மை இந்தியர்கள் ஆதரித்தார்கள்.

அந்த வழியில், முந்தைய அரை நூற்றாண்டு ஆயுதம் தாங்கிய எதிர்ப்பின் தொடர்ச்சியை இளைஞர்கள் சிலர் மேற்கொண்டார்கள். அப்படி மேற்கு மலைத் தொடரின் வடபுறத்தில் சாவர்க்கரால் உருவான அபிநவ பாரத் சங்கம் போல் தென்புறத்தில் உருவானது பாரத மாதா சங்கம். அதன் கொள்கை செயல் வீரனாய்த் திகழ்ந்தவன் வாஞ்சி எனும் பேர் தாங்கிய சங்கரன்.

சம்-கரன் என்றால், நலம் செய்விப்பவன். பகவான் சங்கரன் தீயோரை அழித்து நல்லோருக்கு நலம் செய்விப்பவன். ஆசார்ய சங்கரர் தீய சமயக் கொள்கையோரைச் சாய்த்து நல்வழி கொண்டோர்க்கு நலம் செய்தார். வீர சங்கரன், பாரதீயருக்குத் தீங்கிழைத்த ஆங்கிலேயனை மாய்த்து தன் பெயருக்கேற்ற தன்மையை உறுதிப் படுத்தினான்.

அந்த வீரவாஞ்சிக்கு – இன்று 140 வது பிறந்த நாள் என்று கொள்கிறோம்.

வீரவாஞ்சி தன்னுயிரைத் தியாகம் செய்தது 1911 – ஜூன் 17. ஆனால் அவன் பிறந்த நாள் குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை. வருடம் மட்டுமே 1886 என்பது தெரிகிறது. எனினும் அரசு விழாவாகக் கொண்டாடப் படுவதால், இன்றைய தினமே அவன் பிறந்த தினம் எனக் கொண்டு நாமும் மரியாதை செய்கிறோம்.

***
இந்த நாளில், நம் சார்பில் ஒரு கோரிக்கை….

தென் தமிழகத்தில் மிக முக்கியமான ரயில் நிலையமாகத் திகழ்வது செங்கோட்டை ரயில் நிலையம். தமிழகத்தையும் கேரளத்தின் கொல்லத்தையும் இணைக்கும் பாதையில், செங்கோட்டையே தமிழகத்தின் கடைசி பெரிய நிலையம் என்பதும், இங்கே கடந்த காலங்களில் ரயில் நிலையம் பிட் லைன் வசதிகளுடன் மிகப் பெரிதாக பராமரிக்கப் பட்டு வந்ததையும் நாம் அறிவோம்.

செங்கோட்டை, கடந்த நூற்றாண்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசபக்தர்கள் அதிகம் வாழ்ந்த ஊர் என்பதும், இந்த ஊரைச் சேர்ந்த இளைஞன் வீரவாஞ்சி செய்த தியாகச் செயல் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்ததும் வரலாறு.

வீரவாஞ்சி, செங்கோட்டையில் பிறந்து, திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்டக் களத்தில் பங்கேற்று, மணியாச்சி ரயில் நிலையத்தில் தன் வாழ்க்கையை தியாகம் செய்து சுதந்திரப் போரில் ஆகுதி ஆக்கிக் கொண்டான். அவனது வீரச் செயலைக் குறிப்பிட்டு, தனது மன் கி பாத் – மனதின் குரல் நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “தவறு செய்த கலெக்டருக்கு தண்டனை அளித்தார் வீர் வாஞ்சிநாதன்” என்று குறிப்பிட்டுப் புகழாரம் சூட்டினார்.

அத்தகைய பெருமை மிக்க வீரன் வாஞ்சியுடன் அன்றைய கால கட்டத்தில் நீலகண்ட பிரம்மசாரி, வ.வே.சு ஐயர், போன்றவர்களும். வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற பெரியவர்களும் களத்தில் இருந்தார்கள். அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், வீரன் வாஞ்சியுடன் தொடர்புடைய செங்கோட்டை, திருநெல்வேலி, மணியாச்சி, ஆகிய ஊர்களையும், வ.வே.சு.ஐயர்,, நீலகண்ட பிரம்மசாரி ஆகியோரின் நினைவைப் போற்றும் ஊர்களாகிய பாபநாசம், சீர்காழி (மயிலாடுதுறை) ஆகிய ஊர்களையும் இணைக்கும் வகையில் தற்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செங்கோட்டை – தாம்பரம் (திருநெல்வேலி வழி) எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ‘வாஞ்சி எக்ஸ்பிரஸ்’ எனப் பெயர் சூட்ட வேண்டுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

செங்கோட்டையில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் இரண்டு ரயில்களுக்கு பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளதால், செங்கோட்டை – தாம்பரம் ரயிலுக்கு வாஞ்சி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது நம் கோரிக்கை.

தற்போது, இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, தென்காசி வாழ் ரயில் பயணிகள் மத்தியில் அழுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், பாஜக., தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் ஐயாசாமி போன்றவர்களும் குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்தக் குரலுடன் நம் குரலும் வாஞ்சி எக்ஸ்பிரஸ் பெயர் சூட்டலுக்காக ஒன்று சேர்கிறது.

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

susruthar statue in scotland - 2026

சுஷ்ருதர் சிலை திறப்பு சொல்லும் செய்தி என்ன?

– சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் –
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

எடின்பரோவில் (ஸ்காட்லாந்து) உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் உலகில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரி. 16 ம் நூற்றாண்டில் துவங்கப்பட்டதாக அறியப்படுகிறது. அது மகரிஷி சுஷ்ருதரை கௌரவிக்க முடிவெடுத்து கடந்த மாதம் (ஜூன் 2026) அவரது உருவச் சிலையை நிறுவியது. 90 கிலோ எடை கொண்ட அந்த வெண்கல சிலை தமிழ்நாட்டில் உள்ள சுவாமி மலையில் வடித்தெடுக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கு அடித்தளமிட்ட சுஷ்ருதருக்கு சிலை நிறுவியது முக்கியமான நிகழ்வு. மருத்துவ வரலாறு ஐரோப்பாவை மையம் கொண்டதாக அறியப்படும் வேளையில் அவ்வாறு அல்ல என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. ஆனால் இந்தியாவில் அந்த நிகழ்வுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மருத்துவத் துறையில் சுஷ்ருதரின் பங்களிப்பு பற்றி மேலை நாடுகளில் கிடைக்கும் உறுதியான அங்கீகாரம் இந்தியாவில் கிடைப்பது இல்லையே , அது ஏன் ? என்ற சங்கடமான கேள்வி எழுகிறது.

கணிதவியலில் ஆரியபட்டரை போல சேர்மவியலில் பிங்கலரை போல சுஷ்ருதருக்கும் இந்திய அறிவு பாரம்பரியத்தில் முக்கியமான இடம் இருக்கிறது. அவர் வாழ்ந்த காலம் பற்றி உறுதியாக தெரியாவிட்டாலும் பொது யுகத்திற்கு முன்பு ஆறாம் நூற்றாண்டில் காசி மாநகரில், இன்றைய வாரணாசியில், வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. மனித உடலை கூர்ந்து கவனித்து, வகைப்படுத்தி, அனுபவத்தினால் புரிந்து கொள்ளும் மரபில் வந்தவராக சுஷ்ருதர் அறியப்படுகிறார்.

இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றி பேசும்போது அரசர்கள், போர்கள் , நினைவு தூண்கள் மீதே அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது. இந்திய அறிவியல்யாளர்களைப் பற்றி போகிற போக்கில் சில தகவல்கள் பதிவாகியுள்ளன. சுஷ்ருதர் தேர்ந்த , சிறப்பான மருத்துவர் மட்டுமல்ல . சீரிய மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆய்வின் மேற்கொள்ளும் மருத்துவ கலாச்சாரத்தின் பிரதிநிதி. முறையாக அறிவை தொகுத்துக் கொள்ளும் பண்பாட்டின் பிரதிநிதி.

அவருடைய சிந்தனைகளின் தொகுப்பான சுஷ்ருதர் சம்ஹிதை என்ற மருத்துவ நூல் ஆயுர்வேத மருத்துவத்தின் அடித்தளமாக உள்ளது. இது மிகத் தொன்மையான, முழுமையாக தொகுக்கப்பட்ட மருத்துவ நூலாக இருக்கிறது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோய்களும் 300 வகையான அறுவை சிகிச்சை முறைகளும் 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை கருவிகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த கருவிகள் பலவும் கூர்ந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டதாகவும் வெவ்வேறு தேவைகளை கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

அறுவை சிகிச்சை மட்டுமின்றி உடற்கூறு, எலும்பு முறிவு, தீப்புண்கள் , விஷம் , மகப்பேறு, மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய கவனிப்பு என்று அனைத்தும் அதில் உள்ளன. தனித்தனி பிரச்சனைகளும் தீர்வுகளும் என்றில்லாமல் ஒட்டுமொத்தமான மருத்துவ அறிவின் தொகுப்பாக அந்த நூல் இருக்கிறது.

முக அழகு அறுவை சிகிச்சையின் முன்னோடியாக சுஷ்ருதர் அறியப்படுகிறார். அந்த காலத்தில் போர் காயம் அல்லது தண்டனை காரணமாக சிதைந்த மூக்கை முன் நெற்றியில் உள்ள தோலை பயன்படுத்தி சீர்படுத்தி உள்ளார். அவர் பயன்படுத்திய முறை இன்று பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் பொலிவான தோற்றத்திற்கான புனரமைப்பு அறுவை சிகிச்சை முறைக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

கண் புரை அறுவை சிகிச்சைக்கான தொழில்நுட்பத்தை முறையாக அவர் விவரித்துள்ளார். உடலை கீறி பிளப்பது, உடலில் இருந்து பிரித்து எடுப்பது, துளையிடுவது, உரசி தேய்தல்/ சீவுதல், கருவிகொண்டு கிளறி ஆய்வது என்று அறுவை சிகிச்சையை பல்வேறு வகைபாடுகளில் விவரமாக எழுதியுள்ளார். ரத்த நாளங்கள், எலும்புகளை பிணைக்கும் தசைநார்கள், எலும்புகள், மூட்டுக்கள் பற்றியும் அவற்றின் இணைப்பு பகுதிகளை பற்றியும் அவருக்கு ஆழ்ந்த புரிதல் இருந்துள்ளது. இந்த இணைப்பு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்வதை கூடுமானவரையில் தவிர்க்க வேண்டுமென அவர் ஆலோசனை கூறியுள்ளார். ஏனெனில் அந்த பகுதியில் சிகிச்சையின் போது சிறு காயம் ஏற்பட்டாலும் அது கடுமையான ஊனத்தை ஏற்படுத்தும். சில வேலைகளில் மரணம் கூட சம்பவிக்கலாம் என்கிறார்.

மருத்துவ துறைக்கு அவர் ஏற்படுத்தி தத்துவ அடித்தளம் அவரது ஆகச்சிறந்த பங்களிப்பு. அறுவை சிகிச்சை முறைகளை மனப்பாடமாக அறிந்திருப்பதாலோ அல்லது அக தூண்டுதலாலோ நிபுணத்துவம் பெற முடியாது என்று சுஷ்ருதர் வாதிடுகிறார். மாணவர்கள் மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சைகளை செய்வதன் மூலமாக நடைமுறையில் தேர்ந்து நிபுணத்துவம் பெற முடியும். சுரைக்காய் அல்லது பூசணையில் கச்சிதமாக வெட்டுவதையும் விலங்குகளின் தோலை கீறி உரிப்பது, தாமரைத் தண்டுகள் , விலங்குகளின் ரத்த நாளங்களில் துளையிடுவதையும் தோல் பைகளில் தைப்பதையும் அவரது மாணவர்கள் நடைமுறை பயிற்சிகளாக மேற்கொண்டனர்.

சடலங்களைக் கொண்டு உடற் கூறாய்வு செய்வதன் மூலம் மாணவர்கள் மனித உடலை நேரடியாக கவனித்து தெரிந்து கொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். கூர்ந்து கவனிப்பது , பயிற்சி இரண்டும் மருத்துவத்தில் தேர்ச்சி பெற தேவையானவை என்பது அவரது கருத்து.

அறுவை சிகிச்சை முறைகளையும் கடந்து சுஷ்ருதர் மருத்துவ நன்நெறிகளை தீவிரமாக வலியுறுத்தினார். மருத்துவ தொழில் நுட்ப திறமை , பரிவு , ஒழுக்க கட்டுப்பாடுகள், நேர்மை ஆகியவை ஒரே நிரையாக மருத்துவருக்கு கட்டாயம் தேவை என்று அவர் கூறியுள்ளார். சிகிச்சை என்பது மூன்று கட்டங்களை கொண்டதாக — பூர்வ கர்மா (சிகிச்சைக்கு முன்பான தயாரிப்பு ), பிரதான கர்மா (அறுவை சிகிச்சை) , பஸ்சத் கர்மா (அறுவை சிகிச்சைக்கு பிறகான கவனிப்பும் நலமடைதலும்) — அவர் வகைப்படுத்தி உள்ளார்.

முன் தயாரிப்பு, செயல்பாடு, தொடர் கவனிப்பு என்று அவர் வலியுறுத்திய விஷயங்கள் இன்றைய அறுவை மருத்துவத்தின் அடித்தளமாக உள்ளன. எனவே அவரது வெற்றி புதுமையான கண்டுபிடிப்புகளிலும் தொழில்நுட்பத்திலும் மட்டுமல்லாமல் , சரியாக திட்டமிடல் மற்றும் நோயாளிகளின் நலனுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதிலும் அடங்கி இருந்தது.

இந்த சாதனைகளுக்காக சுஷ்ருதர் “பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை ” என்று பரவலாக அறியப்படுகிறார் . ஆனால் இது அவரது பங்களிப்பின் ஒரு பகுதியை தான் படம் பிடிக்கிறது. தனிமனித திறமை என்றிருந்த அறுவை சிகிச்சையை அவதானிப்பு , சிகிச்சைக்கான படிப்படியான வழிமுறைகள், எத்தனை முறை செய்தாலும் அதே விளைவுகளை தரும் சீரிய முறைகளைக் கொண்ட பொதுவான முறைமையை உருவாக்குவதற்கான முன்னோடி முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதை அவரது பணிகள் சுட்டிக் காட்டுகின்றன.

சுஷ்ருதர் சம்ஹிதை நூல் பிரத்யக்க்ஷம் (நேரடியாக பார்ப்பது) , அனுமானம் (ஊகிப்பது) , சான்று ஆகியவற்றை மருத்துவத்தின் மையமாக வைக்கிறது. இந்த கொள்கைகள் தனிமனித அறுவை சிகிச்சையில் புதுமைகளை கொண்டு வந்ததைப் போலவே அறிவியல் வரலாற்றிலும் மாற்றத்தை கொண்டு வந்தது.

இந்திய அறிவு முறைமைகளை பற்றி விவாதிக்கும்போது இதுபோன்ற அறிவியல் பங்களிப்புகளும் கவனம் பெற வேண்டும். இந்திய ஞான மரபு என்றால் தத்துவம், இலக்கியம், சமயம், பண்பாட்டு அடையாளம் ஆகியவை பற்றியே பொதுவாக கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அவை குறித்து விவாதம் செய்யப்படுகின்றன. அவை இந்திய அறிவு மரபில் முக்கியமானவை என்றாலும் அதொரு பகுதி தான்.

மருத்துவம், வானவியல், கணிதம் , உலோகவியல், மொழியியல், விவசாயம் போன்ற துறைகளிலும் இந்திய பாரம்பரியமும் பங்களிப்பும் அதே அளவுக்கு கவனம் பெற வேண்டும். கலாச்சார நினைவுகள் அல்லது பண்பாட்டு பெருமிதம் மட்டுமே இந்திய அறிவு மரபாக புரிந்து கொண்டால் நீண்ட அறிவியல் ஆய்வு மரபுகள் பார்வையில் படாமல் போய்விடும்.

துரதிஷ்டவசமாக , இரண்டு முரண்பட்ட அதே வேளையில் பயனற்ற அணுகு முறைகளிடையே சுதந்திரத்திற்கு முன்பான இந்திய அறிவியல் சிக்கிக் கொண்டது. ஒன்று, வரலாற்று பூர்வமான இந்திய சாதனைகளை புராணம் அல்லது மிகைப்படுத்துதல் என்று புறம் தள்ளியது . மற்றது, எந்தவிதமான வரலாறு, ஆவண சான்றுகளும் இல்லாமல் சாதித்தோம் என்று கோஷமிட்டது. இரண்டு அணுகு முறைகளும் அறிவார்ந்தது அல்ல. சுஷ்ருதரின் நூல் கூர்ந்து கவனித்தல் , அறிவை தொகுத்துக் கொள்ளுதல், புதுமையான நடைமுறைகள் ஆகியவற்றை வலியுறுத்துவதன் மூலம் கடந்த காலத்தை ஒளிர செய்கிறது. வருங்கால அறிவியல் மரபுக்கு அடித்தளமிட்டுள்ளது.

சுஷ்ருதரின் செல்வாக்கு இந்திய துணைக்கண்டத்தையும் கடந்து பரவியுள்ளது. அப்பாசிய காலத்தில் (முகமது நபிக்கு பின் வந்த மூன்றாவது கலிபா காலத்தில்) சுஷ்ருதர் சம்ஹிதை அரபு மொழியில் கித்தப் ஐ சுஷ்ருத் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்திய மருத்துவ அறிவு அறுவை சிகிச்சை என்பதையும் கடந்து தெற்காசிய நாடுகளின் அறிவுலகு என்னும் பரந்த வெளியில் நுழைந்தது.

எடின்பரோவில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் சுஷ்ருதரை கௌரவிப்பது என்ற முடிவின் மூலம் மருத்துவ வரலாறு ஏதோ ஒரு பண்பாட்டின் மரபு என்றில்லாமல் பல்வேறு நாகரீகங்களின் பங்களிப்பின் சங்கமம் என்ற உண்மையை சர்வதேச சமுதாயம் ஏற்றுக் கொள்வதன் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஆரோக்கியம் , உயிரி தொழில்நுட்பம், மருந்தியல், மருத்துவ ஆய்வுகள் போன்ற துறைகளில் இந்தியா தன்னுடைய நிலையை வலுப்படுத்த முனைந்து வருகின்ற வேளையில் சுஷ்ருதரின் பாரம்பரியம் புதிய கவனம் பெறுகிறது.

உள்கட்டமைப்பு மேம்பாடும் புதிய முதலீடுகளும் முக்கியமானவை. ஆனால் அறிவியல் துறையில் தலைமை என்பது ஆய்வு மனப்பான்மை, தீவிர பயிற்சி, சான்றுகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இவைதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுஷ்ருதரை வழிநடத்திய பண்புகள். அரசியல் அதிகாரம் அல்லது பொருளாதார வல்லமையால் மட்டுமே நாகரீகங்கள் நீடிக்கவில்லை. மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

நன்றி: கார்டியன்


கட்டுரையாளர் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார்.


இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

supreme court of india - 2026

நவோதயாவை தடுக்காதீர்: உச்ச நீதிமன்றம்

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை? எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன. நீங்கள் உங்களது சொந்த கல்வி முறையை வைத்திருக்கலாம், ஆனால், மத்திய அரசின் பள்ளிகளை தடுக்காதீர்கள்” – தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி தொடர்பான வழக்கின் விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து!

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

உச்ச நீதிமன்றம்: “ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பள்ளிகள் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டில் சுமார் 80 பள்ளிகளை இலவசமாக அமைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் வழங்கப்படவுள்ள தரத்துக்கு இணையான கல்வியைப் பெற, இன்று பல தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை பெற்றோர்கள் கட்டணம் செலுத்துகிறார்கள்.

ஒரு பள்ளிக்கு சராசரியாக 2,000 மாணவர்கள் சேர்ந்தாலும், சுமார் 80 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக உயர்தர கல்வி கிடைக்கும். அதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கல்விச் செலவு குறையும். இதனால் பயன் அடைவது மாணவர்களும் பெற்றோர்களும்தானே? பிறகு ஏன் அனுமதி கொடுக்காமல் தடுக்கிறீர்கள்?

மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்பதற்காகவே இந்தப் பள்ளிகளை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லுகிறீர்கள். ஆனால், அந்த முடிவை பெற்றோர்களும் மாணவர்களும் எடுக்க வேண்டியதல்லவா? உண்மையிலேயே அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், அவர்கள் அந்தப் பள்ளிகளில் சேர மாட்டார்கள். மாணவர்கள் இல்லையெனில், பள்ளிகள் இயல்பாகவே மூடப்படும். ஆனால், பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பே, “இங்கு இந்தி கற்பிக்கப்படும்; அதனால் தமிழ் அழிந்துவிடும்” என்று அச்சத்தை உருவாக்கி மக்களை ஏன் குழப்ப வேண்டும்?

இந்த விவகாரத்தில் பழைய அரசின் நிலைப்பாடு எங்களுக்கு பிடிக்கவில்லை. தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.”

இது நியாயமான கேள்விதான். படிக்க விருப்பம் உள்ளவர்கள் அந்தப் பள்ளிகளில் படிக்கட்டும்; விருப்பம் இல்லாதவர்கள் சேராமல் இருக்கட்டும். அந்தத் தேர்வு உரிமையை மக்களிடமிருந்து ஏன் பறிக்க வேண்டும்?

ஒருவேளை இந்தப் பள்ளிகள் தொடங்கினால், சில தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்து, அவர்களின் வணிகம் பாதிக்கப்படும் என்ற அச்சம்தான் இதற்குப் பின்னால் இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. புதிய அரசு இந்த விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தில் அல்ல, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பெற்றோரின் நலன் என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பதிவு: எம். தங்க ராஜ்

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்து போட்டி -2026 பகுதி 8

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. 1966ஆம் ஆண்டு இந்த இரு அணிகளும் காலிறுதி ஆட்டத்தில் மோதின. இதில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இங்கிலாந்து அடித்த கோலை ஆஃப்சைடு என்று கூறி அர்ஜெண்டைனா ஏற்கவில்லை. அர்ஜெண்டைனா அணியின் அணித்தலைவர் அண்டோனியோ ராட்டின் ஆட்டத்தின் இரண்டாவது எச்சரிக்கையைப் பெற்று, வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் வெளியேற மறுத்துவிட்டார். பின்னர் காவலர்களை அழைத்து அவரை வெளியேற வைத்தனர்.

          இதன் பின்னர் 1986ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் விளையடின. இந்த ஆட்டத்தில்தான் மரடோனா தனது கையால் பந்தத் தல்லி கோலடித்தடித்ததாகக் கூறப்படு “கடவுளின் கை கோல்” அடிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டைனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மரடோனா இரண்டு கோல்களையும் அடித்தார்.

          1998 உலகக் கோப்பையின்போது ரவுண்ட் 16இல் இரு அணிகளும் சந்தித்தன. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டிருந்தன. அதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குப் போனது. அதில் அர்ஜெண்டைனா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை குழு ஆட்டத்தில் இரு அணிகளும் சந்தித்தன. இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

          இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் அரையிறுதியில் மோதுகின்றன. நீண்ட நாள்களுக்குப் பின்னர் ஒரு நாக்அவுட் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுக்கு இடையில் தள்ளுமுள்ளு, சட்டையைப் பிடித்து இழுத்தல் ஆகியவை நடந்தன. மோதல் காரணமாக ஆட்டம் சிறுது நேரம் நிறுத்தப்பட்டது.

          இரண்டாவது பாதியில், 55ஆவது நிமிடத்தில், இங்கிலாந்து அணியின் அந்தொணி கோர்டன் ஒரு கோலை அடித்தார். அதன் பிறகு இங்கிலாந்து அணியின் கோச் அணியில் புதிய வீரர்களை இறக்கினார். இதனால் அணியின் ஆட்டத்தில் தளர்வு ஏற்பட்டது. ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில், அர்ஜெண்டைனா அணியின் என்சோ ஃபெர்னாண்டஸ் சமன் செய்யும் கோலை அடித்தார். கூடதல் நேரத்தில் அந்த அணியின் லௌதாரோ மார்டினஸ் இரண்டாவது கோலை அடித்தார். இதனால் அர்ஜெண்டைனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெற்றது.

          மூன்று மாற்றும் நான்காம் இடத்திற்கான ஆட்டம் ஜூலை 18இல் மியாமியில் பிரான்சு, இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும். இறுதிப் போட்டி ஜூலை 19இல் நியூயார்க்,- நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் அர்ஜெண்டைனா, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறும்

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

annamalai bjp tn leader - 2026

— ஆர். வி. ஆர்

மோடி கட்சி எனப் புரிந்துகொள்ளப் படுவது, பாஜக; அண்ணாமலை கட்சி, தற்காலிகமாக ‘வீ த லீடர்ஸ்’ வேடத்தில் உள்ளது; விஜய் கட்சி, தவெக.

2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக, மாநில மக்களின் நிலை இது: மக்களுக்கு முதலில் ஒரு மோசமான ஆட்சியிலிருந்து விடுதலை, அடுத்ததாக நிர்வாகத்தில் லஞ்ச ஊழலை ஊக்கப்படுத்தாத ஒரு புதிய அரசு, பிறகு மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை, வேலை வாய்ப்பை, மக்கள்நலப் பணிகளை முன்னெடுக்கும் ஒரு முதலமைச்சர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக வேண்டி இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டும்.

பாஜக-விலிருந்து வெளியேறிய அண்ணாமலை தொடங்கவிருக்கும் கட்சி, தமிழகத்தில் நடக்கப் போகும் தேர்தல்களில் போட்டியிடும்போது பாஜக-வையும் எதிர்த்துப் பிரசாரம் செய்யும். அந்த நேரத்தில், “எங்கள் கட்சி தமிழக பாஜக-வை மட்டும் எதிர்க்கிறது, மத்திய பாஜக-வை அல்ல” என்று அண்ணாமலை கட்சி பேச முடியாது. அதாவது, நரேந்திர மோடி நடுநாயகமாக இருக்கும் பாஜக-வை, அண்ணாமலை கட்சி எதிர்க்கப் போகிறது. “நான் தேசியவாதி, தமிழகத்தில் நல்லாட்சி தர விரும்புகிறேன். இருந்தாலும் மிகச் சிறந்த தேசியவாதியாக இருந்து மத்தியில் 2014-லிருந்து நல்லாட்சி வழங்கி வரும் மோடி, அல்லது அவர் அனுப்பிவைக்கும் வேறு மத்திய பாஜக தலைவர்கள், தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினாலும், நான் அந்த வேட்பாளர்களை எதிர்த்துக் களமிறங்குவேன் – அப்போது நான் மோடியையும் குறைசொல்லிப் பிரசாரம் செய்வேன்” என்று அண்ணாமலை இப்போதே மறைமுகமாகத் தெரிவிக்கிறார்.

தேசநலன் காரணமாக மோடியைத் தீவிரமாக ஆதரிக்கும் பலர், அண்ணாமலைக்காகத் தாங்கள் பாஜக-வை விட்டு விலகிப் போவதை நினைக்க முடியாது. அதே சமயம், அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை வைத்து, மோடி கட்சியான பாஜக-வை எதிர்த்து அண்ணாமலை கட்சிக்காக வேலை செய்யவும் வாக்களிக்கவும் அதிகமானவர்கள், கணிசமானவர்கள், இருப்பார்கள்.

அண்ணாமலைக்காக அவர் கட்சிக்கு வாக்களிக்க இருப்பவர்கள் திமுக மற்றும் அதிமுக வேண்டாம் என்று நினைப்பார்கள். அவர்களில் பலர் முன்பு பாஜக-வுக்கு வாக்களித்திருப்பார்கள். மொத்தத்தில், அண்ணாமலை அபிமானிகள் அநேகமாகப் படித்தவர்களாக, விவரம் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

2026 சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனித்து நின்று போட்டியிட்டது. இருந்தாலும் அவர் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரு பெரும் கூட்டணிகளை ஒருசேரத் தோற்கடித்து, 234 தொகுதிகளில் 108-ஐ வென்று, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறார். விஜய் கட்சிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலோர் படித்தவர்கள், பொது அறிவு மிக்கவர்கள், மிக விவரமானவர்கள் என்று இல்லை. அவர்கள் பெரும்பாலும் சாதாரணமானவர்கள். அவர்களின் நிலை வேறு, அண்ணாமலை அபிமானிகளின் நிலை வேறு. ஆனால் விஜய் வாக்காளர்கள் அண்ணாமலை அபிமானிகளை விட எண்ணிக்கையில் மிக அதிகமாக இருப்பார்கள். அண்ணாமலை அபிமானிகளை, விஜய் ஈர்ப்பது கடினம். விஜய் வாக்காளர்களை, அண்ணாமலை ஈர்ப்பதும் கடினம். இரு தரப்பிலும் ‘ஜென் சீ’ நபர்கள் நிறைய உண்டு.

2026 தமிழக சட்டசபைத் தேர்தலின் போது, முதல் வேலையாக அப்போதிருந்த மோசமான திமுக ஆட்சியை வீழ்த்தினால்தான், அடுத்ததாக நேரான ஆட்சி, மக்களுக்கு வளம் சேர்க்கும் ஆட்சி போன்றவை மாநிலத்தில் சாத்தியமாகும் என்றிருந்தது. அந்தத் தேர்தலில் அந்த முதல் வேலையைச் செய்து காண்பித்தவர், கூட்டணி ஏதுமில்லாமல் திமுக-வைக் குறிவைத்து எதிர்த்த விஜய்.

தேர்தல் நேரத்தில் விஜய் மேடையில் சினிமாத்தனமாகப் பேசி இருக்கலாம். அந்த வழிதான் அவருக்குத் தெரிந்தது என்றிருக்கலாம். ஆனாலும் அவர் அநாகரிகமாக, ஆபாசமாகப் பேசவில்லை. அவர் கட்சியைச் சார்ந்தவர்கள் பல தொகுதிகளில் பணவிநியோகம் செய்து வாக்குகளை வாங்கினார்கள் என்ற சீரியஸான குற்றச்சாட்டும் அந்தக் கட்சி மீது கிடையாது. அண்ணாமலையின் சிறந்த கல்வியறிவு, பொது விஷயங்கள் பற்றிய ஆழ்ந்த ஞானம், நுணுக்கமான சிந்தனை ஆகியவை விஜய்யிடம் இல்லை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, விஜய் ஒற்றை மனிதராகத் திமுக-வை அந்தத் தேர்தலில் வீழ்த்தினார், அதிமுக-வை ஓரத்தில் கடாசினார். இந்த அரிய சாதனையை விஜய் செய்ததற்குக் காரணம், அவர் சாதாரண மக்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார் என்பதுதான்.

விஜய்க்காக அவர் கட்சிக்கு வாக்களித்த சாதாரண மக்கள் அனைவரின் வாக்குகளும் நமது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம். அந்த வாக்குகள் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்குச் செல்லாமல் தடுத்து, அவற்றைத் தன் பக்கம் வரவழைத்து, திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றிய பெருமை விஜய்க்கு உண்டு, அவருக்கு மட்டும்தான் உண்டு. அதற்கான மகுடத்தை விஜய்க்குத்தான் அணிவிக்க வேண்டும்.

2026 தேர்தலின் போதே அண்ணாமலை பாஜக-விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி அந்தத் தேர்தலில் அவர் கட்சி போட்டியிட்டிருந்தாலும் (அதுவும் திமுக, அதிமுக-வையும் எதிர்த்துப் போட்டியிட்டிருந்தால்) விஜய்யின் வாக்காளர்களை அண்ணாமலை ஈர்த்திருக்க மாட்டார். அப்போதும் விஜய் கட்சிதான் மிக அதிகத் தொகுதிகளை வென்றிருக்கும். இதையெல்லாம் குறிப்பிடுவதன் நோக்கம், அண்ணாமலையை விட விஜய் சிறந்த அரசியல் தலைவர் என்று சொல்ல வருவதல்ல. படித்தவர்களை விட, விவரமானவர்களை விட, சாதாரண மக்கள் அதிகமுள்ள நம் மாநிலத்தில் திமுக-வை ஆட்சியிலிருந்து வீழ்த்த விஜய்யால் மட்டும் முடிந்தது; அதற்கான பெருமை அவருக்கே உரித்தானது என்பதை நாம் ஒதுக்க முடியாது, கூடாது.

மக்கள் நலனில் திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றிய முதற்கட்டம் முடிந்தது. அடுத்ததாக, விஜய் லஞ்ச ஊழலை ஊக்கப் படுத்தாத அரசு நிர்வாகத்தை வழங்குவாரா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு முன்பாக நாம் ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது. அண்ணாமலை படித்தவர்களை, விவரம் தெரிந்தவர்களை, அதிக நேர்மையாளர்களை, தனது புதிய அமைப்பிற்கு, இனி அவர் தொடங்கப் போகும் அரசியல் கட்சிக்கு, இயல்பாக ஈர்ப்பார். ஆனால் அதைப் போன்ற மனிதர்களை சினிமாப் புகழ் விஜய் தன்னுடைய கட்சிக்கு ஈர்த்திருக்க முடியாது. விஜய் கட்சியின் சில தலைவர்கள், சில நிர்வாகிகள், விஜய்யின் பிரபல்யத்தை வைத்துத் தங்களை வளப்படுத்திக் கொள்ள முனைவார்கள். அதை விஜய்யும் அறிந்திருப்பார் – மனிதர்களைப் புரிந்துகொள்வதில் விஜய் கெட்டிக்காரர். அனைத்தையும் உணர்ந்து, ஒரு முதலமைச்சராக லஞ்ச ஊழலுக்கு எதிராக விஜய் இதுவரை பொதுவெளியில் உரத்துக் குரல் கொடுத்தது பெரிய விஷயம். விஜய் இதில் முனைப்பாகச் செயல்படுவார் என்று தோன்றுகிறது. அதைக் கவனித்து அவரைச் சுற்றி உள்ளவர்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும் – அதில் அவர்கள் தவறினால், அதற்கான நிரூபணம் வெளிப்பட்டால், விஜய் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நாம் பார்ப்போம், அதற்கேற்ற விமர்சனத்தை விஜய் அப்போது சந்திக்க வேண்டும். இன்றைய தேதியில், மக்கள் நலன் சார்ந்த இந்த இரண்டாவது விஷயத்தில் விஜய்யின் தொடக்கம் குறை சொல்லும்படியாக இல்லை. பொதுவாகப் பாராட்டும்படி இருக்கிறது.

மக்கள் நலனில் மூன்றாவது கட்டமான தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் நலப் பணிகள் ஆகியவற்றில் விஜய் எப்படிச் செயல்படுகிறார் என்று போகப் போகத் தான் நாம் பார்க்க முடியும். பார்க்கலாம்.

இதுதான் 2026 தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் அரசு நிர்வாகம் பற்றிய நிலை. இதைத் தொடர்ந்து, அண்ணாமலை கட்சியை, மோடி கட்சியை, நாம் இவ்விதம் பார்க்கலாம்.

கல்வியில் சிறந்து, பேச்சாற்றல் மிகுந்து, மதிநுட்பம் கொண்டு, பண்பான அரசியலை முன்னெடுத்து, மக்கள் நலனை மனதில் வைத்து அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு தலைவர் அண்ணாமலை. சாதாரண மக்கள் நிறைந்த தமிழகத்தில், அவர்கள் மத்தியில் விஜய் ஒரு முக்கியத் தலைவராக உருவெடுத்துவிட்ட இந்த நேரத்தில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கி அதைத் தொடர்ந்து நடத்தி வந்தால் அது மிக அரிதான செயல், வரவேற்கத் தக்க முனைப்பு. தனது பேச்சில் உள்ள ஒருசில முரண்பாடுகளை அண்ணாமலை உணர்ந்து காலப் போக்கில் தன்னைச் சரிசெய்து கொள்கிற வயதும் பக்குவமும் அவரிடம் இருக்கும் என்று நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

அண்ணாமலை போன்ற ஒரு அரிய தலைவரும் தமிழகத்துக்கு அவசியம். ஒரே வீச்சில் திமுக-வை ஆட்சியிலிருந்து அப்புறப் படுத்தி, அதிமுக-வையும் ஓரம் கட்டிய விஜய்யும் பாராட்டுக்கு உரியவர். மத்திய அரசு நிர்வாகத்தில் இமாலயப் புரட்சி செய்த மோடியை முக்கியத் தலைவராகக் கொண்ட பாஜக-வும் தமிழகத்தில் வளர்ந்து மத்தியில் செய்ததற்கு இணையான சாதனைகளை இந்த மாநிலத்திலும் நிகழ்த்த முயற்சிக்க வேண்டும். நடக்கும் நல்லதை வரவேற்று, நடக்கத் தக்க நல்லதையும் நினைத்துப் பார்ப்பதில் தவறில்லை.

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.


Author: R. Veera Raghavan. Advocate, Chennai
Email: veera.rvr@gmail.com
Blog: https://rvr-india.blogspot.com

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

india vs england odi 2026 - 2026

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 – இந்தியா அபார வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          டி-20 தொடரில் 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தபின்னர், இந்திய அணி இங்கிலாந்தில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடுகிறது. இதில் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் நேற்ரு (14.07.2026) நடந்தது. பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடியது.

          இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கட் (43 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தார். அவருடன் களமிறாங்கிய மற்றொரு தொடக்க வீரர் ஜேகப் பெதல் (14 ரன்) சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருக்குப் பதிலாக ஆடவந்த ஜோ ரூட் (76 ரன்) சிறப்பாக ஆடினார். தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த குர்நூர் ப்ரார் போலவே பும்ரா, பிரசித் கிருஷ்ணா இருவரும் ஹாரி ப்ரூக் (1 ரன்), ஜாஸ் பட்லர் (5 ரன்), சாம் கரண் (பூஜ்யம் ரன்) ஆகியோரை விரைவில் ஆட்டமிழக்கச் செய்தனர். அதன் பின்னர் வில் ஜேக்ஸ் (20 ரன்) மற்றும் லியம் டாசன் (68 ரன்) இருவரும் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் அக்சர் படேல் நான்கு விக்கட்டுகள் எடுத்து இங்கிலாந்து அணியை 47.5 ஓவர்களில் 258 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக்கினார்.

          இரண்டாவதாகக் களமிறங்கிய இந்திய அணியில் ஒருநாள் ஆட்டத்தின் வல்லுநர்களாகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா (21 பந்துகளில் 11 ரன்) மாற்றும் விராட் கோலி (6 பந்துகளில் 5 ரன்) இருவரும் இன்று ஜொலிக்கவில்லை. தொடக்க வீரராகக் களமிறங்கிய ஷுப்மன் கில் (80 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (35 ரன்) இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை நிதானமாக மேலெடுத்துச் சென்றனர். கில் காயம் காரணமாக வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்த பின்னர் உள்ளே வந்த கே.எல். ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 27.5 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்திருந்தது. இன்னும் 95 ரன் தேவைப்பட்ட நிலையில் வாஷிங்க்டன் சுந்தர் (52 ரன்), அக்சர் படேல் (57 ரன்) இருவரும் இணைந்து இந்திய அணிக்கு, 45.2 ஓவர்களில் (262 ரன்) வெற்றியைத் தேடித்தந்தனர்.

          டி-20 தொடரில் சொதப்பிய அதே வீரர்கள் ஒருநாள் ஆட்டத்தில் வெற்றியைப் பெற உதவியது மகிழ்ச்சியை அளிக்கிறது. அக்சர் படேல் (4 விக்கட், 57 ரன்) தன்னுடைய சிறந்த ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். நாளை (16.07.2026) இரண்டாவது ஒருநாள் ஆட்டம் கார்டிஃப் மைதானத்தில் நடைபெறுகிறது.    

இந்திய இங்கிலாந்து ஒருநாள் தொடர் – இங்கிலாந்து அணி அபார வெற்றி

          இந்தியா இங்கிலாந்து அனிகலுகிடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 14இல் தொடங்கியது. முதல் ஆட்டம் பர்மின்காமில் நடந்தது. இங்கிலாந்து அணியை  (258 ரன்) இந்திய அணி (45.2 ஓவர்களில் 262/4) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஒருநாள் ஆட்டம் (233 ரன்), இங்கிலாந்து அணி (44.1 ஓவர்களில் 235/6) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          மூன்றாவது ஒருநாள் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 19இல் நடைபெற்றது. பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடத்தீர்மானித்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இந்திய ணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். பென் டக்கட் (135 பந்துகளில் 141 ரன், 18 ஃபோர், 1 சிக்சர்), ஜேக்கப் பெதல் (93 பந்துகளில் 91 ரன், 11 ஃபோர், 2 சிக்சர்), ஜோ ரூட் (48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 74 ரன், 9 ஃபோர்), ஜாஸ் பட்லர் (13 பந்துகளில் 41 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோர் அதிரடியாக ஆடியதால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 387 ரன் எடுத்தது. குர்னூர் ப்ரார் 10 ஓவர்களில் 97 ரன் கொடுத்தார். பிற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை. அர்ஷதீப் சிங் (10 ஓவரில் 72 ரன்), பிரசித் கிருஷ்ணா (10 ஓவரில் 69 ரன்), பிரின்ஸ் யாதவ் (10 ஓவரில் 79 ரன்), அக்சர் படேல் (10 ஓவரில் 61 ரன்) என அனைவருமே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். ஜோ ரூட்டை இந்த்த் தொடர் முழுவதுமே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்கச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

          இரண்டாவதாக ஆடவந்த இந்திய அணி 38 ரன் என்ற் இமாலய இலக்கை அடைய சரியான முறையில் ஆட்டத்தைத் டொடங்கினர். ரோஹித் ஷர்மா தான் ஒரு ஹிட்மேன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். அவர் 110 பந்துகளில் 138 ரன், 17 ஃபோர், 5 சிக்சர் அடித்தார். அவருடன் இன்னிங்க்சைத் தொடங்கிய ஷுப்மன் கில் 84 பந்துகளில் 77 ரன் அடித்தார். அவருக்குப்பின் வந்த விராட் கோலி 60 பந்துகளில் 74 ரன் அடித்தார். ஆனால் பிற வீரர்களான இஷான் கிஷன் (14 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (பூஜ்யம் ரன்), கே.எல். ராகுல் (12 ரன்), அக்சர் படேல் (2 ரன்) ஆகியொர் சரியாக ஆடாததால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 360 ரன் அடித்து 27 ரங்களில் தோல்வியடைந்தது.

          இதனால் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற ஆட்டக்கணக்கில் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. ஷிவம் துபே ஆடவில்லை; இதனால் ஆறாவது பந்துவீச்சாளர் இல்லாமல் போனது. குல்திப் யாதவை இந்தத் தொடர் முழுக்க ஆடாமல் வெளியே உட்காரவைத்தது ஏன் எனத் தெரியவில்லை. இந்தியப் பந்துவீச்சாளர்கள் 26 எக்ஸ்ட்ரா ரன்கள் கொடுத்தார்கள். தோல்வி வித்தியாசம் 27 ரன்கள். இந்திய அணியின் தேர்வில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்து போட்டி -2026
முதல் செமி ஃபைனல் – பிரான்ஸை ஸ்பெயின் அணி வென்றது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் 14 ஜூலை 2026 அன்று ஆர்லிங்க்டனில் நடந்தது. ஒருபுறம் இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த விரான்சு அணி, மறுபுறம் எதிர் அணிகள் தனக்கு எதிராக ஒரே ஒரு கோலை மட்டும் அடிக்குமஆறு பார்த்துக்கொண்ட ஸ்பெயின் அணி. ஃபிரான்சு அணியில் எம்பாபே போன்ற சுறுசுறுப்பாக கோல் அடிக்கும் வீரர்கள். ஆனால் ஸ்பெயின் அணியின் சிறப்பான தடுத்தாடும் குழு. என்வே ஒரு சிறப்பான கால்பந்து ஆட்டத்தை அனைவருமே அதிர்பார்த்தனர்.

          தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. அவர்களுன் தாகுதல் வியூகம், தடுப்பாட்டம் என அனைத்திலும் ஒரு கட்டுக்கோப்பு இருந்தது. பிரான்சு அணியின், இந்த கோப்பை முழுவதிலும் கோல் மழை பொழிந்த எம்பாபே, மைக்கேல் ஒலிஸ் ஆகியோரால் இந்தத் தடுப்பாட்ட அரணை உடைக்கமுடியவில்லை.

          ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் லமைன் யமால் பிரான்சு அணியின் பாக்சிற்குள் ஊடுருவியபோது பவுல் செய்யப்பட்டார். இதனால் ஸ்பெயினுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை அந்த அணியின் மைக்கேல் ஒயர்சால் சரியாகப் ப்யன்படுத்தி கோல் அடித்தார். இரண்டாவது பாதியில், 58ஆவது நிமிடத்தில், ஒரு அற்புதமான பாஸை டேனி ஒமால் இடமிருந்து பெற்று, பெட்ரோ போரோ கோலாக மாற்றினார். 

          அதன் பின்னர் பிரான்சு அணியால் கோல் போட முடியவில்லை. அதனால் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பெயின் அணி இறுதி ஆட்டத்திற்கு முன்னேரியிருக்கிறது.

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.