Home Blog Page 8

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

நாகா மலைப்பகுதிக்கு 1832 ல் பிரிட்டிஷ்காரர்கள் வந்தார்கள். முதல் உலகப் போரின் போது 3000 நாகர்களைக் கொண்ட நாகா உழைப்பாளர்கள் படையை உருவாக்கினார்கள். பதுங்கு குழிகள் வெட்டவும், பொருட்களை சுமந்து செல்லவும் அந்த படையை அவர்கள் பயன்படுத்தினர். போர் முடிந்து இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் அந்த படையினரில் பலர் ஒன்று சேர்ந்து நாம் தனித்தனி பழங்குடியினர் அல்ல நாகர்கள் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு 1918 கொஹிமாவில் நாகர் மனமகிழ் மன்றம் என்பதை ஏற்படுத்தினர். அந்த அமைப்பின் மூலம் பிரிட்டிஷார் வெளியேற வேண்டும் என பிரச்சாரம் செய்தனர்.

17 நாகர் இனக்குழுக்களும் 20 க்கும் மேற்பட்ட கிளை இனக்குழுக்களும் சேர்ந்து 1947 ல் நாகா தேசிய கவுன்சிலை ஏற்படுத்தினர். 1947 ஆகஸ்ட் 14 நாகாலாந்து சுதந்திரம் அடைந்ததாக அறிவித்தனர். 1954 இல் இந்திய ராணுவம் நாகா மலைப்பகுதிக்கு சென்றது. அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்த நாகாலாந்து 1963 இல் தனி மாநிலமாக ஆனது. நாகாலாந்து பிரச்சனை பழங்குடி அடையாளம், அந்நிய நாட்டு சக்திகளால் தூண்டப்படும் பிரிவினைவாதம், இந்திய அரசு அந்த மாநிலத்தின் மீது காட்டிய அலட்சியம் என பல பிரச்சனைகளின் மொத்த உருவமாக வடிவெடுத்தது . பிரிவினைவாதிகள் தனி அரசமைப்பு, தனி கொடி வேண்டுமென கோரினர்.

நேஷனல் சோசியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து (ஐசக் – மூவா ) என்ற அமைப்பு பிரிவினைவாதத்தை தீவிரமாக முன்னெடுத்தது. அதற்கு இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் இருந்து உதவிகள் கிடைத்தது. ஆயுதங்கள், வெடி பொருட்கள், ஆயுதப் பயிற்சி, பாதுகாப்பாக பதுங்கிக் கொள்ள இடங்கள், அதற்கான வாகன வசதிகள், பணம் ஆகியவை கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மூலம் வழங்கப்பட்டன. 1971 வரை அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதம், பணம், உளவு தகவல்களை சொல்லி வந்தது. பிறகு 1990 வரையில் சீனா அவர்களுக்கு பின்புலமாக இருந்தது. அதன்பிறகு பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ. மியான்மரில் இருந்து செயல்பட்ட அந்த பிரிவினைவாத குழுவுக்கு போதைப்பொருள் கடத்தல் மூலம் பணம் தரப்பட்டது என்று தெற்காசிய பயங்கரவாத கண்காணிப்பு வலைதளம் குறிப்பிடுகிறது.

நான் பாஜக.,வில் சேர்ந்ததற்கு காரணம் வாஜ்பாய்தான், என்கிறார் ஜேம்ஸ் வைசோ. அவர் 2000 ஆண்டு பாஜக., இளைஞர் அணியில் சேர்ந்தார். பிறகு படிப்படியாக மாவட்ட தலைவர், மாநில இளைஞரணி தலைவர், மாநில செய்தி தொடர்பாளர் என்று வளர்ந்து இப்போது பாஜக.,வின் தேசிய செயலாளர் ஒருவராக உள்ளார். அவருடைய வளர்ச்சியும் நாகாலாந்தில் பாஜக.,வின் வளர்ச்சியும் இணையானதாக சொல்லலாம் . இருபது முப்பது உறுப்பினர்களை கொண்டதாக இருந்த கட்சி இப்போது முன்னூறு முழு நேர ஊழியர்களை கொண்டதாக வளர்ந்துள்ளது.

அந்த வளர்ச்சி சாதாரணமாக வந்து விடவில்லை. கடினமான உழைப்பினால் வந்தது . பாஜக., சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். அதை வலுவான ஆயுதமாக பயன்படுத்தினார்கள். காரியகர்த்தர்களான எங்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். முன்பெல்லாம் எங்களை அருவருப்போடு பார்ப்பார்கள் . நாங்கள் கிறிஸ்துவத்தில் உறுதியாக இல்லாமல் பாஜக.,வுக்காக சமரசம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டுவார்கள். சர்ச்சுகள் மூலம் பாஜக.,வில் சேர வேண்டாம், பணிபுரிய வேண்டாம் என்று வற்புறுத்தல்கள் வந்தன. 2018 ல் எனது நண்பர் பாஜக., சார்பில் தேர்தலில் போட்டியிட்டார் . எதிர் கட்சியினர் சர்ச் சுவற்றில் ஹிந்து தெய்வ படங்களை ஒட்டி விட்டு பழியை எங்கள் மீது போட்டனர், என்று கடந்து வந்த கடினமான பாதையை விளக்குகிறார் ஜேம்ஸ் வைஸோ.

மன்மோகன் சிங் ஒரு முறை கூட நாகாலாந்து வந்ததில்லை. ஆனால் வாஜ்பாய் வந்திருக்கிறார். மாநிலத்தின் சிதலமான சாலைகளின் பயணத்திருக்கிறார். அவரது ஆட்சியில்தான் கொஹிமாவிலிருந்து திம்மப்பூர் வரை நான்கு வழி சாலை போடப்பட்டது. அதனால் மூன்று மணி நேரம் பயணம் வெறும் ஒன்றரை மணி நேரமாக குறைந்துவிட்டது. 2014 ல் மோடி பிரதமரான பிறகு ஆறே மாதத்தில் நாகாலாந்து வந்தார் . சர்வதேச புகழ்பெற்ற ஹார்ன்பில் விழாவை தொடங்கி வைத்தார். அவர் பிரதமரான பிறகு மாற்றமும் வளர்ச்சியும் வேகமெடுத்தது . மக்களுக்கு அரிசி, சமையல் எரிவாயு, மருத்துவ காப்பீடு போன்றவை மத்திய அரசின் திட்டங்களாக கிடைத்தன. குறிப்பாக சாலை பணிகள் விரிவாகவும் வேகமாகவும் நடந்தன, என்கிறார் ஜேம்ஸ் வைஸோ.

நாகாலாந்து மக்களிடையே ஆர்எஸ்எஸ் ராணி கைடென்லியூவை முன்னிருத்தியது . அவர் நாகா மக்களின் ஆன்மீக, அரசியல் தலைவராக இருந்தவர். பிரிட்டிஷ்ஷாரை எதிர்த்து போராடியவர். அதனால் 16 வயதிலேயே அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது ஆங்கிலேய அரசு. 1947 இல் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். நேரு அவருக்கு ‘ராணி’ என்ற பட்டத்தை கொடுத்தார். பின்னர் அவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது. தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிராக அவர் ஹிராகா இயக்கம் என்ற பெயரில் பாரம்பரிய சமயத்தை மீட்டெடுத்தார். அவரது மறைவுக்கு பிறகு வலுவிழந்த அந்த சமய இயக்கத்திற்கு ஆர் எஸ் எஸ் புத்துயிர் ஊட்டியது. கிறிஸ்தவராக மதம் மாறி போயிருந்தவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்பினர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அஜெய்லியூ நைமை என்பவர் சமர்ப்பித்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் தலைப்பு ‘ ராணி கைடின்லியூ : வடகிழக்கு இந்தியாவின் கதாநாயகி . அந்த ஆய்வேட்டில், அவர் ஹிராகா சமயத்தை கச்சிதமாக அரசியலுடன் இணைத்து பிரிட்டிஷாருக்கு எதிர்ப்பை கூர்மைப்படுத்தினார். கண்ணுக்கு தெரியாதபடியே விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருந்த பெண்களை சமூக – அரசியல் தலைவர்களாக்கினார் . பழங்குடியினரை, குறிப்பாக அவர் சார்ந்த நாகா பழங்குடியினரை, மைய இந்திய நீரோட்டத்தில் இணைக்க முடியும் என்பதற்கு அவரே சிறந்த சான்று. நாகா சமய இயக்கத்தையும் இந்திய தேசிய இயக்கத்தையும் பின்னி பிணைந்து அவர் வளர்த்தார், என்று குறிப்பிடுகிறது.

ஊடுருவல் பிரச்சனை இன்னமும் அங்கு உள்ளது. 2021 ல் இந்திய ராணுவம், தவறுதலாக, நிற்காமல் சென்ற வாகனத்தை சுட்டனர். அதில் ஆறு பேர்கள் உயிரிழந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் கிராம மக்கள் பதில் தாக்குதல் நடத்த, அதில் ஒரு ராணுவ வீரரும் ஏழு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது தேசிய சக்திகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஜேம்ஸ் வைகோ சொல்கிறார் , முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

மேகாலயாவில் 1946 இல் ஆர் எஸ் எஸ் ஷாகா ஆரம்பிக்கப்பட்டது . அப்போது அது அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 1972 ஜனவரியில் தனி மாநிலமாக ஆனது. மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் முதல் ஷாகாவை ஆரம்பித்தவர் வசந்த் ராவ் ஓக். இவர் ஆர் எஸ் எஸ் ஸின் ஆரம்பகால முழு நேர ஊழியர்களின் ஒருவர். இவரும் தாதாராவ் பரமார்த், கிருஷ்ண பரஞ்சாபே ஆகிய மூத்த தலைவர்களும் இணைந்து வடகிழக்கு இந்தியாவில் கௌஹாத்தி, திப்ரூகார் , ஷில்லாங்கில் ஆர் எஸ் எஸ் கிளையை தொடங்கினார்கள். ஓக் தில்லியில் ஆர் எஸ் எஸ் ஸை வலுவாக இடம் பெற செய்தவர். அதனாலேயே அவரது நண்பர்களால் ‘தில்லீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆர்எஸ்எஸ் செயல்வீரர்கள் வடகிழக்கு இந்திய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். மேகாலயா, நாகாலாந்து போன்ற கிறிஸ்துவ பெரும்பான்மை கொண்ட மாநிலங்களில் உள்ளூர் அளவில் தேசிய சிந்தனை கொண்டவர்களையும் கருத்தியல் உறுதி கொண்ட தலைவர்களையும் உருவாக்குவதே அவர்களின் நோக்கம். மத மோதலில் ஈடுபடாமல் சரியான கலாச்சார பண்புகளை வளர்ப்பது என்பதே அவர்களது செயல் திட்டம். வடகிழக்கு பகுதியை மைய இந்தியாவுடன் ஒருங்கிணைப்பது மழைக்காலத்தில் ஈர ஆடைகளை காய வைப்பது போன்ற கடினமான பணி என்பது அவர்களுக்கு தெரியும்.

வடகிழக்கு பகுதியில் உள்ள மக்களின் உடல் அமைப்பு சீனர்களை போன்ற மங்கோலாயிடு அமைப்பைக் கொண்டது. மைய இந்திய பகுதியினரின் தோற்றத்திலிருந்து மாறுபட்டது. ஏழு வட கிழக்கு மாநிலங்களும் பல தசாப்தங்களாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தன. அந்த பகுதியில் 200 பழங்குடி வகுப்பினரும் 200 மொழிகளும் உள்ளன. இது தவிர 1000 க்கும் மேற்பட்ட பேச்சு மொழி இருக்கின்றன என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

மேகாலயாவில் உள்ள காசி, ஜெயின்தியா மலைப்பகுதியில் முழு நேர ஊழியராக பணி புரிகிறார் பிரதாப் சாம்பிரி. ஷில்லாங்கில் இருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் உள்ள பெண்களுக்கு நகரம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. நெற்றியில் சிகப்பு திலகம் இடுவதே தொலைக்காட்சி தொடர்களை பார்த்து தெரிந்து கொண்டார்கள். யாருக்கும் இந்தி தெரியாது. இப்போது தொலைக்காட்சி, அலைபேசி, இன்டர்நெட் வந்த பிறகு சில பிள்ளைகள் இந்தி பேச தொடங்கியுள்ளார்கள், என்று கூறுகிறார் அவர்.

மேகாலயாவில் உள்ள காசி இன மக்கள் தங்களை மகாபாரதத்தில் வரும் துரோணரின் சீடரான ஏகலைவனின் வாரிசுகள் என்று நம்புகின்றனர். அஸ்ஸாமில் உள்ள போடோ பழங்குடியினர் பிரம்ம தேவரின் வழிவந்தவர்கள் என்றும் அதே அஸ்ஸாமில் உள்ள கார்பீஸ் பழங்குடியினர் தங்களை இராமாயணத்தில் வரும் சுக்ரீவ மகாராஜாவின் வாரிசுகள் என்றும் கூறிக் கொள்ளுகின்றனர். நாகாலாந்தின் தலைநகரான திம்மபூரின் பழைய பெயர் இடும்பப்பூர் என்றும் அது மகாபாரதத்தில் பீமனின் மனைவியான இடும்பியின் ஊர் என்றும் சொல்லப்படுகிறது. திம்மப்பூரில் உள்ள ஒரு காட்டில் பெரிய பெரிய உடைந்த சதுரங்க ஆட்ட காய்களை பார்க்க முடிகிறது. அந்த வனப் பூங்காவில் பீமன் தன் மகன் கடோத்கஜனுடன் சதுரங்கம் ஆடியதாக அந்த மக்கள் நம்புகின்றனர். அருணாச்சலத்தில் உள்ள ஐடூ மிஸ்மி பழங்குடியினர் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவியான ருக்மணியின் வழிவந்தவர்கள் என்கிறார்கள். ருக்மணியின் காதலை எதிர்த்த அவளது அண்ணன் ருக்மியை ஸ்ரீ கிருஷ்ணர் கொல்லாமல் தலையை மொட்டை அடித்து விட்டதன் நினைவாக அவ்வின மக்கள் இன்றும் தங்கள் தலையில் வட்டமாக ஸ்ரீ கிருஷ்ணரின் சக்கராயுதம் போல் இருக்கும்படி சிகை அலங்காரம் செய்து கொள்கின்றனர்.

1992 ல் ஜனாதிபதி தேர்தலில் பாஜக.,வினரால் முன்னிறுத்தப்பட்ட ஜி ஜி ஸ்வெல் என்ற மேகாலயாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸின் சங்கர் தயாள் சர்மாவிடம் தோற்றுப் போனார். அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் அவர் பாஜக.,வின் பசுவதை தடையை எதிர்த்து பேசினார். அப்போது, நாங்கள் (மேகாலயாவை சேர்ந்தவர்கள்/ வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்) மாட்டிறைச்சியை முக்கிய உணவாகக் கொள்கிறோம். நீங்கள் அதை தடை செய்ய நினைக்கிறீர்கள், என்று குற்றம் சாட்டினார். அது பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

சங்கத்திற்கு இது ஒரு முக்கியமான பிரச்சனை. நாட்டின் பல பகுதிகளில் உள்ள நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டது இங்குள்ள நிலை. உள்ளூர் உணவு பழக்க வழக்கங்களை சங்கம் ஏற்க மறுப்பதில்லை. ஆற்று நீர் எப்படி கற்களையும் பாறைகளையும் தழுவி பயணிக்கிறதோ அது போன்ற சமரசப்போக்கு சங்கத்திற்கு உள்ளது. இங்கு ஷாகாவுக்கு வருகின்றவர்கள் அநேகர் மாட்டிறைச்சியை சாப்பிடுபவர்கள். நம்மூரில் காபி, டீ போல அங்கு வீட்டிலேயே ஒரு வகை மது தயாரித்து கொடுப்பார்கள் . முழு நேர ஊழியர்கள் அதை மறுக்க முடியாது. பல வீடுகளின் முன் வாசலில் மாட்டு தோல் காய்ந்து கொண்டிருக்கும். உள்ளே போனால் டாக்டர் ஜி, குருஜி படம் மாட்டியிருக்கும் . ஸ்ரீ குருஜி கோல்வல்கர், நாம் உடையால், உணவால் , பழக்க வழக்கத்தால் வேறுபட்டிருந்தாலும் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள், என்று சொல்லியுள்ளார்.

இங்கு பெண்களுக்கு தான் சொத்துரிமை உள்ளது. எண்பது சதவீதம் சொத்துக்கள் பெண்கள் பெயரில் இருக்கிறது. குடும்ப சொத்து வீட்டின் கடைசி பெண்ணுக்கு தான் சேரும். அவள்தான் பெற்றோர்களை பார்த்துக் கொள்ள கடமைப்பட்டவள் . குடும்ப பிணைப்பு மிகவும் உறுதியாக உள்ளது இங்கு. எந்த வகையிலும் குடும்ப கட்டுப்பாடு இங்கு பின்பற்றப்படுவதில்லை. குழந்தைகள் இறைவனின் வரம் என்று இம்மக்கள் நம்புகிறார்கள்.

ஆரம்பத்தில் ஷில்லாங்கில் தொடங்கிய ஆர் எஸ் எஸ் கிளை இன்று மேகாலயா மாநிலத்தில் எல்லா பகுதிகளுக்கும் பரவியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேவா பாரதி, வனவாசி கல்யாண், வி எச் பி, ஏ பி வி பி , பூர்வ சைனிக் பரிஷத் போன்ற ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகள் மூலம் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பல்வேறு சேவை திட்டங்கள் மாநிலம் முழுக்கவும் நடத்தப்படுகின்றன. கிறிஸ்தவ மதத் தலைவர்கள் சங்கத்துடன் கருத்தியல் ரீதியாக முரண்பட்டாலும் அவர்களது சேவை திட்டங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அண்மையில் சங்க நிகழ்ச்சி ஒன்றை உள்ளூர் பாதிரியார் காவி கொடியேற்றி தொடங்கி வைத்தார். ‘ உள்ளூர் கிறிஸ்தவ தலைவர்கள் நம்முடைய நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பல நிகழ்ச்சிகளில் காவி கொடியேற்றி துவங்கி வைப்பதே அவர்கள்தான். இது அவர்களுக்கும் நமக்குமிடையே கருத்து பரிமாற்றத்துக்கு வழிவகுக்கிறது’ , என்கிறார் பிரதாம் சாம்பிரி.

மேகாலயாவில் எழுந்த மிகப்பெரிய சவால் அங்கு கொண்டாட கூடிய தேசிய தலைவர்கள் யாரும் இல்லாததுதான். அந்த பழங்குடியின அரசர்கள், தலைவர்கள் ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடி உள்ளார்கள். அவர்களது வீரமும் தேசபக்தியும் அம்மக்களிடையே வாய்மொழி வரலாறாகவே நீடித்தது. ஆவணப்படுத்தப்படவில்லை. இது ஆதிக்க சக்திகளுக்கும் மதமாற்ற சக்திகளுக்கும் எளிதாக ஆயிற்று. அவர்கள் அந்த வரலாற்றை சுலபமாக அழித்துவிட்டார்கள். அதன் மூலமாக அம்மக்களின் அடையாளமும் பெருமையும் துடைத்தெறியப்பட்டது.

ஹிந்துத்துவ அமைப்பினர் மிகவும் சிரமப்பட்டு பெரும் வீரர்கள் மூன்று பேர்களின் வரலாற்றை ஜனசமூகத்திலிருந்து அகழ்ந்தெடுத்தனர் . யூ கியாங் நாங்பா , யூ தைரோட் சின் சையீம் என்ற காசி இன தலைவர்கள் இருவர். மற்றொருவர் பா தோகன் சங்மா என்ற காரோ’ இனத்தலைவர் . இம்மூவரின் வாழ்க்கையை, விடுதலைப் போராட்டத்தை ஆவணப்படுத்தினார்கள். அது அம்மக்களிடையே பெருமித உணர்வை ஏற்படுத்தியது. அவர்கள் அந்த தலைவர்களின் தியாகத்தை புரிந்து கொண்டு போற்றத் தொடங்கினர். சங்கப் பணியிலும் பல தியாகிகள் உருவாகினர்.

காசி இன மக்களிடையே கலாச்சார மறுமலர்ச்சிக்காக துவங்கப்பட்டது செங்காசி என்று அமைப்பு. அது அம்மக்களின் மரபை , பாரம்பரிய சமயத்தை மீட்டெடுக்க துவக்கப்பட்டது. அந்த பெயரில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் காசி, ஜெயின்தியா மலை பகுதி மக்களை மதமாற்றம் செய்த கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராகவும் ஒரு இயக்கம் முன்பு நடந்தது. அது இப்பொழுது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது . ரைஜோய் சின் கோங்சா என்ற ஆர்எஸ்எஸ்காரர் அதை உயிர்ப்பித்து துடிப்புடன் நடத்தினார் . உள்ளூர் மக்களிடையே பிரபலமானார். பிரிவினைவாதிகளிடமிருத்து அச்சுறுத்தல் வந்தது. 2001 மார்ச் மாதம் அவரை கடத்திச் சென்று கொன்று விட்டார்கள் . கண்டன ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. கடைசி வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

அவரது கொலை பலரை ஆர் எஸ் எஸ் பக்கம் இழுத்து வந்தது. அப்படி வந்தவர்தான் பாவ்னாம் சிசா கோங்சோய். நான் மூன்றாவது படிக்கும்போது முதன் முதலில் ரைஜோவை சந்தித்தேன். சலிப்படையாமல் கிராமம் கிராமமாக சென்று பழங்குடி மக்களுக்கு அவர் பணியாற்றதை பார்த்தேன். அவரால் தான் இன்று காசி மலைப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு காரியகர்த்தா உருவாகியுள்ளார்கள், என்கிறார் பாவ்னாம் சிசா.

உள்ளூர் இளைஞர்களும் யுவதிகளும் பிரதமர் மோடியை புகழ்கிறார்கள். வங்கதேசத்தின் எல்லைக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் திங்ரியாங் கிராமத்திற்கு மின்சாரம் , சாலை, கழிப்பிடம் ஆகியவை எல்லாம் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை. மோடி பிரதமரானதும் இவையெல்லாம் வெகு விரைவாக எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்கள். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக துல்லிய தாக்குதலை நடத்திய பிரதமர் மோடியை கிறிஸ்துவ இளைஞர்கள் வெகுவாக புகழ்கிறார்கள். பாஜக.,வில் இணைகிறார்கள். உள்ளூர் வட்டச் செயலாளர்களாக பல கிறிஸ்தவ இளைஞர்கள் இருக்கிறார்கள்.

இயற்பியலில் முதுகலை பட்டதாரியான பாவ்னாம் ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்தார் . அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் செங்காசி அமைப்பின் உதவியால் பள்ளியை தொடங்கினார். இன்று அது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. பள்ளி மாணவர்கள் மேற்படிப்புக்காக தில்லி, மகாராஷ்டிரா, அஸ்ஸாமிற்கு அனுப்பப்பட்டனர். வெளிமாநில தொடர்பு அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது படித்த, வசதியான காசி இன பெண்ணை மணந்து கொள்ளும் ஒரு கிறிஸ்துவ பையன் தானாகவே கிறிஸ்துவத்தை விட்டுவிட்டு தாய் மதம் திரும்புவது சகஜமாகிவிட்டது, என்கிறார் பாவ்னாம்.

நாங்கள் யாரையும் தாய் மதம் திரும்பும் படி வற்புறுத்துவதில்லை. ஆனால் கிறிஸ்துவ பாதிரிகளால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு சர்ச் மூலமாக பாரம்பரிய பூசாரிகளை கொண்டு சடங்குகளை செய்கிறார்கள். அதற்காக பாரம்பரிய சமய பூசாரிகளை அணுகுகிறார்கள். தங்களது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை நோக்கி திரும்பும் பயணத்தை அம்மக்கள் அங்கிருந்து தொடங்குகிறார்கள். இப்படி பல நூறு குடும்பங்கள் தாய் மதம் திரும்பி உள்ளனர், என்கிறார் பா என்ஜிஸ்டர். இவர் பாவ்னாவுக்கு உதவியாக இருக்கும் செயல்வீரர்.

நான் பெங்களூரில் எம்பிஏ முடித்தேன். அப்போது தான் நான் இந்தியாவை புரிந்து கொண்டேன். காப்பீட்டு துறையில் வேலை செய்கிறேன். நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் பாஜக., பற்றி எனக்கு வேறு பார்வை இருக்கிறது, என்கிறார் முப்பத்தி ஐந்து வயதான பிலைலேடு காங்கியாங் . இவர் அங்குள்ள கத்தோலிக்க சர்ச்சின் தலைவர். கிராம சபைக்கு பொறுப்பாளர்.

இந்த மாநில மக்களுக்கும் சரி எனது பழங்குடியினருக்கும் சரி வெளியுலகம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தங்களுக்கு உண்மையில் எது பிரச்சனை என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை. உண்மையான முன்னேற்றத்தையும் பாராட்ட தெரியவில்லை. இவர்களுக்கு எல்லாமே இலவசமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள், என்கிறார் அவர். பாஜக.,வில் வேலை செய்ய பிரச்சனையாக இல்லையா என்று கேட்டபோது, எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும் வேலை செய்ய முடிகிறது . என்னுடைய பிரச்சினை பாஜக., எனக்கு பயணப்படியை ஒழுங்காக தருவதில்லை என்பதுதான், என்கிறார். பணத்திற்காக பாஜக.,வில் சேர்ந்தீர்களா? என்றதற்கு, ஐந்து ரூபாய் பணம் கட்டி கட்சியில் சேர்ந்தவன் நான் , என்று குரலை உயர்த்துகிறார் காங்கியாங்.

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

2018 ன் தொடக்கத்தில் திரிபுராவில் கம்யூனிச ஆட்சியை வீழ்த்தி பாஜக., வாகை சூடியது. வெற்றி பெற்றதும் அங்கிருந்த லெனின் சிலை தகர்க்கப்பட்டது. ஊடகங்களில், குறிப்பாக தமிழ் ஊடகங்களில், பலத்த கூக்குரல் எதிரொலித்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தபோது 1999 இல் விஜயபாரதத்தில் வெளியான ஆர்எஸ்எஸ் தலைவர் கு. சி. சுதர்சன்ஜியின் நேர்காணல் நினைவுக்கு வந்தது.

அந்த நேர்காணலின் முதல் கேள்வியே ஆர்எஸ்எஸ்.,காரரான வாஜ்பாய் பிரதமராக உள்ள நிலையில் திரிபுராவில் ஆர்எஸ்எஸ்., தலைவர்கள் வங்கதேசத்திற்கு கடத்தப்பட்டதை பற்றி இருந்தது. 1999 இல் திரிபுராவில் கம்யூனிச ஆட்சி இருந்தது. ஆர்எஸ்எஸ்., இன் மாவட்ட , மாநில மற்றும் பிராந்திய தலைவர்கள் ஆறு பேர்களை திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பினர் வங்கதேசத்திற்கு கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொன்றனர். தேசிய சிந்தனை கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக ஊடகங்கள் அதை அமைதியாகக் கடந்து சென்றன. அடுத்த இருபது ஆண்டுகளில் அங்கு பாஜக., ஆட்சியை கைப்பற்றியது . இன்று பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் ஹிந்து தேசியவாதிகளே ஆட்சியில் உள்ளனர் . இது சாதாரணமாக வந்தது அல்ல. அதற்குப் பின்னணியில் கடும் உழைப்பும் தியாகமும் உள்ளது.

மணிப்பூர்

மணிப்பூரின் தலைநகர் இம்பால் அங்கிருந்து 100 கிலோமீட்டர் குறைவான தூரத்தில் உள்ளது பங்க்டி சீரூ என்ற கிராமம். பசுமையான மலையடிவாரத்தில் உள்ள பல கிராமங்களில் இதுவும் ஒன்று. அந்த பகுதி தான் 26 வயதான லீசியின் கர்மபூமி. அவர் ரோங்மோய் என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவள். குக்கி , மொய்த்தி என்ற இரண்டு பழங்குடி வகுப்பினர் பெயர்கள் மட்டுமே நமக்கு தெரியும். அதுவும் கலவரத்தினால் தெரியும். ஆனால் அந்த சிறிய மாநிலத்தில் சுமார் 9 – 10 பழங்குடி வகுப்பினர் உள்ளனர். ஒவ்வொன்றுக்கும் மற்றதை ஏற்றுக் கொள்வதில்லை. பூசலிடுக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு தேசம், அரசாங்கம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். தங்கள் இனக்குழுவின் ஆதிக்கம் தான் பிரதானம்.

இந்த சூழ்நிலையில்தான் லீசி அந்த கிராமத்தில் எட்டு பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறாள் . தனது நான்கு வயது தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தங்கை அல்ல நான்கு பேர்கள். கடைக்குட்டி யின் வயது நான்கு. இது தவிர அவர் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரிப்பாள். ஏனெனில் அவள் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் முழு நேர ஊழியர். கல்யாண் ஆசிரமம் பழங்குடியினர்களிடையே சேவையாற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு. அது நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் பழங்குடி கிராமங்களில் 18 ஆயிரம் சேவை திட்டங்களை செயலாற்றி வருகிறது. இதன் முழு நேர ஊழியர்களுக்கு ஐந்து முதல் பத்தாயிரம் வரை மாத மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.

லீசி கிராமங்களுக்கு நடந்து செல்வாள் . சற்று தூரமாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் செல்வாள் . பெரும்பாலான கிராமங்கள் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்கள். வீடு வீடாக சென்று பிள்ளைகளின் படிப்பு முதல் பாட்டின் உடல்நிலை என அன்றாட விஷயங்கள் தொடங்கி எல்லா விஷயங்கள் பற்றியும் அவள் விசாரித்து பேசி வருவாள் .பெரும்பாலும் தனியாக செல்வாள். சில நேரங்களில் கல்யாண் ஆசிரமத்தின் மூத்த ஊழியர் அவளுடன் கிராமங்களுக்கு செல்வார் . பல குடும்பத்தினருக்கு குடும்பத்திற்கு வெளியே உள்ள உறவு லீசி தான்.

வடகிழக்கு இந்திய பகுதிகளில் 1931 முதல் கிறிஸ்துவம் வேகமாக வளர்ந்தது. விடுதலைக்கு பிறகு இன்னும் வேகம் எடுத்தது. கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (2011) நாகலாந்தில் 87.9 சதவீதம் கிறிஸ்துவர்கள் . மிசோராமில் 87.2 சதவீதம். மேகாலயாவில் 74.6 சதவீதம். மணிப்பூரில் 41.3 சதவீதம். அருணாச்சல பிரதேசத்தில் 31 சதவீதம். அஸ்ஸாமில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 34 சதவீதம் . இப்பொழுது 40 சதவீத்தைக் கடந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லீசி சொல்கிறாள் : சில கிறிஸ்துவ கிராமங்களில் மக்கள் என்னை மடக்கி நீ எங்களை இந்து மதத்திற்கு மாற்ற வந்திருக்கிறாய் என்று சொல்லி மிரட்டுவார்கள். அவர்களெல்லாம் குடித்துவிட்டு என்னை சுற்றி வளைத்து மிரட்டுவார்கள். நான் மதப் பிரச்சாரம் செய்யவில்லை. என் வேலை பழங்குடி பண்பாடு பற்றியது என்பேன். கிராமத்தில் உள்ள மற்ற சிலர் எனக்கு ஆதரவாக வந்து என்னை அவர்களிடமிருந்து மீட்டு அனுப்புவார்கள்.

மணிப்பூரில் இப்போது பாஜக., ஆட்சியில் இருக்கிறது. ஆனால் மாற்றத்திற்கான அடித்தள பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டன. மதுமங்கள் ஷர்மா இவர் 1987 இம்பாலில் பிறந்தார். மாநில அரசு அதிகாரியாக பணி ஓய்வு பெற்ற இவர் 1985 முதல் 1990 வரை பாஜக.,வின் மாநில தலைவராக இருந்தார். கட்சியை வளர்த்தார். அவருக்கும் முன்பாக 1950 களில் ஆர்எஸ்எஸ் , வி எச் பி யின் பணிகள் தொடங்கி விட்டன. மதுமங்கள் சர்மா தினமும் சுமார் 75 கிலோமீட்டர் பயணிப்பார். கிராமம் கிராமமாக சென்று போதை பொருள் பழக்கத்திற்கு எதிராகவும் பிரிவினை வாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தார்.

மணிப்பூரில் குறிப்பாக இம்பாலில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிரிவினைவாதிகளின் வலைபின்னலில் முக்கிய பங்கு இருந்தது. அவர்கள் ஊடுருவும் தீவிரவாதிகளை பாதுகாத்தனர். அவர்களுக்கு உளவு சொல்லினர். மதுமங்கள் சர்மா 1995 பிப்ரவரி மாதம் ஒரு பிரிவினைவாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சர்மாவின் கொலை தனியானது அல்ல. மாவட்ட , மாநில அளவிலான ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அபாயங்களை பற்றி கவலைப்படாமல் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் பாஜக., ஆட்சி இல்லாத போதும் களப்பணி ஆற்றினர். பாஜக., ஆட்சி வருவதற்கு முன்பு தினமும் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, என்கிறார் ஒரு ஆர் எஸ் எஸ் தலைவர். இன்று மணிப்பூரில் மட்டும் 120 ஆர்எஸ்எஸ் ஷாகாகள் உள்ளன. 1995 இல் ஆர் எஸ் எஸ் நடத்திய பள்ளிக்கூடங்கள் 650 ஆக இருந்தன. இன்று 6000 மாக அதிகரித்துள்ளன. ஆர் எஸ் எஸ் நடத்தும் ஒராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கல்வியின் மூலமாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய சிந்தனையை வலுப்படுத்தி வருகிறது ஆர் எஸ் எஸ்.

சடு – சீரு கிராமத்துக்குள் லீசி நுழைந்ததும் அங்குள்ள ஒரு கிறிஸ்துவ குடும்பம் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றது. அந்த வீட்டின் மூத்த பாட்டி ஒரு நாற்காலியில் வெயிலில் உட்கார்ந்து இருந்தார். லீசியைப் பார்த்ததும் அவரது முகம் மலர்ந்தது. கையை அசைத்து அவளை அருகே அழைத்தார். அவருக்கு இதய கோளாறு. அந்த குடும்பத்தின் மாத வருமானம் ரூபாய் 15 ஆயிரம் . சிகிச்சைக்கு 1.7 லட்சம் தேவைப்பட்டது. லீசி கல்யாண் ஆசிரமத்தின் மேலிடத் தலைவர்களிடம் பேசினார்.

அவர் முன்பு இரண்டு பிரச்சனை இருந்தன. மிக அவசரமான பிரச்சனை சிகிச்சை. பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இருந்த பெரிய தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் பேசி மருத்துவ கட்டணத்தை குறைத்தனர் கல்யாண ஆசிரமத்தில் மாநில பொறுப்பாளர்கள். சிகிச்சை பெற்றவரின் குடும்பம் மட்டுமல்ல அந்த கிராமமே மகிழ்ச்சி அடைந்தது. வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் அருமையை புரிந்து கொண்டது.

இரண்டாவது பிரச்சனை பிரதம மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தனியார் மருத்துவமனை தான் இணைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள பெரிய அரசு மருத்துவமனை இணைக்கப்படவில்லை. மாநில பொறுப்பாளர்கள் மேலிடத்திற்கு விஷயத்தை எடுத்துச் சென்றார்கள். அவர்கள் மூலம் மத்திய அரசுக்கு செய்தி போனது. இப்போது பலரும் பலனடையும்படி அரசு மருத்துவமனைக்கும் ஆயுஷ்மான் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.

சீரூ பழங்குடி கிராமத்திற்கு மற்றொரு வரப்பிரசாதமாக அமைந்தது பிரதமரின் கிராம சாலை திட்டம். அதன் மூலம் அருகில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அந்த சாலை ஓரத்தில் உள்ளூர் இளைஞர்களும் யுவதிகளும் வீட்டு தயாரித்த அன்னாசி பழச்சாறு, உள்ளூரில் விளையும் மாதுளை போன்ற மற்ற பழங்களின் சாறுகளை விற்கத் தொடங்கினர். வருவாய் அதிகரித்தது. தங்கள் வீட்டை ஒட்டிய இடங்களில் அவர்கள் விளைவித்த வெங்காயம் நேரடியாக நல்ல விலை போனது.

மணிப்பூர் மாநிலத்தில் மாற்றத்திற்கு வித்திட்டவர்களின் முக்கியமானவர் சங்கர் தின்கர் கானே. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர் 1971 தனது ஆசிரியர் பணியை விடுத்து இம்பால் வந்தார். பிறகு தூஷோம் பகுதியில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற தொடங்கினார். அடுத்த 15 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களை மகாராஷ்டிராவில் உள்ள ஆதரவான குடும்பங்களில் தங்க வைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்தார். அவர்கள் படிந்து திரும்பி வந்தபோது அவரது நோக்கம் நிறைவேறியது மட்டுமல்ல அவரது பணியும் சுலபமானது. அவர் காலமான போது அவரது மாணவர்கள் ஓஜா சங்கர் வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்தை அவர் நினைவாக தொடங்கினர். அந்த பள்ளி மியான்மர் எல்லையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் சுதந்திர தினத்தன்று கூட தேசிய கொடியை ஏற்ற முடியாது. பிரிவினைவாத அமைப்பினர் அதற்கு தடை விதித்திருந்தனர். ஆர் எஸ் எஸ் சார்புடைய அமைப்புகளின் பணியினால் இன்று சூழ்நிலை மாறியுள்ளது. தேசிய கொடியும் தேசிய கீதமும் அந்த பகுதியில் பாடப்படுகிறது. சர்ச் நடத்தும் பள்ளிகளிலும் தேசிய பாடல்கள், தேசிய சின்னங்கள், விழாக்கள் ஆகியவற்றை அவர்களது பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். கூடவே பண்பாட்டை மீட்டெடுக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

கிறிஸ்துவ மிஷனரிகள் உள்ளூர் கலாச்சாரத்தை தீயது என்று புறமொதுக்கி அதில் வெற்றியும் பெற்றனர் . வனவாசி கல்யாண் ஆசிரமம் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அந்த குழு கோம், மோயோன் , மாரிங் , தாங்குல் போன்ற பழங்குடியினர் இடையே எழுபது வயதிற்கும் மேற்பட்ட மூத்தவர்கள் பலரிடம் பேசி மறைந்து போன பழங்குடியினரின் சொற்களை, பழமொழிகளை, வாய்மொழி வரலாற்றை மீட்டெடுத்து ஆவணப்படுத்தினர் . அவர்களது பழங்குடி பாடல்களை, சுமார் 300 பாடல்களை, தொகுத்து ஒரு இசை தட்டில் பதிவு செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

கலாச்சார மீட்டெடுப்பு அத்துடன் நிறவில்லை. ஒன்பது பழங்குடி வகுப்பினரது பாரம்பரிய விளையாட்டுக்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன. அந்த விளையாட்டுக்கள் சுவாரசியமானவை மட்டுமல்ல ஆழமான சமூக பிணைப்பை ஏற்படுத்துபவை.

எடுத்துக்காட்டாக , மாஓ பழங்குடியினர் விளையாடும் ஓசு காகா விளையாட்டு. இது அறுவடை காலங்களில் விளையாடப்படுகிறது. பயிர் அறுவடை செய்யும் போது இடையே கிடைக்கும் இடைவேளை பொழுதில் விளையாடப்படுகிறது. அதில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் ஆனவர்களை சவாலுக்கு அழைப்பார்கள். அதே பழங்குடி சமூகத்தினர் விளையாடும் இன்னொரு விளையாட்டு லீரீ கைபிச் சோ . அது ஒரு பண்டிகை காலத்தில் விளையாடப்படுகிறது. ஈட்டிகளை கொண்டு விளையாடப்படும் அந்த விளையாட்டு பழங்கால போர்களை நினைவூட்டுவதாக உள்ளது.

மன் பழங்குடியினர் விளையாடும் நாக்கின்ஜி – நாக்கின்ஜி என்ற விளையாட்டு. அதில் பாட்டு போட்டி உள்ளது. மணிப்பூரில் போலோ (குதிரை மீதேறி விளையாடும் பந்தாட்டம்) விளையாட்டை போன்றதொரு விளையாட்டு உள்ளது. அதன் பெயர் சகோல் காங்ஜியீ. பொதுயுகம் 33 ல் மணிப்பூரை ஆண்ட நாங்டா லைலென் போக்காங்பா என்ற மன்னர் தன் நண்பர்களுக்கும் இதர பழங்குடி தலைவர்களுக்கும் சகோல் காங்ஜியீ விளையாட்டில் சிறந்தவரான லைசனாவை பெருமையுடன் அறிமுகப் படுத்துவார் என்று தொன்மையான ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

மறைந்து போன / மறந்து போன பழங்குடியினர் இசைக்கருவிகளை வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் குழு மீட்டெடுத்துள்ளது. டாங் டங் , ரோசெம், சராங்தார் என்று அந்த மூன்று இசைக்கருவிகளுக்கு பெயர். ரோசெம் என்பது பேக் பைபர் போல் உள்ளது. மூங்கிலால் செய்யப்பட்டது. சராங்தாரைச் செய்ய குதிரைவால் பயன்படுத்தப்படுகிறது.

தாவரவியல் குறித்து உள்ளூர் பாரம்பரிய ஞானம் மீட்டெடுக்கப் பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மட்டுமின்றி மண்ணை சாகடிக்காத பாரம்பரிய விவசாய முறைகள்,சிறு காடுகள், சதுப்பு நிலப்பகுதி, உள்ளூர் மீன் வகைகள் என சூழலியல் அழிவிலிருந்து அந்த பகுதியை பாதுகாக்கும் அம்சங்கள் கண்டறியப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூர் தட்பவெப்பத்திற்கு ஏற்ப முன்பு பயன்பாட்டில் இருந்த பயிர் விதைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் பாரம்பரியத்தை மீட்கும் அதே வேளையில் மியான்மர், வங்கதேசத்திலிருந்து வரும் ஊடுருவலையும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. பாஜக., அரசு வந்த பிறகு மாநிலத்துக்குள் பயணம் செய்ய இன்னர் லைன் பர்மிட் என்ற அடையாளம் / அனுமதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு குறுகிய காலம் சென்று வர முடியும். இது சட்ட விரோதமாக ஊடுருவி குடியமர்பவர்களை தடுக்கவும் பயன்படுகிறது. மொய்த்தி பழங்குடியினருக்கு பழங்குடியினர் அந்தஸ்தையும் சலுகைகளையும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆர் எஸ் எஸ் ஆதரித்து வருகிறது.

மியான்மரில் இருந்து ஊடுருவும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஜிரிபாம் , லீலாங் போன்ற நகர் பகுதிகளில் அதிகமாக குடியேறி வருவதை கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றன ஆர் எஸ் எஸ் அமைப்புகள். உள்ளூர் வாசிகளின் துணையுடன் ஹிந்து பண்பாட்டு தேசியவாதிகள் தங்கள் போராட்டத்தை தொடர உறுதியாக உள்ளார்கள்.

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

garlanding vaidyanatha iyer statue - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதை முன்னிட்டு, உயரமான சுவரில் சிரமப்பட்டு வயதானவர்கள் ஏறி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது, திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்த உதவியாக, படிக்கட்டுகள் அமைத்துத் தர புதிய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

சுததிரப் போராட்ட கால கட்டத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை நடத்திக் காட்டியவர் மதுரை வைத்யநாதய்யர். தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவோடு வைத்தியநாத அய்யர் போராட்டம் நடத்தி வெற்றிபெற்று கோவிலுக்குள் ஹரிஜன் மக்களை அழைத்து சென்றார்.

சட்டமும் இயற்றப்பட்டது‌ அதோடு தமிழகத்தின் முக்கிய சுதந்திர போராட்டங்களான உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற முக்கிய போராட்டங்களில் பங்கேற்று வைத்தியநாத ஐயரும் அவரது குடும்பமும் பல முறை தேசத்திற்காக சிறை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரின் பிறந்த தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தியாகி வைத்தியநாத ஐயர் திருவுருவ சிலைக்கு அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, உக்கிர பாண்டி பட்டர், தன்னார்வலர் மற்றும் தாம்பிராஸ் மாநிலத் துணைத் தலைவர் இல.அமுதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வைத்தியநாத ஐயரின் திருவருவ சிலை ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி உள்ளதால் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க தன்னார்வலர்கள் மிகவும் சிரமப்பட்டு சுவர் ஏறி குதித்து சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தன்னார்வலர்கள் வைக்கும் வேண்டுகோள் உடனடியாக, ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கும் வைத்தியநாத ஐயர் சிலை அமைந்த பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சிலைக்கு செல்ல படி அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டிற்காக பல போராட்டாங்கள் நடத்திய தியாகியின் சிலைக்கு செல்ல முடியாமல் ஆக்கிரமித்துள்ள இடம் சீரமைக்கப்பட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

anaimangalam seppedu returned to india by modiji - 2026

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

நமது சோழப் பேரரசின் மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமான ஆனைமங்கலம் செப்பேடுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நமது தாயகத்திற்குத் திரும்பியுள்ளன.

1976 முதல் 2013 வரை வெளிநாடுகளில் இருந்து வெறும் 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன. ஆனால், நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 228-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மற்றும் நமது பழங்காலப் பொக்கிஷங்கள் மீட்கப்பட்டுப் பத்திரமாகத் தாய்மண்ணிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வரலாற்றுச் சாதனையின் உச்சமாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்தச் செப்பேடுகள் முறைப்படி நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நமது தொன்மையை மீட்டெடுப்பதில் இந்திய அரசு காட்டும் ஈடுபாட்டிற்கு இதுவே மிகப்பெரிய சான்று.

இந்தச் செப்பேடுகள் நெதர்லாந்துக்கு எப்படிச் சென்றன என்பது பலருக்கும் தெரியாத ஒரு வலிமிகுந்த வரலாறு. நமது நிலத்தின் சில பகுதிகளை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில், இந்த விலைமதிப்பற்ற செப்பேடுகள் நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதனாலேயே இது லைடன் செப்பேடுகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்தச் செப்பேடுகள் வெறும் உலோகத் தகடுகள் அல்ல; தமிழர்களின் ஈடு இணையற்ற கலைத்திறன், அறிவியல் அறிவு, துல்லியமான நில அளவை முறைகள் மற்றும் செம்மையான ஆட்சி நிர்வாகத்தின் உயிரோட்டமான ஆவணம்.

இதில் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு வரலாற்று உண்மை உள்ளது. மாமன்னர்கள் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் தீவிரமான சிவபக்தர்கள். சைவம் தழைக்கப் பல பிரம்மாண்டமான சிவாலயங்களை எழுப்பியவர்கள். அன்றைய ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் (இன்றைய இந்தோனேசியா) மன்னர் மாரவிஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை என்ற புத்த விகாரத்தை அமைக்க உதவிகோரினார்.

ஒரு தீவிர சிவபக்தராக இருந்தபோதிலும், பௌத்த மத விகாரைக்கு ஆனைமங்கலம் கிராமத்தை முழுமையாக மானியமாக வழங்கி மாமன்னர் ராஜராஜ சோழன் ஆதரவளித்தார். இது சோழர்களின் அளப்பரிய மத நல்லிணக்கத்தையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மையையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது. இந்த மானிய விவரங்களை அவரது மகன், மாமன்னர் ராஜேந்திர சோழன் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் செப்பேடுகளாகப் பொறித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகள் இன்று மீண்டும் நம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு நெடிய சட்டப் போராட்டம் உள்ளது. வழக்கறிஞர் திரு.பி.ஜெகநாத் அவர்கள் 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், அதனைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறையும், வெளியுறவுத்துறையும் இணைந்து மேற்கொண்ட தொடர்ச்சியான ராஜதந்திர நகர்வுகளுமே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

திரு.பி.ஜெகநாத் அவர்களின் பயணம் இதோடு முடிந்துவிடவில்லை. ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சு மிஷனரிகளால் இடிக்கப்பட்ட சூடாமணி விகாரையின் கோபுரத்தை, மீட்கப்பட்ட இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் குறிப்புகளைக் கொண்டு அதே நாகப்பட்டினத்தில் மீண்டும் கட்டமைக்க வேண்டும் எனத் தனது அடுத்தகட்ட சட்டப் போராட்டத்தை அவர் தற்போது துவங்கியுள்ளார். அவரது இந்த முயற்சிக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

நமது பண்பாட்டின் ஆணிவேரான இந்தச் செப்பேடுகள் மீட்கப்பட்டிருப்பது, தமிழ் கலாச்சாரத்திற்கும் வரலாற்றுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை. நமது வரலாற்றை மீட்டெடுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்தப் பணிக்காக அயராது உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது பெருமைமிக்க வரலாற்றை மீட்டெடுப்போம்! வருங்கால சந்ததிக்குச் சோழர்களின் புகழைக் கொண்டு சேர்ப்போம்!

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

udayanidhi in assembly - 2026
  • ஆனந்த் வெங்கட் –

சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி. ஏற்கனவே இது போல பேசியதற்கு வழக்கு நடக்கிறது. ஆக இது ஒன்றும் தெரியாமல் பேசிய பேச்சல்ல என்று நிரூபணம் ஆகிறது. அந்த வழக்கை துரிதப்படுத்த நீதிமன்றத்தில் முறையீடு செய்யவேண்டும் பாஜக. (அப்போது முதல்வரின் reactionஐயும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆமோதித்து போல இருந்தது அந்த தலையாட்டல்.)

வேண்டுமென்றே முதல்வரை வம்புக்கு இழுத்து அவரையும் மறைமுக திமுகவாக ஆக்க செய்யப்படும் முயற்சி இது. இதற்கெல்லாம் இசைந்து கொடுப்பது நன்றாக இல்லை.

திமுக ஆதரவு தந்தது விஜயின் கட்சியை காப்பாற்ற அல்ல. மாறாக உள்ளே இழுத்துக்கொள்ள. இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களது மறைமுக வழிகாட்டுதல் இல்லாமல் நடக்காது. இதை விஜய் உணர்ந்தால் நல்லது.

முதல்வர் மீது இருக்கும் சந்தேக நிழலை ஊர்ஜிதம் செய்வது போல இருக்கிறது அந்த தலையாட்டல். முதல்வரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது. உங்களுக்கு வாக்களித்தது வெறும் கிருஸ்தவர்கள் மட்டுமல்ல. மிகப்பெரும்பான்மையில் ஹிந்துக்களே. இளைஞர்களும் பெரியவர்களும் இளைஞிகளும் மிகப்பெருமளவில் நம்பிக்கை வைத்துள்ளார்கள் முதல்வர் மீது.

திமுக விரிக்கும் வலையில் சிக்கி வீணாக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சாராய கடைகளை மூடுவது பெரும் பாராட்டுக்குரிய செயல். இதுதான் தேவை நாட்டுக்கு. இந்த காலாவதியான சனாதன எதிர்ப்பை கையில் எடுத்ததன் விளைவைத்தான் திமுக இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

உறவாடிக்கெடுக்க முயற்சி செய்கிறது திமுக, செய்தே தீரும், நம்பிக்கையை பெற்றே தீரும், விஜயை அழித்தே தீரும். எப்படி அழிந்தோம் என்ற தடம் கூட தெரியாமல் அழிக்கும். யாராவது முதல்வருக்கு இதை சொல்லுங்கள்.

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

udayanidhi in assembly - 2026

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: உதயநிதி

தமிழக சட்டமன்றத்தில் இன்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அழைத்துச் சென்று, அவரது இருக்கையில் அமர வைத்தனர். அதன் பின்னர் சபாநாயகர் பிரபாகர், துணை சபாநாயகர்ரவிசங்கர் ஆகியோருக்கு உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி பேசியபோது, நிறைவாக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி முடித்தார். அவரது உரையில்,

“தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகப் பயணிப்போம். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்; வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு! மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” – என்று பேசி முடித்தார். உதயநிதியின் பேச்சின் நிறைவில் முதலமைச்சர் விஜய் கைகூப்பி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

எனினும் உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

ஹிந்து மதத்தின் மீது உங்களுக்குள்ள அதீத வெறுப்பே, உங்கள் சரிவிற்கு வழிவகுக்கும. உங்கள் முதல் சட்டமன்ற உரையிலேயே கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என நீங்கள் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக நீங்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. ஹிந்துக்களின் மீது தொடர்ந்து நீங்கள் கல்லெறிவது கடும் கண்டனத்திற்குரியது.

துணை முதல்வராக இருந்த நீங்கள், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கு ‘சனாதனத்தை ஒழிப்பேன்’ என்று நீங்கள் ஒருமுறை பொதுவெளியில் பேசி, ஹிந்துக்களின் நீங்கா வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதே காரணம்.

எனவே, நீங்கள் அரசியலில் மென்மேலும் வளர வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்புணர்வை வெட்டி எறிந்துவிட்டு, உண்மையான மதநல்லிணக்கத்தைப் போற்றுவது அவசியம். ஹிந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவரவர் மத அடையாளங்களும் நம்பிக்கைகளும் அதிமுக்கியம் என்பதை நீங்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு ஹிந்துக்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி, ‘மத’ யானையின் மீது அரசியல் சவாரி செய்ய முயன்றால் மீள முடியா பாழுங்குழியில் வீழ்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும், அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்திருக்கும் முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் பகிரப்பட்ட இந்த வெறுப்புப் பிரச்சாரத்திற்கு என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதைத் தான் தமிழகம் தற்போது ஆவலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

உதயநிதி பேச்சு விஜய்க்கு விடப்பட்டிருக்கும் சவால்: பாஜக

“சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று மீண்டும் திமுக வின் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திட்டமிடப்பட்ட, உள்நோக்கத்தோடு பேசியுள்ள அதே வேளையில், திமுகவுடன் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் தயவால் தான் விஜய் முதலமைச்சராக இருக்கிறார் என்று ஆணவத்தோடு உதயநிதி பேசியிருப்பதும், ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதாவது முதலமைச்சர் விஜய் அவர்கள் சனாதனம் குறித்து உதயநிதி கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் அரசுக்கு ஆதரவு இருக்காது என்பதை மறைமுகமாக சொல்லி மிரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இந்த மிரட்டலை திமுக விடுத்திருப்பது முதலமைச்சர் விஜய்க்கு விடப்பட்டிருக்கும் சவாலே!”

– நாராயணன் திருப்பதி, தலைமை செய்தி தொடர்பாளர், பா.ஜ.க.


அர்ஜுன் சம்பத் அறிக்கை!

கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆயுதங்கள் தமிழக சட்டசபையில் வேலையை செய்ய துவங்கி விட்டன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர் மாண்புமிகு திரு ஜே சி டி பிரபாகர் ஐயா அவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள மேரி மாதா சர்ச்சுக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றது சிலுவையை தொட்டு வணங்கி கும்பிட்டது தன்னை ஒரு கிறிஸ்தவர் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பைபிள் பரிசு வழங்கியது ஆகியோவற்றை குறித்து பேசியுள்ளார்.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட மாடல் திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் ஒரு கிறிஸ்தவர் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன் என்று பேசியவர். தற்பொழுது உதயநிதியும், ஜோசப் விஜய்யும்,ஜே சி டி பிரபாகர் அவர்களும் ஒரே லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள் ஒருவர் பிடிப்பு உள்ளது என்றும் பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சனாதனத்தை ஒழிப்பதாக பேசியது குறித்து ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசுவது திமுகவில் உள்ள ஒரு கோடி ஹிந்துக்களை வருத்தம் அடைய செய்துள்ளது.

குறிப்பாக அவரது தாயார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை பின்பற்றுபவர். முதலில் அவர் அவரது வீட்டில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இஸ்லாமிய கிறிஸ்தவ மதவெறி மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காக அவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக அப்பாவி இந்து தமிழர்கள் பின்பற்றுகின்ற தமிழர்களின் பாரம்பரியமான சனாதனத்தை ஒழித்துக் கட்டுவேன் என தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது திராவிட மாடல் திமுக இன்னும் திருந்தவில்லை. என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் திரைப்பட நடிகராக இருந்த காலத்தில் மெர்சல் திரைப்படத்தில் தமிழர்களின் பாரம்பரியம் வேஷ்டி சட்டை என்பதை குறித்து பெருமை பேசி இருப்பார். ஆனால் தற்பொழுது அதற்கு மாறாக தமிழக சட்டசபையில் கோட் அணிந்து பங்கெடுத்துக் கொள்கிறார் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை புறக்கணித்து வருகிறார்.

திரு ஜோசப் விஜய் அவர்கள் லயோலா கல்லூரியில் படித்து வருபவர் லயோலா கல்லூரி நிர்வாகிகளான அவரது உறவினர்கள் திரு சேவியர் மற்றும் திரு பிரிட்டோ ஆகியோருக்கு கிறிஸ்தவ மதம் பரப்பும் வேலையை தொடர்ந்து செய்து வருபவர்கள். இந்து சமயம் குறித்தும் சனாதன தர்மம் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பி வருபவர்கள்.

தற்பொழுது சட்டசபையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் மிகவும் வருத்தத்திற்கு உரியது. ஹிந்து தமிழர்கள் தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். கன்னியாகுமரி,சென்னை போன்ற பகுதிகளில் இந்து தமிழர்கள் சிறுபான்மையாக உள்ளனர் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக மாறிவிட்டார்கள்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் தமிழர்கள் வெற்றி பெற முடியாது ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் மிக எளிதாக கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்று வந்து இந்து விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட மாடல் தீய சக்தி திமுக சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

kamalalayam tn bjp - 2026
  • பி.ஆர். மகாதேவன்

அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே ஏழு லட்சம்
அதிமுக 2011-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 41 லட்சம்
அதிமுக 2016-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 76 லட்சம்
அதிமுக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 53 லட்சம்
அதிமுக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே நான்கு லட்சம்

அதாவது 2006-ல் ஜெயலலிதா தலைமையில் தோற்றபோது வாங்கிய வாக்குகளைவிட 2021-ல் எடப்பாடி தலைமையில் தோற்றபோது வாங்கிய வாக்குகள் 46 லட்சம் அதிகம்.

2026-ல் தோற்றபோது அதிமுக வாங்கியிருக்கும் வாக்குகள் 2006-ல் வாங்கிய வாக்குகளைவிட வெறும் முன்று லட்சம் மட்டுமே குறைவு.

நிச்சயம் ஜெயலலிதாபோல் எடப்பாடியார் பெரிய ஆளுமை இல்லைதான். ஆனால் வாக்களித்திருக்கும் அதிமுகவினரும் பொது மக்களும் எடப்பாடியை இன்றுவரையிலும் கைவிடவில்லை.

மக்களாட்சியில் ஒரு தலைவருடைய மதிப்பு என்பது அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டதுதான்.

பாஜக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஆறு லட்சம்
பாஜக 2011-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் எட்டு லட்சம்
பாஜக 2016-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 12 லட்சம்
பாஜக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 12 லட்சம்
பாஜக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் பதிநான்கு லட்சம்

பாஜக 2009-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 7 லட்சம்
பாஜக 2014-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 22 லட்சம்
பாஜக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 15 லட்சம்
பாஜக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 48 லட்சம்

போட்டியிட்ட தொகுதிகளின் அடிப்படையிலான பாஜகவின் வாக்கு சதவிகிதம்.
2014 – 9 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 24.1%
2019 – 5 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 28.5%
2024 – 23 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 20%

மொத்தம் பதிவான வாக்குகள் எத்தனை… அதில் ஒரு கட்சி எத்தனை வாக்குகளைப் பெறுகிறது என்ற அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கணக்கிடுவது ஒரு கட்சியின் உண்மையான வளர்ச்சியைக் காட்டாது.

எத்தனை இடங்களில் போட்டியிட்டிருக்கிறது. அங்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதில் ஒரு கட்சி எத்தனை சதவிகிதம் பெற்றிருக்கிறது என்றுதான் கணக்கிடவேண்டும்.

ஒரு கட்சி போட்டியிடாத தொகுதிகளில் விழுந்த வாக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்ப்பதென்பது சரியல்ல. ஏனென்றால் போட்டியிடாத பகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஒரு வாக்கும் கிடைத்திருக்காதே.

கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டால் ஒரு கட்சியின் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். அதைவைத்து கட்சி வளர்ந்துவிட்டதாகச் சொல்லவே முடியாது.

தமிழகத்தில் பாஜக கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்தில் நிறைய இடங்களில் போட்டியிட்டிருக்கின்றன. ஆனால் ஜெயலலிதா என்ற மென் இந்துத்துவரைத் தாண்டி மக்கள் பாஜக பக்கம் வரவே இல்லை. இது அத்வானி, வாஜ்பாய் ஆகியோரின் தோல்வி அல்ல. தமிழக மக்கள் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் அந்நாட்களில் இந்து நேச சக்தியாகப் பார்த்தனர். அவர்களை மீறி கட்சியை மக்களிடம் கொண்டு செல்வதெல்லாம் மிகவும் கடினமான விஷயம்.

அதோடு அப்போது நரேந்திர மோதி தலைமையிலான மத்திய ஆட்சியும் அமைந்திருக்கவில்லை. எனவே 2014க்கு முந்தைய பாஜகவின் செயல்பாடுகளை இந்தப் பின்னணியில்தான் மதிப்பிடவேண்டும்.

2014க்குப் பிறகும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் பெரிய ஆதரவு அலை ஒன்றும் வீசிவிடவில்லை. படிப்படியான வளர்ச்சி என்று கூட சொல்ல முடியாது. ஒருவித தேக்க நிலையே நிலவுகிறது. வாஜ்பாய் காலத்தைவிட மோதியின் காலத்தில் ஒப்பீட்டளவில் இந்து சக்திகள் ஓரளவுக்கு பலம் பெற்றிருக்கின்றன. இது ஒருபோதும் போதாது.

இந்தக் காலகட்டத்திலும் மக்கள் அதிமுகவிடமிருந்து பாஜக பக்கம் நகர்ந்திருக்கவே இல்லை.

2026 தேர்தலிலும் அதிமுக ஒரு கோடிக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அவை முழுவதும் பாஜகவின் வாக்குகள்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் பாஜகவுக்கு வளர்ச்சி கிடைக்கவில்லை. தனியாக நின்றாலும் வளர்ச்சி கிடைக்கவில்லை.

எனவே அதிமுகவுடன் கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்று வியூகம் வகுக்காமல் இந்துக்களை அணி திரட்டுவது எப்படி என்று வியூகம் வகுக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், அதிமுக பற்றிய சிந்தனையே பாஜகவுக்குத் தேவையே இல்லை. ஆனால், அதிமுகவுக்கு வாக்களிக்கும் இந்துக்களைப் பற்றி பாஜக சிந்தித்தே தீரவேண்டும். ஜெயலலிதா என்ற மென் இந்துத்துவர் இருந்தபோது பாஜகவுக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்பதில் ஆச்சரியப்படவோ வருத்தப்படவோ எதுவும் இல்லை. ஆனால் அவருடைய மறைவுக்குப் பின்னரும் அந்த இந்துக்களின் நம்பிக்கையை பாஜகவால் ஏன் இன்னும் பெற முடியவில்லை?

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஊடகங்களின் துறையுடன் உருவாக்கி வைத்திருக்கும் மாயத் தோற்றம் உடைக்கப்படவேண்டும். உண்மையில் அது 2009 வாக்கிலேயே ஆரம்பித்துவிட்டது. நாம் தமிழர் என்றும் தமிழ் தேசியம் என்று 2009 வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்து-இந்திய வெறுப்பு பிரசாரத்தின் இரண்டாம் சுனாமிதான் 2016-2021 காலகட்டத்திலான திமுகவின் பேயாட்டம். உண்மையில் சைமனிஸமே ஸ்டாலினிஸத்தின் முன்னோடி மற்றும் வழிகாட்டி.

பஞ்ச பரிவர்த்தன் என்ற பெயரில் பிளாஸ்டிக் பை உபயோகிக்கூடாது, தினமும் பல் தேய்க்க வேண்டும், சோப் போட்டுக் குளிக்கவேண்டும், அப்பா அம்மாவிடம் அன்பாக நடந்துகொள்ளவேண்டும், டிராஃபிக் கான்ஸ்டபிளை மதிக்கவேண்டும் என்றெல்லாம் நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். பேரியக்கம் நாடு முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறப் பின்பற்ற வேண்டிய பஞ்ச சீலங்கள் :

  1. அண்ணாமலையை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக்கவேண்டும். தமிழக ஊடகங்களை நடுநிலையாக நடந்துகொள்ளச் செய்யவேண்டும். அதாவது சர்ச்-திமுக-இடதுசாரிப் பிடியில் இருக்கும் தமிழக ஊடக மாஃபியாவை அடக்கவேண்டும். அவர் மத்திய அரசு அல்லது மத்திய அரசியல் பதவிக்குச் செல்ல விரும்பாவிட்டால் தமிழகக் கிளைக்கென்று தனியாக ஒரு பதவியை ஆரம்பித்து அதன் தலைவராக அண்ணாமலையை நியமிக்கலாம். சிங்கத்துக்கு வேட்டைக் களம் அமைத்துத் தரவேண்டும். சர்க்கஸ் கூண்டு அல்ல.
  2. மத்திய வருமான வரி – லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையின் தமிழக கிளை ஒன்றை புதிதாக ஆரம்பித்து சுப்ரமணியம் ஸ்வாமியை அதன் தலைவராக நியமிக்கவேண்டும். குற்றம் செய்து தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் ஆ.ராசா, ஸ்டாலின், கனிமொழி, மாறன், சிதம்பரம், செந்தில் பாலாஜி, பொன்முடி, கி.வீரமணி என வரிசையாக கைது செய்யப்படவேண்டும்.
  3. இந்து அற நிலையத்துறையில் மட்டுமல்லாமல் தலித் பெயரில் இட ஒதுக்கீடு பெற்று பதவியில் இருக்கும் அத்தனை க்ரிப்டோக்களையும் பதவி நீக்கம் மற்றும் உரிய சட்டபூர்வமான அபராதம்+சிறை தண்டனை வழங்க வேண்டும். அரசியல் சாசனத்தையும் இட ஒதுக்கீட்டையும் மதிக்கும் அரசு முதலில் செய்ய வேண்டியது, அரசியல் சாசன மீறலையும் இட ஒதுக்கீட்டு ஏய்ப்பையும் தடுப்பதுதான். அம்பேத்கரை மதிப்பதென்றால் அவர் எழுதிய அரசியல் சாசனத்தை மதிக்கவும். இதற்கென்றே ஒரு துறை உருவாக்கி அதற்கு ஹெச்.ராஜாவைத் தலைவராக நியமிக்கவேண்டும்.
  4. வகஃப் சொத்து முறைகேடுகளை புதிய சட்டத்தின் அடிப்படையில் விசாரித்து கடந்த பத்தாண்டுகளில் 500 மடங்கு அதிகரித்திருக்கும் வக்ஃப் சொத்துகளை மீட்டு உரிய நபர்களுக்குத் தரவேண்டும். இந்தத் துறைக்கு தமிழத்தின் சார்பில் வேலூர் இப்ராஹிமைத் தலைவராக நியமிக்கவேண்டும்.
  5. திரைப்படத்துறையில் புழங்கும் கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, கஞ்சா பண முதலீடு, விநியோக ஏக ஆதிக்கம், பாலியல் வன்கொடுமைகள், இந்து துவேஷச் சித்திரிப்புகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் தடுக்கவும் கடும் தண்டனைகள் உடனே வழங்கவும் ஒரு வாரியம் புதிதாக அமைக்கவேண்டும். தமிழிசை-வானதி-குஷ்பு ஆகியோர் தலைமையில் முழு அதிகாரம் கொண்ட ஒரு சக்தி கேந்திரமாக அதைச் செயல்பட அனுமதிக்கவேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் தமிழகம் தனி நாடு என்றுதானே இந்திய விரோத இந்து விரோத சக்திகள் செயல்படுகின்றன. எனவே தமிழகத்துக்கென்றே தனியான துறைகளை அவர்கள் கேட்பதுபோல் அமைத்து தமிழகத்தை வளம் பெறச் செய்யவேண்டும்.

எந்தப் பதவிக்கு யார் என்பதெல்லாம் ஒரு புரிதலுக்காகச் சொல்லப்பட்டிருப்பவையே. ஒவ்வொரு நபரின் அணுகுமுறை, ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் அவை சொல்லப்பட்டிருக்கின்றன.

அடிப்படை விஷயம் என்னவென்றால் attitude… அதுவே முக்கியம்.
ஆள் அல்ல; ஆளுமை அதுவே பிரதானம்.
சொல் அல்ல; செயலே பிரதானம்.
ஆட்சி அல்ல; அதிகாரப் பிரயோகமே பிரதானம்.

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழக முதல்வர் அறிவித்துள்ள வெள்ளை அறிக்கையில், இந்து கோயில்கள் பற்றிய வருமானம், சீரமைப்பு மற்றும் அதன் எதிர்காலத் திட்டம் குறித்தும் முழுமையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

தமிழகத்தில் பொறுப்பு ஏற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப் போவதாக கூறியுள்ளார். இதனை வரவேற்கிறோம். அதே சமயம் அனைத்து துறைகளிலும் கடந்த திமுக ஆட்சி செய்தது என்ன? அதில் நடந்த முறைகேடுகள் என்ன? என்பது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது தமிழக மக்கள் கோரிக்கையாக சமூக ஊடகங்களில் வெளிவருகிறது.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை என பல துறைகளில் ஊழல் கறைபடிந்த நிர்வாகம் குறித்த கேள்விகள் நீள்கிறது. உதாரணமாக வெளிநாட்டு முதலீடு ஈர்த்த விவகாரம் குறித்த விமர்சனங்கள் திமுக ஆட்சியிலேயே எழுந்தன. இதில் புதிய அரசுக்கு நமது கோரிக்கை, இந்து சமய அறநிலையத் துறை செயல்பாடு குறித்தும் தீவிரமான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் மூவாயிரம் கோவில்களில் அவசரகதியில் குடமுழுக்கு நடைபெற்றது. பல லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டது. அதில் பல முறைகேடுகள் குறித்து புகாரும் வந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நடந்த முறைகேடுகளில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டது தெரிய வந்தது.

கோவில் நிலங்கள் வீடுகள் முறைகேடாக தனியாருக்கு, அரசு துறைகளுக்கு தாரை வார்க்க அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்ட வழக்குகள் பதிவாகின.

பக்தர்கள் காணிக்கை அளித்த நகைகள் உருக்கப்பட்டதில், கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களைத் தந்தும் கடந்த திமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை.

மேலும் திமுக, அதிமுக ஆட்சியில் தெய்வத் திருமேனிகள், கோவிலின் புனிதமான பொருட்கள், பழைமையான விக்ரகங்கள் முதலானவை களவாடப்பட்டு, கடத்தப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று? இந்த குற்றங்களுக்குத் துணைபோன இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்தனர். ஆனால் அந்த வழக்குகள் தொடர்ந்து நடத்தாமல், குற்றச்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீண்டும் பணி அமர்த்தப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட இறைவன் திருமேனிகள் மீட்க போதுமான நடவடிக்கை இல்லை என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்தது இன்றைய ஊடகங்களில் வெளிவந்துள்ளது. எனவே ஊழலில் முறைகேடுகளில் முதலிடத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத் துறை கடந்த காலங்களில் செயல்பட்டதை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை புதிய அரசு, தமிழக மக்கள் முன் வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இதன் மூலம் கடந்த ஆட்சியில் நடைபெற்றவை மக்களின் பார்வைக்கு வரும். மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் அதிகாரிகள் செய்யும் தவறை தட்டிக்கேட்கத் துணிவு வரும்.

இனி வரும் காலங்களில் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு துணை போகாமல், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உண்மையாக, நேர்மையாக இறைவனுக்கு பணி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

எனவே முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

tasmac shops - 2026

தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள் மூடப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டது. மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான
சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.