Home Blog Page 5690

ஜெ.வின் தோழிதானே ஆர்.கே.நகரில் போட்டியிடுங்க…: சசிகலாவுக்கு ஜெ.வின் குடும்ப நண்பர் கீதா கேள்வி

ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான கீதா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் முதலமைச்சராக சசிகலா பதவியேற்கப்போகிறார் என்பது பற்றி கருத்துக்கள் கேட்கப்பட்டது.
 கேள்வி: சசிகலாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, அவர் எப்படி செயல்படுகிறார் என்று பார்த்தால் என்ன?
பதில்: தேர்தலில் போட்டியிடட்டும். அவர் பொதுச்செயலாளராக ஆனபோதே என்ன செய்திருக்கலாம் சசிகலா புஷ்பாவிடமும், கீதாவிடமும் வேட்பு மனுவை வாங்கியிருக்கலாம். எல்லாத்தையும் வாங்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு பொதுச்செயலாளராக வந்திருக்கலாம். தேர்தலில் நின்றுவிட்டே வாங்களேன். என்ன அவசரம். ஜெயலலிதாவினடைய தோழிதானே, அதே ஆர்.கே. நகர் தொகுதியில அழகா நின்று ஜெயிச்சு வாங்க. மக்கள் உங்கள ஏத்துக்கிட்டதா சொல்றீங்க. அப்படியின்னா தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வாங்க. முதலமைச்சராக வாங்க. 
கேள்வி: ஒ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக இருந்தாலும், சசிகலாதான் ஆட்சி நடத்துகிறார். அப்படியிருக்கும்போது சசிகலா முதல்வரானால் என்ன.
பதில்: ஒ.பன்னீர்செல்வத்துக்கு இது நல்லதுதான். அவுங்க பன்ற ஊழலுக்கு இவர் மாட்டுவாரு. அவங்க பன்ன ஊழலுக்கு ஜெயலலிதா ஜெயில்ல இருந்தாங்க. சசிகலாவே சி.எம்.ஆக இருக்கட்டும். மக்கள் தூக்கி எறிவார்கள். அன்றைக்கு தெரியும். 
கேள்வி: சசிகலா முதல்வராக வந்தவுடன் டாஸ்மாக் கடையை மூடுவது போன்ற பல அறிவிப்புகளை வெளியிடும்போது மக்களின் எதிர்ப்பு நிலை மாறாதா?
பதில்: அதனை அன்றைக்கு பார்த்துக்கொள்ளலாம். ஜெயலலிதா பின்னால் இருந்து நிழல் முதல் அமைச்சராக இருந்தார். ஆகையால் உடனே மாறப்போவதில்லை. நீங்கள் எதிர்பார்க்கலாம். நாங்கள் நெகட்டிவாகத்தான் பார்க்கிறோம் என்று கூறினார்.

இன்றைய முக்கிய செய்திகள்

*தலைப்புச் செய்திகள்*
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கண்ணன் விலகினார். இதையொட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார்.
நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை கடற்கரையோரம் டீசல் கசிவை ஏற்படுத்திய கப்பல்களை பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவன், இந்திய அரசின் உதவிடன் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் தனது தாயுடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது
பிரசவத்தின்போது நர்ஸ் மரணம் அடைந்ததை அடுத்து எய்ம்ஸ் மகப்பேறு பிரிவின் டாக்டர்கள் 5 பேரை பணி இடைநீக்கம் செய்து ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.
பார்சிலோனாவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் நோக்கியா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இண்டிகோ விமான பாதுகாப்பு பயிற்சி மைய தேர்வு முறையில் கோளாறு நடந்துள்ளதை அடுத்து பயிற்சி மையத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது
முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, கவர்னர் மூலமாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
ஏமனில் பழங்குடியினர் தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி
ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான வாட்ஸ்அப் பீட்டா செயலியில் புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சர்க்கரை நோய் மற்றும் காய்ச்சல் காரணமாக இயற்கை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
ரெயில்களில் பசுமை கழிவறை திட்டப்பணிகளுக்காக ரூ.1,155 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 64 ஆயிரம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் ராஜா சோம் செராவத்-உர்மில் தம்பதிக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
சாம்சங் நிறுவனத்தின் புதி்ய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இங்கு சாம்சங் சி5 ப்ரோ சாதனம்
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்க இருப்பதற்கு, முன்னாள் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் கருப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டதா? என்பது தொடர்பாக 1 கோடி வங்கி கணக்குகளை வருமானவரி இலாகா ஆய்வு செய்து உள்ளது.
கருவுற்று 21 வாரங்கள் கடந்த நிலையில் பெண் ஒருவர் கருச்சிதைவு செய்து கொள்வதற்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
ஜெயலலிதா வழியில் மக்களுக்காக இந்த ஆட்சி செயல்படும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் வி.கே.சசிகலா கூறினார்.
சத்தீஸ்காரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் பிரதாப் சிங் மார்க்கம் என்ற ராணுவ வீரர் காயமடைந்தார்.
நேபால எல்லைக்குள் அத்துமீறி சட்ட விரோதமாக நுழைந்த காரணத்திற்காக வங்காள தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனது பதவிக் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்தவரை பாதுகாப்புபடை வீரர்கள் கைது செய்தனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் 4 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கும் அதை ஆதரித்தவர்களுக்கும் சரியான பாடத்தை கற்பித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
மதுவின் கொடுமையால் கொலை, கற்பழிப்பு,பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது என்று மாதா அமிர்தானந்தமயி பேசினார்.
பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த எம்.எல்.ஏ.க்களுடன் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என்று துரைமுருகன் கூறினார்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

12 ஆண்டுகளுக்கு பின்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்

மகா கும்பாபிஷேகம்:

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆகும். வேண்டுவோருக்கு வேண்டு வரம் அளித்து வருவதாலும், தீராத நோய்களை தீர்த்து வருவதாலும் பக்தர்கள் அதீத நம்பிக்கை கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலும் இருந்து வருகிறார்கள்.

கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. அரசு ஒதுக்கிய ரூ.25 கோடியிலும், பக்தர்கள் நன்கொடையாலும் பணிகள் வேகமாக நடந்தன.

இதில் புதிதாக விநாயகர் சன்னதி, உற்சவர் சன்னதி, கோவிலில் மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கடந்த 4 நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகளுக்குப் பின், இன்று குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது

200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, காலை 7 மணியளவில் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் பக்தர்கள் மீது தெளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சசிகலா தேர்வு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக
அதிமுக
பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா
தேர்வு செய்யப்பட்டதையடுத்து பாவூர்சத்திரத்தில்
அதிமுகவினர் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன்
எம்.பி. தலைமையி
ல்  அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் தலைவர் இளஅரசு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை
மாவட்ட செயலாளர்
மு.சேர்மபாண்டி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமசாமி,
கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் பாஸ்கர் ,சரண் டைல்ஸ் சரவணன்,  மேலவைப் பிரதிநிதிகள்  கணபதி, ஜெயராமன், மற்றும் ரவிச்சந்திரன், ராமசாமி, ஜெயராஜ், சுப்பிரமணியன்,சுடலைமணி, ராசையா, முத்துசாமி உட்பட ஏராளமான திரளான
அதிமுகவினர் கலந்துகொண்டனர்

மொபைல் இன்டர்நெட் கட்டணம்; பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை

தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் விதமாக, 'மொபைல் போன் இன்டர்நெட்' பயன்பாட்டு கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., இன்று முதல் அதிரடியாக குறைக்கிறது.

பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., 'ஜியோ' போன்ற புதிய நிறுவனங்களின் வரவை சமாளிக்க, வாடிக்கையாளர்களுக்கு, பல சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது, 'மொபைல் இன்டர்நெட்' கட்டணத்தில், புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, பி.எஸ்.என்.எல்., 'சிறப்பு விலை வவுச்சர்'களுக்கு, கூடுதல், 'டேட்டா' வழங்குகிறது.

• வழக்கமாக, 291 ரூபாய் திட்டத்தில், '2 ஜி.பி., டேட்டா' வழங்கப்படும். இதன், அளவு, நான்கு மடங்கு கூடுகிறது. செல்லத்தக்க காலம், 28 நாட்கள்.

• 78 ரூபாய் திட்டத்தில், வழங்கப்பட்ட, '1 ஜி.பி., டேட்டா' இனி, 2 ஜி.பி.,யாக வழங்கப்படும். இதன் செல்லத்தக்க காலம், 28 நாட்கள்.

இந்த புதிய அறிவிப்பின்படி, பி.எஸ்.என்.எல்., 'பிரீ – பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, 1. ஜி.பி., டேட்டா, 36 ரூபாய்க்கு கிடைக்கும். 'ஜியோ' நிறுவனம், தற்போது, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக, இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.

அதன் வருகைக்கு பின், போட்டி நிறுவனங்கள், '1 ஜி.பி., டேட்டா' விலையை, 50 ரூபாய்க்கு கீழ் குறைத்துள்ளன. பி.எஸ்.என்.எல்., அவர்களை விட, கூடுதலாக விலையை குறைத்துள்ளது. இச்சலுகை, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சசிகலா போஸ்டரை கிழித்த அதிமுக பிரமுகரை போலீசில் ஒப்படைத்த அமைச்சர்

சென்னையில் சசிகலா வால்போஸ்டரை கிழித்த தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரை பிடித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போலீசில் ஒப்படைத்தார்.

சென்னை  அடையாரில் கீரின்வேஸ் சாலையில் முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் கடம்பூர் ராஜூ உட்பட அமைச்சர்கள் வீடுகள், உயர் அதிகாரிகளின் வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் அதிமுக பொதுச்செலாளர் சசிகலாவை வாழ்த்தி ஏராளமான வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த வால்போஸ்டர்களை இன்றுகாலை மர்ம நபா் ஒருவர் கிழித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை கவனித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மர்மநபரை பிடித்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் பாண்டியன்(55) என்றும், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், உத்தமபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் என்பதும், சொக்கலிங்காபுரம் தற்போதைய கிளைச்செயலாளர் என்றும் தெரியவந்துள்ளது.

சசிகலா வால்போஸ்டரை கிழித்த அதிமுக பிரமுகரை, அமைச்சர் போலீசில் பிடித்து ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவை சந்தித்தார் பன்னீர்செல்வம்: எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தால் பரபரப்பு

போயஸ்கார்டன் விரைந்தார் ஓபிஎஸ்.அங்கு, சசிகலாவுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதை அடுத்து என்ன நடக்கப் போகுது? என்ற ஆவலுடன் தமிழக அரசியல் காத்திருக்கிறது.

சென்னை:

போயஸ்கார்டனுக்கு சென்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 27ம் தேதிதான் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது என்றாலும் அடுத்த ஒரு வாரத்திலேயே மீண்டும் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போயஸ்கார்டன் விரைந்துள்ளார். அங்கு பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, செல்லூர் ராஜு, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உடன் சென்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா தமிழகத்தின் முதல்வராக்குவதற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நிபந்தனையின்றி பாஜகவில் இணைகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா – எடியூரப்பா பரபரப்பு தகவல்

பெங்களூர்:

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த சில நாட்களுக்கு முன், காங்கிரசில் இருந்து விலகினார். அப்போது, அவர் 'அரசியலில் இருந்து ஓய்வு பெறமாட்டேன்' என அதிரடியாக அறிவித்தார்.

இதைதொடர்ந்து அவர் பா.ஜ.க.வில் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், பா.ஜ.க. தலைவர்கள், எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்ந்து தங்களது கட்சியில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, அவர் ஆதரவு தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.

தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை தொடர்பு கொண்டு பாராட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பாவை, எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அவர் விரைவில் பா.ஜ.க.வில் இணைவேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டன. விரைவில் எஸ்.எம்.கிருஷ்ணா, பா.ஜ.க.வில் இணைவார் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூராப்பா கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா, பா.ஜ.க.வில் சேருவது பற்றி பேச்சு வார்த்தை நடத்தினோம். மீண்டும் ஒருமுறை அவருடன் பேசிய பின்னர், அவர் பா.ஜ.க.வில் இணைவது உறுதியானது. எந்த நிபந்தனையும் இல்லாமல், அவர் எங்களது கட்சியில் இணைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

ரயிலில் இனி இரவில் டிக்கெட் பரிசோதனை இல்லை

சென்னை:

ரயில் பயணத்தின் போது, முன்பதிவு செய்த பெட்டிகளில், பயணிகளிடம் எவ்வித காரணமும் இன்றி டிக்கெட் பரிசோதனை நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.இரவு நேரங்களில், ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் பெண்களிடம் தேவையில்லாமல் டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்வதாக ரயில்வே துறைக்கு புகார் சென்றது. உத்தரவு: இதனையடுத்து தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் பிறப்பித்த உத்தரவு: முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளிடம் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். 10 மணிக்கு மேல் பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது. 10 மணிக்குள் கட்டாயம் டிக்கெட் பரிசோதனையை முடிக்க வேண்டும். உரிய காரணமில்லாமல், ஏற்கனவே டிக்கெட் பரிசோதனை செய்யப்பட்ட பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது.

10 மணிக்கு மேல் கிளம்பும் ரயில்கள், போலீசார் புகார் அளிக்கும் பயணிகள் மற்றும் ரயிலில் இறக்கி விடப்பட வேண்டியவர்களிடம் மட்டுமே இரவில் சோதனை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியமில்லை: இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகர்கள் கூறுகையில், தெற்கு ரயில்வேயில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. சில வருடங்கள் முன்பு வரை ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு டிக்கெட் பரிசோதகர் இருப்பார். ஆனால், தற்போது ஒவ்வொரு டிடிஇ பொறுப்பில் 3 அல்லது 4 பெட்டிகள் அளிக்கப்படுகின்றன.

டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாத வரையில், இந்த உத்தரவு நடைமுறையில் சாத்தியமில்லை எனக்கூறினர்.

ஜெயலலிதா வீட்டில் உள்ளவரெல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை: ஸ்டாலின்

சென்னை: '' ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக, மக்கள் ஓட்டளிக்கவில்லை,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். பி.டி.ஐ., செய்தி ஏஜென்சிக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி: கோஷ்டிகள் உருவானது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில் கோஷ்டிகள் உருவாகி உள்ளன. இது, அரசு நிர்வாகத்தை பாதித்து விட கூடாது. ஒரு விஷயம் உறுதியாகி உள்ளது. தற்போது உள்ள அரசு, மக்கள் தேர்ந்தெடுத்த அரசாக இல்லை. முதல்வர் ஜெயலலிதா தலைமையான அரசுக்கு தான் மக்கள் ஓட்டு போட்டனர். தற்போதுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கோ, ஜெயலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராகவோ மக்கள் ஓட்டளிக்கவில்லை.

அமைச்சரவையில் பிளவு: பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இந்த அரசுக்கு இல்லை. அமைச்சரவையிலேயே பிளவு உள்ளது. அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் முரண்பாடான கருத்துக்களை கூறி வருகின்றனர். பொறுப்பான கட்சியான தி.மு.க., நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறது.

ஜனநாயக கட்டமைப்புக்கு உட்பட்டே எந்த முடிவையும் தி.மு.க., எடுக்கும். அது மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். அ.தி.மு.க.,வின் உட்கட்சி விஷயத்தில் தலையிட தி.மு.க., விரும்பவில்லை. ஆனால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என தினம் தினம் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த நிலைமை, சட்டசபையையோ, ஆட்சி நிர்வாகத்தையோ பாதித்து விட கூடாது என்பது தான், ஒரு எதிர்க்கட்சி தலைவராக என் கவலையாக உள்ளது. அந்த பாதிப்பு வரக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு தி.மு.க.,விற்கு இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.