Home Blog Page 5837

துறைமுகம் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா அதிமுக.,வில் இருந்து நீக்கம்

 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த துறைமுகம் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை :_
சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பழ. கருப்பையா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாலும், பழ. கருப்பையா கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

சட்டமன்ற தேர்தல்: முதல் நாளில் பாமகவில் 612 பேர் விருப்ப மனு தாக்கல்

சட்டமன்ற தேர்தல்: முதல் நாளில் பாமகவில் 612 பேர் விருப்ப மனு தாக்கல்

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் 27.01.2016 முதல் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன்படி தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியது. பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி விருப்ப மனு வினியோகத்தை தொடங்கி வைத்தார். பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், இணைப் பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.தன்ராஜ், அமைப்பு செயலாளர் செல்வக்குமார், சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் கோ.சு. மணி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

முதல் நாளான இன்று மொத்தம் 612 விருப்ப  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 124 மனுக்கள் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தங்களின் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன. அதன்பின்னர் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

கும்பாபிஷேகம் என்பது என்ன? : சில விளக்கங்கள்

 

கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே தந்திருக்கிறேன் படித்து கமெண்ட் பன்னவும் பகிறவும்…

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.

2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம்.

1, அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

2, சங்கல்பம் – இறைவனிட்த்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

3, பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.

4, கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

5, வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

6, பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

7, பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}

8, மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}

9, அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

10, ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.

11, கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

12, கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

13, யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

14, சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.

15, மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

16, பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

17, நாடி சந்தானம் – யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}

18, விசேஷ சந்தி – 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.

19, பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

20, ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

21, அஷ்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

22, பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

23, கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

24, மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

25, மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48.நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில.

ஏக குண்டம் – ஒரு குண்டம அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.

யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்லுவதாவது.
கும்பமாகிய குடம் மாமிசமாகும், குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தின்ங்கள் சுக்ளமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குட்த்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குட்த்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும்,முகமாகவும் கூறப்படுகிறது, தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள்,உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க கற்பனை சிவாகமத்தில் கூறப்படுகின்றது.

நான் ஏன் இந்துவாகினேன்? -மஹாதேவா தாஸ் (ஜெர்மனி)

நான் ஏன் இந்துவாகினேன்?
-மஹாதேவா தாஸ் (ஜெர்மனி)

”என்னுடைய இயற்பெயர் மேஸ் வோன். நான் ஜெர்மனியைச் சேர்ந்தவன். சிவபெருமானின் பேரருளால் என்னுள் நிறைந்திருந்த தமஸ்குணங்கள் நீக்கப்பட்டு, என்னுள் சத்வகுணங்கள் நிறைந்தன. அதைப் பற்றி உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்போது என்னுடைய வாழ்க்கை சிறப்பாக உள்ளது. ஆனால், என்னுடைய கடந்த கால வாழ்க்கை மிகவும் வருத்தமான நிலையில் அமைந்திருந்தது. அர்த்தமே இல்லாது அறியாமையோடு என் காலங்களைக் கழித்திருந்தேன். கேளிக்கையும் கூத்தும் தான் வாழ்க்கை என்று நான் நினைத்து வாழ்ந்தேன். சுதந்திரம் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு, என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். போதைப் பொருள்களுக்கு அடிமையாகினேன். அதை தொடர்ந்து நான் கைது செய்யப்பட்டு, ஓர் போதைப்பொருள் தடுப்பு மையத்தில் சேர்த்து விடப்பட்டேன்.

அந்த மையத்தில் தான் எனது வாழ்வின் ஒரு புது அத்தியாயம் துவங்கியது. அங்கு நிறைய பயிற்சிகளும் விழிப்புணர்வுகளும் தந்தனர். சில நேரங்களில் எனக்கு போதைப் பொருள்களை உண்பதற்கு கைகள் துடிக்கும்; உடம்பெல்லாம் மிகவும் பலவீனமாகும். ஒரு பைத்தியக்காரனைப் போல் தவிப்பேன். எனக்கு ஆறுதலாக யாருமே இல்லை என்று எண்ணி மிகவும் மனம் வருந்தினேன்.

அந்த அமைப்பின் ஏற்பாட்டில் நான் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டேன். ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. எனினும் எனக்கு யோகா பயிற்சியில் ஆர்வம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தியானங்களையும் செய்ய துவங்கினேன். மூச்சுப் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தேன். எல்லா சமயநூல்களையும் படிக்க ஆரம்பித்தேன். பைபிள், குரான் என்று படித்தேன். பகவத் கீதையையும் புராணங்களையும் படித்தேன். பின், ஆதிசங்கரர் வாழ்க்கையைப் பற்றி படித்தேன். ஸ்வாமி சிவானந்தாவின் வழித்தடங்களை பின்பற்றினேன். சிவபெருமானின் புகழைப் படித்தேன். வேறு எந்த மதமும் அளிக்காத முழு ஆன்மீகத்தையும் சனாதன தர்மம் எனக்கு அளித்தது. இத்தனை காலமும் என்னுள்ளே இருந்த இறைவனை நான் அறியாமல் நடந்து கொண்டதை எண்ணி வருந்தினேன்.

எனக்கு யோகா பயிற்சி அளித்த குரு, என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். உனக்கு துன்பம் நேரும் போதெல்லாம் உன் இறைவனை நினைத்துக் கொள். அவரின் பெயரையே சொல். நீ செய்யும் காரியங்களை எல்லாம் அவருக்காக செய்வதாகவே எண்ணிக் கொள் என்றார். இறைவன் என்றவுடன் என்னையே அறியாமல் மஹாதேவன் தான் என் கண் முன் தோன்றினார். எனக்கு எப்போதெல்லாம் போதைப்பொருளின் எண்ணம் வருமோ அப்போதெல்லாம் கண்களை மூடிக்கொண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்று செப்புவேன். அப்படிதான் என் மனத்தை கட்டுப்படுத்த பழகினேன்.

ஆரம்பத்தில் இந்த போதை பழக்கத்தில் இருந்து விடுபெறவே நான் மஹாதேவரின் அருளை நாடினேன். காலப் போக்கில் தான், அவர் எப்போதும் என்னுள் தான் இருந்திருக்கிறார்; அதை இப்போது தான் நான் உணர்ந்தேன் என்பதை அறிந்தேன். தினமும் நான் வழிபாட்டின் மூலம் மஹாதேவரோடு பேசுகிறேன்; தியானத்தின் மூலம் அவர் பேசுவதை கேட்கிறேன். இதைவிட என் வாழ்க்கையின் வேறு என்ன வேண்டும்?

என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது மஹாதேவர் தான். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன், நான் முழுமையாக குணமடைந்து வெளியேறினேன். எனக்கு இனி எந்த பொருளின் மீதும் மோகம் இல்லை. மீண்டும் நிலையற்ற பொருளின் மீது மோகம் கொண்டு, மீண்டும் என்னுள் இருக்கும் மஹாதேவரை நான் மறக்க விரும்பவில்லை. எப்படியெல்லாம் வாழலாம் என்பதை சனாதன தர்மம் எனக்கு கற்றுக் கொடுத்தது. வாழ்க்கையில் சறுக்கும் போதெல்லாம் தூக்கிவிட மஹாதேவர் இருக்கிறார். ஒரு காலத்தில் பாவங்கள் செய்து வாழ்ந்திருந்தாலும், என்னையும் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வந்தார். சிலவேளைகளில் நான் கடந்தகாலத்தை எண்ணி வருந்துவேன். அப்போது, நீ பாவியல்ல; நீ தெய்வீகமானவன் என்பதை முதலில் உணர்ந்து கொள். நீ பாவி என்று எண்ணும் எண்ணம் தான் உன்னை பலவீனமானவன் ஆக்குகின்றது என்று என்னுள் இருக்கும் மஹாதேவர் எனக்கு அடிக்கடி நினைவுறுத்துகிறார்.

என் குடும்பத்தினர் கிறிஸ்துவர்கள். என்னுடைய மாற்றங்களைக் கண்டு அவர்கள் மனம் மிகவும் பூரித்தனர். இன்று என் வீட்டிலே பூஜை அறை வைத்திருக்கிறேன். அங்கு கணபதி, மஹாதேவர், தேவி, ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய அனைவரும் இருக்கின்றனர். தினமும் நான் அவர்களுக்கு மலர்கள் தூவி வழிபடுவேன். என்னுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டனர். இன்று என்னுடைய வாழ்க்கை முறையான பாதையில் போகின்றது. மஹாதேவரை காணும் பாதையை நான் கண்டு கொண்டேன். ஒருவேளை நான் சுயநினைவுகளை இழந்து போனாலும் கூட, என் மஹாதேவரை நான் என்றுமே மறவாது இருக்க என் பெயரிலே அவரை சேர்த்துவிட்டேன்.
உடலுக்கு வலிமையை தர யோகாசனங்கள், மனத்திற்கு வலிமையை தர தியானம், ஆரோக்கியமான வாழ்விற்கு சாத்வீகமான உணவுமுறை, அனைத்திற்கும் மேலாக ஒரு தந்தையாய், நண்பராய் எப்போதும் என்னோடு இருக்கும் மஹாதேவர்….

உங்களிடம் நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால், நீங்கள் பிறந்திருக்கும் இந்த சமயம், இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் தோன்றியிருக்கிறான் என்பதை கற்று தருகின்றது. ஆகவே, இந்த உன்னதமான தத்துவத்தைப் போற்றி எல்லோரையும் சமமாக நேசியுங்கள்.”

மஹாதேவ தாஸ் (மேஸ் வோன்) ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் ஜெர்மனியின் சிவானந்தா யோகாசாலையில் பயிற்சிப் பெற்ற ஒரு யோகி ஆவார். அண்மையில் அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர் யோகாசனம் புரியும்போது எடுக்கப்பட்ட சில படங்களைப் பகிர்ந்து கொண்டார். அனைத்தும் சிறப்பாக இருந்தது.

(source;hinduism facts.. page)

தமிழக அரசை கண்டித்து அபராதம் விதித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் !

 
மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரி, பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கத் தலைவர் சொக்கலிங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தார்.
 
அந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு ஏற்கனவே விசாரித்தது. மேலும் ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு உள்ளதா என தமிழக அரசு பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
 
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளிக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யாததால், மேலும், இரண்டு வாரத்தில் அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும்,தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 
இந்த வழக்கில் இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்து அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுவனை வெறித்தனமாக பலாத்காரம் செய்து படுகொலை செய்த கடற்படையினர் !

 
பாலியல் பலாத்காரத்திற்கு ஆறு வயதே ஆன தமிழ் சிறுவன் உட்படுத்தப்பட்டு,அவனை வெறித்தனமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டம் சம்பூர் எனும் பகுதியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த பகுதியில் நடைபெற்ற போருக்கு பிறகு தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர். அந்த கிராமத்தில் குகதாஸ் தர்சன் என்ற 6 வயது சிறுவனை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்த்திருந்தனர். அதன் அடிப்படையில் அந்த சிறுவனை தேடும் பணியில் இலங்கை காவல் நிலையத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
 
 
அவர்கள் நடத்திய தேடுதலின் போது சம்பூர் இலங்கை கடற்படை முகாம் அருகே இருக்கும் ஒரு பாழடைந்த கிணற்றில் ஒரு சிறுவனின் உடல் மிதப்பதாக தகவல் வெளியானது. அங்கு சென்று காவல் நிலையத்தினர் பார்த்தபோது, அது தொலைந்து போன தர்சன் என்றும் அந்த சிறுவன் காணாமல் போன அன்று, கடைசியாக இலங்கை கடற்படையினர்தான் அழைத்துச் சென்றார்கள் என்று நேரில் பார்த்த சிறுவர்கள் கூறினர்.
 
இலங்கை கடற்படையினர் ஆறு வயதே ஆன அந்த தமிழ் சிறுவனை ஓரின சேர்க்கைக்கு உள்ளாக்கி,அதன் பின்
தர்சனின் வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் போட்டு கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
நடைபெற்ற சம்பவத்தால் அந்த பகுதியில் மீண்டும் குடியேறியுள்ள தமிழகர்களிடம் அதிர்ச்சியும், அச்சமுசம் ஏற்பட்டுள்ளது.

புதியதாக உருவாக்கி இருந்த கட்சியின் பெயரை சகாயம் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவித்த இளைஞர்!

 
சகாயம் ஐ.ஏ.எஸ் தனக்கு அரசியல் களமிறங்க விருப்பம் இல்லை என்று அரசியலுக்கு நான் வரல! என்னை அரசியலுக்கு கூப்பிடாதீங்க! : சகாயம் ஐ.ஏ.எஸ்யிருந்த நிலையில், அவர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில், இளைஞர் ஒருவர் சகாயத்தின் முன்னிலையில் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.
 
நேற்று மாலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, கவிஞர் நந்தலாலா தலைமையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் வயல் கூட்டம் நடைபெற்றது.
 
 
இந்த கூட்டத்தில் பங்குகொண்டு பேசிய சகாயம் ஐ.ஏ.எஸ்., “இன்றைய இளைய சமுதாயத்தினர் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகம் என்பது மக்களுடைய அதிகாரம் என பொருள்படும். மக்களுக்கு கிடைத்த அதிகாரத்தை குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால், தற்போது மக்களுக்கு அதிகாரம் என்பது கேள்விக்குறியாகிறது. இளைஞர்கள் ஆடம்பரத்தை விடுத்து, தன்னலத்தை விரும்பாமல், பொதுநலத்தை பேண வேண்டும். அப்போதுதான் இந்த தேசம் மென்மேலும் வளரும்” என்பது உள்ளிட்ட பல்வேறு அவரது கருத்தினை கூறினர்
 
 
அப்போது இளைஞர் ஒருவர் சார், நீங்கள் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிய உங்கள் பேச்சைக் கேட்டேன். இந்த நாட்டில் நமக்கு சோறுபோடும் விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும் என சொன்னீங்க. அதிலிருந்து விவசாயிகளின் துயரை துடைக்க வருங்காலத்தில் ஒருவன் வருவான்னு சொல்லிக்கிறேன். அது யாருமில்லை நான்தான் சார்.
 
 
உங்க பேச்சைக்கேட்டு கட்சிக்கு பெயர் கூட மாணவர்கள் விவசாயக் கட்சி என்று முடிவு பண்ணிட்டேன்.. ஏன் இந்த பெயரை தேர்வு செய்தேன் என்றால், இந்த தேசத்தில் கல்விக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நாடு முன்னேறிவிடும். அதுதான் எனது குறிக்கோள் என்று அந்த இளைஞர் ஐ.ஏ.எஸ் சகாயதிடம் தெரிவித்துள்ளார்.

அரண்மனை 2 படத்தின் ஹைலட் எது? சுந்தர்.சி பேச்சு

கலக்கல் கதை இருக்கும், கலகலப்பான திரைக்கதை இருக்கும், சிரிக்க காமெடி இருக்கும், சீரியஸ் செண்டிமெண்ட் இருக்கும். இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் பிரதான அம்சமாக சேர்ந்துவிட்டது பேய்.

‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து மிரட்ட வரும் ‘அரண்மனை 2’வை பார்க்க பேய் மீது விழி வைத்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அதன் முன்னோட்டமாக படத்தின் இயக்குநர் சுந்தர்.சியையும் நடித்துள்ள நட்சத்திரங்களையும் ஒன்றிணைந்து பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிலிருந்து.

‘அரண்மனை’ இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது? சுந்தர்.சியிடம் கேட்டோம்.

“உண்மையிலேயே எந்த பிளானும் இல்லாமல்தான் இருந்தேன். ‘அரண்மனை’யில் பேய் படத்தின் மூடை ஆடியன்ஸ் கடைசி வரை ஃபீல் பண்ணவேண்டும் என்பதற்காக க்ளைமாக்ஸில் ஜன்னலில் பேய் வந்து நிற்பதுபோல் ஒரு சீன் வைத்திருப்பேன். அந்த சீனை பார்த்துட்டு செகண்ட் பார்ட் எப்ப எடுக்கப்போறீங்கன்னு எல்லோரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. வீட்டில் என் குழந்தைகளும் ‘எப்ப டாடி செகண்ட் பார்ட்?’ன்னு கேட்டாங்க. அப்போதான் செகண்ட் பார்ட் ஸ்கிரிப்ட்டுக்கும் பொறி தட்டியது. அதை டெவலப் பண்ண ‘அரண்மனை 2’ ஸ்டார்ட் ஆகிடுச்சு.”

மறுபடியும் ஹன்சிகாங்கறதிலும் முடிவா இருந்தீங்களா?

“கதை ரெடியானதும் முதல் போன் ஹன்சிகாவுக்குதான் அடிச்சேன். விஷயத்தை கேட்டுட்டு இந்த படத்திலும் கண்டிப்பா நான் இருப்பேன்னு நான் கேட்கறதுக்கு முன்னாடியே முந்திகிட்டு கால்ஷீட் புக் பண்ணிட்டாங்க. பார்ட் ஒன்னைவிட இரண்டு செம சூப்பரா வந்திருக்கு. சொல்லமுடியாது ‘அரண்மனை 3’கூட வர வாய்ப்பிருக்கிறது”

சித்தார்த், த்ரிஷா கேரக்டர் எப்படி அமைஞ்சிருக்கு?

“ம் சூப்பர். சித்தார்த் இந்த படத்துக்குள் வந்ததே எதேச்சையாகதான் நடந்தது. ஒருநாள் பேசிட்டு இருந்தபோது செகண்ட் பார்ட் ஐடியாவை சொன்னேன். உடனே நான் பண்றேன் சார்னு ரெடியாகிட்டார். முன்னணி ஹீரோக்கள் நடிக்க தயங்கற அளவுக்கான ஒரு கேரக்டர்தான். ஆனா ரொம்ப ஈடுபாட்டுடன் நடிச்சு கொடுத்திருக்கார். அதேமாதிரி த்ரிஷா. ரெண்டு பேருக்குமே இது முதல் பேய் படம். செமையா என்ஜாய் பண்ணி நடிச்சிருக்காங்க. ஒரு காட்சியில் த்ரிஷா ஆன்னு கத்தனும். தொண்டை கட்டுற அளவுக்கு தொடர்ச்சியா இரண்டு மணி நேரம் கத்தி நடிச்சிருக்காங்க. செம கிளாமராவும் வர்றாங்க”

காமெடி எப்படி வந்திருக்கு? “முதல்முறையா என் படத்தில் சூரி நடிச்சிருக்கார். டுபாக்கூர் சித்த மருத்துவர் கேரக்டர் அவருக்கு. சூரிக்காக 25 வருஷம் காத்திருக்கிற காதலியாக கோவை சரளா பின்னியிருக்காங்க. சரளாம்மா காமெடி பேய்னே சொல்லலாம். இவரோட அண்ணனா மனோபாலா நடிச்சிருக்கார்.”

படத்தின் ஹைலட் என்று எதை சொல்வீர்கள்?

“ஒரு அம்மன் பாட்டு. இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதிக்கு மத்த பாட்டு குத்து பாட்டெல்லாம் வரும். ஆனா படத்தில் ஒரு அம்மன் பாட்டு வேணும்னு சொல்லும்போடு அவரால் அதை பண்ண முடியுமான்னு சந்தேகம் வந்தது. ஆனா பிரமாதமா ஒரு அம்மன் பாட்டு போட்டு கொடுத்தார். அந்தப் பாடலை ஷூட் பண்றது பெரிய சவாலாகவே இருந்தது. 150 அடி உயர அம்மன் சிலை முன்னாடி 350 டான்ஸர், ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடிச்சாங்க. ஒவ்வொரு ஷாட் எடுக்கும்போதும் நாலு பேருக்காவது நிஜமாகவே சாமி வந்திடும். ரொம்ப மிராக்கிளாக இருந்த அனுபவம் புதுசா இருந்தது. இந்தப் பாட்டு படத்தின் ஹைலட்டா இருக்கும்” என்று கூறியுள்ளார்.

படம் பற்றி சித்தார்த்திடம் கேட்டபோது, “இந்தப்படத்தில் மூன்று வகையான பேய்கள் இருக்கு. சூரி, கோவை சரளா, மனோபாலா போன்ற காமெடி பேய்கள், ஹன்சிகா, த்ரிஷா, பூனம்பாஜ்வா என்கிற கவர்ச்சி பேய்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்னு டெக்னிஷன் பேய்கள் இருக்காங்க. நான் பேய் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை. ‘ஆயுத எழுத்து’ படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு நானும் த்ரிஷாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம். அந்தப்படத்தில் தாய்லாந்து கடற்கரையில் இருவரும் ஒரு பாட்டு சீனில் நடித்திருப்போம். சொல்லி வச்சது மாதிரி இந்தப்படத்திலும் அந்தக் கடற்கரையில் இருவருக்கும் ஒரு பாட்டு இருக்கு.” என்கிறார்.

ஹன்சிகா கூறுகையில், “சுந்தர்.சி சார் எப்ப படம் எடுத்தாலும் சரி கதை கேட்காமல் கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு அவர் டைரக்ஷன் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிகையில்தான் ‘அரண்மனை 2’ எடுக்கப்போறேன்னு அவர் சொன்னபோது ‘இது என்னோட படம் நான் இல்லாமல் ஷூட்டிங் போகக்கூடாதுன்னு உரிமையாக சொன்னேன். இதில் எனக்கு ‘மாயா..’ங்கற பாட்டு இருக்கு. வெரி நைஸ் சாங். சுந்தர் சாருடன் இது எனக்கு 4-வது படம். இதுவும் சூப்பர் ஹிட் ஆகும்” “சுந்தர்.சி படம்னாலே ஆடியன்ஸுக்கு ரொம்ப ஸ்பெஷல்தான். எனக்கும் இந்தப்படம் ஸ்பெஷல்தான். இந்தப்படத்தில் நடிச்சது எனக்கு புது அனுபவம். இதில் சில காட்சிகளில் செக்ஸியா வருவேன். செக்ஸி என்பதைவிட பியூட்டிஃபுல்லா காட்டிருக்காங்க என்றுதான் சொல்லணும்.”என வெட்க புன்னகை வீசுகிறார் த்ரிஷா.

சூரியிடம் கேட்டபோது, “காமெடியன்கள் எல்லோருக்குமே சுந்தர்.சி அண்ணன் படத்தில் நடிக்கணும்கிற ஆசை இருக்கு. எனக்குள் இருந்த அந்த ஆசை ‘அரண்ம்மனை 2’ மூலமாக நிறைவேறியிருக்கு. நிஜத்தில் என்னோட அக்காவாக நினைத்து மதிக்கும் கோவை சரளா என்னோட காதலியா நடிச்சிருக்காங்க. படத்தில் 25 வருஷம் கழித்து அவங்களை சந்திக்கும் போது ‘வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் உங்களை விட்டு போகலைன்னு என்னை பார்த்து அவங்க விடும் லுக்கில் ஆடியன்ஸிடமிருந்து அப்ளாஸ் அள்ளும்.”என்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு கூறுகையில், “ ‘அரண்மனை’யைவிட ‘அரண்மனை 2’ பிரமாண்டமா இருக்கணும்கிற முடிவோடதான் இந்த படத்தை தயாரித்திருக்கோம். புரொடியூஷர் டைரக்டராக இருபது வருஷத்துக்கும் மேலாக சுந்தர்.சி சார் இருப்பது, அவரோட மனைவியா நான் பெருமைப்படும் விஷயம். இந்தப்படத்தில் வரும் அம்மன் பாட்டை கேட்டுவிட்டு எனக்கு சிலிர்த்துவிட்டது. அந்த சிலிர்ப்பை அத்தனை ரசிகர்களும் அனுபவிக்கப்போவது நிச்சயம்” என்றார்.

தமிழிசை சொல்லிட்டாங்களேம்மா… தமிழகத்திற்கு மோடி வருவதால் திருப்புமுனை ஏற்பட போகுதாம் !

 
தமிழகத்திற்கு மோடி வருவதால் திருப்புமுனை ஏற்பட போகிறது என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை தமிழிசை ஏற்றி வைத்தார்.
 
அதன் பின்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
கோவை மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி 2ம்தேதி கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். மேலும் அன்று அங்கு பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
 
சட்டப்பேரவை தேர்தலை எதிர் கொள்ள பாரதீய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். 234 பேரவைத் தொகுதி களுக்கும் முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
 
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி, சென்னை வண்டலூர் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் நரேந்திர மோடி பேசினார். அது தமிழக அரசியலில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தது. 19 சதவீத வாக்குகளும், 2 இடங்களில் வெற்றியும் கிடைத்தது.
 
இந்நிலையில், மோடியின் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். வலிமையான கூட்டணியை பாரதீய ஜனதா கட்சி ஏற்படுத்தும்.
 
 
தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் 3 மாணவிகள் தற் கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
 
இதற்கு காரணமானவர்கள், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கல்லூரிகளின் நிலவரம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண் டும். சம்பவம் நடந்த பகுதிக்கு இதுவரை தமிழக அமைச்சர்கள் யாரும் நேரில் செல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார் .

குடியரசு தினவிழாவில் சுதந்திர தின வாழ்த்து சொன்ன பெண் அமைச்சர் : என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா..!

 
இந்தியா முழுவதும் 67-வது குடியரசு தினம் நேற்று சிறப்பாக கொண்டாடபட்டது. திரிபுரா மாநிலம் தர்மாநகரில் பிபிஐ மைதானத்தில் நடந்த குடியரசி தினவிழாவில் மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஜிதா நாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
 
அப்போது அவர், உங்கள் அனைவருக்கும் 67-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். குடியரசு தின வாழ்த்துக்கு பதில் அமைச்சர் சுதந்திர தின வாழ்த்து கூறியதால் விழா அரங்கில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் மத்தியில் கேலி சிரிப்பலை எழுந்தது. என்றாலும் அமைச்சர் பிஜிதாநாத் அதை கண்டு கொள்ளாமல் உரையாற்றினார். அப்போது அவர் மீண்டும் மீண்டும் 3 தடவை சுதந்திர தின விழா என்றே குறிப்பிட்டார்.
 
அமைச்சரின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தலைவர் கள் பெண் அமைச்சர்பிஜிதாநாத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்கா கூறுகையில், ‘‘கல்வியறிவு இல்லாத ஒருவரை அமைச்சர் ஆக்கியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசமைப்பு பற்றி அடிப்படை தெரியாதவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
 
திரிபுரா மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரினாள் காந்தி கூறுகையில், ‘‘குடியரசு தின விழாவுக்கும் சுதந்திர தின விழாவுக்கும் வித்தியாசம் தெரியாத பெண் அமைச்சருக்கு அமைச்சரவையில் பெரிய பொறுப்பு கொடுக்கப் பட்டிருப்பது சரியானது அல்ல. அமைச்சர் பிஜிதா தன் தவறுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்