Home Blog Page 59

தூத்துக்குடியில் பிரதமர் மோடி! ரூ.4,800 மதிப்பிலான திட்டங்களை அறிவித்து பேச்சு!

pm modi in thuthukkudi - 2026

வணக்கம். இன்று கார்கில் வெற்றித் திருநாள். நான் முதன்மையாக கார்கில் வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன், உயிர்த்தியாகிகளுக்கு என் சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.

நண்பர்களே, நான்கு நாட்கள் அயல்நாடுகள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு…… பகவான் இராமேஸ்வரனுடைய புனிதமான மண்ணில் நேரடியாக கால் பதிக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. அயல்நாடுகள் பயணத்தின் போது, பாரதம் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே வரலாற்றுப்பூர்வமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

பாரதம் மீது உலகின் அதிகரித்துவரும் நம்பிக்கை, பாரதத்தின் புதிய தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடையாளம் இது. இந்த தன்னம்பிக்கையோடு நாம், வளர்ச்சியடைந்த பாரதத்தைப் படைப்போம்…… வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

இன்றும்கூட, பகவான் இராமேஸ்வரன், அறுபடைவீட்டின் இரண்டாம் படைவீடாம் திருச்செந்தி நகருறையும் செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்களின் நல்லாசியோடு, தூத்துக்குடியில் வளர்ச்சிப்பணிகளின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு தமிழ்நாட்டை வளர்ச்சியின் சிகரங்களுக்குக் கொண்டு செல்லும் குறிக்கோள் தொடங்கப்பட்டது……
தொடர்ந்து அதன் சாட்சியாக தூத்துக்குடி ஆகிக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் இங்கே வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வெளிப்புற துறைமுக சரக்குப்பெட்டி முனையத்திற்கான அடிக்கல் நாட்டினேன். பல நூற்றுக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள திட்டங்களை அப்போது தான் தொடக்கி வைத்தேன். செப்டம்பரிலே புதிய தூத்துக்குடி சர்வதேச சரக்குப்பெட்டி முனையத்தை குடிமக்களுக்கு அர்ப்பணித்து வைத்தேன்.

இன்று ஒரே முறையிலேயே, 4,800 கோடி ரூபாய் பெறுமானமுள்ள திட்டங்கள் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படவும் இருக்கின்றன, அடிக்கல் நாட்டப்படவும் இருக்கின்றன. இவற்றில் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே துறையின் திட்டங்களோடு, எரிசக்தித் துறைசார்ந்த முக்கியமான முன்னெடுப்புகள் இருக்கின்றன. நான் உங்கள் அனைவருக்கும், தமிழ்நாட்டின் மக்களுக்கும் இதன் பொருட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி…… இவை எந்த ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பு போன்றவை. இந்த பதினோரு ஆண்டுகளில், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் துறைகளின் மீது நமது முனைப்பான கவனம் நமக்கு என்ன தெரிவிக்கிறது என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி நமக்கு எத்தனை முதன்மையானது என்பதைத் தான். இன்றைய அனைத்துத் திட்டங்களும், இணைப்புத்திறன், மாசேற்படுத்தா எரிசக்தி மற்றும் புதிய வாய்ப்புகள் ஆகியவற்றின் மையப்புள்ளியாக, தூத்துக்குடியையும், தமிழ்நாட்டையும் உருவாக்கும்.

நண்பர்களே, தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடியின் மண்ணும், இங்கிருக்கும் மக்களும், பலநூற்றாண்டுக்காலமாக, பல நூற்றாண்டுகளாக தன்னிறைவான, சக்திபடைத்த பாரதத்திற்காகத் தங்களுடைய பங்களிப்பை அளித்து வந்திருக்கிறார்கள். இதே மண்ணில் தான் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களைப் போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டிருந்த காலத்திலேயே கூட, கடல்வழி வாணிபத்தின் சக்தியைப் புரிந்தவர் அவர்…..
ஆழ்கடல்களின் மீது சுதேசிக் கப்பலைச் செலுத்தி, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சி அவர்கள்.

இந்த மண்ணில் தான், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துக்கோன் போன்ற மாமனிதர்கள், சுதந்திரமான, வல்லமைமிகு பாரதம் படைக்கும் கனவைக் காணச் செய்தார்கள்.

சுப்பிரமணிய பாரதி போன்ற தேசியக்கவியும் கூட இங்கே அருகே தான் பிறந்தார். நீங்கள் அனைவரும் அறிவீர்கள்……. சுப்பிரமணிய பாரதிக்கு எத்தனை பலமான உறவு தூத்துக்குடியோடு இருக்கிறதோ, அதே அளவு பலமான உறவு என்னுடைய நாடாளுமன்றத் தொகுதியான காசியோடும் இருக்கிறது. காசி தமிழ் சங்கமம் போன்ற ஏற்பாடுகள் வாயிலாக நமது கலாச்சார மரபுகளை, நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டு வருகிறோம்.

நண்பர்களே, கடந்த ஆண்டு தான், நான் தூத்துக்குடியின் பிரபலமான முத்துக்களை, பில் கேட்ஸுக்கு பரிசாக அளித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவருக்கு அந்த நல்முத்துக்கள் மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிநாட்டு முத்துக்கள்….. ஒருகாலத்தில் உலகம் முழுவதிலும் பாரதத்தின் பொருளாதார சக்தியின் அடையாளமாக இருந்து வந்தது.

நண்பர்களே, இன்று நாம் நமது முயற்சிகளின் காரணமாக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கினை முன்னெடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பிரிட்டன் மற்றும் பாரதத்திற்கு இடையே நடந்த FTA, தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் கூட, இந்த தொலைநோக்கிற்கு வேகம் அளிக்கிறது.

இன்று பாரதத்தின் வளர்ச்சியிலே….. உலகம் தனது வளர்ச்சியைக் காண்கிறது. இந்த ஒப்பந்தமும் கூட, பாரதத்தின் பொருளாதாரத்திற்குப் புதிய பலத்தை அளிக்கும். இதனால், உலகத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஆகும் நமது வேகம் இன்னும் விரைவாகும்.

நண்பர்களே, இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிட்டனில் விற்பனையாகும் 99 சதவீத பாரதநாட்டுப் பொருட்களின் மீது எந்தவொரு வரியும் விதிக்கப்படாது. பிரிட்டனில் பாரதநாட்டுப் பொருட்கள் விலைமலிவானவையாக இருக்கும், அங்கே அவற்றுக்கான தேவை அதிகரிக்கும், அதே வேளையில் இங்கே பாரதத்திலே அந்தப் பொருட்களை உருவாக்க அதிக வாய்ப்புகள் உருவாகும்.

நண்பர்களே, பாரதம்-பிரிட்டன் நாடுகளின் தடையில்லா வணிக ஒப்பந்தம்….. நம் நாட்டு இளைஞர்களுக்கு, நமது சிறுகுறுநடுத்தரத் தொழில்துறைக்கு, நம்முடைய ஸ்டார்ட் அப்புகளுக்கு மிகுந்த ஆதாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதனால் தொழில்துறையாகட்டும், நமது மீனவர்களாகட்டும், அல்லது ஆய்வுகள் மற்றும் புதுமைகள் படைத்தலாகட்டும், அனைவருக்கும் ஆதாயங்கள் ஏற்படும்.

நண்பர்களே, இன்று மேக் இன் இண்டியா, இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் மிஷன் மேனுஃபேக்சரிங், இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்கும் பாரத அரசு அதிக வலு சேர்க்கிறது. ஆப்பரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவில் தயாரிப்போம் குறிக்கோளின் பலத்தைக் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை மண்ணோடு மண்ணாக்கியதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களினி பெரும் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், இன்றும் கூட, பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களைத் தூங்க விடாமல் செய்திருக்கிறது.

நண்பர்களே, நமது தமிழ்நாட்டின் ஆற்றல்வளத்தை முழுமையாகப் பயன்படுத்த, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலே நாங்கள் துறைமுகக் கட்டமைப்பை உயர்தொழில்நுட்பம் உடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதோடு கூடவே, விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே துறை ஆகியவற்றுக்கு இடையேயும் கூட, பரஸ்பர ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்.

இன்று தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட முனையத்தின் தொடக்க விழா இந்தத் திசையில் மேலும் ஒரு பெரிய முன்னெடுப்பாகும். 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த முனையம் இப்போது, ஒவ்வோர் ஆண்டும், 20 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகளை வரவேற்கும். முன்பு, ஆண்டுக்கு வெறும் மூன்று இலட்சம் பயணிகளை மட்டும் கையாளும் திறன் கொண்டதாக இருந்தது இது.

நண்பர்களே, வரவிருக்கும் காலத்தில், தேசதின் மேலும் பல வழிகள் வரை தூத்துக்குடியின் இணைப்பு அதிகரிக்கும், அப்போது இங்கிருக்கும் வியாபாரத்துக்கும், தொழில்களுக்கும் ஊக்கம் கிடைக்கும். தமிழ்நாட்டின் பெருநிறுவன பயணங்கள், கல்வித்துறை மையங்கள், உடல்நல கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இதனால் ஆதாயங்கள் உருவாகும். இதோடு கூடவே, இந்தப் பகுதியில் சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகளுக்கும் புதிய ஆற்றல் கிடைக்கும்.

நண்பர்களே, இன்று நாம் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய சாலை கட்டமைப்புகளையும் கூட மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறோம். கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் சாலைகள், இரண்டு பெரிய வளர்ச்சிப் பகுதிகளை சென்னையோடு இணைக்க இருக்கின்றன. இந்தச் சாலைகள், டெல்டா மாவட்டங்களைச் சென்னையோடு சிறப்பாக இணைக்கும் பணியை ஆற்றும்.

நண்பர்களே, இந்தத் திட்டங்களின் உதவியோடு, தூத்துக்குடி துறைமுகத்தின் இணைப்பும் கூட, இன்னும் சிறப்பாக ஆகியிருக்கிறது. இந்தச் சாலைகள், இந்த மொத்தப் பகுதியின், வாழ்க்கையைச் சுலபமாக வாழும் தன்மையை மேலும் சிறப்படையச் செய்யும். இதுகூடவே, வர்த்தகம், வேலைவாய்ப்புக்குமான புதிய பாதையும் திறக்கும்.

நண்பர்களே, நமது அரசாங்கம், தேசத்தின் ரயில்வே துறையை தொழில்துறை வளர்ச்சி மற்றும் தற்சார்பு பாரதத்தின் உயிர்நாடியாக கருதுகிறது. ஆகையால் தான், கடந்த 11 ஆண்டுகளிலே, தேசத்தின் ரயில்வேதுறைக் கட்டமைப்பு நவீனமயமாக்கம் என்ற புதிய போக்கைக் கடந்து வருகிறது. தமிழ்நாட்டின் ரயில்வே துறை கட்டமைப்பு, நவீனமயமாக்கல் இயக்கத்தின் ஒரு முக்கியமான மையமாகும்.

நமது அரசாங்கம் அமுத பாரதம் நிலையங்கள் திட்டத்தின்படி, தமிழ்நாட்டின் 77 நிலையங்களின் மறுமேம்பாட்டை மேற்கொண்டு வருகிறது. நவீன வந்தே பாரத் ரயில்கள் வரிசையில், தமிழ்நாட்டினி மக்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்து வருகிறது. தேசத்தின் முதல் மற்றும் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்கு ரயில் பாலமான பாம்பன் பாலமும் கூட, தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாம்பன் பாலத்தால் வியாபாரம் செய்வதில் சுலபத்தன்மை மற்றும் பயணிப்பதில் சுலபத்தன்மை இரண்டுமே அதிகரித்திருக்கிறது.

நண்பர்களே இன்று தேசத்தில் மிகப்பெரிய மற்றும் நவீன கட்டமைப்புகளை மேம்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்று வருகிறது. சில நாட்கள் முன்பாகத் தொடங்கப்பட்ட ஜம்மு கஷ்மீரத்தின் சினாப் பாலம், பொறியியல் அற்புதமாக கருதப்படுகிறது. இந்தப் பாலம் காரணமாக முதன்முறையாக ஜம்மு பகுதி, ஸ்ரீநகரோடு இணைக்கப்பட்டது.

இதைத் தவிர தேசத்தின் மிகவும் நீளமான பாலம் அடல் பாலம் உருவாக்கப்பட்டது….. அசாமிலே போகிபீல் பாலம் கட்டப்பட்டது. 7 கிலோம்கீட்டருக்கும் அதிக நீளம் ஆன சோன்மர்க் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டது…. இப்படி எத்தனையோ திட்டங்களை பாரத அரசு நிறைவேற்றி இருக்கிறது. இவை அனைத்தும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கிறது.

நண்பர்களே, இன்றும்கூட, தமிழ்நாட்டிற்காக நாம் எந்த ரயில்துறைத் திட்டங்களை அர்ப்பணித்திருக்கிறோமோ, இவற்றால் தென் தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆதாயங்கள் ஏற்படும். மதுரை-போடிநாயக்கனூர் வழிப்பாதை மின்மயமாக்கப்பட்ட பிறகு இப்போது, இங்கே வந்தே பாரத் போன்ற ரயில்கள் பய்ணிக்கும் பாதை திறக்கப்பட்டு விட்டது. இந்த ரயில்வே திட்டங்கள் தமிழ்நாட்டின் வேகத்தை…. மற்றும் அதன் வளர்ச்சியின் வீச்சு இரண்டுக்குமே……….. ஒரு புதிய சக்தியை அளிக்க இருக்கிறது.

நண்பர்களே, இன்று இங்கே 2000 மெகாவாட் கூடங்குளம் அணுமின்சக்தித் திட்டத்திலிருந்து மின்சாரத்தைக் கொண்டு செல்லும் திட்டங்களுக்கான அடித்தளமும் நாட்டப்பட்டது. சுமார் 550 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகிவரும் இந்த அமைப்பு, வரவிருக்கும் ஆண்டுகளில் தேசத்திற்குத் தூய்மையான எரிசக்தியை அளிக்கும் பெரிய பங்களிப்பை ஆற்ற இருக்கிறது.

இந்த எரிசக்தி, பாரதத்தை உலக எரிசக்தி இலக்குகளையும், சுற்றுச்சூழல் உறுதிப்பாடுகளையும் நிறைவேற்றும் ஊடகமாக ஆகும். மின்சாரதி தயாரிப்பு அதிகரிக்கும் போது, தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு, உள்ளூர் நுகர்வோர் ஆகிய அனைவருக்கும் இதனால் இலாபம் ஏற்படும்.

நண்பர்களே, தமிழ்நாட்டில் பிரதம மந்திர் சூரியசக்தி வீடு இலவச மின்னாற்றல் திட்டமும் கூட, விரைவான கதியிலே செயல்பட்டு வருகின்றது. இதுவரை சுமார் ஒரு இலட்சம் விண்ணப்பங்கள் வந்து விட்டன, 40,000 சூரியசக்தி கூரை மீதான கருவிகள் பொருத்தப்பட்டு விட்டன. இந்தத் திட்டம் இலவசமானது, மாசேற்படுத்தா மின்சக்தியை அளிப்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே, தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழ்நாடு என்ற கனவு….. இவை நமது முக்கியமான உறுதியாகும். நாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே தொடர்ந்து முதன்மையை அளித்து வந்திருக்கிறோம்.

கடந்த தசாப்தத்திலே, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு என்ற வகையிலே தமிழ்நாட்டிற்கு 3 இலட்சம் கோடி ரூபாயை அனுப்பியிருக்கிறது. இந்தத் தொகை, கடந்த யுபிஏ அரசாங்கம் வாயிலாக அளிக்கப்பட்ட தொகையோடு ஒப்பீடு செய்யும் போது மூன்று மடங்குக்கும் அதிகமானது.

இந்தப் பதினோரு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பதினோரு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்கின்றன. முதன்முறையாக, கரையோரப் பகுதிகளின் மீன்பிடித் துறையோடு தொடர்புடைய சமூகங்களுக்கு, எந்தவொரு அரசும் இத்தனை கரிசனத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தியதில்லை. நீலப் புரட்சி வாயிலாக நாங்கள் கரையோரப் பொருளாதாரத்திற்கு விரிவாக்கம் அளித்து வருகிறோம்.

நண்பர்களே, தூத்துக்குடியின் இந்த மண், ஒரு புதிய புரட்சியின் சாட்சியாக ஆகிவருகிறது. இணைப்பு, மின்பரிமாற்றம், கட்டமைப்பு என இந்த அனைத்துத் திட்டங்களும், வளர்ச்சியடைந்த தமிழ்நாடு-வளர்ச்சியடைந்த பாரதத்தின் பலம்வாய்ந்த ஆதாரங்களாக ஆகவிருக்கின்றன. நான் மீண்டுமொரு முறை, தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும், இந்த அனைத்துத் திட்டங்களுக்குமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள்.


பிரதமர் நரேந்திர மோடியின் உரை தமிழில் மொழிபெயர்த்து குரல் கொடுத்தவர்: ராமஸ்வாமி சுதர்ஸன்


ஹிந்துத்துவமே உண்மையில் சரியான கோட்பாடு!

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

பாரத தேசத்தின் மீது தாக்குதல் நடத்த நினைப்பவர்கள் ஹிந்துக்களின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதனைத் தெளிவாக அறிய முடிகிறது. பாரத தேசத்தின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள விரும்பாத தேசத்துரோகிகள் வளர்ச்சிக்குக் காரணமானவர்களை ‘ஹிந்துத்துவர்கள்’ என்று முத்திரை குத்தி கலவரம் விளைவிக்கிறார்கள்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அனைத்து மதங்களுக்கும், குலங்களுக்கும், ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பாரத தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் பயன்படும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து வருகிறோம். பகை நாடுகளுக்குச் சரியான புத்தி புகட்டிவரும் அதே வேளையில், ‘எங்களுடையது முன்னேறிய நாடு’ என்று வல்லரசுகளுக்கு உறுதியாக எடுத்துக் கூறும் துணிச்சல் நிறைந்த பாரதத்தை கவனித்து வருகிறோம். இப்படிப்பட்ட உயர்வுக்குக் காரணமான தலைமையை ‘ஹிந்துத்துவம்’ என்று குற்றம் சாட்டுவது இடதுசாரிகளுக்கும், எதிர்கட்சி அரசியல் வாதிகளுக்கும் வழக்கமாகி விட்டது.  உண்மையில் முன்னேற்றமே ‘ஹிந்துத்துவம்’ என்றால், பாரத தேசம் ஹிந்துத்துவ தேசமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.

சுதந்திரத்திற்கு முன்பு மட்டுமின்றி, சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட வஞ்சனைக்கும் வன்முறைக்கும் ஆளானது ஹிந்து மதமே. அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் வெளிவந்த ‘சங்கூர் பாபா’ வழக்கு நம் தேசத்தில் மதமாற்றக் கும்பலின் கொடூரம் பல பத்தாண்டுகளாக எத்தனை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது.

ஹிந்து பாபாக்களின் வேடத்திலும், பக்தர்களின் வேடத்திலும் பிற மதத்தவர் செய்யும் சதித் திட்டங்களும், வன்முறைக் கொடூரங்களும், வியூகங்களும் ஹிந்துக்களை மத மாற்றம் செய்வதும், பாரத தேசத்தைத் துண்டாடுவதுமே அவர்களின் இலக்காக இருப்பதைப் பறை சாற்றுகின்றன. பொறுமையும், சமரசமும், இணைந்து வாழ்வதும் இயல்பாகக் கொண்ட ஹிந்துக்களின் உதார குணத்தையும், அப்பாவித்தனத்தையும் அந்தத் தீயவர்களான துஷ்டர்கள் வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஹிந்துக்களின் ஊர்வலங்களில் கல்லெறிவது, பக்தர்கள் காவடிகளைச் சுமந்து காலில் செருப்பின்று நடந்து செல்லும் பாதையில் கண்ணடித் துண்டுகளைப் போடுவது போன்ற தாக்குதல்கள் பாரத தேசத்தில் பல இடங்களில் நடந்து வருவதைக் காண முடிகிறது.

பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும் ஹிந்துக்களின் மீது கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதேபோல், இந்தியாவின் மேற்கு வங்கம், காஷ்மீர், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஹிந்து விரோதிகளின் கொடுஞ்செயல்கள், தலைவிரித்தாடுகின்றன.

இச்செயல்கள் ஹிந்து மதத்தின் மீது மட்டுமின்றி பாரத தேசத்தைத் துண்டாடும் நோக்கதோடுதான் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் தேச ஒருமைப்பாடு ஹிந்துத்துவ கொள்கைகளால் மட்டுமே சாத்தியம் என்பது நிரூபணமாகிறது.

யோகம், தத்துவம், ஆயுர்வேதம், கலைகள், அமைதியான சுபாவம் போன்ற அற்புதங்கள் பலவற்றைத் தன்னில் கொண்டுள்ள ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்வது அர்த்தமற்றது. ஹிந்துக்களை ஜாதியின் பெயராலும் குலத்தின் பெயராலும் முன்பு பிரித்ததும், இன்று பிரிப்பதும் ஹிந்து விரோதிகளே.

அரசியல் ஆதாயத்திற்காக இன்று சில அரசியல் கட்சிகள் குலங்களையும் ஜாதிகளையும் கணக்கிட்டு மக்களைத் தூண்டி வருகின்றன. உயர்சாதியினரை மதமாற்றம் செய்தால் அதிகத் தொகை தருவதாகவும், பிற ஜாதியினரை மதம் மாற்றினால் குறைந்த தொகை தருவதாகவும் கூறி வேற்றுமை காட்டுவது மதமாற்றும் கும்பல்களே. இந்த உண்மைகள் ஹிந்து விரோதிகளின் கண்ணில் படவில்லை போலும்.

‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஹிந்து பெண்கள் வஞ்சிக்கப்பட்டு வரும் கசப்பான உண்மையை ஹிந்துக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றே தோன்றுகிறது. ஹிந்துத்துவத்தோடு ஒன்றிணையாவிட்டால் தம் இருப்புக்கும் தேசத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து விளையும் என்ற உண்மையை ஒவ்வொரு ஹிந்துவும் உணரவேண்டும்.

பாரத தேசத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்பும் பிற  மதத்தவரும் ஹிந்துத்துவ கோட்பாட்டை விரும்ப வேண்டும். ஏனென்றால், இந்தக் கோட்பாட்டில் அவர்களுடைய மதத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் வளர்ச்சியும் கூட அடங்கி உள்ளது என்ற உண்மை சற்று யோசித்தால் புரியவரும்.

பதவியும், அதிகாரமும் கிடைக்கவில்லை என்ற ஆத்திரம், கொள்ளையடிப்பதற்கும் அழிவுகளை ஏற்படுப்படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவையெல்லாம் சேர்ந்து ஹிந்துக்களின் மீது வெறுப்பாகவும், அரசாங்கத்தின் மீது பகையாகவும் வெளிப்படுகின்றன.

ஹிந்துத்துவ ஆட்சியாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் போன்ற நேர்மையும் நீதியும் உள்ள மாநிலங்களில் வஞ்சகர்களும்  தீவிரவாதிகளும் அடையாளம் காட்டப்படுவதும், ஊழல்வாதிகளின் ஆட்டம் அடங்கிப் போவதும், அனைத்து மத மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதும், வெளிப்படையாகவே காணமுடிகிறது.

இத்தனையும் பார்த்த பின்னரும் ‘ஹிந்து விரோதம்’ என்பது தேவைதானா? வளர்ச்சியை நோக்கி தேசத்தை நடத்தும் தலைமையின் மேல் குற்றம் சாட்டுவது விவேகம்தானா?

மதமாற்றம் என்பதையே அறியாமல், அமைதியையும் பொறுமையையும் இயல்பாக கொண்ட ஹிந்து மதத்தை விட உயர்ந்ததும் உண்மையானதும் உலகில் வேறொன்று  உள்ளதா?

(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஆகஸ்ட், 2025)


தமிழகத்தில் நலத்திட்டப் பணிகள்; தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி!

pm modi in maldives - 2026

இங்கிலாந்து, மாலத்தீவு பயணம் முடிந்து நேராக தாய்நாட்டில் பிரதமர் மோடி! தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வரும் பிரதமர் மோதி ஜியை தமிழகம் வரவேற்கிறது!

நேற்று மாலத்தீவில் பாரதத்தின் உதவியுடன் கட்டப்பட்ட பாதுகாப்பு அமைச்சக கட்டடத்தை மாலத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் சேர்ந்து பாரதப் பிரதமர் திறந்து வைத்தார்!

‘கெட் அவுட் மோடி’ என்று ஆரம்பித்த முய்சு, சீனாவுக்கு சாமரம் வீசினார். பலனில்லை. துருக்கி எர்டோகனுக்கு சாமரம் வீசினார். பலனில்லை. முடிவில் ‘கெட் அவுட் மோடி’ என்ற வாசகம் ‘வெல்கம் மோடி’ என்று ஆகியிருக்கிறது.

ஏற்கனவே ருபே கார்டுகளை ஏற்று வந்த மாலத்தீவு இனி இந்திய ரூபாயை ஏற்கும் என்கிறார்கள். இலங்கையிலும் அதே நிலைமை – இந்திய ரூபாய்க்கு வரவேற்பு.

நேபாளத்தில் கோவிலுக்குள் மாற்று மத மைனோவை அனுமதிக்காததால், நேபாளத்துடனான உறவைக் கெடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி. இன்று நேபாளம் கம்யூனிச நாடு. பாக் – சீன ஆதரவு நாடு ஆகியிருக்கிறது. பாரதத்துக்கு தலைவலியாக இருக்கிறது நேபாளம்.

அதே வேளையில், தன்னை அவமதித்த மாலத்தீவு எந்த துவேஷம் பாராட்டாமல், அந்த நாட்டை சீன – பாக் – துருக்கி வலையில் விழாமல் மீண்டும் பாரதத்தின் பக்கம் கொண்டு வந்திருக்கிறார் மோதிஜி. 

இதனிடையே பிரதமர் மோடியை தமிழகத்துக்கு வரவேற்று சமூகத் தளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன. அவற்றில் ஒன்று…

இன்று இங்கிலாந்து,மாலத்தீவு நாடுகளுக்கு சென்று சிறிதும் ஓய்வின்றி நாட்டு மக்களின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு கீழ் கண்ட திட்டங்களவு துவக்கி வைக்க/அடிக்கல் நாட்ட தமிழகம் வருகிறார் நமது மோடி ஜி அவர்கள்.

ரூ.4,800 கோடியில் மத்தியஅரசின்திட்டங்களை அறிவிக்கிறார்.

தூத்துக்குடி விமானநிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். இன்று 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

இதுமட்டுமல்லாமல்,தமிழகத்தில், மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.

தஞ்சாவூர்விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் 2-ம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் ரூ.2,357 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டம்

ரூ.200 கோடி மதிப்பில் ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ள தூத்துக்குடி துறைமுகச் சாலை

ரூ.99 கோடியில் மதுரை- போடிநாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில் பாதை

ரூ.650 கோடியில் நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில் பாதைரூ.283 கோடியில் ஆரல்வாய் மொழி – நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில் பாதை என, சுமார் ரூ.4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.

மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் அலகு-3 மற்றும் அலகு 4-ல் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக, ரூ.548 கோடியில் மின்பரிமாற்ற அமைப்புக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்திற்கு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பல கோடி ரூபாய் திட்டங்களை அள்ளித் தரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு, தமிழகமக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக தமிழகம் வரும் மாண்புமிகு பாரதப்பிரதமர் உலகம் போற்றும் உத்தமர் மோடிஜி அவர்களை தமிழக மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.!

தமிழகம் வரும் பிரதமர் மோடி; இதெல்லாம் நடக்குமா? ஆவலில் மக்கள்!

pm modi in rameswaram meeting - 2026

இன்று தூத்துக்குடியில் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைக்கும் பிரதமர் சிறப்பு ரயில்களாக இயங்கும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருவனந்தபுரம் வடக்கு தாம்பரம் சிறப்பு ரயில்களை தினசரி ரயில்களாக நிரந்தரமாக இயக்க அறிவிப்பாரா என தென்மாவட்ட ரயில் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று திறந்து வைத்​து, ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணி​களை தொடங்​கிவைக்​கிறார்.

தூத்​துக்​குடி​யில் சர்​வ​தேச தரத்​தில் ரூ.452 கோடி​யில் விரிவாக்​கம் செய்​யப்​பட்​டுள்ள விமான நிலை​யத்​தின் திறப்பு விழா இன்று (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது.

பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​று, விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை திறந்​து ​வைத்​து, நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கிறார். இதற்​காக மாலத்​தீ​வில் இருந்து இந்​திய விமானப் படைக்கு சொந்​த​மான தனி விமானத்​தில் இன்று இரவு 7.50 மணி​யள​வில் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​துக்கு பிரதமர் வரு​கிறார். அவருக்கு முக்​கியப் பிர​முகர்​கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை பிரதமர் மோடி திறந்​து​வைத்த பின்​னர், செட்​டி​நாடு கட்​டிடக் கலையை பிர​திபலிக்​கும் வகையில் அமைக்​கப்​பட்​டுள்ள விமான நிலைய பயணி​கள் முனை​யம் உள்​ளிட்ட இடங்​களைப் பார்​வை​யிடு​கிறார்.

பின்​னர், விமான நிலைய வளாகத்​தில் நடை​பெறும் விழா​வில் கலந்து கொண்​டு, தமிழகத்​தில் ரயில்வே துறை சார்​பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்​பிலான பணி​கள், தேசிய நெடுஞ்​சாலைத் துறை சார்​பில் முடிக்​கப்​பட்​டுள்ள ரூ.2,557 கோடி மதிப்​பிலான பணி​களை திறந்து வைக்​கிறார்.

கூடங்​குளம் அணுமின் நிலை​யத்​தில் ரூ.548 கோடி​யில் 3 மற்​றும் 4-வது உலை​யில் இருந்து மின்​சா​ரத்தை வெளி​யேற்​று​வதற்​காக உள்ள மின் பரி​மாற்ற அமைப்பு பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார். மொத்​தம் சுமார் ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணிகளை பிரதமர் தொடங்​கி​வைத்​துப் பேசுகிறார்.

இந்த விழாவில் பிரதமர் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைப்பாரா என தென் மாவட்ட வரை பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பல ஆண்டுகளாக வாரம் ஒரு முறை சிறப்பு ரயிலாக இயங்கும் விரைவு ரயில் தினசரி ரயிலாக நிரந்தரமாக இயக்க வேண்டும்.

திருவனந்தபுரம் வடக்கு முதல் தாம்பரம் வரை சிறப்பு ரயிலாக முதலில் வாரம் இரு முறை இயக்கப்பட்டு பிறகு வாரம் ஒரு நாளாக இயக்கப்பட்ட ரயில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கேரளா தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்த இந்த ரயில் நிரந்தரமாக தினசரி ரயிலாக இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த இரு ரயில்களையும் தினசரி ரயில்களாக இயக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் வர்த்தகர்கள் பொதுமக்கள் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கொல்லம் திருநெல்வேலி கொல்லம் மதுரை இடையே புதிய மெமோ ரயில்களையும் இயக்கவும் கோட்டயத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் வழியாக ஈரோடு இயக்க உள்ள ரயிலை விரைவில் அறிவிக்கவும், ஏற்கனவே மீட்டர் கேஜ் வழித்தடத்தில் இயங்கிய கொல்லம் செங்கோட்டை கோயம்புத்தூர் தினசரி ரயிலை மீண்டும் இயக்கவும் ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தப் புதிய ரயில்களில் ஏதாவது ஒரு சில ரயில்கள் ஆவது இயக்கப்பட பிரதமர் முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடிப் பூர விழா; ஐந்து கருட சேவை சிறப்பு!

srivilliputhur five garuta sevai - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ஐந்து கருட சேவையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் மண்டபங்களுக்கு எழுந்தருள்கின்றனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கருட கொடியேற்றம் நடைபெற்றது.

முதல் நாளன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் 16 வண்டி சப்பரத்தில் 4 ரத வீதிகளில் உலா வந்தனர். ஜூலை 24-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவையும், நடைபெற்றது . ஜூலை 26-ம் தேதி சயன சேவையும் ,28-ம் தேதி காலை 9:05 மணிக்கு முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

வியாழன் அன்று நிகழ்ந்த ஐந்தாம் நாளில் காலை மங்களாசாசனம் இரவுஐந்து கருடசேவை நடந்தது. காலை 10 மணிக்கு பெரியாழ்வார் ஆடிப்பூர பந்தலுக்கு எழுந்தருள அங்கு சுந்தரராஜபெருமாள், ஸ்ரீனிவாசபெருமாள், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள்-ரெங்கமன்னார் ஆகியோருக்கு மங்களாசாசனம் நடந்தது.

மாலையில் அனைத்து பெருமாள்களுக்கும் நவகலச திருமஞ்சனம் நடந்தது. இரவு 10 மணிக்கு ஐந்துகருட சேவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றுசுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகம் கேரளா ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வரும் திங்கட்கிழமை நடைபெறும் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது

நவீன தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’!

captain prabakaran re release - 2026

நவீன தொழில்நுட்பத்தில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’ ; ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ ரீ ரிலீஸ் ஆகஸ்ட் 22-ல்  நவீன தொழில்நுட்பத்தில் வரவிருக்கிறது.

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் கேப்டன் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வாழ்நாள் முழுவதும் மக்கள் அவரை அன்புடன் அழைக்கும் ‘கேப்டன்’ என்கிற ஒரு அற்புதமான பெயரையும் அவருக்கு பெற்று தந்தது.. 

‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும்  ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது..  ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்..

கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்,  தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ், இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.வி.உதயகுமார்,  அரவிந்த்ராஜ் மற்றும் பேரரசு  ஆகியோர் கலந்து கொண்டனர். 

இப்படத்தை வெளியிடும் ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம், கேப்டனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பான மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தனர்.

கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

82 வயதில் சபரிமலைக்கு நடந்து சென்ற இடதுசாரி முதலமைச்சர்!

V S Achuthanandan - 2026

82 வயதில் சபரிமலைக்கு நடந்து சென்ற ஒரு இடதுசாரி முதலமைச்சர் அச்சுதானந்தன்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          வேலிக்கக்காத்து சங்கரன் அச்சுதானந்தன் (20 அக்டோபர் 1923 – 21 ஜூலை 2025), தோழர்களால் பாசத்துடன் VS என்றும் அழைக்கப்படுபவர். இவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அவர் 2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராக இருந்தார். 82 வயதில், அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். ஒரு மாநில முதல்வராகப் பதவி வகித்தவர்களில் மிக வயதானவர். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (மார்க்சிஸ்ட்) இணைந்திருந்தார். 2016 முதல் 2021 வரை கேரள நிர்வாக சீர்திருத்தங்களின் தலைவராக மாநில அமைச்சரவை அந்தஸ்துடன் பணியாற்றினார். அவர் 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார், இது கேரள சட்டமன்றத்தில் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

          அச்சுதானந்தன் 1985 முதல் ஜூலை 2009 வரை சிபிஐ(எம்) பொலிட்பீரோ உறுப்பினராக இருந்தார், பின்னர் அவரது சித்தாந்த மனப்பான்மை காரணமாக கட்சியின் மத்திய குழுவிற்கு மீண்டும் நியமிக்கப்பட்டார்.

          முதலமைச்சராக அச்சுதானந்தன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பல ஏக்கர் நிலத்தை திரும்பப் பெறுவதற்காக மூணாரில் எடுத்த இடிப்பு நடவடிக்கை;  கொச்சியில் நீண்ட காலமாக இழந்த சாலையின் பகுதிகளை மீட்டெடுக்கும் எம்.ஜி. சாலை இடிப்பு நடவடிக்கை; திரைப்பட திருட்டுக்கு எதிரான திருட்டு எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் மாநிலத்தில் லாட்டரி மாஃபியாவுக்கு எதிரான அவரது போராட்டம் ஆகியவை அடங்கும். ஊழல் குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமைச்சர் ஆர். பாலகிருஷ்ண பிள்ளையை தண்டிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மாநிலத்தில் இலவச மென்பொருளை ஊக்குவிப்பதிலும், குறிப்பாக மாநிலத்தின் பொதுக் கல்வி முறையில் இலவச மென்பொருளை ஏற்றுக்கொள்வதிலும் அச்சுதானந்தன் முன்னிலை வகித்தார்.

2016 எண்டோசல்பான் திருவனந்தபுரம் போராட்டம்

          கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் மாநில அரசு நிறுவனத்திற்குச் சொந்தமான முந்திரித் தோட்டங்களில், கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் வான்வழியாக ஒரு பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு வந்தது. எண்டோசல்பான் என்ற அந்த மருந்தால் பூச்சிகள் எந்த அளவுக்கு அழிந்தன என்று தெரியவில்லை, ஆனால் அந்தப் பகுதி மக்களின் வாழ்நிலை வெகுவாகச் சீர்குலைந்தது. காற்றிலும் மண்ணிலும் நீரிலும் கலந்த அந்த மருந்து மனிதர்களின் உடலில் ஊடுருவி, குழந்தைகள் ஊனத்துடன் பிறந்தார்கள், பெண்கள் புற்று நோயால் தாக்கப்பட்டார்கள், ஆண்களின் விந்தணு பலவீனமடைந்தது, வன விலங்குகள் மடிந்தன.

          என்டோசல்பான் தெளிப்பை நிறுத்தவும், இழப்பீடுகள் வழங்கவும் கோரி மக்கள் 2016 ஜனவரியில் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பாகப் பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள். பல அமைப்புகளின் தலைவர்கள் அங்கே வந்து, போராட்டத்திற்குத் தங்களது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துச் சென்றார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. 93 வயது வி.எஸ். அச்சுதானந்தன் அங்கே வந்தார். தனது ஆதரவை வெளிப்படுத்தியதோடு யாரும் எதிர்பாராத வகையில் அவர்களில் ஒருவராக உட்கார்ந்துவிட்டார். அங்கிருந்தபடி முதலமைச்சருடன் கைப்பேசியில் தொடர்புகொண்டவர், “போராட்டக் களத்திலிருந்து பேசுகிறேன். அவர்களின் நிலைமை ரொம்பவும் பரிதாபகரகமாக இருக்கிறது. இதில் நீங்கள் தலையிடுகிற வரையில் நான் இங்கேயேதான் உட்கார்ந்திருப்பேன்,” என்று கூறினார்.

          அப்போதுதான் முதலமைச்சர் உமன் சாண்டி, பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்தோ, மூத்த தலைவரின் இந்த நேரடிப் பங்கேற்பு ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை எண்ணியோ உடனே தலையிட்டார். அதிகாரிகள் குழு பேச்சு நடத்தியது. ஏற்கத்தக்க முடிவுகள் எட்டப்பட்டன. விஎஸ் என்றுமே மக்களோடு நிற்பவர், குரலற்றோரின் குரலாக ஒலிப்பவர் என்ற செய்தி மறுபடியும் உறுதிப்பட்டது. இந்தப் போராட்டப் பண்பு சிறுவயதிலிருந்தே அவரோடு வளர்ந்தது.

போர்க்குணம்

          திருவிதாங்கூர் மன்னராட்சிப் பகுதியாக இருந்த ஆலப்புழா மாவட்டத்தின் புன்னப்புரா வட்டார பரவூர் கிராமத்தில் 1923 அக்டோபர் 20 அன்று வெலிக்கக்காத்து சங்கரன்–அக்கம்மா இணையரின் மகனாக இவர் பிறந்தார் அச்சுதானந்தன். நான்காம் வயதில் தாயையும் பதினோராவது வயதில் தந்தையையும் இழந்தவர், 7ஆம் வகுப்போடு பள்ளிக் கல்வியையும், குழந்தைப் பருவக் கும்மாளங்களையும் இழந்தார். தந்தை விட்டுச்சென்ற தையல்கடையில் தன் அண்ணனோடு சேர்ந்து வேலை செய்தார்.

          பள்ளிக்குச் சென்ற நாட்களில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த உயர்சாதி என்று கூறிக்கொள்ளும் பிரிவைச் சேர்ந்த பையன்கள் அச்சுதானந்தனின் சமூக அடையாளத்தைச் சொல்லி அவமானப்படுத்தினார்கள். ஆவேசமடைந்த அவர் அவர்களைக் கடுமையாகத் திட்டிவிட்டு வீடு திரும்பினார். தந்தை இதற்காகத் தன்னைக் கடிந்துகொள்வார் என்று இவர் எதிர்பார்த்தார். மறுநாள் பள்ளிக்குப் புறப்பட்டபோது தந்தை இரும்புத் தகடுகள் இணைக்கப்பட்ட இடுப்புப் பட்டையை மாட்டிவிட்டார். தேவைப்பட்டால் அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கூறினார். அச்சனின் இந்த அணுகுமுறை அச்சுவின் போர்க்குணத்திற்குக் கூர் தீட்டியது.

          தையல் கடைக்கு வரும் கயிறாலைத் தொழிலாளர்களும் விவசாயப் பாட்டாளிகளும் தங்களுடைய உழைப்பு உறிஞ்சப்படுவது பற்றிப் பேசிக்கொள்வார்கள். விடுதலைப் போராளிகளின் சந்திப்பிடமாகவும் இருந்த அந்தக் கடை சகோதரர்களுக்கு அரசியல் வகுப்பறையாக அமைந்தது. ஒரு கயிறாலையில் தொழிலாளியாகச் சேர்ந்தார் வி.எஸ். சில அடிப்படைப் புரிதல்கள் ஏற்பட்டவராக, நெல்வயல்கள் பரவியிருந்த குட்டநாடு வட்டாரத்தில் விவசாயத் தொழிலாளர்கள், கயிறுத் தொழிலாளர்களின் போராட்டங்களில் ஆதரவாளராகப் பங்கேற்றார். பின்னர் அவர்களை அணி திரட்டக்கூடியவராக உருவெடுத்தார். 15 வயதில், கயிறு நிறுவனங்களின் சுரண்டல்களுக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர், அரசியல் விழிப்போடு 1938இல் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார்.

          இரண்டே ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவருடைய முனைப்புமிகு செயல்பாடுகள், மூன்றாவது ஆண்டிலேயே கோழிக்கோடு நகரில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநிலக் குழு மாநாட்டிற்கு ஒரு பிரதிநிதியாக அவரை அனுப்பிவைத்தன. மாநாடு முடிந்தபின் அவரை அழைத்துப் பேசிய முன்னணித் தலைவர் வி. கிருஷ்ணப்பிள்ளை, “கயிறு தொழிற்சாலை வேலை போதும் சகா, இளம் புரட்சிக்காரருக்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடையே பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறதே,” என்றார். அதை ஏற்ற அச்சுதானந்தன், முழுநேர கம்யூனிஸ்ட் தோழராக மாறினார்.

          திருவிதாங்கூர் அரசாட்சிப் பகுதியின் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மா என்றாலும், அவரால் நியமிக்கப்பட்ட திவான் ராமசாமி ஐயர் முடிவுகள் எடுப்பதில் செல்வாக்கு செலுத்தினார். திருவிதாங்கூரை அமெரிக்கா போல மாற்றப்போவதாக அறிவித்து தொழிற்சாலைகளை நிறுவுவது, நீர்ப்பாசனத் திட்டங்களைத் தொடங்குவது என்று சில நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே, விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒட்டச் சுரண்டுவதற்கான ஏற்பாடுகளை இறுக்கமாக்கினார். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியையும் தொழிற்சங்கங்களையும் ஆபத்தானவை என்று அறிவித்து அடக்குமுறைகளை ஏவிவிட்டார்.

          விடுதலைக்குப் பிறகு இந்தியாவோடு இணையாமல் திருவிதாங்கூரைத் தனிநாடாக ஆள்கிற நோக்கத்துடன்தான் சுதந்திர அமெரிக்கா போல மாற்றுவது பற்றி, மன்னரின் முழு ஒப்புதலுடன் பேசி வந்தார். கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் சுரண்டல் கொடுமைகளிலிருந்து விடுவிப்பதோடு, மன்னராட்சியிலிருந்து திருவிதாங்கூருக்கு விடுதலை பெறுவதாகவும் பரிணமித்தது. போராளிகளுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியை முன்னாள் ராணுவ வீரர்கள் அளித்தார்கள். அதிலெல்லாம் வி.எஸ். தலையாய பங்கு வகித்தார்.

காவல்நிலைய சித்திரவதை

          1946இல் ஒடுக்குமுறைகளின் உச்சமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டார்கள். போராளிகள் திருப்பித் தாக்கியதில் 10 காவலர்களும் கொல்லப்பட்டார்கள். கைது வேட்டை கடுமையாக்கப்பட்டது. போராட்டத்திற்கு வழிகாட்டும் தலைவர்கள் தலைமறைவாகச் செயல்பட வேண்டுமென்ற கட்சிக் கட்டளைப்படி வேறு பகுதிக்குச் சென்று ஒரு தோழரின் வீட்டில் தங்கியிருந்த வி.எஸ்., கொடுமைகள் அளவின்றித் தொடர்வதைக் கேள்விப்பட்டவராகப் போராட்டக் களத்திற்குத் திரும்பி வந்தார்.

          1946 அக்டோபரில் கைது செய்யப்பட்டவர், காவல்நிலையத்தில் கொடூரமான சித்திரவதைகளை எதிர்கொண்டார். குண்டாந்தடிகளால் அடிக்கப்பட்டு, துப்பாக்கி முனைகளால் குத்தப்பட்டவர் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். அவர் இறந்துவிட்டதாக நினைத்த காவல் அதிகாரிகள், சில்லறைத் திருட்டுகளில் ஈடுபட்டதற்காகக் காவல் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஒருவரிடம் அவருடைய “உடலை” ஒப்படைத்து, காட்டுக்குள் வீசச்சொல்லி, சில காவலர்களோடு ஜீப்பில் ஏற்றி அனுப்பினர்.

          வண்டி போய்க்கொண்டிருந்தபோது உடல் அசைவதைக் கவனித்த அந்தக் கைதி, உடனே பக்கத்து மருத்துவனைக்குப் போகுமாறு கூச்சல் போட்டுக் கட்டாயப்படுத்தினார். மருத்துவனையில் சேர்க்கப்பட்டுத் தன் உடல்நிலையோடும் போராடிய வி.எஸ். குணமடைந்த பின் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா சுதந்திர நாடான பிறகு, 1948 பிப்ரவரியில்தான் விடுதலை செய்யப்பட்டார். தடிகளும் துப்பாக்கிக் கத்திகளும் தாக்கியதில் பாதிக்கப்பட்ட கால்களால் நடந்துதான் மறுபடியும் மாநிலம் முழுவதும் இயக்கப் பணிகளுக்காகவும் மக்கள் போராட்டங்களுக்காகவும் சுற்றத் தொடங்கினார். பிற்காலத்தில் வி.எஸ். “என் மீட்பராக வந்தவரைப் பார்க்க முடியாமலே போய்விட்டது,” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

சிறைவாசம்

          மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்றதற்காக அந்த 16 மாதங்கள் உட்பட மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் சிறைகளில் அடைக்கப்பட்டவர்ல அவர். நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையில் இயக்கப் பணியை மேற்கொண்டவர். புன்னப்புரா–வயலார் போராட்டத்திற்கான சிறைவாசத்திற்குப் பிறகு, 1963இல், மறுபடியும் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். இம்முறை அவர் மீது, கைது செய்யப்பட்ட இதர பல மார்க்சிஸ்ட்டுகளைப் போலவே, அன்றைய காங்கிரஸ் அரசு சுமத்திய குற்றச்சாட்டு –“சீன உளவாளி”! பின்னர் 1975இல் அவசரநிலை ஆட்சிக் காலத்தில், ஜனநாய உரிமைகளை மீட்கப் போராடியதற்காக 20 மாதங்கள் சிறைவாசம்.

கட்சிக்குள் கொள்கைக் போராட்டம்

          இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எழுந்த கொள்கைப் போராட்டமும் பெருமைக்குரியது. அதன் முடிவில், 1964இல் அதன் தேசியக் குழுவிலிருந்து 32 பேர் வெளியேறினார்கள். அவர்களின் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது. அப்போது முதல் அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகச் செயல்பட்டவர், 1980 முதல் 1992 வரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பை நிறைவேற்றினார். 1985இல் அரசியல் தலைமைக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக மத்தியக் குழு கூட்டங்களுக்கான சிறப்பு அழைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2022இல் மத்தியக் குழுவிலிருந்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

          எந்தப் பொறுப்பில் இருந்தாலும இல்லாவிட்டாலும் ஒரு கம்யூனிஸ்ட் என்ற பொறுப்புணர்வோடு போராட்டக் களங்களில் மக்களோடு இணைந்திருந்தார். அவரை மக்கள் “கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ” என்று குறிப்பிட்டதில் வியப்பில்லை.. மாநில சட்டமன்றத்திலும் தங்களுக்காகப் போராடுவார் என்று உறுதியாக அறிந்திருந்த மக்கள் அவரை 1967, 1970, 1991, 2001, 2006, 2211, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின் மூலம் பேரவைக்கு அனுப்பினர். 1991–1996, 2001–2006, 2011–2016 ஆகிய கட்டங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, மிக அதிக காலம், 15 ஆண்டுகள், அந்தப் பொறுப்பில் செயல்பட்டவரானார். 2006 முதல் 2011 வரையில் முதலமைச்சராகவும் மக்கள் பணியாற்றினார். கேரளத்தில் 82 வயதில் முதலமைச்சரான மிக மூத்தவர் அவர்தான். 2016 முதல் 2021 வரை கேரள நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக, அமைச்சர் நிலைக்கு நிகரான பொறுப்பில் பங்களித்தார்.

எதையும் துவாக எடுத்துக் கூறத் தயங்காதவர்

          சமத்துவ லட்சியம், சமூக நீதிக் கொள்கை, உழைப்பாளர் உரிமைகள் இவற்றை நெஞ்சில் தாங்கிய அவருக்கு நேர்மையும் துணிவும் உடன்பிறப்புகளாக இருந்தன. முதலமைச்சராக இருந்தபோது அவர் மேற்கொண்ட “ஆபரேஷன் மூணாறு” நடவடிக்கை அந்த நேர்மைக்கும் துணிவுக்குமான சாட்சிகளில் ஒன்று. இயற்கையெழிலும், சுற்றுச் சூழல் முக்கியத்துவமும் வாய்ந்த வட்டாரம் மூணாறு. தேயிலைத் தோட்டங்களின் பசுமையுமுள்ள அந்த மலைப்பகுதியில் பல தனியார்கள் ஆக்கிரமித்துத் தங்கும் விடுதிகளையும் தங்களுடைய தோட்டங்களையும் அமைத்திருந்தனர். டாட்டா குழுமம் உள்ளிட்ட அரசியல் செல்வாக்கு மிக்க பெருநிறுவனங்கள், சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், நில மோசடிப் பேர்வழிகளால் மக்கள் அணுக முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அப்பகுதியில் வாழ்ந்துவந்தோரின் நில உரிமை போலி ஆவணங்களைப் பயன்படுத்திப் பறிக்கப்பட்டிருந்தது.

          அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவித்த விஎஸ், பதவிக்கு வந்த ஒரே ஆண்டில், 2007இல் ஆபரேஷன் மூணாறு நடவடிக்கைக்கான சிறப்புப் படையை அமைத்தார். ஊடகவியலாளர்களால் “வி.எஸ்.சின் பூனைகள்” என்று குறிப்பிடப்பட்ட சிறப்புப் படையினர் குறுக்கீடுகள் பற்றிய அச்சமின்றிக் கறாரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.. ஆக்கிரமிப்புப் பகுதிகள் மீட்கப்பட்டன. நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளுமாறு தில்லி உட்படப் பல மட்டங்களிலிருந்து வற்புறுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சினையாக்கின. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தோர் மட்டுமல்லாமல், சொந்தக் கட்சியிலேயே கூட சிலர் அதை எதிப்பதைக் கண்டார் அவர். எதைக் கண்டும் அவர் பின்வாங்கவில்லை. ஒரே மாதத்தில் 11,350 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.விதிகளை மீறிக் கட்டப்பட்டிருந்த விடுதிகளும் பிற கட்டடங்களும் இடிக்கப்பட்டன. இன்று பல மாநில அரசுகளால் ஏழை எளிய மக்களின் வீடுகள் இடிக்கப்படுவதைப்போல அல்ல; அதிகாரத் தொடர்பும் பணபலமும் கொண்டவர்களின் நில வளைப்பைத் தகர்த்த புல்டோசர்கள் அவை.

சபரிமலைப் பயணம்

          முதலமைச்சராக அவர் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையும் பெரிய பேசுபொருளானது. 2007இல் அவர் சபரிமலைப் பயணம் மேற்கொண்டார். உறுதிமிக்க ஒரு கம்யூனிஸ்ட் இப்படிப் புனித யாத்திரை போவதா என்று ஒரு பகுதியினர் விமர்சித்தனர். ஆனால், லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிற மலை தொடர்பாகக் கூறப்பட்ட சில பிரச்சினைகளை நேரில் கண்டறிவதற்காகவே அவர் சென்றார். சபரி மலையில் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் கால்நடையாகவே செல்ல முடியும். அத்துடன், 84வயதில் அப்படி அங்கே சென்றதில், அவருடைய உடல் நிலை சார்ந்த கவலைகளையும் மருத்துவர்கள் உட்படப் பலர் வெளிப்படுத்தினார்கள். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதைத் தவற விடாதவரான அவர், அந்தக் கவலைகளையும் தேவையற்றவை என்று மெய்ப்பித்துக் காட்டினார். கொள்கை உறுதியில் மட்டுமல்லாமல் உடல் உறுதியிலும் இளைய தலைமுறைகளுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அவர்.

          ஆனால் கம்யூனிஸ்ட் கொள்கைகளின்படி அவர் ஒரு கடவுள் மறுப்பாளர். அவருடைய “நம்பிக்கை” பற்றிய இன்னொரு சுவையான செய்தியும் உண்டு. முதலமைச்சர் அச்சுதானந்தனிடம் பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக இப்படிக்க் கேட்டார்கள்: “உங்களுக்கு எந்த சாமியை ரொம்பப் பிடிக்கும்?“ அவர்களை அணைத்துக்கொண்டு அவர் இப்படிச் சொன்னார்: “நம் அனைவரையும் போல என்னையும் சாமிக் கதைகள் ஈர்க்கின்றன. ஆனால் மற்ற எல்லாரையும் போலவே நானும் அந்த சாமிகள் இருக்கிறார்களா, இருக்கிறார்கள் என்றால் எந்தக் கோளில் இருக்கிறார்கள் என்று யோசிக்கிறேன்.”

கருத்தில் உறுதியானவர்

          தன் மனதில் தோன்றும் கருத்துகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்தினார் வி.எஸ். சில நேரங்களில் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்துகளையும் வெளியே கூறிவிடுவார். அதற்காக, உட்கட்சி நடவடிக்கைகளையும் எதிர்கொண்டார். அப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு செய்தியாளர் அவரிடம், “கட்சித் தலைமை இப்படி அடிக்கடி உங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது, பிறகு ஏன் கட்சியில் தொடர்கிறீர்கள்,” என்று கேட்டார். அதற்கு வி.எஸ். “எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அதேவேளையில் கட்சிக்காகத்தானே நான் பல ஆண்டுகளாகப் போராடி வந்திருக்கிறேன்,” என்று பதிலளித்தார்.

          அவரது மனைவியார் வசுமதி ஒரு செவிலியர். அவசரநிலை ஆட்சிக்காலத்தில், அவர் மருத்துவனையில் இரவுப் பணியில் இருந்த நேரத்தில்தான், வீட்டில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தபோது காவல்துறையினர் உள்ளே வந்து அச்சுதானந்தனைக் கைது செய்து கொண்டு போனார்கள். அதன் பின் 20 மாதங்கள் கழித்து சிறைமீண்டு வந்தபோதுதான் இவர்களால் அவரைப் பார்க்க முடிந்தது. அப்போதும் சரி, மக்கள் பிரச்சினைகளுக்காக வி.எஸ். வெளியே போராடிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி, அவருடைய எளிமையான வாழ்க்கை முறையையும் ஏற்றுக்கொண்டவராகக் குடும்பத்தைக் கவனிக்கும் போராட்டத்தை இணக்கத்தோடு வெற்றிகரமாக நடத்திவந்திருக்கிறார். இன்றும் அதையெல்லாம் உணர்வுப்பூர்மாக நினைவுகூர்கிறார். அந்த அனுபவங்களைக் கட்சி உறுப்பினரான மகன் அருண்குமார், அறிவியலாளரான மகள் ஆஷா ஆகியோரும் பெருமையோடு பகிர்கிறார்கள்.

          பொது வாழ்க்கையில் ஈடுபடுவதன் உன்னதத்திற்கும், போராட்டத் தழும்புகளின் பெருமிதத்திற்கும் எடுத்துக்காட்டாக என்றென்றும் நினைவு கூரத்தக்கவர் திரு வி.எஸ். அச்சுதானந்தன்.

அரசியல் லாபம் கருதி கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா?

kadeswara subramaniam hindu munnani - 2026

அரசியல் லாபத்திற்காக கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா? என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு கோயில் நிலம் சொந்தமாக்கப்படும் என்றும், தங்களுடைய அரசு அமைந்தால் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லியிருப்பது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி யாகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திராவிட அரசாங்கங்கள் கொடுத்தது அல்ல.

அந்தக்காலத்தில் அரசர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில்களுக்கு ஆறு கால பூஜை நடக்கவும், கோயில்களின் அன்றாட செலவுகளுக்காகவும் அந்தக் கோயில் நிலங்களில் இருந்து வருகின்ற வருமானத்தின் மூலமாக செலவு செய்ய கோயில்களுக்கு நிலங்களை எழுதி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளது. நீதிமன்றங்கள் பலமுறை தலையிட்டு இதைப் பற்றி பேசியும் எந்த ஒரு அரசாங்கமும் கோயில் நிலங்களை மீட்க சரியான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பாளிடமிருந்து முறையான வாடகை கூட வசூல் செய்யப்படுவதில்லை.

நிலைமை இப்படி இருக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தான் ஆட்சிக்கு வந்த பிறகு கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு கோயில் நிலத்தை சொந்தமாக்கி அதில் வீடும் கட்டித் தரப்படும் என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று உள்ளது.

ஏற்கனவே சிறுபான்மையினரை தாஜா செய்யும் நோக்கத்தில் வக்ஃபு வாரியச் சட்டத்தை தீவிரமாக எதிர்த்தவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தற்போது தமிழகத்தில் பல கோயில்களும் கோயில் நிலங்களும் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என சொல்லி ஆக்கிரமிக்க முயலும் சிறுபான்மையினருக்கு இது ஆதரவாக அமையாதா?

கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அந்த நிலத்தையும் கொடுத்து அதில் வீடும் கட்டித் தரப்படும் என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், வக்ஃபு நிலங்களிலும், கிறிஸ்துவ நிறுவனங்களுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான நிலங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம் என்று சொல்ல முடியுமா!

கோயில் நிலங்களை எடுக்கத் துடிக்கும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர வேண்டும். எந்த ஒரு அரசும் நிரந்தரமல்ல. நேற்று இருந்த அரசு இன்று இல்லை. இன்று இருக்கும் அரசு நாளை இருக்காது. ஆனால் பல்லாயிரம் ஆண்டு காலமாக நின்று நிலைத்திருப்பது நமது கோயில்களும், நமது கலாச்சாரமும் மட்டுமே.

கோயிலையும், அதன் மூலமான கலாச்சாரத்தையும் அரசியல் சுயநலத்திற்காக காவு கொடுப்பதை எந்த விலை கொடுத்தும் பக்தர்கள் தடுத்தே தீருவார்கள்.

ஆகவே திரு. எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருப்பதை இந்து முன்னணி மிக வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் இந்து முன்னணி பேரியக்கம் துவங்கிய காலம் முதல் கோயிலுக்கோ, கோயில் நிலங்களுக்கோ எந்த ஆபத்து வந்தாலும் அதை தடுப்பதை தலையாய பணியாக செய்து வருகிறது.

எனவே உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி, தன் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

ஆடி அமாவாசை: திருவேடகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

thiruvedagam traffic jam in adi amavasai - 2026

திருவேடகத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல்; 3 கிலோமீட் டர் தொலைவுக்கு வரிசையில் நின்ற வாகனங்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.

இந்த நிலையில் காவல்துறையினர் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில் போக்குவரத்தையும் சீர் செய்ய முடியாத நிலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

குறிப்பாக திருவேடகத்திலிருந்து மேலக்கால் வைகை புதுக்காலம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆட்டோக்கள் கார்கள் இருசக்கர வாகனங்கள் என வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது

போதுமான காவலர்கள் இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது பொதுவாக விழா காலங்களில் முன்கூட்டியே குறிப்பிட்ட அளவு காவலர்களை அனுப்பி போக்குவரத்தை சரி செய்யும் காவல்துறையினர் ஏனோ இந்த முறை கவன குறைவாக இருந்ததன் விளைவாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கி பல்வேறு பணிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இனிவரும் காலங்களிலாவது இது போன்ற பிரச்சனைகள் நடக்காதவாறு காவல்துறையினர் முன்கூட்டியே முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: கோலாகலம்

1000846305 - 2026

சதுசதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா இன்று வியாழக்கிழமை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இங்கு ஆடி அமாவாசை திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதி மட்டுமல்லாமல் அடிவாரப் பகுதியில் உள்ள தோப்புகளில் முகாமிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா கடந்த ஜூலை 22 ந்தேதி பிரதோஷ வழிபாட்டுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சிவராத்திரி வழிபாடும் அதனைத் தொடர்ந்து வன பூஜைகளும் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான அமாவாசை விழா விமரிசையாக நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் மூலம் ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் வந்து குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் காலை 6 மணிக்கு திறக்க வேண்டிய நுழைவாயில், அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைக்கு கொண்டு செல்லாமல் இருக்க ஒவ்வொரு பக்தர்களும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மலைப்பாதையில் மாங்கேனி ஊற்று, பச்சரிசி பாறை, அத்தியூத்து, படிவெட்டிப்பாறை ஆகிய இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து அந்த இடங்களை கடந்து சென்றனர்.

1000846304 - 2026

மலையடிவாரமான தாணிப்பாறை, மந்தித்தோப்பு, மாவூற்று ஆகிய பகுதிகளில் தோப்புகளிலும் வயல்களிலும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கி ஆடு, கோழி பலியிட்டும் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

மலையேறிச் செல்லும் பக்தர்கள் பகல்
12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் அதன் பிறகு வந்த பக்தர்கள் வனத்துறையினருடன் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தும் அதிகாரிகளுடன் முறையிட்டும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மலையேறி சென்றனர்.

மலையில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமிக்கும் சந்தன மகாலிங்க சுவாமி சுந்தரமூர்த்தி சுவாமி பலாவடி கருப்பசாமி ஆகியோருக்கு அதிகாலையில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடும் அதன் பின்னர் பக்தர்கள் முன்னிலையில் நண்பகல் அபிஷேக வழிபாடும் அதனைத் தொடர்ந்து மாலையில் அமாவாசை வழிபாடும் நடந்தது நள்ளிரவுக்கு பின் சுவாமிகள் மூவரும் ராஜ அலங்காரத்திலும் கருப்பசாமி வேட்டை அலங்காரத்திலும் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இரவு அமாவாசை பூஜைகளை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்மலையில் ஆங்காங்கு முகாமிட்டிருந்தனர். ஆனால் வனத்துறையினரும் காவல்துறையினரும் அவர்களை இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக அடிவாரம் செல்ல திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனால் பக்தர்கள் அமாவாசை பூஜைகளை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மலை அடிவாரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், அறநிலையத்துறையினர் ஏற்பாடு செய்தனர்.