Home Blog Page 60

திருப்பரங்குன்றம் மலை தொடர்பில் வந்த தீர்ப்பு; இந்து முன்னணி வரவேற்பு!

1006452 thiruparankuntaram - 2026

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு கோழி பலியிடுதல் தடை செய்யப்பட வேண்டும் என்ற இந்து மக்களின் குரலாக இந்து முன்னணியின் கோரிக்கை நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருப்பரங்குன்றம் மலையை வேறு எந்த பெயர்களிலும் அழைக்கக்கூடாது என்ற கோரிக்கையும் நீதிமன்றத்தால் இன்று அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது – என்று இந்து முன்னணி அமைப்பினர் கருத்து தெரிவித்தனர். 

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்த வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் ஏற்கெனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதி அரசர் ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை தானும் உறுதி செய்வதாக மூன்றாவது நீதிபதியாக பொறுப்பேற்ற நீதியரசர் விஜயகுமார் தீர்ப்பு வழங்கினார். இதன் மூலம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மெஜாரிட்டி நீதிபதிகளாக இரண்டு நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். 

திருப்பரங்குன்றம் மலை மீது இனி ஆடு கோழி பலியிடுதல் என்பது தடை செய்யப்பட வேண்டும் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை வேறு பெயர்கள் கூறி அழைக்கக்கூடாது என்ற இந்து மக்களின் குரலாக இந்து முன்னணியின் கோரிக்கை வென்றது என்று அந்த அமைப்பினர் கூறினர். 

முன்னதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், ‘பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,’ என பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 24 ல் நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவில் ‘ அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன்’ என்றார். இதிலிருந்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்டு சில மனுக்களை அனுமதித்தும், சில மனுக்களை தள்ளுபடி செய்தும் ஒரு மனுவை பைசல் செய்தும் உத்தரவிட்டார். இந்த சட்டப் பிரச்னையில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்த வழக்கு 3வதாக நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்று இந்து முன்னணி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீர்ப்பு தர்மத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி தீர்ப்பு என்று குறிப்பிடுள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…

கடந்த ஜனவரி மாதத்தில் சில இஸ்லாமிய அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையை களங்கப்படுத்திட முனைந்தனர். மலைமீதுள்ள தர்கா போன்ற அமைப்பில் கந்தூரி எனும் ஆடு, மாடு, கோழி பலியிடுவதை செய்யப்போவதாக அறிவித்தனர்.

மேலும் ஆட்டைத் தோளில் எடுத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மணப்பாறை தொகுதி திமுக எம்.எல்.ஏ. அப்துல் சமது இதற்கு துண்டுதலாக அங்கு வந்து, திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை எனக் கூறினார்.

இந்நிலையில் திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி தலைவரும் இராமநாதபுரம் எம்.பி.யான நவாஸ் கனி, திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் வாரியத்திற்கு சொந்தம். அங்கு கந்தூரி தருவதற்கு தானே தடை, மாமிச உணவு சாப்பிட எப்படி தடைவிதிக்க முடியும்? என அதிகாரிகளை மிரட்டி மலைக்கு மேலே போய் மாமிச உணவை அவரது கும்பல் சாப்பிட வைத்து, அங்கே எச்சிலை போட்டு புனிதத்தை கெடுத்து அதன் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.

இவற்றை கண்டித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் என்ற முறையில் நான் அங்கு சென்ற போது, என் மீதும் உடன் வந்தவர்கள் மீதும் காவல்துறை வழக்குப் போட்டது. இதனைக் கண்டித்து மலையைக் காக்க பிப்ரவரி 4 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவித்தது இந்து முன்னணி.

குமரன் குன்றை காக்க அறிவித்த ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க தமிழக சரித்திரத்தில் இல்லாத தடை உத்தரவை காவல்துறை போட்டது. தமிழகம் முழுவதும் 1600 பேர்களை வீட்டுக்காவலில் வைத்தது தமிழக காவல்துறை. நீதிமன்றம் சென்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று குறித்த நேரத்தில் குறித்த தேதியில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது இந்து முன்னணி.

திருப்பரங்குன்றம் புனித மலையை காக்க ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் ஐந்து லட்சம் முருக பக்தர்கள் கலந்து கொண்ட மாநாட்டை நடத்தி காட்டி, வரலாறு படைத்தது இந்து முன்னணி. பக்தர்களின் பக்தியின் சக்தி ஒருபுறம், மறுபுறம் திருப்பரங்குன்றம் மலையின் உரிமை மற்றும் புனிதம் காக்க நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்ட போராட்டம்.

இவ்வழக்கை நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த இரண்டு நீதிபதிகளில் ஒருவர் தீர்க்கமான கருத்தை கூறிய போதிலும் மற்றொருவர் கருத்து தெளிவில்லாத நிலையில் மூன்றாவது நீதிபதியின் கருத்திற்கு வழக்கின் தீர்ப்பு சென்றது.

நீதிபதி விஜயகுமார் நேற்று முன்தினம் கூறிய தீர்ப்பில் இம்மலை திருப்பரங்குன்றம் முருகனின் மலை தான். அம்மலையில் உயிர் பலியிடவோ, மாமிச உணவு சாப்பிடவோ அனுமதி கிடையாது என்று தெளிவான தீர்ப்பை தந்துள்ளார்.

இது தர்மத்திற்கும், ஜனநாயக வழியில் போராடிய முருக பக்தர்களுக்கும் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ஆகும். ஆளும் கட்சியான திமுகவின் ஆதரவால், தூண்டுதலால் சில இஸ்லாமிய அமைப்புகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சித்தனர்.

முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்திற்கு நேர்ந்த அவமதிப்பால் முருக பக்தர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்த தீர்ப்பு முருகனின் அருளால் தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என்றே இந்து முன்னணி கருதுகிறது. இந்த தீர்ப்பை மதித்து தமிழக காவல்துறையும் அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதே போல திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். கோவிலின் வாயிலில் உள்ள மோட்ச தீபத் தூணில் ஏற்றிடக்கூடாது என பல ஆண்டுகளாக இந்து முன்னணி போராடி வருகிறது.

இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்த அமரர் அட்வகேட் ராஜகோபாலன் தொடர்ந்து போராடினார். நீதிமன்றம் மூலமும் தீபத்தூணில் ஏற்றுவதற்கு தீர்ப்பு கிடைத்தது. ஆனாலும் தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் காவல்துறையும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து வருகிறது. இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தி வருகிறது.

எனவே குன்றம் முருகனுக்கே என்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பாரம்பரியமான தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.

அனைத்து முருக பக்தர்களும் நமது முருக பெருமானின் உரிமையை நிலைநாட்டிட கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றம் யாத்திரையாக வந்திடுவோம். முருகனின் அருளால் கிடைத்த நீதிமன்ற தீர்ப்பை இந்துமுன்னணி மனதார வரவேற்கிறது..

RSS 100: நூற்றாண்டு காணும் சிந்தனை

rss 100 years - 2026
#image_title

— அகிலேஷ் மிஸ்ரா
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

நூற்றாண்டு காணும் சிந்தனை

ஆர் எஸ் எஸ் ஸின் நூற்றாண்டு என்பது ஒரு அமைப்பினுடைய நூற்றாண்டு அல்ல. பல்வேறு கஷ்டங்கள் இடையே தன்னை தக்க வைத்துக் கொண்டும், வளர்ந்தும் வரும் ஒரு பண்பாட்டு சிந்தனையின் நூற்றாண்டு . ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டவர் படையெடுப்பு, பிளவு பட்ட சமுதாயம், அந்நிய ஆட்சியின் சுரண்டல் என்று பாதிக்கப்பட்ட ஹிந்து சமுதாயம் பெரிய , நீண்ட காலம் தொடரக்கூடிய இயக்கத்தை கட்டமைக்க முடியாமல் இருந்தது. கோயில்கள் தகர்க்கப்பட்டன. அரச பரம்பரைகள் எழுந்தன, விழுந்தன. சீர்திருத்த இயக்கங்கள் ஒளிர்ந்தன, மங்கின. இவ்வாறு இருக்கையில், ஆர்எஸ்எஸ் தோன்றி, தன்னை நூறு ஆண்டு காலம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம் என்ற கேள்வி நம் சிந்தனையை தூண்டுவதாக உள்ளது.

ஆரம்பமே அசத்தல்

ஆர் எஸ் எஸ் தோன்றிய விதமே ஓரளவுக்கு விடையை சொல்வதாக இருக்கிறது. இந்திய விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில், 1925 இல் ஆர் எஸ் எஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதன் ஸ்தாபகருடன் அது பிணைக்கப் படவில்லை. அதனை ஆரம்பித்த கேசவ பலிராம் ஹெட்கேவார் ஜி சிறந்த ஆளுமை. அவர் திட்டமிட்டு ரீதியில் தனது தனி ஆளுமையின் அதிகார பீடமாக அந்த அமைப்பு மாறிவிடாமல் பார்த்துக் கொண்டார்.

இதற்கு மாறாக, சுதந்திர போராட்ட காலத்தில் உருவான பல சமூக அமைப்புகளும் அதற்கு முந்திய காலத்தில் தோன்றிய அமைப்புகளும் அவற்றை ஆரம்பித்தவர்களின் ஆளுமையினால் , அவர்கள் பின் இருந்த ஒளி வட்டத்தின் வீச்சினால் ஒளிர்ந்ததை பார்க்கிறோம். அந்த தலைவர்களின் வாழ்நாளில் அவை செழித்தன. அவர்களுக்கு பிறகு அவை உதிர்ந்து விட்டன.

அதற்கு மாறாக ஆர் எஸ் எஸ் கூட்டு உறுதியில் வலிமை பெற்றது. தனிமனித ஆளுமையை மையமாக கொண்டிடாமல் இருந்ததே கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அதன் வளர்ச்சிக்கு காரணம்.

லட்சியமே வடிவெடுத்தது

அதற்கு இணையான இன்னொரு முக்கிய காரணம் சங்கம் தன் லட்சியத்தில் உறுதியாக இருந்ததாகும். அந்த இயக்கத்தின் மீது தடைகள் விதிக்கப்பட்டன. அடுத்தடுத்து வந்த அரசுகளும் அறிவு ஜீவிகளும் அதை கொடிய பூதமாக சித்தரித்தன. ஆனாலும், பாரத தேசம் சனாதன தர்மத்தில் வேரூன்றிய பண்பாட்டு அடையாளம். பாரதத்தின் ஒற்றுமையானது அந்த பண்பாட்டு தேசியத்தினால் நீரூற்றி வளர்க்கப்பட்டது என்ற அடிப்படை நம்பிக்கையை ஆர் எஸ் எஸ் என்றும் கைவிட்டதில்லை.

கால மாறுதலுக்கு ஏற்ப அது தன்னை தகவமைத்து கொண்டது. புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய சமூக பிரிவினரிடையே தன்னை விரிவாக்கிக் கொண்டுள்ளது. தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு உத்வேகம் அளித்து வந்துள்ளது. ஆனால், மற்ற அமைப்புகள் பிறரது மதிப்பை பெறுவதற்காக தங்கள் கொள்கைகளை சமரசம் செய்து கொண்டதை போல ஆர்எஸ்எஸ் தற்காலிக கைத் தட்டல்களுக்காக தனது சாரமான கருத்தியலை அடகு வைத்ததில்லை.

அண்மையில் விஞ்ஞான பவனில் சர்சங்கசாலக் மோகன் பகவத், ‘அடிப்படைகளை இழந்து பெறப்படும் ஏற்பு என்பது ஏற்பல்ல . இறப்பு ‘ , என்று கூறியுள்ளார் . அடிப்படை நம்பிக்கைகளைக் கைவிட மறுப்பதால் தான் ஆர்எஸ்எஸ் ஸை விமர்சிப்பவர்களாலும் அது மதிக்கப்படுகிறது.

தலைமுறைகளாக சேவை

மற்ற அமைப்புகளிலிருந்து ஆர் எஸ் எஸ் வேறுபடுவதற்கு காரணம் அதன் மற்றொரு பரிமாணமான சுயநலமற்ற சேவை . இது ஆறு தலைமுறைகளாக தொடர்ந்து அதன் தொண்டர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. பணம், பதவி, அங்கீகாரம் எதையும் தேடாமல் பல தலைமுறைகளாக குடும்பம் குடும்பமாக சேவை செய்வதை உலகில் வேறு எங்கேயாவது பார்த்ததுண்டா?

லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் ஷாகாவில் தினசரி காலை நேரத்தை செலவிடுகின்றனர். வார இறுதியில் சேவை காரியங்களில் ஈடுபடுகின்றனர். தங்கள் இளமையை பிரச்சாரக்காக (முழு நேர ஊழியர்) இருக்கின்றனர் . இதெல்லாம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், பல நேரங்களில் தங்கள் சொந்த செலவில் செய்கின்றனர் . இந்த அடையாளம் விரும்பாத தன்மை தான் சங்கத்தின் மிகப்பெரிய பலம். விளம்பரம் தேடாத , வெளியில் தெரியாத இந்த மனிதநேயத்தில் தான் அதன் மகத்தான சாதனைகள் அடங்கியுள்ளன.

சங்கத்தின் சிறப்பு

சங்கத்தின் தனித் தன்மை, நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதை சார்ந்து அல்ல. நிறுவனங்களை ஏற்படுத்துவதில் அதன் தனிச்சிறப்பு உள்ளது. அது கல்வித் துறையில் செயல்படுகிறது. பழங்குடியினர் நல திட்டங்களை செயல் படுத்துகிறது. இயற்கை பேரிடரின் போது நிவாரண முகாம்களை நடத்துகிறது. பெண்களின் உயர்வுக்காக பணிபுரிகிறது. சமூக தீமைகளை எதிர்த்து போராட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தி வருகிறது. அதன் விளைவுகள் தினசரி தலைப்பு செய்திகளில் தெரிவதில்லை. தசாப்தங்களுக்கு பிறகு வெளிப்படுகிறது.

பாரதிய மஸ்தூர் சங்கம், வனவாசி கல்யாண் ஆசிரமம், வித்யா பாரதி, சேவா பாரதி போன்ற மிகப்பெரிய அமைப்புகள் பல லட்சம் பேருக்கு எந்த விதமான தம்பட்டமும் இல்லாமல் சேவை செய்து வருகின்றன. சங்கம் அமைதியாக பணி புரிகிறது. அமைதி என்றால் ஏதோ பேருக்கு இருப்பதாக அர்த்தமல்ல. ஆழமாக ஊன்றிருப்பதன் அடையாளம்.

சங்கத்தின் கண்ணோட்டம்

சங்கத்தின் ஆயுளுக்கு மற்றொரு காரணம் ஹிந்துயிசம் பற்றி அது தொடர்ந்து முன் வைக்கும் அதன் கண்ணோட்டம். ஹிந்துயிசம் அல்லது ஹிந்து ராஷ்டிரம் பற்றி ஆர் எஸ் எஸ் பேசும்போது அது அதன் தனிப்பட்ட பார்வையாக இல்லாமல் பண்பாட்டு ஒற்றுமையை தழுவியதாக இருக்கிறது. ஹிந்து என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவை சுட்டுவது அல்ல மாறாக பண்பாட்டு அடையாளம். பாரதத்தை தாய் நாடாகவும் மற்றும் அதன் கலாச்சார கூறுகளை ஏற்றுக் கொள்கின்ற எல்லா சமூகத்தையும் அரவணைப்பதாகும்.

சங்கத்தின் அணுகுமுறை எப்போதும் இணைப்பதாகவே உள்ளது. அதனால் தான் விமர்சிக்கப்பட்டாலும் அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஜாதி, மொழி, மாநிலம் கடந்து சாதாரண மக்களை இணைத்து வலு பெற்று வருகிறது.

இறுதியாக, ஆர்எஸ்எஸ் விதிவிலக்காக இருப்பதற்கு உண்மையான காரணம் அதன் அடித்தளமாக உள்ள ஞானம். அது எப்போதும் இறக்குமதி செய்யப்பட்ட அல்லது கடன் வாங்கிய தொண்டர்களை சார்ந்து இருந்ததில்லை. மாறாக, தனது ஸ்வயம்சேவகர்களை மற்ற அமைப்புகள் கேட்டால் அனுப்பி வைக்கிறது. அங்கிருந்து ஊழியர்களைப் பெறுவதில்லை. ஆர்எஸ்எஸ் ஸின் வலிமை அதன் உள்ளிருந்தே எழுகிறது.

உள்ளார்ந்த வலிமை

விரல் விட்டு எண்ண கூடியவர்கள் இருந்தபோதிலும் சரி இப்போது லட்சக்கணக்கானவர்கள் திரண்டுள்ள போதும் சரி எப்போதும் அது தன் உள்ளார்ந்த வலிமையை நம்பி வளர்ந்துள்ளது. எந்த சமுதாயமும் – இது நமக்கான நேரம். எல்லா கஷ்டங்களையும் எதிர்கொள்ளுவோம். நாம் தொடர்ந்து உறுதியாக நின்றால் நினைத்ததை சாதிப்போம். வரலாற்றின் போக்கை மாற்றுவோம். நம்முடைய பலத்தில் நம்பிக்கை கொள்வோம் என்று முனைந்தால் – அது எழுச்சி பெறுவது திண்ணம்.

ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு தபால் தலையை வெளியீட்டு நிகழ்ச்சியில் வாழ்நாள் ஸ்வயம்சேவகராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி சங்கத்தின் சாரத்தை தனது உரையில் கச்சிதமாக படம் பிடித்து காட்டினார். ‘ஆர் எஸ் எஸ் இவ்வளவு காலம் நீடித்திருப்பதற்கு காரணம் அது சாதாரண இந்தியனின் அசாதாரண பண்பை வெளிக்கொண்டு வந்ததேயாகும்’, என்று அவர் சொன்னார்.

சங்கம் தனது இரண்டாவது நூற்றாண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதன் முன்புள்ள சவால் , அடித்தள சிந்தனைகளை விட்டு விடக்கூடாது. அதே வேளையில் அதில் இறுகி, உறைந்து போய் விடவும் கூடாது. சங்கம் நூறு ஆண்டு காலம் நிற்பதற்கு காரணம் எளிய ஆனால் உயர்வான விஷயத்தை அது புரிந்து வைத்துள்ளதேயாகும் . தனி நபர்கள் அல்ல அமைப்பு , அதிகாரம் அல்ல சேவை, பேரரசுகள் அல்ல பண்பாடே எப்போதும் நீடித்து நிற்கும். இதுவே நூற்றாண்டை கடந்து நடை போடும் ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு சொல்லும் பாடம்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

கட்டுரையாளர் புளூகிராப் டிஜிட்டலின் தலைமை அதிகாரி
முன்னாள் MyGov வின் இயக்குநர்


இந்து பண்டிகையை சீர்குலைக்க இத்தனை சதிகளா?

hindumunnani
hindumunnani

இந்து பண்டிகையை சீர்குலைக்க இத்தனை சதிகளா? இந்துக்கள் விழிப்புடன் செயல்பட்டு சதிகளை முறியடிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக காங்கிரஸ் அரசு தீபாவளி அன்று படடாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதுபோல தமிழ்நாடு உணவு கட்டுப்பாட்டு துறை இனிப்பு, பலகாரங்களுக்கு கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்து மிரட்டுகிறது.

மாசு கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் என இவர்கள் அனைவரும் இந்துக்களின் பண்டிகை, விழாக்களுக்கு மட்டும் திடீரென தோன்றி அறிவுரை, எச்சரிக்கை விடுக்கும் அதிசய பிறவிகள். இவர்களின் நோக்கம் ஒன்றுதான், அது பண்டிகைகளில் ஏற்படும் இந்துக்களின் உற்சாகம் மற்றும் ஒறறுமையை சீர்குலைப்பதுதான்.

இந்த கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று இந்து முன்னணி கூறவில்லை. அதேசமயம் வருடம் முழுவதும் இந்த அறிவுரையை செயல்படுத்துகிறார்களா? தீபாவளி இனிப்பு, பலகாரத்திற்குப் பொருந்தும் தர நிர்ணயம், ரம்ஜான் பிரியாணிக்கும், கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புக்கும் பொருந்தும் அல்லவா?

வீதிக்கு வீதி பீப் பிரியாணி அலுமினிய வட்டாவில் எழும் சத்தம் இந்த உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் காதில் விழவில்லையா என்ற கேள்வி சாதாரண மக்களுக்கும் எழுகிறது.

கர்நாடக காங்கிரஸ் அரசின் பட்டாசு வெடிக்க அறிவித்திருக்கும் கட்டுப்பாடு, தமிழக பட்டாசு உற்பத்தி தொழிலை பாதிக்கும் என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும்.

கூட்டணியில் இருக்கும் திமுக இதுபோன்ற நேரங்களில், தமிழக நலன் கருதி முதல்வரின் நண்பரான, கூட்டணி கட்சியான காங்கிரஸ் முதல்வர் சித்தராமைய்யாவிடம் பேசி தமிழக தொழில்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோளின்படி சுதேசி பொருளாதாரத்தை உயர்த்த, நமது பண்டிகை காலங்களில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு தர வேண்டும் எனற கருத்தை நினைவுகூர்கிறோம்.

நமது பண்டிகைகள் யாவும் இறைவனை வழிபடுவது ஆகும். எனவே இந்துக்கள் புனிதமான, பவித்தரமான பொருட்களை வாங்கிட நமது நம்பிக்கையை பின்பற்றுவோரின் தயாரிப்புகளை, பொருட்களை வாங்கி இறைவனுக்குப் படைத்து கொண்டாட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பண்டிகை நேரத்தில் தான் அரசு ஊழியர்களின் சங்கங்கள், போக்குவரத்து ஊழியர்களின் சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை செய்கின்றன. இதுவும் இடதுசாரி அமைப்புகளின் வேலையாக இருக்கிறது.

எனவே தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடக்கும் திட்டமிட்ட சதிகளை முறியடிக்க மக்கள் விழிப்புணர்வோடு இருந்து பண்டிகைகளை குதூகலமாக கொண்டாடுவோம். தமிழக அரசும் மக்களின் உணர்வுகளை மதித்து செயல்பட கேட்டுக்கொள்கிறோம்..

விபத்தில்லா தமிழகம்; மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

courtallam rotary clum function - 2026

தென்காசியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அழகப்பபுரம் கிராமத்தில் நடத்திய நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினரும் TNDSOF அமைப்பின் மாநில செயலாளருமான வைகை R குமார் மற்றும் ரோட்டரி கிளப் தலைவர் சைரஸ் கமலம், தெட்சிணாமூர்த்தி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் திருஇலஞ்சி குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வைகை குமார், “சாலை விதிகளை கடைப்பிடித்து சாலையை பிறரோடு பகிர்ந்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதுகாப்புடன் பயன்படுத்தி விபத்தில்லா தமிழகம் உருவாக்கப்பட்ட வேண்டும். மாற்றம் நம்மில் துவங்கப் பட வேண்டும். NSS மாணவர்களாகிய நீங்கள் இந்த கிராமத்தில் விழிப்புணர்வை துவங்கி உங்கள் சக பள்ளி தோழர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.

திருஇலஞ்சி குமரன் மது போதை ஒழிப்பு பற்றி உரையாற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியர் குத்தாலம் வரவேற்புரையாற்ற உதவி திட்ட அலுவலர் முருகேசன் நன்றி உரையாற்றினார்.

காத்திருந்து காத்திருந்து… நோபல்லும் போனதடி! அமெரிக்காவுக்கே அவமானம் வந்ததடி!

donald trump - 2026

ஒருவருக்கு பரிசு கொடுத்தால் அது பேசுபொருளாகும் என்பது வழக்க்ம். ஆனால் ஒருவருக்கு பரிசு கொடுக்கப்படாததே பேசுபொருளாகி சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது. இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு எனக்குத்தான் என்று கட்டம் கட்டி தம்கட்டி  பிரசாரம் செய்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறார். இனி உலகம் என்ன ஆகுமோ என்ற கவலையில் உலகத் தலைவர்கள் பலர் இப்போதே கவலைப்படத் தொடங்கிவிட்டனர்.  காரணம், நோபல் கிடைக்காத விரக்தியில் இன்னும் என்னவெல்லாம் கோமாளித்தனங்களைச் செய்வாரோ டிரம்ப்  என்ற அச்சவுணர்வுதான்!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று டிரம்ப் கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே உலக அளவில் திராவிட அரசியலைச்  செய்துவந்தார். ஆனால் அவரை உசுப்பேற்றுவதற்கென்றே இந்தாண்டுக்கான நோபல் பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை.

இப்படி ஒருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெற்றது. அதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பே காரணகர்த்தா ஆகிப்போனார். அவர் என்னதான் திரும்ப திரும்ப நான் போர்களை நிறுத்திவிட்டேன் என்றும், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே ஏற்படவிருந்த அணு ஆயுதப் போரை வர்த்தகத்தைக் காரணம் காட்டி நான் நிறுத்தினேன் என்றும் கூறிக் கொண்டிருந்தாலும், அவரது பேச்சை எவருமே சட்டை செய்யவில்லை என்பது இப்போது நிதர்சனம் ஆகிவிட்டது.  

இதற்காக எத்தனை பேர் உலக அளவில் டிரம்புக்கு முட்டுக் கொடுத்தார்கள்! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் கூட, டிரம்ப் நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்றார். நேற்று கனடா அதிபர் அந்தக் குரலை எதிரொலித்தார். பல தலைவர்களும் டிரம்பை காக்காபிடிக்க அவர் விரும்பிய வண்ணம் குளிர்விக்கும் சொற்களைச் சொல்லி, ஏதோ சாதித்துக் கொள்வோமே என்று வரிசைகட்டினார்கள். 

டிரம்போ, ‘எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்’ என்றார். இதனால் நோபல் பரிசு இந்த முறை அனைவரது கவனத்தையும் பெற்று, பரிசு யாருக்கு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்பதை நார்வே நாட்டு பார்லிமென்ட் குழு அறிவித்தது.

வெனிசுலா பெண்மணிக்கு…

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்குப் பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது.

அதன்படி, 2025ம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நார்வே பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு பரிசீலனையில் உள்ளோரில் ஒருவரை விருதுக்கு உரியவராகத் தேர்வு செய்து அதிகார பூர்வமாக அறிவித்தது. நோபல் பரிசு பெறுவோருக்கு பதக்கத்துடன் ரூ.10 கோடி பரிசுத் தொகையும் கிடைக்கும். அதன்படி, இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது.  வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்படுவதாக நார்வே குழு தெரிவித்தது.

இதன்மூலம், டிரம்ப் ஏற்கெனவே சொன்னபடி, டிரம்புக்குக் கொடுக்கப்படாததால், அமெரிக்காவுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதே பொருளாகியுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்ததையே விமர்சனம் செய்து வந்த டிரம்ப், தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்பதால் கண்மூடித்தனமாக மனதில் தோன்றும் விமர்சனங்களையும் வார்த்தைகளையும் புலம்பல்களையும் அள்ளித் தெளிப்பாரே என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.

நோபல் பரிசு மோகத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சித்தார் டிரம்ப். நோபல் பரிசு என்றால் என்ன என்றே தெரியாதவர் அவர் என்றார்.  “அவர் எதையுமே செய்யவில்லை. அவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. அந்த பரிசு என்னவென்று கூட அவருக்கு தெரியாது. நம் நாட்டை அழித்த அவரை தேர்ந்தெடுத்து, விருது கொடுத்தார்கள். அவர் ஒரு சிறந்த அதிபராக இருந்தது கிடையாது. நான் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை.” என்று பட்டவர்த்தனமாக நோபல் ஆசையில் வார்த்தைகளை உதிர்த்தும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

8 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் சொன்னாலும், அவர் பேச்சை பல நாடுகளும் மறுத்தன. முக்கியமாக இந்தியா பட்டவர்த்தனமாக மறுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டது, பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் தான் என்று இந்தியா சொன்னாலும், பின்னணியில் அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்த கிரானா ஹில்ஸ் பகுதியில் உள்ள அணு ஆயுத சேமிப்புக் கிடங்கில் இந்தியா தாக்கியதும், அதனால் செய்வதறியாது அமெரிக்காவே போரை நிறுத்த பாகிஸ்தான் மூலம் கெஞ்ச வைத்ததும் உலகுக்குத் தெரியத் தொடங்கியது.

ஆனால் அடிவாங்கியும் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி, அங்கே விருந்துண்டு அதற்கு நன்றிக்கடனாக, அமெரிக்க அதிபருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட வேண்டும் என்றார். ஆனால் இந்தியாவின் மீது போர்களைத் திணித்து, பயங்கரவாதச் செயல்களின் மூலம் உலகில் அமைதியின்மையை உருவாக்கிக் கொண்டிருக்கும் ரௌடி நாடு என்று பெயரெடுத்த பாகிஸ்தானுக்கு, பணமும் உதவியும் ஆயுதங்களும் கொடுத்து வரும் அமெரிக்க அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பதற்கான தகுதி என்ன என்பது இன்று புரிந்திருக்கக்கூடும்!

ஆக்கிரமிப்பாளருக்கே கோயில் சொத்துகள்: தமிழக அரசின் புதிய சட்டத்துக்கு கண்டனம்!

radhakrishnan thiuthondar sabai - 2026

கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் செல்லும் வகையில் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளதாக திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் செல்லும் வகையில் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது என்றார் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன்.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு புதன்கிழமை காலை சுவாமி வழிபட வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களின் சொத்துக்களை காப்பாற்ற சுமார் 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அடுத்தடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் உயர்நீதிமன்றத்தை நாடி தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசாங்கமும், அதிகாரிகளும் கோயில் சொத்துக்களை பாதுகாக்கக்கூடிய நிலையில் உள்ளவர்கள். ஆளும் அரசோ, அமைச்சர்களோ, அரசின் பின்புலம் கொண்டவர்களோ, பணபலம் கொண்டவர்களோ அரசின் விதிமுறைகளுக்கு எதிராக, தவறாக வழிநடத்தினாலும் கூட சட்டத்தை சீர்தூக்கி ஆராய்ந்து அதை தடுக்கும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உண்டு. ஆனால் தற்போது வேலியே பயிரை மேய்ந்த கதைபோல ஒரு சட்ட விரோத பெருந்துயர் திருக்கோயில் சொத்துக்களுக்கு விளைந்துள்ளது.

திருக்கோயில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்வதில் இருந்து தடைசெய்வதை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. இதுவரை சொத்துக்கள் பாராதீணம் செய்வதை தடுக்கப்பட பூஜ்ய மதிப்பில் பத்திரப்பதிவு நடைமுறை உள்ளது. ஆனால் கடந்த 30}ம்தேதி அரசு பிறப்பித்த சட்ட விரோத அரசாணையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த மாதிரியான அரசாணை பிறப்பிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது. சட்ப்படியும் இந்த அரசாணை நிலைக்காது. இதனை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக அரசாணையை ரத்து செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகமதியர் காலத்திற்கு பின்பும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட சில கோயில் இடங்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால் இப்போது திருக்கோயில் சொத்துக்களுக்கு பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்கு பல்வேறு வகையான நிலங்கள் உள்ளன. இதில் குறிப்பிட்ட ஊழியத்தின் பேரில் கோயில் விழாக்கள் கொண்டாட, கோயில் பராமரிக்க முன்னோர்களால் எழுதி வைக்கப்பட்ட நிலறங்களை எந்தநோக்கத்துடன் எழுதி வைக்கப்பட்டதோ, அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும்.

அறநிலையத்துறை சட்டப்பிரிவு 109}ன்கீழ் கோயில் சொத்துக்களை மீட்டெடுக்க எந்த கால வரம்பும் கிடையாது. அரசுத்தான் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். பன்முக ஆளுமைத்திறன் கொண்ட கலைஞரின் ஆட்சியில் கூட பல்வேறு கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டன. காப்பாற்றப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் முறைப்படுத்தப்பட்டு அவர்களுடன் இணக்கமான சூழல் ஏற்பட்டு கோயில்களுக்குரிய வருவாய் கிடைத்தது.

ஆனால் இன்று அந்த வாய்ப்பு கூட பறிபோயிடும் நிலை உள்ளது. ஆக மொத்தம் திருக்கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் அரசின் பின்னணியில் இருந்து மறைமுகமாக இயக்குகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார் அவர்.

ஆதீன இடத்தை அபகரிக்கும் சதி; திமுக., அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!

dharumapuram atheenam hospital issue - 2026

மயிலாடுதுறையில் தருமபுரம் அதீனத்தால் கட்டித் தரப்பட்ட மகப்பேறு மருத்துவமனை இடத்தை அபகரிக்க சதி நடப்பதாக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தால் கட்டித் தரப்பட்ட மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்தார்.

மயிலாடுதுறை, சின்னக்கடை வீதியில் பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக, தருமபுரம் ஆதீனம் சார்பில் இலவச மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 24வது குருமஹா சன்னிதானம் சண்முகதேசிக சுவாமிகள், 1943ல் அப்போதைய கவர்னரை அழைத்து பூமி பூஜை செய்தார். கட்டுமான பணிகள் முடிந்து, 25வது குருமஹா சன்னிதானம், 1951ல் இலவச மருத்துவ சேவையை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகளவில் சிகிச்சை பெற்றனர். முக்கியமாக மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் மருத்துவமனை ஒப்படைக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வந்தது. கட்டடம் சிதிலமடைந்ததை அடுத்து கூறைநாடு பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சண்முக தேசிக சுவாமிகள் இலவச மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.

உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அந்த கட்டடம் பழுதடைந்தது. இதனையடுத்து அந்த கட்டடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தருமபுரம் ஆதினத்தின் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் வராத நிலையில் அந்த கட்டடத்தை இடிக்கப் போவதாக தகவல் வந்தது. இதனையடுத்து முன்னார் அமைத்த நினைவு அமைப்பை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம். என ஆதினம் கூறியிருந்தார்.

இதன் பிறகு அந்தக் கட்டடம் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, கட்டடத்தை நகராட்சி நிர்வாகம் இடிக்கப்போவதாக தகவல் வெளியானதால் தருமை ஆதீனம் கோபம் அடைந்தார். இலவச மருத்துவமனையை இடிப்பதை கண்டித்து, ”உயிர் போகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,” என, நேற்று தருமபுரம் ஆதீனம் நேற்று அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்தார்.

முன்னதாக, மயிலாடுதுறையில் பழமையான இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தருமை ஆதீனம் உண்ணாவிரத அறிவிப்பு வெளியிட்டார். முன்னோர்கள் கட்டிய இலவச மகப்பேறு மருத்துவமனையை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து காப்பேன் என்றார் தருமை ஆதீனம் 24ஆவது சந்நிதானத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு 25ஆவது சந்நிதானத்தால் திறக்கப்பட்ட மருத்துவமனையை இடிக்க எதிா்ப்பு தெரிவித்தார்.

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவமனை அரசின் வசம் முன்னதாகவே ஒப்படைக்கப்பட்டது. தற்போது பழைய கட்டிடத்தில் மருத்துவமனை செயல்படாத நிலையில் அதனை இடித்து புதிய கட்டிடம் கட்ட அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியானது. முன்னோா்கள் நினைவாக உள்ள பழமையான கட்டிடத்தை இடிக்கக் கூடாது என தருமபுரம் ஆதீனம் 27ஆவது சந்நிதானம்  குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் குரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது…

மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், கடந்த 1951- ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் திரு. குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனை, கடந்த சுமார் 60 ஆண்டுகளாக, ஆதீனம் சார்பாக, பொதுமக்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை வழங்கி வந்துள்ளது. பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, நகராட்சி இலவச மகப்பேறு மருத்துவமனையாகச் செயல்பட்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில், மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக, கடந்த சுமார் ஏழு ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த மருத்துவமனையில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய குப்பை நுண்ணுயிர் கிடங்கை, நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. தற்போது நுண்ணுயிர் கிடங்கும் செயல்படாமல், குப்பைகள் குவிந்து அப்பகுதியே சுகாதார சீர்கேடாகக் காணப்படுகிறது.

தருமபுரம் ஆதீனம் சார்பாக, தாங்கள் உருவாக்கிய மருத்துவமனையை, மீண்டும் ஆதீனமே பராமரித்து நடத்த, நகராட்சிக்குக் கடிதம் எழுதியும், நகராட்சி சார்பில் எந்த பதிலும் அளிக்காமல், கடந்த 2023 ஆம் ஆண்டு, மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு, தருமபுரம் ஆதீனம் மற்றும் தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம், தற்போது மீண்டும் மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வணக்கத்திற்குரிய தருமபுரம் ஆதீனம் அவர்கள், இதனைக் கண்டித்து, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் நலனுக்காக, தருமபுரம் ஆதீனம் தொடங்கிய இலவச மருத்துவமனையைக் கைப்பற்றி, அரசின் கையாலாகாத்தனத்தால் இன்று அதன் நோக்கத்தையே சிதைத்து, குப்பைமேடாக ஆக்கி வைத்திருக்கிறது மயிலாடுதுறை நகராட்சி.

முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களே. உங்களுக்குக் குப்பைமேடு அமைக்க வேண்டுமென்றால், உங்கள் கட்சிக்காரர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு, அதில் அமைத்துக் கொள்ள வேண்டும். தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனைக் கட்டிடத்தை இடித்துவிட்டு, அதில் குப்பைமேடு அமைக்க முடிவெடுத்திருப்பது, உங்கள் அரசின் வழிப்பறி.

திமுக அரசு, கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். மயிலாடுதுறை இலவச மருத்துவமனை அமைந்திருக்கும் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தை, உடனடியாக தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மருத்துவமனை நிலத்தை நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிக்கும் முயற்சி என்று, இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தில் 1951ம் ஆண்டு மருத்துவமனை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நாளைடைவில் இந்த மருத்துவமனையை நகராட்சி நிர்வாகம் நடத்தி வந்தது. பின்னாளில் மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக அந்த மருத்துவமனை மூடப்பட்டு மயிலாடுதுறை நகராட்சி குப்பை பிரிக்கும் கூடமாக மாற்றப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து குப்பை பிரிக்கும் கூடமும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் சார்பில் மேற்படி இடத்தில் மருத்துவமனையை புதுப்பித்து ஆதீனம் சார்பில் நடத்த அனுமதி கோரப்பட்டது ஆனால் தமிழக அரசு அனுமதி அளிக்காமல் நகராட்சி நிர்வாகம் பேரில் மடத்தின் இடத்தை ஆக்கிரமிக்க கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

2023 ஆம் ஆண்டு அந்தக் கட்டடத்தை இடிக்கப் போவதாக நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வழங்கியது அப்போதே தருமபுரம் ஆதீனம் அவர்கள் அதனை எதிர்த்து கடும் கண்டனங்களை பதிவு செய்த பின்பு அந்த முயற்சியை தமிழக அரசு கைவிட்டது.

தற்போது மீண்டும் அந்த இடத்தில் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் கட்டிட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முயன்று வருகிறது. இந்நிலையில் நேற்று தருமபுரம் ஆதீனம் அவர்கள் மிகுந்த மன வேதனையோடு ஆதீனத்திற்கு சொந்தமான அந்த இடத்தை கைப்பற்ற முயற்சித்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்து விரோத தமிழக அரசு இந்து ஆலயங்களை இடிப்பதிலும் இந்து மடங்களுக்கு சொந்தமான இடங்களை கைப்பற்றுவதிலுமே முனைப்பாக இருந்து வருகிறது.

ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டு வரும் மடாதிபதிகளே கூட போராடும் அளவிற்கு தமிழக அரசு இந்து மத நிறுவனங்களை அதன் சொத்துக்களை அபகரிக்க முயற்சித்து வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மேற்படி இரண்டு ஏக்கர் நிலத்தை ஆதீனத்திடமே ஒப்படைத்து அங்கு தருமபுரம் ஆதின நிர்வாகம் சார்பில் மருத்துவமனை செயல்பட தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது நகராட்சி நிர்வாகம் என்ற பெயரில் தர்மபுரம் ஆதீன இடத்தை அபகரிக்க முயற்சி செய்தால் தருமபுரம் ஆதீனம் அவர்கள் நடத்தும் அறப்போர் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களை ஒன்று திரட்டி இந்து முன்னணி உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்

சபரிமலையில் தங்க சிலைகள் மாயம் -விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு..

1000994816 - 2026

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ள சம்பவம் பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னதி, கூரை மற்றும் துவாரபாலகர் சிலைகள் போன்ற அம்சங்கள் மிக பழமையானவை. கோயிலை பாதுகாக்கும் பொறுப்பு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உள்ளது. 1990 ல் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையா பல கோயில்களுக்கு நன்கொடை வழங்கினார். செப்டம்பர் 1998ல் சபரிமலை கோயிலின் சன்னதி, கூரை மற்றும் இரண்டு துவாரபாலகர் சிலைகளை தங்கம் மற்றும் செம்பால் அமைக்கும் பணிக்காக 31 கிலோ தங்கம் கொடுத்தார். அதனுடன் 1,900 கிலோ செம்பும் நன்கொடையாக வழங்கப்பட்டது. விஜய் மல்லையா கொடுத்த தங்கம் மற்றும் செம்பு சேர்த்து கோயிலின் கூரையும் புனரமைக்கப்பட்டது.

1000994807 - 2026

இந்த நிலையில் சபரிமலை கோயில் தங்கம் மற்றும் நகை பராமரிப்பு சமீபத்தில் சர்ச்சைகளுக்கு ஆளானது. 2019ல் தங்க நன்கொடைகள் தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2021 வரை கோயிலின் நகை பற்றிய விரிவான கணக்கு பதிவுகள் இல்லாமல், பொட்டலங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது. இது பல விதமான மோசடிக்கு வழி வகுக்கும் என அப்போதே நிபுணர்கள் எச்சரித்தனர். அவர்கள் சொன்னது போலவே சபரிமலை கோயில் நகை விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது

சபரிமலை ஐய்யப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019ல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

செப்பனிடும் பூசும் செலவை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தில் செப்பனிடும் பணி நடந்தது.

1000994805 - 2026

இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டப் பின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது.அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது.

இந்நிலையில், கடந்த 2019, ஆக., 11ம் தேதி செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பின், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, ‘இ – மெயில்’ வாயிலாக கடிதம் ஒன்று தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டது. அது குறித்த ஆதாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

அந்த கடிதத்தில், உன்னிகிருஷ்ணன் போத்தி கூறியிருப்பதாவது:

சபரிமலையின் கருவறை கதவு மற்றும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்த நிலையில், என்னிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது.

உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்த தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா? இது தொடர்பாக உங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்து கேரள உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது.இந்த செயல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும், உன்னிகிருஷ்ணனுக்கும் இடையேயான கூட்டு எச்சரிக்கை மணி போல ஒலிக்கிறது.கோவில் சொத்து மீதான புனிதத்தை கெடுத்து, பக்தர்களின் நம்பிக்கைகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது’ என, நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

துவாரபாலகர்கள் சிலையில் இருந்த தங்கம் மாயமானது குறித்தும், அதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்து தங்க கவசங்கள் மீண்டும் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அப்போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சபரிமலை சிறப்பு கமிஷனரின் அனுமதியின்றி அந்த கவசங்கள் கழற்றப் பட்டதாக கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.இதை நீதிமன்றம் விசாரித்தபோது தான், கடைசியாக 2019ல் கவசத்தை கழற்றியபோது, அதில் இருந்து 4.54 கிலோவுக்கு தங்கம் மாயமான விஷயம் அம்பலமானது.தவிர, காணாமல் போனதாக கூறப்பட்ட துவாரபாலகர்கள் தங்கபீடமும், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்கப்பட்டது.

தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்திக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என, தேவசம் போர்டு முன்னாள் தலைவர் வாசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தேவசம் போர்டு தலைவராக நான் பதவி வகித்தபோது, கவசங்களை செப்பனிடுவதற்காக கழற்றவில்லை. மேலும், துவாரபாலகர்கள் சிலைகளில் அந்த கவசங்கள் முறையாக பொருத்தப்பட்டதா? அதில் இருந்த தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டதா? என ஆராய்வதற்கும் அவசியம் ஏற்படவில்லை. என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் துவாரபாலகர்கள் தங்கக் கவசம் குறித்த முறைகேடுகள் தொடர்பாக தேவசம் போர்டில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தேவசம் போர்டு வெளியிட்ட அறிக்கை: சபரிமலையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த முராரி பாபு, மிகப்பெரிய தவறை செய்திருக்கிறார். தங்கமுலாம் பூசப்பட்ட துவாரபாலகர்கள் கவசங்களில் இருப்பது செப்புத்தகடுகள் என, 2019, ஜூலை 17ல் சபரிமலை செயல் அதிகாரியிடம் அறிக்கை அளித்திருக்கிறார். இது பெரும் தவறு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து முராரி பாபு கூறியதாவது: கோவில் தந்திரியின் கருத்தை கேட்ட பிறகே, அப்போது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்தேன். அது செப்பு தகடு தான் என எழுதினேன். ஏனெனில் அது முழுமையான செப்பு தகடாக இருந்தது. அதன் காரணமாகவே தங்கமுலாம் பூச கழற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலின் கருவறை முன்பாக உள்ள துவாரபாலகர்கள் சிலைக்கு தங்கமுலாம் பூசிய செப்பு கவசங்களை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் நன்கொ டையாக வழங்கினார். இந்த தங்க கவசத்தை பழுது பார்த்து, ‘எலக்ட்ரோ பிளேட்டிங்’ செய்ய, சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுப்பி வைத்தது. அப்போது தேவசம் போர்டு ஆணையரின் அனுமதியின்றி, தங்க கவசம் கழற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால், சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்க கவசங்களை உடனடியாக திரும்ப கொண்டு வருமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதே நேரம், தங்க கவசத்தின் எடை 4 கிலோ வரை குறைந்து இருப்பதாக புகார் எழுந்தது. மேலும், துவாரபாலகர்களின் தங்க பீடமும் மாயமானதாக குற்றஞ் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேவசம் போர்டின் ஊழல் தடுப்பு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நன்கொடை அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய ஊழல் தடுப்புக் குழு, காணாமல் போனதாக கூறப்பட்ட தங்க பீடத்தை, நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்டது.

பழுது பார்த்த பின், பீடம் சரியாக பொருந்தாததால், மீண்டும் தேவசம் போர்டு தன் உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியதாகவும், அந்த விவகாரத்தை தான் மறந்து போனதாகவும் உன்னிகிருஷ்ணன் போத்தி விளக்கம் அளித்திருந்தார்.

இது தொடர்பாக இரண்டு நாட்கள் வரை உன்னிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய தேவசம் போர்டு ஊழல் தடுப்புக் குழு, கேரள உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இதை தொடர்ந்து துவாரபாலகர்கள் சிலையில் அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்தது குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள உயர் நீதிமன்றம் அமைத்தது.

எஸ்.பி., சசிதரன் தலைமையில், ஏ.டி.ஜி.பி., வெங்கடேஷ் மேற்பார்வையில், இக்குழு செயலாற்றும் எனவும் அறிவித்துள்ளது. சைபர் கிரைம் பிரிவை சேர்ந்த அதிகாரிகளும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். கேரள உயர் நீதிமன்றத்தின் இந்நடவடிக்கைக்கு உலகளவில் ஐயப்ப பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

செங்கோட்டை – தாம்பரம் முன்பதிவில்லா தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!

railway news - 2026
#image_title

தாம்பரம் – செங்கோட்டை & செங்கோட்டை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

விஜயதசமி மற்றும் தொடர்ந்து வந்த பூஜை விடுமுறைகளை. முன்னிட்டு, தாம்பரம் செங்கோட்டை இடையே ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. செங்கோட்டையில் இருந்து பூஜை விடுமுறை முடிந்து சென்ற வழக்கமான பொதிகை, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள பொதுப் பெட்டிகளில் பயணிக்க, செங்கோட்டை ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த ஞாயிறு அன்று 1750 முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் தீபாவளிக்கு தாம்பரம் செங்கோட்டை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கடிதங்கள் எழுதியுள்ளனர்.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் , ஏனைய தலைமையக அதிகாரிகள், மதுரை திருச்சி சென்னை கோட்ட மேலாளர்கள், மதுரை விருதுநகர் தென்காசி நாடளுமன்ற உறுப்பினர்கள், ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் , ஒலிபரப்புதுறை அமைச்சர் முருகன், ரயில்வே வாரிய தலைவர், பாஜக டில்லி தலைவர் ஆசிர்வாதம் ஆச்சாரி, தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் ஐயாசாமி, தமிழக பாஜக தலைமையக நிர்வாகிகள் ஆகியோருக்கு தாம்பரம் செங்கோட்டை & தாம்பரம் செங்கோட்டை இடையே முன் பதிவில்லா பெட்டிகள் கொண்ட தீபாவளி கால பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

இந்த சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு 18/10/25 சனிக்கிழமை மாலை புறப்பட்டு விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் திருத்தங்கல் சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் பாம்புகோவில் சந்தை கடையநல்லூர் தென்காசி வழியாக 19/10/25 ஞாயிறு காலை செங்கோட்டைக்கு வர வேண்டும்.

மறு மார்க்கத்தில் 20.10.25 திங்கள்கிழமை மாலை செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு புறப்பட்டு 21/10/25 செவ்வாய் காலை தாம்பரத்தை அடைய வேண்டும். குறைந்த அளவு ரயில்களே சென்னைக்கு இயக்கப்படும் செங்கோட்டை – தென்காசி- ராஜபாளையம் – சிவகாசி – விருதுநகர் வழித்தட பயணிகள் இந்த தீபாவளி சிறப்பு ரயில்களின் இயக்கத்தால் பெரிதும் பயனடைவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சமயபுரம் பக்தர்களிடம் பணம் பறிக்கும் கேவலம்; அறநிலையத் துறை திருந்தவே திருந்தாதா?

kadeswara subramaniam hindu munnani - 2026

பக்தர்களிடம் பகல் கொள்ளை அடித்து, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனக் கட்டணத்தில் முறைகேடு நடப்பதால், பக்தர்கள் அவதிப்படுவதாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால்
தொடர்ந்து அந்த கோவிலில் பக்தர்கள் அவமதிக்கப்படும் செயல்கள் அரங்கேறி வருகின்றன.

இன்று சுவாமி தரிசனம் செய்ய இரு பக்தர்கள் சென்றுள்ளனர். சிறப்பு தரிசன கட்டணமாக நபர் ஒன்றுக்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் அவர்களிடம் நானூறு ரூபாய் கொடுத்தால் தான் டிக்கெட் தர முடியும் என்று கோவில் பெண் ஊழியர் ஒருவர் கோபமாக பேசுகிறார். அப்பொழுது பக்தர் இரண்டு பேருக்கு எதற்கு 400 ரூபாய் தர வேண்டும் என கேள்வி எழுப்புகிறார். இதனால் கோபம் அடைந்த பெண் ஊழியர் பக்தரை ஒருமையில் பேசி 400 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தால் எடுங்கள் இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என மிரட்டும் தொனியில் பேசுகிறார். அதுமட்டுமல்லாமல்
கோவில் ஊழியர் பேசியதை வீடியோ எடுத்த பக்தரிடம்
இதைக் கொண்டு போய் கலெக்டரிடம் காண்பியுங்கள்.
20 வருடமாக நான் இந்த கோவிலில் வேலை செய்கிறேன்.
எத்தனையோ பேரை பார்த்து விட்டேன். என்னை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என பேசுகிறார்.

கோவில் பெண் ஊழியர் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோவில்களில் இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகளும், பக்தர்களை மிரட்டும் சம்பவங்களும் நடைபெற்று வருவது பக்தர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

சாமியை தரிசனம் செய்ய தரிசன கட்டணம் வசூலிப்பதையே அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து நிற்கும் வேளையில்
இரண்டு மடங்காக கட்டண தரிசனத்தை வசூல் செய்வது என்பது அராஜகத்தின் உச்சம்.

பக்தியை பணமாக்குவது மட்டுமே அறநிலையத்துறையின் முழு நேர வேலையாக உள்ளது. மன நிம்மதிக்காக கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவில் ஊழியர்கள் அவமதிப்பது என்பது எந்த மாநிலத்திலும் நடக்காத செயலாகும்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்வவதற்கு கோவில் ஊழியருக்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்வியும் எழுகிறது. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்துதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் செய்ய வேண்டிய அறநிலையத்துறை
ரவுடிகள் போல் பக்தர்களை மிரட்டும் கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பல பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அவர்களிடமும் பணம் சுரண்டும் சம்பவங்கள் இந்த கோவிலில் ஏற்கனவே நடைபெற்று இருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்களை தாக்கிய சம்பவமும் அரங்கேறியது.

கோவில் ஊழியர் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது நிச்சயமாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும். இவர்களின் சம்மதத்தோடு தான் கட்டண கொள்ளையில் கோவில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். நிர்ணிக்கப்பட்ட கட்டணத்திற்கும் மேலாக வசூல் செய்யும் பணத்தில் இவர்களுக்கும் பங்கு பிரித்து தருவதால் தான் எந்த விதமான அச்சமும் இன்றி பெண் ஊழியர் பக்தர்களை அவமதித்து பேசுகிறார்.

400 ரூபாய் கட்டணம் கொடுத்தால் கோவிலுக்கு உள்ளே வாருங்கள் இல்லையேல் வெளியே செல்லுங்கள் என்கின்ற ஆணவப் பேச்சின் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது.

திராவிட மாடல் ஆட்சியில் இறைவனே மகிழ்ச்சியாக உள்ளான் என மார் தட்டிக் கொள்ளும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சமயபுரம் கோவில் பிரச்சனைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.

இரு மடங்கு கட்டணம் வசூலித்ததோடு பக்தர்களை அவமதிப்பிற்கு உள்ளாகிய கோவில் பெண் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும்
சமயபுரம் மாரியம்மன் கோவில் மட்டுமல்லாது தமிழகத்தில் அறநிலையதுறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்த கோவிலிலும் இது போன்ற ஊழல்களும்
பக்தர்களின் அவமதிப்பு செயல்களும் நடைபெறக் கூடாது எனவும் இந்து முன்னணியின் வலியுறுத்துகிறது.