Home Blog Page 5904

சங்ககிரி அருகே சாத்துக்குடி ஏற்றிச் சென்ற டெம்போ விபத்து: 4 பேர் பலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலி ஆயினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கோவைக்கு ஒரு மினி டெம்போவில் சாத்துக்குடி பழம் ஏற்றிக் கொண்டு சேலம் சங்ககிரி குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ சென்ற போது, முன்புறம் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாதேஸ் சின்னதம்பி முருகன் காவேரி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலிசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவர்களின் உடல்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடையாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்து, சங்ககிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்துடன் தமிழக பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: வைகோ காரணமா?

சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, பாஜக தலைவர்கள் சனிக்கிழமை நேற்று திடீரென சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக தலைவர்கள், இது நட்பின் அடிப்படையிலும், மரியாதை நிமித்தமாகவும் நடைபெற்ற சந்திப்பு என்றனர். இருப்பினும் இது வைகோ.,வின் நடவடிக்கைகளின் பாதிப்பு என்று கூறப்படுகிறது.

பாஜக.,வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக., கூட்டணியை விட்டு ஒரு கட்டத்தில் விலகியது. மேலும், கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக., உள்ளிட்ட பிற கட்சிகள் தங்கள் நிலையை அதன் பின்னர் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த தேமுதிக., தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியை வரவேற்று பேட்டி அளித்திருந்தார்.

மேலும், சென்னையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ., மக்கள் நலக் கூட்டணியை விஜயகாந்த் பாராட்டிப் பேசியதாகவும், அவரை நேரில் சந்தித்துப் பேசி, தங்களது கூட்டணிக்கு வர அழைப்பு விடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் நலக் கூட்டணி குறித்த விஜயகாந்தின் கருத்தும், வைகோவின் அழைப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு உள்ளிட்டோர் விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது என்ன பேசினார்கள் என்பது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக., தலைவர்கள், விஜயகாந்தை நட்பு மற்றும் மரியாதை அடிப்படையில் சந்தித்ததாகவும், அரசியல் ரீதியாக எதையும் பேசவில்லை என்றும் தெரிவித்தனர்.

கல்வியை கடை சரக்காக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது : கருணாநிதி வலியுறுத்தல்

 
கல்வியை கடை சரக்காக்கும் உலக வர்த்தக அமைப்பு உடன்பாடு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
 
கருணாநிதி வெளியிட்டுள் அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளை சோந்த வர்த்தக அமைச்சர்களின் மாநாடு கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சேவைத்துறையில் வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கையில் இந்தியா தற்போது கையெழுத்திடும் அபாயம் உள்ளது. அந்த உடன்படிக்கை ஒப்பந்த வடிவம் பெறுமானால் இனிமேல் உயர்கல்வி வணிகமயமாகிவிடும்.
 
இந்திய உயர்கல்வியில் வெளிநாடுகளின் மேலாதிக்கம் அதிகரிக்கும் என்று கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய கல்வி துறையில் இப்போதே தனியாரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உயர்கல்வியில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையும் அனுமதித்தால் கல்வி சேவை என்பது மாறி சந்தை பொருட்களில் ஒன்றாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கல்வி, வணிகம் செய்ய வரும் போது இட ஒதுக்கீடு, கல்வி உதவி தொகை, இந்திய மொழிகள் ஆகியவற்றுக்கு பாதகம் ஏற்படும் என்று கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். கல்வியை கடை சரக்காக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என்று பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்த போதிலும் மத்திய பாஜக அரசு அதனை காதில் போட்டுக்கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
 
நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும். மத்திய பாஜக அரசு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

 

உயர் கல்வியை வணிக மயமாக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் அபாயம்! : கருணாநிதி வேதனை

சென்னை:

உயர்கல்வியை வணிக மயமாக்கும் பொது உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடும் அபாயம் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக அமைப்பு மாநாடு நைரோபியில் நடைபெற்று வருகிறது. இதில் சேவைத்துறையில் வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டால் உயர்கல்வி வணிக மயமாகிவிடும் என்று கல்வித்துறை நிபுணர்களின் கவலையை கருணாநிதி அறிக்கையில் தெரிவித்து, தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக வர்த்தக அமைப்பு (WTO) உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பத்தாவது வர்த்தக அமைச்சர்களின் பத்தாவது மாநாடு கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில், இந்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், சேவைத் துறை யில் வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கையில், இந்தியா தற்போது கையொப்பமிடும் அபாயம் உள்ளது. அப்படி அந்த ஆபத்து ஒப்பந்த வடிவம் பெறுமானால், இனிமேல் உயர் கல்வி வணிகமயமாகி விடும்; கல்வியின் அடிப்படை நோக்கமே நொறுங்கிச் சின்னாபின்னமாகி விடும் என்று நமது கல்வியாளர்கள் கருது கிறார்கள். இந்திய உயர் கல்வியில் வெளிநாடுகளின் மேலாதிக்கம் அதிகரிக்கும். ஜனநாயக ரீதியில் செயல் படும் உயர் கல்வி அமைப்பின் அடித்தளம் வலுவிழக்கும்.

கல்விச் சேவையை வணிக மயமாக்கும் முயற்சி, 160 நாடுகள் உறுப்பினர் களாக உள்ள உலக வர்த்தக அமைப்பின் தோகா மாநாட்டில் 2001ஆம் ஆண்டு தொடங்கியது. 2005இல் உயர் கல்வியில், உலக வர்த்தக அமைப்புக்கு சந்தை வாய்ப்பை வழங்கும் ஒப்புதலை, உறுப்பு நாடான இந்தியாவும் ஆமோதித்தது. ஆனால் இதற்கான பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.

இந்தியக் கல்வித் துறையில், இப்போதே தனியாரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உயர் கல்வியில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களையும் அனுமதித்தால், கல்வி, சேவை என்பது மாறி, சந்தைப் பொருள்களில் ஒன்று என்றாகி விடும். உலக வர்த்தக அமைப்பின் 160 நாடுகளும் இந்தியக் கல்வித் துறையில் நுழைந்து வர்த்தகம் செய்ய அனுமதி கிடைத்து விடும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கல்விவணிகம் செய்ய வரும் போது அவர்களின் பாடத் திட்டங்கள், ஆசிரியர்களின் தரம் போன்றவற்றை ஒழுங்கு படுத்த இங்குள்ள கல்வி அமைப்புகளால் இயலாது. எப்படியென்றால், பல்கலைக் கழக மானியக் குழு, தொழில் நுட்பக் கல்விக் குழு, மருத்துவக் கவுன்சில் போன்ற அமைப்புகளைக் கலைத்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக பிற சேவை களில் ஏற்கனவே இருப்பதைப் போன்ற தற்சார்பு ஒழுங்கு முறை ஆணையங்கள் அமைக்கப்பட்டு விடும். அவை, தற்சார்புத் தன்மை கொண்டதாகவும், வெளி நாட்டு மூலதனத்துக்கு சாதகமாகவும் இருக்கும். மேலும் இட ஒதுக்கீடு, கல்வி உதவி, இந்திய மொழிகள் ஆகியவற்றுக்கும் பாதகம் ஏற்படுத்தும். மேலும் சிறுபான்மை நிறுவனங்களுக்கான மானியங்கள் போன்றவை கூட கேள்விக்குறியாகும்.

இந்திய நாட்டின் சட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு கல்வி வியாபாரத்தில் முதலீடு செய்யும் இந்திய மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் நலன் காக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய நீதி மன்றங்கள் எந்தக் கல்வி நிறுவனத்தின் மீதான வழக்கையும் விசாரிக்க இயலாது. ஐந்தாண்டிற்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று, ஆட்சி மாறினால் கூட, ஒப்பந்தத்தைத் தற்போது ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுவிட்டால் பின்னர் அதைத் திரும்பப் பெற இயலாது.

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் இ. பாலகுருசாமி இது பற்றிக் கூறும்போது, அன்னிய கல்வி நிறுவனங்களை அனுமதித்தால், இந்தியாவில் கல்விக் கட்டணம் உயரும். இங்கே குறைந்த எண்ணிக்கையில் உள்ள தரமான ஆசிரியர்களையும், கூடுதல் ஊதியம் தருவதாகக் கூறி, அன்னிய கல்வி நிறுவனங்கள் அழைத்துச் சென்று விடுவார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் பேராசிரியர்கள் பலர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் எப்படிப்பட்ட பேராபத்துகள் வரக் கூடுமென்று கருத்து தெரிவித் திருக்கிறார்கள்.

கல்வியை முழுமையாகக் கடைச்சரக்காக மாற்றும் “காட்ஸ்” ஒப்பந்தத்தில் மத்திய பா.ஜ.க. அரசு கையெழுத்திடக் கூடாதெனக் கோரி பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தும், இந்திய அரசு அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. புதிய கல்விக் கொள்கை காரணமாக கல்வி கற்பதற்காக வழங்கப்பட்டு வந்த உதவித் தொகைகள் ரத்து செய்யப்படுவதுடன், இட ஒதுக்கீடும் ரத்து செய்யப்படும். கல்வியில்சிறந்தவர்கள் என்று ஒரு சதவிகிதமும், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ஒரு சதவிகிதமும் மட்டுமே உதவித் தொகை பெறலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது. இத்தனை ஆபத்துகளைக் கொண்ட ஒப்பந்தத்தில் தங்கள் நாடுகள் கையெழுத்திடக் கூடாது என்று ஆப்பிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாதென்று இந்தியா முழுதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் இதைப் பற்றி மாணவர்கள் சார்பில் தெரிவித்திருக்கின்றனர்.

நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திடுவது நாடாளு மன்றத்தையும் ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயலாகும். முறைப்படி நாடாளுமன்றத்தில் இதுபற்றிய பிரச்சினை கொண்டு வராவிட்டாலுங்கூட, தி.மு. கழகத்தின் சார்பில் தம்பி திருச்சி சிவா நேற்றையதினம் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாதென வலியுறுத்திப் பேசியிருக்கிறார். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து போராடி நிலைநாட்டிய சமூக நீதி அடிப்படையிலான அனைத்துச் சட்டங்களும் அவற்றின் பலன்களும் இனி இல்லாமலே போய் விடும்.

இத்தனை பேராபத்துகள் நிறைந்த, இந்திய சமுதாய விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது. மத்திய பா.ஜ.க. அரசு, உடனடியாக இந்த ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று தி.மு. கழகத்தின் சார்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

என்று கருணாநிதி இந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தி.மு.க பட்டமரம் : இனி துளிர் விடாது : ராமதாஸ்

 
 
தி.மு.க பட்டமரம் : இனி துளிர் விடாது : என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
 திருச்சியில் நேற்று ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது : –
 
சென்னை மழை வெள்ளம், ஒரு பாடத்தை நமக்கு கற்றுத்தந்தது. எனவே, திருச்சியை துணை தலைநகராக அறிவிக்க வேண்டும். திருச்சியில், ஆயிரம் ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. தவிர, ஏழு வழித்தடத்தில் ரயில் சேவையும், சர்வதேச விமான நிலையமும் உள்ளன. வேளாண், இயற்கை வளம் சார்ந்த துறைகள் சிலவற்றை, திருச்சிக்கு இடமாற்றம் செய்யும் போது, புதிய தொழில் வேலை வாய்ப்பு ஏற்படும். ஏன், ஒரு சில கூட்டத் தொடரைக் கூட, திருச்சியில் நடத்தலாம். ‘2013ம் ஆண்டுக்குள், 5,000 மெ.வா., மின் உற்பத்தி, 3,000 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படும்’ என, முதல்வர் அறிவித்தார்.
 
நான்கு ஆண்டு முடிந்தும், ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய வில்லை. சர்க்கரை ஆலைகள், 1,050 கோடி ரூபாய் கரும்புக்கான நிலுவை தொகையை இழுத்தடிப்பு செய்கின்றன. தமிழகத்தின், வேளாண் வளர்ச்சி விகிதம் மைனஸ், 12.1 சதவீதமாக குறைந்து, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, 2.42 லட்சம் கோடி முதலீடு வாங்கியதாக அறிவித்து, ஒரு மாதத்தில் தொழில் துவங்க அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
 
ஆனால், 100 நாட்கள் ஆகியு,ம் இன்று வரை ஒரு தொழிற்சாலைக்கு கூட அனுமதி வழங்கவில்லை. இது, முதல்வரின் ஏமாற்று வேலை. பார்லி கூட்டத்தொடரில், ஆறு மசோதாக்கள் நிறைவேற்ற எதிர்கட்சிகள் அனுமதிப்பதாக அறிவித்தன. இதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்திருத்த மசோதா இடம்பெறவில்லை. ஏற்கனவே கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதித்து இருந்தால், தற்போது மசோதாவில் இடம் பெற்று இருக்கும். அவசர சட்டத்தை இயற்றி, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில், தற்போது உள்ள சூழலில், ஐந்து, ஆறு கூட்டணி கட்சிகள் உருவானாலும், சட்டசபை தேர்தலில் ஆளும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக வெற்றி கிடைக்காது. அதுபோல தி.மு.க பட்டமரம் :இனி துளிர் விடாது.
 
முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு போவது உறுதி. சரியான கணக்கு போட உச்சநீதிமன்றத்தில் நிறைய நீதிபதிகள் உள்ளனர். சென்னை வெள்ள பாதிப்புக்கு முன், பின் என்ற கருத்து கணிப்புகள் பொய்யானவை. ஒரு வாரப் பத்திரிக்கை, 5,000 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு கருத்து கணிப்பை தொடர்ந்து அவர்களுக்கு சாதகமாக வெளியிட்டு வருகிறது. ராஜ்ஜியத்தை இழந்தவர், ராஜநடை போட்டு நடந்து வருகிறார். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டணம் இரு மடங்கு அதிகரிப்பு: மசோதாவில் கையெழுத்திட்டார் ஒபாமா

வாஷிங்டன்:
அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டார்.

அமெரிக்காவில் ஹெச்-1பி மற்றும் எல்-1 வகையிலான நுழைவு இசைவு (விசா) பெற்றுப் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்ட இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் 4,000 டாலர் (சுமார் ரூ.2.65 லட்சம்) கூடுதல் கட்டணம் செலுத்த வகைசெய்யும் சட்ட மசோதாவில் அந்நாட்டு அதிபர் ஒபாமா சனிக்கிழமை கையெழுத்திட்டார். இதனால், ஹெச்-1 பி விசாவுக்கு இதுவரை சுமார் ரூ.1.32 லட்சம் வரை கட்டணம் செலுத்தி வந்த மேற்குறிப்பிட்ட இந்திய நிறுவனங்கள், இனி ரூ.5.30 லட்சம் முதல் ரூ.6.63 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், அது தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக மையக் கட்டடங்கள் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும், மறுவாழ்வுக்கான சிகிச்சை அளிக்கவும் ஏதுவாக நிதி திரட்டும் வகையில், சிறப்புச் சட்டம் ஒன்றை கடந்த 2009-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு இயற்றியது. இதன்படி, ஹெச்-1பி மற்றும் எல்-1 வகையிலான விசாக்களைப் பெற்று பணிபுரியும் 50 சதவீத ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், அமெரிக்க அரசுக்கு கூடுதல் சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் தாக்கம், பெரும்பாலும் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்துவதாக அமைந்தது.

இந்தச் சூழலில், அத்திட்டம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, இந்தச் சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டிருப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தக் கூடுதல் கட்டண நடைமுறை அமலுக்கு வரும் என அந்நாட்டு விசா துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீள பிரார்த்தனை நிகழ்ச்சி

சென்னை:
சேவா பாரதி – சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஞாயிறு ஏற்பாடு செய்துள்ளன.

தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே பலவேறு தளங்களில் சேவையாற்றிவரும் சேவா பாரதி அவர்களுக்காக பிரார்த்தனை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த பக்தர்களையும் குருசாமிகளையும் இணைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு ஐயப்பப் பிராத்தனை ஏற்பாடாகியுள்ளது. சேவா பாரதியின் இந்தப் பணியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் சென்னையில் மட்டும் அடுத்த ஒரு வாரத்திற்குள் 27 இடங்களில் சிறப்பு பிராத்தனைகள் ஏற்பாடாகியுள்ளன. இதன் அடிப்படையில் முதல்நிகழ்ச்சி ஞாயிறு 20.12.2015 இன்று மாலை புளியந்தோப்பில் நடைபெற உள்ளது.

பக்குவப்படாதவர்கள்!

இளையராஜா விவகாரம் இவ்வளவுக்கு பெரிதாக்கப்படுவதும், வெகுஜன சமூகம் அந்த நிருபரை வசை பாடுவதும் ஏனோ?

இளையராஜா பொது இடங்களில் வருவது குறைவு… அப்படி ஓர் இடத்துக்கு அவர் வந்துவிட்டார்…. அதனால், நிருபர் அவரிடம் இதுதான் சந்தர்ப்பம் என்று கேள்விக் கணை தொடுத்தார்… இதில் நிருபர் தரப்பில் எந்தக் குற்றமும் இல்லை! அடிக்கடி சந்திக்கக் கூடிய நபராகவோ.. அல்லது வைரமுத்து போல் தானாக முன்வந்து கொட்டும் கருத்து கந்தசாமிகளாக இருப்பவர்களாகவோ எனில் இந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கேள்வியை நிருபர் கேட்டிருக்க மாட்டார். மேலும், அன்னக்கிளி, ஆத்தா ஆத்தோரமா வாரீயான்னு பாட்டு கொடுத்து ஒரு சமுதாய வீழ்ச்சியின் துவக்க நிலையில் இருந்தவர் என்பதால்… அவரிடம் சிம்பு குறித்த பாடலுக்கான கருத்தைக் கேட்பது முற்றிலும் நியாயமே! இசையமைப்பாளர் என்ற வகையில் அவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும்?

பரபரப்பையும் விவாதங்களையும் முன்வைத்தே ஊடகங்கள் இயங்குகின்றன… இது உண்மை. அந்த மாதிரியாக வளர்க்கப்பட்ட செய்தியாளர், அவருடைய பணியை செய்கிறார். அவருடைய கேள்வியால், இளையராஜா ஏதாவது பதில் சொல்லியிருந்தார் என்றால்… அது சிம்பு விவகாரத்துக்கு மேலும் வலு சேர்த்திருக்கும். அல்லது நீர்த்துப் போகச் செய்திருக்கும். இளையராஜாவின் கருத்து வேறு திசையில் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கலாம் அல்லது ஊடகங்களில் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கலாம்.

பொதுவாக, வளர்ந்த நிலையில்  உள்ளவர்களிடம் கேள்வி கேட்பதே, ஓர் அறிவுரையை அவர்கள் வழங்குவார்கள், அல்லது இந்த இளைய சமுதாயத்தின் போக்கு சரியில்லை, மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள் என்று எதிர்பார்த்துதான்! அந்த நிருபருக்கும் அத்தகைய எண்ணம் இருந்திருக்கக் கூடும். சிம்பு செய்த தவறுக்கு இளையராஜா ஏதாவது அறிவுரை கூறுவார், அல்லது இளைய சமுதாயம் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார் என்பதை எதிர்பார்த்துதான் அவர் கேள்வி எழுப்பியிருக்கக் கூடும். ஆனால், இந்த விஷயத்தில் அவர் கருத்து சொல்வதும் சொல்லாததும் அவரின் விருப்பம். உரிமை. 

இருப்பினும், கனத்த இதயத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.. அதில் இப்படி ஓர் கேள்வி தேவையா என்று எண்ணினால்… அந்தச் சூழல் சம்பந்தப்பட்ட நபருக்குத்தானே ஒழிய செய்தியாளருக்கு அல்ல… அவர் சூழ்நிலைகளின் தாக்கத்துக்குள் புகுந்து கொண்டு, அவரும் சூழலோடு ஒத்திருந்தார் எனில், செய்தி வெளியே வராது. சூழலோடு தாமரை இலைத் தண்ணீர் போல் விலகியே இருக்க வேண்டும்… அதுதான் நிருபருக்கான லட்சணம். அதை அந்த நிருபர் சரியாகத்தான் செய்தார். தவறு இல்லை! 

மனிதாபிமான அடிப்படையில் அவசர கால உதவிகளைச் செய்யலாமே ஒழிய, முதல் வேலை செய்தி சேகரிப்பதும், அதை அளிப்பதும்தான்!

இந்த நிலையில், சூழலியலைப் புரிந்து கொண்டு, இளையராஜா “நோ கமென்ட்ஸ்”, “இந்த இடத்தில் இந்தக் கருத்து சொல்ல விரும்பவில்லை”, “தேவையற்ற கேள்வி” என்று சொல்லி நகர்ந்திருக்கலாம். அல்லது, மௌனமாக அந்த இடத்தை விட்டு சென்றிருக்கலாம். ஏனெனில் அவர் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு, நகரப் போகும் நிலையில்தான் இருந்தார். அவர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் நகர்ந்திருப்பாரேயானால் இந்த அளவுக்கு சர்ச்சை வந்திருக்காது. ஊடகத்தில் வளரும் நிலையில் அல்லது, ஓரளவு முகம் அறிந்த நபராகவே இருந்தாலும், அவரைப் பார்த்து “உனக்கு அறிவிருக்கா?” என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் அற்றது. ஒரு குழந்தையைப் பார்த்துக் கூட அவ்வாறு முட்டாப் பயலே, அறிவு கெட்டவனே என்று சொல்லித் திட்டுவது, பெரியவர்களுக்கு அழகில்லை. சக மனிதரைப் பார்த்து, அல்லது வளர்நிலை இளைஞரைப் பார்த்து அவ்வாறு கேட்பது, வளர்ந்துவிட்ட மனிதருக்கு அழகில்லைதான்! அதை வளர்ந்த நிலையில் இருக்கும் இளையராஜா செய்து விட்டார்.

அந்த நிருபரும் சூழலியலைப் புரிந்து கொண்டு, விலகியிருக்கலாம். மேலும் மேலும் விவாதம் செய்யும் நோக்கில் முன்னேறிச் செல்லும் நிலையைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால், இதை மீடியாக்கள் பெரிது படுத்துவதாக பார்வையாளர்கள் கருதினால், மீடியாக்களின் பணியையும் நெருக்கடியையும், தற்போதைய போட்டி உலகையும் கருத்தில் கொண்டு யோசித்துப் பாருங்கள். வாசகர்கள் வாசகர்களாகவே தங்கள் கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்ளட்டும்! ஒரு பார்வையாளனுக்கும் செய்தியாளனுக்கும் உள்ள வேறுபாடு அது! அந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் போதும்! சர்ச்சைகள் சுற்றிச் சுற்றி வராது! மொத்தத்தில்… நாம் பக்குவப்படாதவர்கள்!

சினிமாவில் வாய்ப்பு குறைய யார் காரணம்?: பாவம்ன்னா

எனக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைவதற்கு பிரபல முன்னணி மலையாள நடிகர் ஒருவர்தான் காரணம் என்று நடிகை பாவனா கூறியுள்ளார்.

பாவனா குறிப்பிட்டுள்ள அந்த முன்னணி நடிகர் தோழி மஞ்சு வாரியர கணவர் திலீப் என மலையாள சினிமா உலகில் பேசப்படுகிறது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையில் சோனியா, ராகுலுக்கு ஜாமீன்

புது தில்லி:

நேஷனல் ஹெரால்ட் வழக்கில், ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையில் சோனியா, ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தனிநபர் ஜாமீனில் ஏ.கே. அந்தோணி, பிரியங்கா ஆகியோர் கையெழுத்து இட்டனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜரான காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 4 பேருக்கும் பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து சோனியா மற்றும் ராகுல் தரப்பில் தலா ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

சோனியா காந்திக்கான தனிநபர் ஜாமீன் பத்திரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி கையெழுத்திட்டார். ராகுலுக்கான ஜாமீன் பத்திரத்தில் அவரது தங்கை பிரியங்கா கையெழுத்திட்டார். இதையடுத்து இருவருக்கும் பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

வழக்கு விசாரணை 2016ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை அடுத்து சோனியாவும், ராகுலும் நீதிமன்றத்தில் இருந்து கிளம்பிச் சென்றனர். 

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் நேரில் ஆஜராகினர். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும், பத்திரிகையாளர்களும் குவிந்தனர். இதனால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.