Home Blog Page 5997

நெல்லை அருகே கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

நெல்லை:

நெல்லை அருகே நான்கு வழிச் சாலையில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை நாங்குநேரி வாகைகுளம் புதுகாலனி நான்குவழிச் சாலையில் நாகர்கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், ஒரு வளைவில் திரும்பிய போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பெண்கள் 2 பேர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியில் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த நாங்குநேரி டிஎஸ்பி பொன்னுசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நடிகர் விஜய், சமந்தா, நயன்தாரா வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

சென்னை:
நடிகர் விஜய், நடிகை நயன்தாரா, புலி படக் குழுவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

நடிகர்  விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் நாளை வெளியாகிறது. சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் புலி திரைப்படத் தயாரிப்புக் குழுவினர் வீடுகளில் இன்று காலை வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிலும், சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள புலி பட இயக்குனர் சிம்புதேவனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் அஞ்சுகிராமத்தில் உள்ள புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீட்டிலும் சோதனை நடந்தது. புலி திரைப்படம் தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தில் 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மதுரையில், வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று காலை 5 மணி அளவில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். மதுரை தெற்கு மாசி  வீதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் உள் பக்கமாகப் பூட்டிக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், கீரைத்துரை முத்துப்பிள்ளை தெருவில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.  இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நடிகை நயன்தாராவின் கொச்சியில் உள்ள வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். இதைத் தொடர்ந்தே இவரது வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதுபோல், நடிகை சமந்தாவின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடந்தது.  சென்னை போட் கிளப், குரோம்பேட்டையில் உள்ள சமந்தா வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.

தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களிலும் இன்று காலை ஒரே நேரத்தில் சுமார் 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயில்களில் யானை வளர்க்க தடை கோரும் மனு: அரசுக்கு நோட்டீஸ்

மதுரை:

கோயில்கள் மற்றும் வீடுகளில் யானை வளர்க்கத் தடை கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டது.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எம்.சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,

யானைகள் இயற்கைச் சூழலில் வனத்தில் இருக்கும் போது அதிக நாள்கள் வாழ்கின்றன. வீடுகள், கோயில்கள், மிருகக்காட்சிசாலைகளில் யானைகளைக் கட்டி வைப்பதால் குறுகிய காலத்தில் இறந்து விடுகின்றன. இதனால் யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் யானைகளை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. பயிற்சி என்ற பெயரில் யானைகள் துன்புறுத்தப்படுகின்றன.

கோயில் திருவிழாக்களில் யானைகளின் முதுகில் அதிக பாரம் ஏற்றுவது, பல மணி நேரம் வெய்யிலில் நிறுத்தி வைப்பது, உணவு கொடுக்காமல் விடுவது என தொந்தரவுகள் தொடர்கின்றன. யானைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே தமிழகத்தில் கோயில்கள், வீடுகளில் யானைகள் வளர்க்க தடை விதித்து, அவற்றை முதுமலை அல்லது மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இதற்கு அக். 6 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக உள்துறைச் செயலர், வனத்துறை முதன்மைச் செயலர், அறநிலையத்துறை செயலர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சபாநாயகருக்கு எதிராக கண்டன சுவரொட்டி

கண்டன சுவரொட்டி

சட்டசபையில் முதல்–அமைச்சர் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்த பிறகு கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஒரு பிரச்சினை குறித்து பேச முயன்றார். சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.தொடர்ந்து அவர் எழுந்து நின்று பேச முயன்றார். சபாநாயகர் பல முறை சொல்லியும் அவர் இருக்கையில் அமரவில்லை. இதை தொடர்ந்து கிருஷ்ணசாமியை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவரை காவலர்கள் வெளியேற்றினார்கள்
இந்நிலையில் திருநெல்வேலி மேற்கு மாவட்டம் சார்பில்  சபாநாயகர் தனபாலை கண்டித்து கண்டன சுவரொட்டிகளை பாவூர்சத்திரம் ,கீழப்பாவூர் பகுதிகளில் ஒட்டியுள்ளனர்

 

சட்டசபை தேர்தலில் 90 சதவீத’கிரிமினல்’கள் வேட்பாளர்களாக களத்தில் குதிப்பு

 

சாமானிய மக்களுக்கும் சரிசமமான உரிமைகளும் சுயமரியாதையும் கிடைக்க வேண்டும்.என்பதற்காகத் தான் ஜனநாயகத்தையே நமது முன்னோர்கள் கொண்டு வந்தனர். ஆனால், இப்போது ‘கிரிமினல்’களின் கையில் சிக்கிக்கொண்டு ஜனநாயகம் படாதபாடு படுகிறது என்பதற்கு உதாரணம் தான் பீகார் மாநிலம்.

நடக்க இருக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் களம் இறங்கி உள்ள வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் மீது ‘கிரிமினல்’ வழக்குகள் உள்ளன. அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடக்கப்போகும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் ‘கிரிமினல்’கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

மொத்த வேட்பாளர்களில் 99 பேர் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிலும் 30 பேர் மீது கொலை, ஆள் கடத்தல், மிரட்டி கொள்ளையடித்தல் போன்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது

கேரள மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சாலை விபத்தில் பலி

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி செல்லும் வழியில் உள்ள வாலைக்குளம் பகுதியில் வேனும், காரும் விபத்துக்குள்ளாகின.

இந்த சம்பவத்தில்கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகேயுள்ள பூந்துரை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியானார்கள் . சிலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழக கல்வித்துறை அமைச்சர் மீது புகார் கொடுத்து தீக்குளிக்க முயற்சித்த இளம் பெண்

 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மோலையானூர் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் தலைமைச் செயலகம் வந்து மனு கொடுத்தார். அதில் உயர் கல்வித்துறை அமைச்சர் மீது புகார் கூறப்பட்டு இருந்தது.

மனு கொடுத்த பின் கவிதா திடீர் என்று தலைமைச் செயலக 4–ம் நம்பர் நுழைவு வாயில் அருகில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்தப் பெண்ணை காப்பாற்றி அழைத்துச் சென்று விட்டனர். இந்தசம்பவத்தால் தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது

தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி : இளங்கோவன்

காங்கிரசுக்கும், கலைஞர்களுக்கும் இடையே நெருங்கி தொடர்பு உண்டு. மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகும் காங்கிரஸ் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் காமராஜரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தான்.

வருகிற 1–ந் தேதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிவாஜியின் பிறந்தநாள் விழா காமராஜர் அரங்கில் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

2–ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு ஏன் வேண்டும் என்பது பற்றி துண்டு அறிக்கை விநியோகிக்கப்படும். வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவி சோனியா, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்பட தலைவர்கள் பற்றி இழிவாக விமர்சனம் செய்து வருகிறார்.

அவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. சோனியா, மன்மோகன்சிங் மீது எந்த நீதிமன்றங்களிலும் வழக்குகள் கிடையாது. தொடர்ந்து இதே போல் அவர் விமர்சனம் செய்தால் தமிழ்நாடு முழுவதும் மோடியின் கொடும்பாவி எரிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.

மதசார்பற்ற இந்தியாவை மதவெறி நாடாக மாற்ற அவர் முயல்கிறார். தமிழ்நாட்டில் மது விலக்கு சாத்தியம் இல்லை என்ற அமைச்சர் சொல்வது ஏற்கக்கூடியது அல்ல.

1967 வரை காங்கிரஸ் ஆட்சி மதுவிலக்கை அமுல்படுத்தி காட்டியது. எனவே எங்களால் அது முடியும்.முன்னதாக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவுக்கு இளங்கோவன் மலர்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்துவது வெறும் கண் துடைப்பு. இதில் நியாயம் கிடைக்காது. அடுத்து வருகிற ஆட்சி காங்கிரஸ் ஆட்சியாக இருக்கும். அல்லது காங்கிரஸ் ஆதரிக்கும் ஆட்சி அமையும். அப்போது மீண்டும் விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இளங்கோவன் கூறினார்.

 

15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி 3½ லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த போராட்டம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த குழுவினர் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் இளம்பரிதி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் அக்டோபர் 8–ந்தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை உள்ள 3.5 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது