Home Blog Page 6057

இந்தியாவின் உடனடி உதவி: நேபாளத் தூதர் உருக்கம்

deep-upadayayaநேபாளத்தில் இன்று முற்பகல் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து, தொடர்ந்து 4 முறை நிலம் அதிர்ந்தது. இதனால் நேபாளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. கட்டடங்கள் பல இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு சுமார் 100 பேர்வரை பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், நேபாளத்துக்கு தனது உடனடி உதவிக் கரத்தை இந்தியா நீட்டியுள்ளது பிரதமர் மோடி, உடனடியாகத் தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை செய்வதாக்க் கூறி செயலில் இறங்கினார். இதனிடையே, தாங்கள் இந்தியாவுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், இந்தியாவின் உடனடி உதவிக்கு நன்றி கூறுவதாகவும் இந்தியாவுக்கான நேபாள தூதர் தீப் உபாத்யாய கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துடிப்பான செயல்பாடுகள் நேபாளத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாகக் கூறினார். அவர் மேலும், நேபாளத்துக்கு மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவ அவசர சிகிச்சை அமைப்புகள் தேவைப்படுகின்றன என்றும், அவற்றை உடனே அனுப்பி வைக்க உதவுமாறும் இந்தியாவைக் கேட்டுக் கொண்டார்.

காத்மாண்டுவுக்கான விமானங்கள் ரத்து

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து காத்மாண்டு விமான நிலையத்துக்கு வர வேண்டிய, செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. நேபாளத்தில் இன்று முற்பகல் ஏற்பட்ட 7.9 அலகு ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தை அடுத்து, பின்னர் 7.0 என்ற அளவிலும், அதன் பின்னரும் தொடர்ந்து மூன்று முறையும் நில அதிர்வு ஏற்பட்டதாக, நேபாள அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து செல்ல வேண்டிய மற்றும் காத்மாண்டு விமான நிலையத்துக்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவனின் கருப்பு கலர் பிடிக்கலையாம்: தீர்த்துக் கட்டிய மனைவி கைது

அனந்த்:
கணவனின் கருப்பு கலர் பிடிக்கலை என்று காரணம் கூறி, அவரது மனைவி அவரைத் தீர்த்துக் கட்டியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் அனந்த் மாவட்டத்தில் பெட்லாட் தாலுகா, சுந்தரானா கிராமத்தைச் சேர்ந்தவர் பர்ஸானா பானு. 22 வயதாகும் இவர், தனது கணவர் ஃபரூக் மாலேக் என்ற 22 வயதுக் கணவனை குத்திக் கொன்றுள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம், அவரது கருப்பு தோல் கலர் பிடிக்கவில்லை என்பதுதானாம். இதனை பேட்லாட் தாலுகா டிஎஸ்பி பி ஆர். கேலாட் கூறியுள்ளார்.
பர்ஸானா, ஃபரூக் இருவருமே  2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஃபரூக்கின் தோல் கலர் பர்ஸானாவுக்குப் பிடிக்கவில்லையாம். இதனால் இருவருமே உடலுறவு கொள்ளவில்லை என்பதுடன், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்படுமாம்.
இதனிடையே அவரது கணவரை தவிர்ப்பதற்காக, பர்ஸானா தனது பெற்றோரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவிடுவாராம். இதனிடையே 10 தினங்களுக்கு முன்னர் கணவன் வீட்டுக்கு திரும்பிய பர்ஸானாவுடன், ஃபரூக் உடலுறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், பர்ஸானா அதனை மறுத்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், புதன்கிழமை அன்று பர்ஸானாவை ஃபரூக் தாக்கியுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று தனது வயல் புறத்துக்கு வருமாறு பர்ஸானாவை அழைத்துள்ளார் ஃபரூக். ஆனால், பர்ஸானா ஒரு சுத்தியலை எடுத்து ஃபரூக்கை தலையில் தாக்கியுள்ளார். இதில் ஃபரூக் உயிரிழந்தார்.
இதை அடுத்து பர்ஸானாவைக் கைது செய்த போலீஸார், அவர் மீது, 302வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மே 6 முதல் பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்க கடைசி நாள் மே 29ஆம் தேதி. அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-16 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் இந்தக் கலந்தாய்வில் நிரப்பப்படவுள்ளன. அண்ணா பல்கலை வளாகத்தில் அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே மாதம் 6-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். கலந்தாய்வு விண்ணப்பங்களை www.annauniv.edutnea என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதி. கலந்தாய்வு தொடங்கும் தேதி, எத்தனை நாள்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட முடிவுகள் பின்னர் எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கம்: பிகார், சிக்கிம் முதல்வர்களுடன் மோடி பேச்சு

புது தில்லி: நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சனிக்கிழமை இன்று பீகார் மற்றும் சிக்கிம் முதல்வர்களைத் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைக் கேட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களைக் காக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மோடி கூறியுள்ளார். நேபாளம் மற்றும் நம் நாட்டில் பாதிப்புகளை உடனடியாகக் கண்டறிந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட் தகவல்:

இணைய சமவாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மே.2ல் போராட்டம்: ராமதாஸ்

சென்னை: இணைய சமவாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மே 2ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் இணையம் என்பது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையில் நடைபெறும் புரட்சி காரணமாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப், வைபர், யு-ட்யூப் உள்ளிட்ட ஏராளமான செயலிகள் நடைமு¬றைக்கு வந்துள்ளன. இவை தகவல் தொடர்பு, பொழுது போக்கு, அறிவுசார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ளுதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மிகவும் உதவியாக திகழ்கின்றன. ஆனால், இந்த இணைய சமவாய்ப்பைக் கெடுக்கும் நோக்குடன் இதனை மாற்றி பணம் படைத்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துக் கேட்புக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு கருத்துக்களை பெற்றுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் மிகமோசமான பாதிப்புகள் ஏற்படும். இணையத்தில் எல்லா தகவலும் சமமாக கிடைக்காது. பணம் கொடுக்கும் பத்திரிகைகள், நிறுவனங்கள், அரசியல் அமைப்புகளின் தகவல் மட்டுமே மக்களுக்கு வழங்கப்படும். தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இந்த பேராசைத் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இதற்காக இந்தியாவின் இணைய சமவாய்ப்பை உறுதி செய்யும் நோக்குடன் இணைய சமவாய்ப்பு சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் மே 2 ஆம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்திற்கு தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரும், பா.ம.க. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையேற்பார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்

புது வாழ்வுத் திட்டம் சார்பில் நாமக்கல்லில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

கரூர்: புதுவாழ்வுத் திட்டம் சார்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட புதுவாழ்வு திட்டம் சார்பில், எம்.ஆர்.எப்., எல்&டி நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள இளங்கோ திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் ஐந்தாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை கல்வி தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். அவ்வாறு வரும் இளைஞர்கள், தங்களது கல்வி கல்வி சான்றிதழின் அசல் மற்றும் நகலுடன் பங்கேற்க வேண்டும்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தி்ல் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 21 விலை குறைந்து ரூ. 2,523 என்ற அளவிலும், சவரன் ஒன்றுக்கு ரூ. 168 குறைந்து ரூ. 20,184 என்ற அளவிலும் இருந்தது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.23 குறைந்து ரூ. 2,698 என்ற அளவில் இருந்தது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூ. 38.80 என்ற அளவில் விற்பனை ஆனது. பார் வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.260 குறைந்து ரூ.36,220 என்ற அளவில் விற்பனை ஆனது.

தில்லியில் துவங்கியது நிதி ஆயோக் துணைக் கூட்டம்: ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

புது தில்லி: தில்லியில் இன்று நிதி ஆயோக் துணைக் கூட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். தில்லியில் இன்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் நிதி ஆயோக்கின் 2-வது துணைக் கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். சட்டீஸ்கர், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, கோவா, மேகாலயா மாநில முதல்வர்களும் இதில் பங்கேற்று ஆலோசனை நடத்துகின்றனர். இக்கூட்டத்தில் திறன் வளர்ச்சி மேம்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

நிலநடுக்க நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

வாராணசியில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பீதியில், நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். வாராணசியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட அச்சத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். தெருக்களில் திரண்ட மக்கள் அதிக அளவில் திரண்டதால், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர்.