இந்தியாவின் மூத்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் இன்று மாலை புனேயில் காலமானார். அவருக்கு வயது 94. உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வந்த அவர், புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார்.
அறநிலையத் துறை கூடுதல் பொறுப்பு அமைச்சர் காமராஜிடம் ஒப்படைப்பு
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் மாநில அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வசம் இருந்த இந்து சமய அறநிலையத் துறை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தூர் பாண்டியன் திடீரென மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அவர் வசம் இருந்த இந்துசமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜூக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தூர் பாண்டியன் நீடிப்பார் என்று ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் சவரனுக்கு ரூ. 64 குறைவு
சென்னை காலை நேரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ. 64 அதிகரித்த நிலையில், இன்று மாலை, ரூ. 64 குறைந்து, கடந்த வாரம் விற்ற விலையிலேயே நீடிக்கிறது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 8 குறைந்து ரூ. 2660 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 64 குறைந்து ரூ. 21,280 என்ற அளவிலும் உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 8 குறைந்து ரூ. 2845 என்ற அளவில் உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 43.30 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 40,495 என்ற அளவிலும் உள்ளது.
அடுத்த ‘பிரபஞ்ச அழகி’ – ராக்கி சாவந்த் ?
மியாமியில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரபஞ்ச அழகியாக கொலம்பியாவைச் சேர்ந்த அழகி வெற்றி பெற்று பட்டம் வென்றார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து யாரும் வெற்றி பெறவில்லையே என்ற வருத்தத்தில் இருப்பதாகவும், அடுத்த வருடம் தாம் போட்டிக்குப் போவதாகவும் கூறியுள்ளார் இந்தியாவின் ராக்கி சாவந்த். இது குறித்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராக்கி சாவந்த் கூறியபோது… எனது நாட்டுக்காக நான் எதுவும் செய்வேன். இந்தியாவைச் சேர்ந்த யாருமே வெற்றி பெறவில்லை என்பது கவலையாக உள்ளது. உலக அளவில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் அவ்வளவு அழகான யாருமே இல்லையா என்ன? என்று கூறியுள்ளார். இந்நிலையில், ராக்கி சாவந்த் போட்டியில் கலந்து கொண்டால் நானும் ஏன் கலந்து கொள்ளக் கூடாது, எனக்கு ராக்கி சாவந்தை விட டிவிட்டரில் அதிக பின்தொடர்பவர்கள் உள்ளனர். நான் மிஸ் யுனிவர்சாக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் பூனம் பாண்டே. ராக்கி சாவந்த் தனது டிவிட்டில் இது பற்றி தனது ரசிகர்களுக்கு எழுதியுள்ள செய்தியில், “நான் நிச்சயம் வெல்வேன்; காரணம்ஜீஸஸ் என்னை விரும்புகிறார்” என்று கூறியுள்ளார்.
அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா கோலாகலம்
திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் 66-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து,காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பலூன்களையும் வானில் பறக்க விட்டார். பின்னர் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையினர் அணிவகுப்பை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு முதலமைச்சர் பதக்கம் -பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர் வழகினார். இவ்விழாவில் நெல்லை மாவட்ட காவல்துறை ஆணையர் சுமித் சரண், கண்காணிப்பாளர் நரேந்திர நாயர், பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந், மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தை வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
இம்பாலில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்க்குலைக்கும் வகையில் குறைந்த சக்தியுள்ள நாட்டு குண்டுகள் மூன்று இடங்களில் வெடித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று, அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேஜர் முகுந்த் வரதராஜன், நீரஜ் குமார்க்கு அசோக சக்ர விருது
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன், நீரஜ்குமார் சிங் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. தில்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அசோக சக்ரா விருதுகளை வழங்கினார். மேஜர் முகுந்த் வரதராஜனுக்கான அசோக சக்ரா விருதினை அவரது மனைவி இந்து குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். இதே போல நீரஜ்குமார் சிங் வீரத்தை பாராட்டி வழங்கப்பட்ட, அசோக சக்ரா விருதினை அவரது மனைவி பர்மேஸ்வரி தேவி பெற்றுக் கொண்டார். இந்திய கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 12 பேருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.
சென்னையில் குடியரசு தின விழா: கொடியேற்றினார் ஆளுநர் ரோசய்யா
குடியரசு தின விழா சென்னையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செய்தனர். இதையடுத்து முப்படை வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வாகனங்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதக்கங்களை வழங்கினார். சிவகுமார், பழனிவேல்ராஜ் உள்ளிட்ட 5 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த துல்கருணை பாட்சாவிற்கு மத நல்லிணக்கப் பதக்கமும், மது ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக 4 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கமும் வழங்கப்பட்டன. வேளாண் துறை சிறப்பு விருது, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த துரைசாமிக்கு வழங்கப்பட்டது. பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரகாட்டம், கும்மியாட்டம், தம்புரா நடனம், கோலாட்டம் என நடனமாடி மாணவ மாணவியர் அசத்தினர்.
முபாரக் போல் உடையெங்கும் தன் பெயர்: மோடியின் உடைக்கு எழுந்துள்ள விமர்சனம்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றிருந்தபோது, மோடியின் குர்தா போன்ற உடையலங்காரத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டி, இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக உள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்திய பயணத்தில் உள்ள ஒபாமாவுடன் ஞாயிற்றுக்கிழமை தில்லி ஹைதராபாத் இல்லத்தில் சாய் பே சர்ச்சா என்ற வகையில், டீ குடித்த படி பேச்சுவார்த்தை நடத்தினார் மோடி. அப்போது, மோடி அணிந்திருந்த பந்த்கலா ரக உடையில், சிறு சிறு பளிச் கோடுகள் தென்பட்டன. ஆனால், உற்று கவனித்தபோது, அந்தக் கோடுகள் எங்கும் அவரது பெயர் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற அந்த எழுத்துகள் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகின்றது. இவ்வளவு ”காஸ்ட்லி” உடை பிரதமருக்கு தேவையா என்று!
ஆனால், இது புதிதல்ல என்று கூறும் சிலர், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் இதே போன்ற ரகத்தில் கோட் அணிந்திருந்தார் என்கின்றனர்.
தேசியக் கொடி ஏற்றப் பட்டபோது சல்யூட் அடிக்காமல் அமீத் அன்சாரி அவமரியாதை?
தில்லி இன்று நாட்டின் 66 வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது. குடியரசு தின அணிவகுப்பு தில்லி ராஜ்பத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் முதலவதாக நடைபெற்ற தேசியக் கொடி ஏற்றத்தின் போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் சல்யூட் அடித்து மரியாதை செய்தனர். ஆனால், மேடையில் இருந்த துணை குடியரசுத் தலைவர் அமீத் அன்சாரி இரு கைகளையும் தொங்கவிட்டபடி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சல்யூட் அடிக்க இயலாது என்றாலோ, அவ்வாறு தோன்றினாலோ அவர் மேடையை விட்டு அனைவருடனும் கீழே நின்றிருக்கலாம் என்று பெரும்பாலோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

