ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே (ஐஆர்சிடிசி) சனிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த சேவைக் கட்டணத்துடன் இணைந்து சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) வசூலிக்கப்பட உள்ளது.
அதன்படி, ரயில் டிக்கெட் முன்பதிவில், படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.15, ஏ.சி வகுப்புகளில் பயணிக்க, ஒரு நபருக்கு ரூ.30 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.20 மற்றும் ரூ.40-ஆக இருந்த சேவைக் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்து, 2016-17 நிதியாண்டில் ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவுக்கான சேவைக் கட்டணம் திரும்பப் பெறப்பட்ட நிலையில் தற்போது ரயில்வேயில் வருவாய் குறைந்ததையடுத்து மீண்டும் அமல் படுத்தப்படுகிறது. ஐஆர்சிடிசியின் இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை (செப். 1-ஆம் தேதி) முதல் அமல் படுத்தப்படுகிறது.
ஏ.சி அல்லாத பெட்டிகளில் உங்களது ரயில் டிக்கெட் கட்டணம் ரூ. 400 என்று வைத்துக்கொள்வோம். சேவைக்கட்டணம் ரூ.15 செலுத்த வேண்டும். படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ஜி.எஸ்.டி கிடையாது.
ஏ.சி பெட்டிகள் என்றால் கட்டணம் ரூ.1,000 என்று வைத்துக்கொண்டால், சேவைக்கட்டணம் ரூ.30. ஏ.சி ரயில் டிக்கெட்டிற்கு 5% ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி(5%) ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.80 அதிகமாக செலுத்த வேண்டும்