கீழடியும் நுனிப்புல்லும்!

Published:

kizhadi 1 - 2026

கீழடிக்கும் ரொம்ப கீழடில தோண்டி பாத்தா… தெரியும்!

மதுரை – அதாவது கூடல்நகரில் உள்ள கிருதமால் நதியிலதான் மத்ஸ்யாவதாரம் – அதாவது மீன் அவதாரம் நிகழ்ந்ததாம்! – மன்னன் பேரு முதலாம் மனு – சத்தியவிரதன்.

பிரளய காலத்துல மிச்சம் மீதி இருக்குற உயிரினங்களை எடுத்துக் கொண்டு படகில் ஏறிக் கடந்தான் என புராணம் சொல்கிறது.

கும்பகோணத்துல பிரளய காலத்துல… என ஒரு கதை. மகா மகக் கதை!

இவை சற்று மிகப் படுத்தல் களாக, சுவாரஸ்யங்களுக்காக – நாம இந்தக் காலத்துல பத்திரிகைகள்ல பொய்யும் பொலயும் எழுதி மக்களை ஈர்க்குற மாதிரி- அந்தக் காலத்துல எழுதி வெச்சிருந்திருக்கலாம். ஆனா – ஒற்றை வரியில் ஓர் உண்மை – சரித்திர நிகழ்வு நிச்சயம் இருந்திருக்கிறது.

மகா பாரத காலம் என வரலாற்று ரீதியாக குறிப்பிடப் படுவது – 5200 வருடங்கள் முன்பு!

அப்போது பாரத மண்ணில் இருந்த 50 சொச்சம் தேசங்கள்ல நம்ம காவிரி – வைகை நதிக்கரை நாகரிகங்களும் இருந்திருக்கின்றன.

மகா பாரத காலத்து சண்டையில நம்ம பாண்டிய மன்னர்கள் இரு பிரிவாக பிரிந்து சண்டை போட்டார்கள். ஒரு பாண்டியன் மலையத்துவசன், இன்னொருவன் சாரங்கத்துவசன். இதில் ஒரு பாண்டியனை அசுவத்தாமன் கொன்றானாம். மாபெரும் படைகளும் வலிமையும் மிகுந்த இன்னொரு பாண்டியனை பாண்டவர்கள் கொன்றார்களாம். சேரலாதன் உதியன் இரு பக்கத்து வீரர்களுக்கும் சோறாக்கிப் போட்டான் என்கிறது மகா பாரதம்.

அப்போது கபாட புரம் கதைகளும் வருகிறது. குமரிக்கோட்டத்தில் கடல் கொண்ட கபாடபுரம் பற்றிய வர்ணனைகள் மகாபாரதத்தில் உள்ளன.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

2001ம் ஆண்டு, அப்போது ஐஐடி வளாகத்தில் அமைந்திருந்தது என்.ஐ.ஓ.டி., (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓஷியன் டெக்னாலஜி). அந்தப் பிரிவின் ஆய்வாளர்கள் குழு, அப்போது பூம்புகார் கடற்பகுதியிலும், தொடர்ந்து காம்பே வளைகுடா – கட்ச் – த்வாரகா பகுதியிலும் கடல் ஆய்வில் ஈடுபட்டது.

(என் நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில்.. ) இந்திய தொல்லியல்துறை துணை இயக்குனராக இருந்த எஸ்.ஆர்.ராவ், என்.ஐ.ஓ.டி.,யின் கதிரொளி உள்ளிட்ட குழுவினரின் எதிர்பாராத கண்டறிதலாக கடலுக்குள் புதையுண்ட துவாரகா நகரத்தை அப்படியே படி எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

என்.ஐ.ஓ.டி.,யில் ஆய்வாளர் குழுவில் இருந்த திருவான்மியூர் நண்பர் ஸ்ரீதரன் – ஆச்சரியமாக இதனைச் சொன்னபோது, உடனே பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு.

ஓடினேன்… ஐஐடி வளாகத்தில் இருந்த என்.ஐ.ஓ.டி.,க்கு! அப்போது துவாரகை நகரின் படிமங்கள், அப்போது பயன்படுத்தப் பட்ட அழகான கற்களால் அமைந்த பொறியியல் கருவிகள், மிருதுவான கல்லால் அமைந்த ஊசித் துளை உள்ள கருவி, நகரமைப்பு, நடுவே இருந்த குளத்தின் புகைப்படங்கள் என பலவற்றையும் காட்சிப் படுத்தி வைத்திருந்தார்கள்.

ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன். அது குறித்த ஒரு கட்டுரையையும் அப்போது நான் பணி புரிந்த இதழில் எழுதினேன்.

கண்ணன் ஒரு வேடுவனால் தன்னை இந்த உலகில் இருந்து விடுவித்துக் கொண்ட பின்னர், துவாரகாவில் முனிவர் சாபத்தால் யாதவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாய்ந்து, கடல் நீரால் துவாரகை சூழப் பட்டு, கடலுக்கடியில் மறைந்து போனது. அந்தக் கடல் சூழ் நகரம் இப்போது சுமார் 7 கி.மீ., தொலைவில் கடலுக்குள் கிடக்கிறது. அதன் பரிணாமத்தைக் கண்ட போது பிரமிப்பாக இருந்தது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இதுவும் கார்பன் டேட்டிங் முறையில் அலசப் பட்ட போது, அவற்றின் காலம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் என்று கண்டறியப் பட்டதாகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட கலி யுகம் தொடங்கும் கணக்குக்கு சரியாக வந்த சான்று அது!

ராமாயண காலம் அதற்கும் சுமார் 2500 வருடங்கள் முன்னர் நிகழ்ந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். அதாவது இன்றைக்கு சுமார் 7500 வருடங்கள் முன்னர்.!

ராமாயண காலத்திலும், நம் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்தனர். முனிவர்கள் இருந்தனர். ரிஷிகள் இருந்தனர். சித்த புருஷர்கள் இருந்தனர்.

அட அதற்கும் முந்தைய பரசுராமன், ஏன்… முதலாவது அவதாரமான மீன் அவதாரம் எல்லாம் தென்னகத்தில் தான் நிகழ்ந்தது.

கிருதமால் நதியில் சத்தியவிரதன் கையில் அகப்பட்ட மீன் பெரிதாக வளர்ந்து, நான்கு வேதங்களையும் மீட்டெடுத்து வந்ததாக புராணம். அதனாலேயே, மீன் கூடல்நகரான மதுரையம்பதியின் பாண்டியர் கொடி சின்னமாயிற்று! மீனைக் கொண்டு பாண்டியர் அளந்தனர்.

நமக்கும் கடல் கொண்ட குமரிக் கோட்டம் உண்டு. அளந்தால் அகப்படும் அதிசயங்கள் பல இருக்கும்!

கீழடி..?!

வெள்ளத்தில் அடித்து வந்த குப்பைகள் சேர்ந்த மண் மேடு! மேலும் வந்த வெள்ளம் மேலே மூடிவிட்டது. அவ்வளவுதான்! இன்னும் அகன்ற பார்வையை செலுத்தினால் வடநாட்டுக்கும் ஆன்மீக பண்பாட்டு வழிகாட்டிய கலாசாரச் செழுமை கொண்ட ஆதிகாலத்தை நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோமல்லவா..?! அதற்கான வரலாற்று ரீதியான ஆதாரங்களை நாம் அடுக்க முடியும்!

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

ஐஸ் ஏஜ் தியரி என ஒன்று உண்டு. பூமியின் மத்தியரேகை, கடக ரேகையை ஒட்டிய (ட்ராபிகல் ரீஜின்…) பகுதியில்தான் ஆதி மனிதன் வாழ்ந்திருந்தான். பூமி சுழலும் அச்சினை ஒட்டிய இரு துருவங்களைத் தொடர்ந்து பனி மூடியிருந்தது. இரத்தச் சூட்டு உடல் தன்மை கொண்ட மனிதன் பனிப் பிரதேசங்களை ஒட்டி வாழவில்லை. அவன் மிதமான தட்பவெப்ப நிலை கொண்ட பூமத்திய ரேகை, கட ரேகை மகர ரேகையை ஒட்டிய பகுதிகளில் தான் வாழ்ந்தான் என்றும், அங்கிருந்தே அவன் புவியின் துருவப் பகுதி நோக்கி நகர்ந்தான் என்றும் கூறுவர்.

எனவேதான் மனித நாகரிகத்தின் நகர்வு கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியது என்றும், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வரவில்லை என்பதும் இந்தக் கோட்பாட்டின் முடிவு.

அப்படிப் பார்த்தால், மிகத் தொன்மையான கலாசாரம் இங்கே தான் இருந்திருக்க வேண்டும்! அதனால்தான் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினள் என்று நாம் உறுதியாகச் சொல்கிறோம். அத்தகைய தொன்மையை வெறும் 2600 வருடங்களுக்குள் அடக்கி விட இயலாது! மூளை இருந்தால் தமிழன் தன்னை உணர்வான்!

  • செங்கோட்டை ஸ்ரீராம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img