நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி எல்லையில் மசினகுடி, ஆச்சக்கரை, மாவநல்லா, பொக்காபுரம், தொரப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு இன்று முதுமலை புலிகள் காப்பக வனத்துறை சார்பாக அறிவுறுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் மற்றும் விடுதி நிர்வாகத்தினர் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால் வனவிலங்குகளுக்கு தொந்திரவு ஏற்படுவதோடு, வனவிலங்குகள் வழி தவறி ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளின் குட்டிகளும் பட்டாசு சத்தத்தால் பாதிக்கும் சூழல் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிக்காமல் வனவிலங்குகள் மற்றும் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.