கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த மாடலிங் பெண் சோனாலி பிரதீப் குறித்து அவதூறு பரப்பியதாக, திமுக., பிரமுகர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பெண் சோனாலி பிரதீப், அண்மையில் அதிமுக.,வில் இணைந்தார். பின்னர் திடீரென மேயர் பதவிக்காக அதிமுக தலைமையிடம் விருப்ப மனுவும் அளித்தார். இதற்கு முன்னதாக இவர் அதிமுக., பிரமுகர்கள், தலைவர்கள், அமைச்சர்களுடன் புகைப்படங்கள் எடுத்து அவற்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு கிளப்பியதாகக் கூறப் பட்டது. இதை அடுத்து, சோனாலி பிரதீப், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒரு புகாரைக் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ஈரோட்டை சேர்ந்த திமுக பிரமுகர் ரகுபதி இவ்வாறு அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சோனாலி பிரதீப்! 38 வயதான இவர், மாடலிங் துறையில் ஈடுபட்டிருப்பவர். ‘திருமதி இந்தியா’ பட்டம் வென்றவர். அண்மைக் காலமாக கோவை ஆளுங்கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் நபராகவும் இருக்கிறார். இவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
குறிப்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘பொக்கே’ கொடுப்பது, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு பொன்னாடை அணிவிப்பது, அதிமுக., அலுவலகத்தில் மேயர் பதவிக்கு விருப்ப மனு கொடுப்பது.. என சில படங்கள் அதிமுக.,வினரை கடுப்படிக்க வைத்தது.
இவர்தான் மேயர் வேட்பாளர் என்றும் சிலர் கொளுத்திப் போட்டனர். இதனால் பதற்றம் அடைந்த அதிமுக.,வினரே, இந்தத் தகவல் உண்மையா என்று கேட்டு, தங்களுக்குத் தெரிந்த ஊடக நண்பர்களிடமும் கேட்டு நச்சரித்துள்ளனர்.
கட்சிக்காக ராப் பகலா உழைச்சிருக்கோம்… இன்னும் கவுன்சிலர் பதவிக்கே, கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கோம்… யாரோ ஒரு மாடல் அழகியாம்…! அதுவும் சோனாலின்னு பேராம்…! இவங்க பின்னாடி அப்டி யாருப்பா இருக்காங்க? என்று அதிமுக.,வில் சிலர் கலக்கமும் கோபமும் அடைந்தனர்.
ஆனால் இது குறித்து கூறிய சோனாலி ப்ரதீப், என்னைப் பற்றி வேண்டுமென்றே அவதூறு கிளப்புகிறார்கள். இதை எல்லாம் நம்பாதீங்க என்று பதறித் துடிக்கிறார்.
கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்து படித்த சோனாலியின் அப்பா அதிமுக., உறுப்பினராம். முக்கியப் பொறுப்பில் உள்ளாராம். அதனால்தான் தானும் கட்சியில் இணைந்து கடந்த 2 வருடமாக கட்சிப் பணி ஆற்றி வருகிறாராம்.
இவரது கணவர் பிரதீப். சினிமாத் துறையில் உள்ளாராம். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்சியில் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு கொடுக்கலாம் என்பதால், கட்சி ஜனநாயகத்தைக் காப்பாற்றத்தான் மேயர் வேட்பாளருக்கு மனு கொடுத்தாராம். இப்போது சமூகத் தளங்களில் ஹாட் டாபிக் – சோனாலி ப்ரதீப்தான்!