பாகிஸ்தானில் தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து பாகிஸ்தானில் இந்த அமைப்பின் செயல்பாடுகளை ஒடுக்கவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அழுத்தங்கள் வந்த வண்ணம் உள்ளன.
உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் இசுலாமிய மிஷனரி அமைப்பான தப்ளிக் இ ஜமாத்தின் வருடாந்தரக் கூட்டம் அங்கங்கே நடைபெற்றுள்ளது. மார்ச் மாத மத்தியில் நடந்த இந்தக் கூட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உலகின் பல பகுதிகளில் இருந்தும் தெற்கு லாகூரின் ராய்விண்ட் பகுதியில் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுதும் கொரோனா பரவல் குறித்த அச்சத்தால் லாக் டவுன் உள்ளிட்ட ஊரடங்கு உத்தரவுகள் இருந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து கலந்து கொண்டவர்கள் மூன்று நாட்களுக்கு மூடிய அறைகளில், அங்கே ஒன்றாக விளையாடி, உணவு உண்டு, உறங்கியுள்ளனர். இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு அரசுத் தரப்பு கெஞ்சியுள்ளது. ஆயினும் வியாழக்கிழமை ராய்விண்ட் நகரை பாகிஸ்தானிய அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாகக் கொண்டு வந்து, அதை தனிமைப்படுத்தினர். மக்கள் வரவும் செல்லவும் தடைவிதித்து, கடைகளை அடைக்கச் செய்தனர். இங்கே நடந்த சோதனைகளில் தப்ளிகி ஜமாத் மதபோதகர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.
ராய்விண்ட்டில் உள்ள இந்த அமைப்பின் தலைமையகமான மார்கஸில் தற்போதும் 600க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்களில் 300க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு செல்வதற்கு விமானம் ஏதும் இல்லாத நிலையில் அங்கே தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் லாகூர் துணை ஆணையர் டானிஷ் அஃப்சல் கூறிய போது, தப்ளிகி ஜமாத்தினர் 300 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று வந்துள்ளது… கொரோனா பரவுவதற்கு முக்கியக் காரணகர்த்தாக்களாக தப்ளிக் ஜமாத் இருக்கின்றனர் என்று கூறினார்.
லாகூரில் தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில் நடந்த இந்த மாநாட்டில் சீனா, இந்தோனேசியா, நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தரப்பில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், லாகூரில் நடந்த ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பஞ்சாப்பின் ராவல்பிண்டி, நன்கானா சாகேப், சர்கோதா, வெஹாரி, பைசலாபாத், கலாஷா காகு மற்றும் ரஹிம் யார் கான் போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலிருந்தும் பெரும்பாலானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகின. 5 நைஜீரிய பெண்கள் உட்பட 50 பேர் கொரோனா தொற்று இருப்பதற்கான சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சிந்து பகுதியிலும் 50 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லாகூரின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் இந்த மாநாடு நடத்த அரசு தடை விதித்துள்ளது. அதனை மீறி இந்த கூட்டத்தில் பல நாடுகளிலிருந்தும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கூட்டம் நடந்த பகுதிக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் வேறு யாரெல்லாம் பங்கேற்றார்கள், அவர்களுக்கு தொற்று நோய் உள்ளதா என்பது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
தப்ளிகி ஜமாத் என்பது, சுன்னி மிஷனரி இயக்கம். இந்தியாவில் 1926இல் இது தொடங்கப்பட்டது. இசுலாத்தின் ஆன்மிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காகவும் மீண்டும் மொஹம்மது நபியின் போதனைகளுக்கு மதத்தை கொண்டு செல்வதும், வருடந்தோறும் சந்தித்து, இஸ்லாமிய மிஷனரி நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் இந்த அமைப்பு ஈடுபடுவதாகக் கூறப் படுகிறது. இதில் உலகம் முழுதும் சுமார் 8 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் இருந்து சென்றவர்கள் தங்களுடன் இப்போது வைரஸையும் கொண்டு சென்றுள்ளனர். ராய்விண்டில் இருந்து காஸா வரை வைரஸ் பயணித்துள்ளது.