கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், தி.மு.க-வின் கரூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவில் பொறுப்பில் உள்ளவர். 2006 – 2011-ல் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். 10 வருடங்களுக்கு முன்பு காந்தி கிராமம் மைதானம் அருகே அவர் இப்போதிருக்கும் வீட்டைக் கட்டியுள்ளார். தனது வீட்டைச் சுற்றி பல இடங்களில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி வைத்திருக்கிறார்.
காமராஜின் மனைவி தினமும் பால் வாங்குவதற்காக வீட்டின் முன்பு உள்ள காம்பவுண்டு கேட்டைத் தாங்கியிருக்கும் தூண்மீது கூஜாவை வைத்து வந்துள்ளார்.
அதிகாலை 5.30 மணி அளவில் வீட்டுக்கு வரும் பால்காரர், அந்த பால் கூஜாவில் பாலை நிரப்பி வைத்துவிட்டுச் சென்று விடுவார். காலையில் எழுந்து வரும் காமராஜின் மனைவி, அந்தக் கூஜாவை எடுத்து வந்து, அதில் இருக்கும் பாலை பயன்படுத்தி வந்துள்ளார்.
இப்படி, பால் வாங்க காம்பவுண்டு கேட் தூணில் வைக்கப்பட்டிருந்த கூஜாவைதான், 50 வயது மதிக்கத் தக்க மர்ம நபர் ஒருவர் திருடிய சம்பவம், முன்னாள் எம்.எல்.ஏ காமராஜை சிரிக்க வைத்துள்ளது.
அவர் வீட்டு பால் கூஜா, மர்ம நபரால் எடுத்துச் செல்லப் பட்ட சிசிடிவி காட்சிகளை பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைத்து, தன் கருத்தையும் பகிர்ந்திருக்கிறார் காமராஜ்.
வழக்கம் போல் முந்தா நாள் இரவும் அந்தத் தூணில் என் மனைவி அந்த கூஜாவை வைத்தார். ஆனால் காலையில் பால் ஊற்ற வந்த பால்காரர், கூஜாவைக் காணாமல் தேடியிருக்கிறார். அதனால் காலிங் பெல்லை தொடர்ந்து அடித்துள்ளார். நாங்கள் என்னவோ ஏதோவென்று வெளியில் வந்து பார்த்தோம். அப்போதுதான், கூஜா காணாமல் போன விஷயம் தெரியவந்தது.
வேறு பாத்திரத்தில் பால் வாங்கிக்கொண்டு, பால்காரரை அனுப்பி வைத்தோம். என்மகன் வீட்டுக்கு முன் உள்ள கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்த்தான். அப்போதுதான் 5.15 மணி அளவில் வீட்டு முன்பகுதிக்கு வரும் மர்ம நபரை வீடியோ காட்சிகள் காட்டின.
சுமார் கால் மணி நேரம் நோட்டம் விட்ட அந்த மர்ம மனிதர், கடைசியாக காம்பவுண்டு கேட் அருகே வந்து, தூணில் இருந்த கூஜாவை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று சென்றுவிடுகிறார். 200 ரூபாய்க்குக் கூட பெறாத கூஜாவை அவர் தூக்கிக் கொண்டு விருட்டெனப்போனது, என்னைச் சிரிக்க வைத்தது… என்றார்.
இந்தத் தகவலை இணையத்தில் படித்து விட்டு, இணையவெளி வாசகர்களும் சிரிப்பு மூட்ட கருத்துப் பதிவிட்டுள்ளனர். இந்த திமுக.,காரன் கூஜா தூக்குவது அந்த மர்ம நபருக்கு இழுக்காகப் பட்டுள்ளது போலிருக்கிறது. அதான் சிம்பாலிக்காக, திமுக.,காரன் வீட்டிலேயே கூஜாவை திருடி, நானே கூஜா தூக்கிட்டுப் போறேன், உனக்கு கூஜா வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறான் போல… என்று கமெண்ட் அடிக்கின்றனர்.