கட்டுரை/புகைப்படம்: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.
கதிரவனின் கதிர்களும், மலர்ந்து மணம் வீசும் பூக்களும் அதிகாலையில் மதுரமான சூழ்நிலையை உருவாக்குகின்றது.
நம் நாட்டில் பல பகுதியிலும் அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து பிப்ரவரி மாதம் வரையிலும் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டங்களானது இயற்கையின் மிகப்பெரிய வரப்பிரசாதமே.
பல வண்ணங்களில், பல வடிவங்களில் உள்ள அழகிய பூக்களினால்
சூழ்நிலையே ரம்யமாகும்.
சேற்றிலே முளைக்கும் செந்தாமரையும், வலிமையான தேக்கு மரத்தின் சின்னஞ்சிறிய பூக்களும் சூழ்நிலையினால் நாம் பாதிப்படையாமல் நம் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டுமென நமக்கு பாடம் கற்பிக்கின்றனவோ?
சூரியனின் சுழற்சியையே தொடரும் சூரியகாந்திப் பூவோ எப்பொழுதும் நம் கடமையை வழுவாது செய்ய நமக்கு பணிக்கிறதோ?
முட்களினால் சூழ்ந்த ரோஜாக்களும், வேலிகளில் பூக்கும் கண்கவர் வண்ண மலர்களும் வாழ்வியல் யதார்த்தங்களை பறைசாற்றுகின்றதோ?
நமக்கென்றும் ஒரு காலம் வரும் என பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதை இரவிலே மலரும் மலர்களும் நமக்கு விளக்குகின்றதோ?
அடர்ந்த வண்ணப் பூக்களில் வெளிர் வண்ண ரேகைகளும்,
வெளிர் வண்ணப் பூக்களில் அடர்ந்த வண்ண ரேகைகளும் என இயற்கையின் படைப்பினால் மனமும் மகிழுமல்லவோ?
மருந்தாய் சில பூக்களும், நமக்கு உபயோகமாகின்றன. சில பூக்களை அதன் விஷத் தன்மையால் ஒதுக்கவும் வேண்டியுள்ளது.
பூந்தோட்டங்களில் வண்டுகளின் ரீங்காரத்தை இசையாய் ரசிப்பவரும் உண்டு.
பட்டாம்பூச்சிகளும், தேனீக்களும் பூக்களில் விஜயம் செய்யும் காட்சிகளானது கண்களுக்கு விருந்தாகும்.
பலருக்கு தோட்டப்பூக்களே நிரந்தர நேசத்தினை அளிப்பதாக கூறவர். பலரோ பூக்களேயே நல்ல நண்பர்களாய் கருதுவர்.
பூக்களின் நேசத்தை அறியவும், வாசத்தை முகரவும், அழகிய பூந்தோட்டங்களை அமைத்து, இயற்கை அன்னையையும் மகிழ்வித்து, நல்லதொரு ஆரோக்கிய சூழலை அடுத்த தலைமுறைக்கு தரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.