நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
நடப்பு கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. செப்டம்பர் 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வை, 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். கொரோனாவால் நீட் தேர்வை எழுதாமல் விட்ட சுமார் 290 பேருக்கு அக்டோபர் 14-ல் தேர்வு நடைபெற்றது.
இன்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில், இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஜீவித்குமார் 720க்கு 664 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். இவரது தந்த நாராயணசாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார், ஆசிரியர்கள் மூலம் திரட்டபபட்ட நிதியின் மூலம் கடந்த ஓராண்டாக நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஸ்ரீஜன் 720 -க்கு 710 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44 ஆக உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 48.57 ஆக இருந்தது.
நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியான உடன், ஏராளமானோர் பார்க்க முயன்றதால் தேசிய தேர்வு முகமையின் இணையதளம் முடங்கியது. நீட் கட் – ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.