கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத் தலைவர்கள், பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகிய நிலையில், மேலும் ஒரு பொதுச்செயலரான சந்தோஷ்பாபு ஐஏஎஸ் இன்று விலகியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக இரு கூட்டணிகளுக்கும் மாற்று என்று கூறி களம் இறங்கிய நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் தோல்வியை தழுவினார். இதனை அடுத்து, ம.நீ.ம., கட்சியின் துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர்.
இந்நிலையில் அதன் பொதுச்செயலராக இருந்து வந்த சந்தோஷ்பாபுவும் விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில்…
‛மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு. கமல்ஹாசன் மற்றும் கட்சியினர் எனக்கு அளித்த பாசத்திற்கும், நட்பிற்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
தகவல் தொடர்புத்துறை செயலராக இருந்த சந்தோஷ்பாபு ஐஏஎஸ், அப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்று கமலஹாஸனின் கட்சியில் இணைந்தவர்.
மே 7ம் தேதி அவர் பதிவு செய்திருந்தகருத்தும், அதற்கு வந்த பின்னூட்டமும்…
அடுத்து, கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பாளராக இருந்துவந்த பத்மபிரியாவும் கட்சியில் இருந்து விலகுவதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
இவர் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு 33,401 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தவர். சர்ச்சைக்குரிய வீடியோக்களால் அப்போது மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.
அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு…
என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்.
– பத்மப்ரியா