காவல் துறையில் 90 சதவீதம் பேர் ஊழல் அதிகாரிகளாக, திறமையில்லாதவர்களாக இருக்கின்றனர் என்று, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், ஊழல் இல்லாத அதே சமயம் திறமையற்ற நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவர் மீதான வழக்கு குறித்த விசாரணையின் போதுதான் நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
வசந்திக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு பின் வழக்கை முடித்து வைத்துள்ளனர். இதை அடுத்து உயர் நீதிமன்றத்தில் வசந்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், புதிதாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன் பின் மீண்டும் வழக்கு விசாரித்ததாகக் குறிப்பிடப்பட்டு, முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த வசந்தி, மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் பாக்கியலட்சுமிக்கு எதிராக அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுப்படி புதிதாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஆரம்ப முகாந்திரம் இல்லை என்று குறிப்பிட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், தமது உத்தரவில் குறிப்பிட்டதாவது…
நீதிமன்ற உத்தரவுப்படி புதிதாக புலன் விசாரணை நடந்துள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் அங்கேயே எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்து, சட்டப்படி தொடரலாம்.
புலனாய்வு அதிகாரியின் திறமை திருப்தியாக இல்லை என்றாலும் அவரது திறமைக்குத் தக்கவாறு அவர் விசாரணை செய்துள்ளார். அவரது திறமையின்மையை வைத்து, அவர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்று கருத முடியாது.
புகார் கொடுக்கப்பட்ட நேரத்தில் விற்பனையாளர் உயிருடன் இருந்தார். அவரை உடனடியாக விசாரித்திருந்தால் உண்மை வெளிவந்திருக்கும். ஆனால் அவர் இறக்கும் வரை அவரிடம் விசாரணை நடத்தவில்லை.
துரதிருஷ்டவசமாக காவல் துறையில் 90 சதவீதம் பேர் ஊழல் அதிகாரிகளாகவும் போதிய திறமை இல்லாதவர்களாகவும் உள்ளனர். 10 சதவீதம் பேர் நேர்மையானவர்களாக, திறமையானவர்களாக உள்ளனர். 10 சதவீதம் பேர் எல்லா விசாரணையையும் மேற்கொள்ள முடியாது. எனவே அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கவும், ஊழல் அதிகாரிகளை களையவும், ஊழலற்ற திறமையில்லாத அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் இது சரியான நேரம்… என்று குறிப்பிட்டுள்ளார் நீதிபதி.