கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் பிரைவசியைக் கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
சைபர் கிரைம் குற்றங்களையும், தனிநபர்கள் தகவல்கள் திருடப்படாமல் இருப்பதற்கும் புதிய டெக்னாலஜி மேம்பாடுகளையும் புகுத்தி வரும் கூகுள் நிறுவனம், இப்போது லேட்டஸ்டாக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதன்கிழமை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், உலகில் அதிகம் தேடப்படும் இணையமாக இருக்கும் கூகுளில் யூசர்களின் தொடர்பு விவரங்கள் எளிதாக அணுகும் வகையில் இருப்பதால், அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு அதில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
தாங்கள் மேற்கொண்ட தனிப்பட்ட ஆராய்ச்சியில், தனிநபர் தகவல்கள் அடையாளம் காணக்கூடிய வகையில் பெரிய அளவிலான தகவல்கள் இருப்பதை கண்டறிந்துள்ளோம் எனக் கூறியுள்ளது.
அதன்படி, யூசர்களிடம் இருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் தனிநபர் மொபைல் எண்கள், முகவரி உள்ளிட்ட தகவல்களை அகற்ற தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளது.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளடக்கிய வங்கித் தகவல்களையும் நீக்குவோம் எனக் கூறியுள்ளது.
தனிநபர் தகவல்களை பகிரும் வலைதளங்களைக் கண்டறிந்து, அவற்றில் இருக்கும் யூசர்களின் தகவல்களை நீக்குவதில் கூகுள் நிறுவனம் முனைப்புக் காட்டும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறார் புகைப்படங்கள், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள், ஆபாச தளங்களில் ஏதேனும் இருந்தால் அவற்றை நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு கூகுள் உதவி செய்யும். தனிநபர் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக வரும் கோரிக்கைகளின் எண்ணிக்கைகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், பிற தேடுபொறிகள் மூலம் அணுகும் பிரச்சனையும் இருப்பதாக கூறியுள்ளது.
இதில் பிரச்சனையின் மூலத்தை அறிந்து கொள்ள, வெளியீட்டாளர்களை தொடர்பு கொள்ளுமாறும் பயனர்கள் ஊக்குவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.