மதுரை காமராஜ் பல்கலையில் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணிக்கு எப்போது வந்தாலும் வருகை பதிவில் கையெழுத்திடும் ‘வசதி’ இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை அலுவல் நேரம். காலை 10:01க்கு மேல் வந்தால் பிரதான நுழைவு வாயிலில் பெயர், வாகன எண் விவரங்களை தெரிவித்த பிறகே உள்ளே வர வேண்டும் என துணைவேந்தர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இது தெரிந்து தொலைநிலைக் கல்வி இயக்ககம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் வழியாக நுழைந்து விடுவதாக புகார் எழுந்ததையடுத்து அந்த இரு வழிகளும் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை மூட உத்தரவிட்டார்.
இது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலனோர் அலுவல் நேரத்தில் இருக்கையில் இருப்பதை காண முடிகிறது.பல்கலைகழக அதிகாரி ஒருவர் கூறியதாவது, பல்கலையில் 800க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பலர் உரிய நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை.
இதை கவனித்த துணைவேந்தர், ஒரு வாரமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். அனைத்து துறை வருகை பதிவேடுகளும் காலை 10:30 மணிக்குள் பதிவாளர் அறைக்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமதமாக வருபவர்கள் பதிவாளரை சந்தித்த பின் தான் பணிக்கு செல்ல முடியும். சரியான காரணங்கள் தெரிவிக்காவிட்டால் அரை நாள் விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரமாக தொடர்ந்து தாமதமாக வந்த 100 பேரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது, என்றார்.
தாமதமாக வருவோரை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவை அமல்படுத்த இதற்கு முன்பு இருந்த துணைவேந்தர்கள் முயற்சித்தனர். ஆனால் ஆசிரியர்கள், ஊழியர்கள் எதிர்ப்பால் அமல்படுத்தப்படவில்லை. பள்ளிகள் போன்று பல்கலையிலும் பயோ மெட்ரிக் முறையை கொண்டுவர துணைவேந்தர் கிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.