காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொண்ட 35 ஏ மற்றும் 370 என்ற அரசியல் சட்டமைப்பு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
அமித் ஷா அறிவிப்பின்போது எதிர்க் கட்சியினர் பெரும் கோஷங்கள் எழுப்பினர். இதற்கான முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப் பட்டுள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; மக்களின் விருப்பப்படி காஷ்மீர் நலன் குறித்து மத்திய அரசு சில முக்கிய முடிவுகள் எடுத்துள்ளது. இதன்படி மாநில அந்தஸ்தை இழப்பதுடன் சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், பிரிக்கப்படும் என்றார்.
இத்தகைய அறிவிப்பு மூலம், மற்ற மாநிலங்களுக்கான சட்டங்களே, காஷ்மீருக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத் தக்கது.
காஷ்மீருக்கான 4 சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.
இதற்கு குடியரசுத் தலைவர் கையொப்பம் இட்ட பின்னர் இது அமலுக்கு வரும். இந்தச் சட்டம் கொண்டு வருவதால் அனைத்து சிறப்பு அந்தஸ்தையும் காஷ்மீர் இழக்கிறது. மேலும் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்களுக்கு காஷ்மீர் கட்டுப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்துக்கு என்று இனி தனியாக சட்டம் எதுவும் செல்லுபடியாகாது.
அமித் ஷாவின் அறிவிப்பின் போது எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பலத்த எதிர்ப்பு கிளப்பினர். இந்நிலையில், இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம் இது என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுதும் இதற்கு வரவேற்பு தெரிவித்து கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர்.
முன்னதாக, காஷ்மீர் தொடர்பாக 3 முக்கிய அறிவிப்புக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று வெளியிட்டார்.
அமித்ஷா வெளியிட்ட 3 அறிவிப்புக்கள்:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து.
ஜம்மு காஷ்மீர் இனி மாநிலமாக இருக்காது. அதற்கு பதில் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.
லடாக், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.