
ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமானில் உள்ள தியாகச் சிறைகளை தரிசித்து வர வேண்டும். அப்போதுதான் அன்று பலர் செய்த தியாகத்தின் பலனாகப் பெற்ற சுதந்திரத்தை இன்று போற்றி பாதுகாக்கும் ஊக்கம் பிறக்கும். அது ஒன்றே அந்த தியாகச் சீலர்களுக்கு நாம் அர்ப்பணிக்ககூடிய அஞ்சலியாக இருக்கும்.
அந்தமான் நிகோபார், போர்ட்பிளேயர் தீவுகளில் இருக்கும் புகழ் பெற்ற சிறைச்சாலைகள் ‘செல்லுலார் சிறைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை இந்திய சுதந்திர வீரர்களின் தியாகத்திற்கு மௌன சாட்சியாக நிற்கின்றன.
‘காணொலிக் காட்சி’ மூலம் தற்போது பார்வையாளர்கள் அந்நாட்களின் அடக்குமுறைகளையும் அமர வீரர்களின் உயிர்த் தியாகங்களையும் காண முடிகிறது. அமர வீரர்கள் தங்கள் உயரைத் துறந்த இவ்விடங்களைக் காண்கையில் யாராயிருந்தாலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாது.
இந்த செல்லுலார் சிறைகளையே ‘காலா பானி’ -‘கருப்புத் தண்ணீர்’ என்றழைப்பர். பாரத மாதாவின் அடிமைத் தளையை உடைத்தெறியும் மகத்தான யாகத்தில் சமித்துகளாக தம்மை ஆத்மார்ப்பணம் செய்து கொண்ட பாரத் தாயின் அன்புக் குழந்தைகளை கொடுமையாளர்களான பிரிட்டிஷார் அநேக சித்திரவதைகளுக்கு உட்படுத்தியது இச்சிறைகளிலேதான்.
1857 ல் நிகழ்ந்த முதல் சுதந்திர போராட்டமான சிப்பாய்க் கலகத்தில் தொடங்கி பிரிட்டிஷ்கார்கள் சுதந்திர வீரர்களை அந்தமான் தீவுகளில் சிறை வைத்தனர்.
அந்தமானில் சிறைப்படுத்திய நம் சுதந்திர வீரர்களை கட்டடம் கட்டுவதற்கும், செல்லுலார் சிறை அறைகள் கட்டுவதற்கும், படகுத் துறைகள் நிர்மாணத்திற்கும் உபயோகப்படுத்திக் கொண்டனர். அவ்வேலைகளைச் செய்து செய்தே பலரின் இன்னுயிர் பிரிந்தது.
பாரத சுதந்திர போராட்டம் தீவிர வடிவமெடுத்ததால் அந்தமானுக்கு அனுப்பப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. அச்சூழலில் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலை தேவை என்று எண்ணிய பிரிட்டிஷ் அரசு 1896 மற்றும் 1906 ஆண்டுகளுக்கு இடையில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் செல்லுலார் சிறைகளின் நிர்மாணத்தை பூர்த்தி செய்தது. அதற்குத் தேவையான கற்களை பர்மாவிலிருந்து தருவித்தார்கள்.
வெளி உலகோடு தொடர்பில்லாத இந்தச் சிறைகளில்தான் விடுதலைப் போராட்ட வீரர்கள் தண்டனை அனுபவித்தனர். தற்போது இது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு ஞாபகச் சின்னமாக விளங்குகிறது.

செல்லுலார் சிறைச்சாலையில் 7 பிரிவுகளும் 9 மாடிகளும் 693 கைதிகளின் அறைகளும், அவற்றின் நடுவில் கண்காணிப்புப் கூண்டுகளும் உள்ளன. ஒரு அறையில் ஒருவரையே தனியாக அடைத்து வைத்தார்கள். மற்ற கைதிகளை பார்ப்பதற்கோ பேசுவதற்கோ வழி கிடையாது. இக்காரணத்தால்தான் இதற்கு செல்லுலார் சிறைகள் என்று பெயர் ஏற்பட்டது.
இந்த சிற்றறைச் சிறைகளில் தண்டனை அனுபவித்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் சிறைச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. பாபுராவ் சாவர்க்கர், விநாயக தாமோதர் சாவர்க்கர் என்ற சகோதர்கள் இதே சிறைகளில் வெவ்வேறு அறைகளில் அடைபட்டிருந்தனர். ஒருவரைப் பற்றி ஒருவர் அறிய முடியாத நிலை. 1868 மார்ச்சில் 238 பேர் தப்பி ஓட முயற்சித்து பிடிபடவே அவர்களுள் 87 பேரைத் தூக்கிலிட்டனர்.

1930ல் கைதிகளாயிருந்த வீரர்கள் தங்கள் மேல் நடத்தப்படும் அடக்குமுறையை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுள் சர்தார் பகத் சிங்கின் தொண்டர் மஹாவீர் சிங், பிரிட்டிஷ் காரர்களின் மனிதத் தன்மையற்ற கொடுமையை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கையில் பலவந்தமாக அவருக்கு வாயில் பால் ஊற்றி அது பொறையேறி நுரையீரலுக்குச் சென்று துர்மரணமடைந்தார். அவரது பூத உடலை பாறையோடு சேர்த்துக் கட்டி சமுத்திரத்தில் தள்ளி விட்டார்கள். அதை பற்றி பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதால் 1937ல் அங்கிருந்தவர்களை விடுவித்து விட்டனர்.
1942ல் ஜப்பானிய படை அந்தமான் தீவுகளைக் கைபற்றிக் கொண்டு, பிரிட்டிஷ் காரர்களை துரத்திப் பிடித்து அதே செல்லுலார் சிறைகளில் அடைத்து வைத்தனர். அந்த சமயத்தில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அங்கு சென்றார்.
1945ல் இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் பிரிட்டிஷ்காரர்கள் மீண்டும் இச்சிறைகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.
இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தபின் இதிலிருந்த இரண்டு பிரிவுகளை இடித்து விட்டனர். சுதந்திர போராட்ட சின்னங்களை இடிப்பது சரியல்ல என்று எதிர்ப்பு வெளிப்படவே, இந்திய அரசாங்கம் 1969ல் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது. 2006 மார்ச் 10 ஆம் தேதி இந்த சிறைச் சாலையின் 100 வது ஆண்டு நிறைவாக இந்திய அரசு இந்த சிறைச் சாலையில் தண்டனை அனுபவித்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுகளை கௌரவித்தது.
இன்றைய இளம் தலைமுறையினர் அந்தமான் தீவுகளை சுற்றுலாத் தலமாக எண்ணிச் சுற்றி வருகின்றனர். இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தத்தினால்தான் நமக்கு இந்த பொழுதுபோக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தேசப் பற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆகஸ்டு 15, 2019 அன்று எழுபத்து மூன்றாவது சுதந்திர தினத்தில் அந்தமானின் அமர வீரர்களை நினைத்து அஞ்சலி செலுத்துவதை நமது கடமையாக உணர வேண்டும்.
-ராஜி ரகுநாதன்,


