லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மூன்றாவது நாமம் : ‘சிதக்னி குண்ட சம்ப்பூதா’.
சித்_அக்னி_குண்ட_சம்ப்பூதா- ஞானமாகிய யாக குண்டத்திலிருந்து தோன்றியவள்
பண்டாசுரனிடம் தோல்வியுற்ற தேவர்கள் தேவியைக் குறித்து நடத்திய யாகத்தில், தனது உடற்பகுதிகளை அறுத்து முதலில் ஹோமம் செய்தார்கள். பின்னர் தங்களையே ஹோமம் செய்யத் தொடங்கியதும் தேவியாகப்பட்டவள் அக்னி குண்டத்திலிருந்து வெளிப்பட்டாள்.
அகந்தையையும் மமதையையும் இழந்து ‘தான்’ என்ற உணர்வையே தேவிக்கு அர்ப்பணம் செய்த அக்னிகுண்டமே அந்த அக்னியே ஞானாக்கினி
மமதைக்கும் அகந்தைக்கும் காரணமாக நிற்கின்ற ஸ்தூல – ஸூக்ஷ்ம – காரண சரீர தொடர்பு கொண்ட “நான்” என்ற உணர்வையே தேவர்கள் ஹோமம் செய்திட, உண்மையான “நான்” ஆகிய தேவி அந்த ஞானாக்னியிலிருந்து தோன்றினாள்.
இதையே பகவத்கீதையில் கிருஷ்ணா பரமாத்மா,
“ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே அர்ஜுன” (4 – 37) என்கிறார்.
மனம், புத்தி, உடலுடன் ஆத்மாவுக்குத் தொடர்பில்லை என்கிற ஞானம் ஒருவனுக்குத் தோன்றிய பின்னர், பிராரப்தக் கர்மத்தின் பயனாக மனம், புத்தி, உடல் இவற்றுடன் சுக துக்கங்களின் தொடர்பு ஏற்பட்டாலும் அவனது மனதில் மகிழ்ச்சி – துக்கம் என்கிற விகாரங்கள் ஏற்படாது. இப்போது செய்யும் கர்மங்களிலும் ‘தான் கர்த்தா’ என்ற அபிமானமும், மமகாரமும், பற்றும், வாசனையும், அழிந்து போய்விட்டதால் அவை மனப் பதிவுகளை ஏற்படுத்தாது. மனப்பதிவுகளே ஏற்படாதபோது விருப்பு – வெறுப்புகள், மகிழ்ச்சி – துயரங்கள், என்ற விகாரங்களும் ஏற்படாது. ஆகவே எல்லா விகாரங்களும், கர்மங்களும், அதன் பலன்களும் சேர்ந்தே அழிந்துவிடும். பஸ்மாமாகி விடும்.
இதில், ஞானாக்கினி என்பது தத்வ ஞானம்.
– எஸ்.பிரேமா