ஜனவரி – 10 மார்கழித் திருவாதிரை… இன்று ஆருத்ரா தரிசனம்
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற நாள் ஆருத்ரா நன்னாள்.
பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.
சேந்தனாருக்கும் திரேதாயுகா என்ற பெண்ணுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.
உலகின் நடனம்
இறைவனின் நடனமே உலகின் அசைவிற்கு காரணமாக இருக்கிறது. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார்.
கடவுள் துகள், ஹிக்ஸ் போசான் என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார். கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார்.
பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் விளங்குவது கடலூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சிவாலயம் தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில்.
பரதம் என்னும் நாட்டியக் கலையை தோற்றுவித்த நாயகரான நடராஜர் நாட்டியமாடும் கோலத்தில் இருக்கும் தலம்.
சிதம்பரம்நடராஜர் கோயிலின் மற்றொரு சிறப்பம்சம், மனித உடலமைப்பை பிரதிபலிக்கும் கோவிலாகும் உள்ளது.
தங்கத்தால் ஆன இங்குள்ள பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். அங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 துவாரங்கள், உடலிலுள்ள
9 துவாரங்களைக் குறிக்கிறது.
ஆன்மிக ரீதியான அமைப்புகளும் பொன்னம்பலத்தில் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான ‘சிவாயநம’ என்பதன் அடிப் படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்து மரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதத்தில் ஜன்னல்களும், 4 வேதம், 6 சாஸ்திரம், பஞ்ச(5) பூதங்களின் அடிப்படையில் துாண்களும் இங்குள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரே உற்சவராகவும் இருக்கிறார்,
ஆருத்ரா தரிசன அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.
பின்னர், காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகளின் வீதியுலா காட்சியும், பிற்பகல் 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன நிகழ்வும் நடக்கயிருக்கிறது.
ஜனவரி 11ஆம் தேதி முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெறும்.