
ஸரஸ்வதி தேவி கோபமுற்றவளாய், தன்னை விட்டுப் பிரிந்து , தவமியற்றச் சென்றது நான்முகனை நிலை குலையச் செய்தது .. பிரமன் சிந்திக்கலானார் ! அவள் ( ஸரஸ்வதி ) பெயரைச் சொல்லாமல் , திருமகளே சிறந்தவள் என்று நான் சொன்னதால் அவள் கோபித்துக் கொண்டாள்.. அதனால் என்னை விட்டு அகன்றாள்..அது புரிகிறது .. ஆனால் தன்னாற்றின் ( ஸரஸ்வதி நதி ) கரையில் தவமியற்ற வேண்டிய காரணம் என்ன ??
கோபித்துக் கொண்டால் தவம் செய்ய வேண்டுமோ ?! தவத்திற்கு யாது காரணமாயிருக்கும் ? .. விடை தெரியாது தவித்தான் நாபி ஜன்மன் ( உந்தியில் உதித்தவன் – பிரமன் )
நீண்ட யோசனைக்குப் பிற்பாடு விடை கண்டுபிடித்தான் விரிஞ்சன் !
முன்பு ஸரஸ்வதி தன்னிடம் சொன்னது நினைவிற்கு வந்தது !
ஒரு முறை பிரமனும் ஸரஸ்வதியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது , கங்கை நதியைப் பற்றின பேச்சு வரவும் , பிரமன் கங்கையைக் கொண்டாடவும் , நாமகள் முகம் வாடத் தொடங்கினாள் !
” எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினிலெல்லாம் கழுவிடும் பெருமைக் கங்கையை ” நான்முகன் கொண்டாடுவது கண்டு வருத்தமே ஏற்பட்டது ஸரஸ்வதிக்கு !
( ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களையும் நொடிப்பொழுதில் கழுவ வல்ல / போக்க வல்ல பெருமையுடையது கங்கை – அந்நதியின் பெயர் சொன்னாலே நம் தீவினைகள் தொலந்து போகுமாம் )
கங்கையைக் கொண்டாடினாலும் கோபம் !
திருமகளைக் கொண்டாடினாலும் கோபம் !
ஸரஸ்வதி எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்ளும் குணமுடையவள் என்றெண்ண வேண்டாம் !
( பொதுவாகவே , பெரும்பாலும் பெண்கள் தன்னையொழிந்த ( தன்னைத் தவிர ) மற்ற பெண்களின் ஏற்றங்களை/பெருமைகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் )
பரமன் நம்மை அநுக்ரஹிக்க , வரதனாய்க் கச்சியில் நின்றிட , ஸரஸ்வதியைக் கொண்டு ஆடும் ஆட்டம் இது !
இப்படித்தானே கைகேயியின் மனதை மாற்றித் தன் பெருமைகளை உலகறியும்படிச் செய்து கொண்டான்..
அர்ஜுனனுக்கு கலக்கத்தைத் தானே விளைவித்ததும் அவனுக்கு கீதோபதேசம் செய்வதற்காகத் தானே !
ஆகவே இதுவும் நம் நன்மையின் பொருட்டே !
ஸரஸ்வதியின் வருத்தத்திற்குக் காரணம் இது தான் !
வடக்கே பதரீகாச்ரமத்துக்கும் மேலே நாம் ( ஸரஸ்வதி நதி ) பெருகி ஓடுகின்றோம் ! மற்ற நதிகளுக்கு இல்லாத பெருமை நமக்கு உண்டு .. ஆம் ! நம் நீரோட்டம் சிலவிடங்களில் கண்ணுக்குப் புலனாகும் ! சிலவிடங்களில் கண்களுக்குத் தெரியாமல் ” “அந்தர்வாஹினி ” யாய்ச் ( வெளியில் தெரியாமல் பூமிக்கடியில் வெள்ளமிடுதல் ) செல்லும் !
( க்வசிதுபலக்ஷிதா க்வசித் அபங்குர கூட கதி : – தயா சதகம் – ஸ்ரீ தேசிகன் )
இப்பெருமைகளெல்லாம் கங்கை முதலான நதிகளுக்கு உண்டோ ??
ஆனாலும் என் கணவர் உள்பட அனைவரும் கங்கை நதியின் பெயரினைக் கேட்ட மாத்திரத்தில் தலைகளுக்கு மேலே கரம் குவிப்பதும் , ஜய ஜய என்று கோஷமிடுவதும் .. இப்பெருமைகளொன்றும் தனக்கில்லையே என்று மிகத் தளர்ந்தாள் நான்முகன் கிழத்தி !
( வேதங்களிலும் மஹாபாரதம் போன்ற இதிஹாஸ புராணங்களிலும் போற்றப் பட்டிருக்கும் புண்ணிய நதி தான் ஸரஸ்வதி ) அவளே காஞ்சியில் வேகவதி ஆனாள் என்பது மேலே கதையில் வரும் ! )
வாசகர்களுக்கு இன்னொரு ஸ்வாரஸ்யமான செய்தி !
இந்தியாவின் முதல் நாகரிக சமுதாயமான ” சிந்து சமவெளி நாகரிகம் ” என்பது உண்மையில் ஸரஸ்வதி நதி நாகரிகமே !!!!
ஆம் !! ஸரஸ்வதி( நதி )யின் கரையில் உருவான இந்த நாகரிகம் தான் , கொஞ்சம் கொஞ்சமாக கங்கை நதிக் கரையை நோக்கிச் சென்றதாக ஸமீபத்திய புவியியல் ஆய்வுகள் சொல்கின்றன !!
அப்படியெனின் ஸரஸ்வதியின் கோபம் நியாயம் தானே .. நாகரிகமே தன்னிடமிருந்து தான் கங்கைக்கு இடம் பெயர்ந்து இருக்கிறது என்றால் , தான் கங்கையை விடச் சிறந்தவள் தானே என்பது அவள் முடிவு !
பிரம்மா பொறுமையாக பதிலளித்தார் !
## வாசகர்களுக்கு ..
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி அகழ்வாராய்ச்சி ஆய்வு முடிவுகள் இங்கே கொடுக்கப்பட்டது ஒரு கூடுதல் தகவல் மட்டுமே !!
(நாகரிகமே தன்னிடமிருந்து தான் கங்கைக்கு இடம் பெயர்ந்து இருக்கிறது என்றால் , தான் கங்கையை விடச் சிறந்தவள் தானே என்பது அவள் முடிவு !)
ஸரஸ்வதி கோபித்துக் கொண்ட தருணத்தில் இந்த நாகரிகங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டு ஆய்வுகளும் ஸரஸ்வதி நதிக்குப் பெருமை சொல்வது போல் உள்ளதை , ஒரு சுவைக்காகவே இவ்விடத்தில் சேர்த்துள்ளேன் !
மொத்தத்தில் தான் கோபித்துக் கொண்ட அன்றும் சரி ; நாகரிகத்தை ( கங்கைக் கரைக்கு ) வழங்கிய பிற்காலத்திலும் சரி ; தானே உயர்ந்தவள் என்று ஸரஸ்வதி கருத வாய்ப்புண்டு என்பதனைக் காட்டவே இப்பகுதி சேர்க்கப்பட்டது.
சரித்திரம் நிகழும் காலத்தில் நாகரிகங்கள் ஏற்பட்டிருந்தனவா என்கிற குழப்பங்களைத் தவிர்க்கவும். ################
வாணீ … கோபப்படாதே ! என் கையில், சதுப்புயன் ( சதுர்புஜன் – எம்பெருமான் ) தாளில், சங்கரன் சடையில் என்று கங்கைக்கு எங்கள் மூவராலும் பெருமை !
முக்யமாக ” ஹரி பாதோதகம் ” எம்பெருமானின் ஸ்ரீபாத தீர்த்தம் என்கிற பெருமை கங்கைக்கே உரித்தானது .. இவ்வாறு பிரமன் சொல்லவும் அப்போது ஒன்றும் பேசாதிருந்த கலை மகள் , இப்பொழுது கோபித்துக் கொண்டு சென்று , தவமியற்றுவது கங்கையை விடத் தான் சிறந்தவள் என்கிற ஏற்றம் பெறவே என்பதனை உணர்ந்தான் ஸுரஜ்யேஷ்டன் ( தேவர்களில் பெரியவன் – பிரமன் )
ஸரஸ்வதியை எண்ணியவாறு பெருமூச்செறிந்தான் !
அப்பொழுது தான் தேவகுரு ப்ருஹஸ்பதி பலரையும் கூட்டிக் கொண்டு, தன்னைச் சந்திக்க வந்திருப்பதாக அயனுக்கு செய்தி சொல்லப்பட்டது !
ப்ருஹஸ்பதி வந்திருப்பதை நான்முகனிடம் சொல்ல வந்த சேவகன் , அவருடைய எண்காதுகளில் ( எட்டுக் காதுகளில் ) ஒன்றைக் கடித்தான் ( ரஹஸ்யமாகப் பேசினான் )
ப்ரபோ ! ப்ருஹஸ்பதியும் அவருடன் வந்திருப்பவர்களும் ( தேவர்கள் – ருஷி, முனிவர்கள் ) அளவிற்கு மீறிய கோபத்துடன் தங்களுக்குள்ளே சண்டையிட்டபடியே தங்களைக் காண வந்துள்ளனர் !
சேவகன் இப்படிச் சொன்னதும் , தன் நாடியடங்கிட நின்றான் நான்முகன் !
நடுநடுங்கின குரலோடே சேவகனை அவர்களுக்குள் என்ன தான் சிக்கல் என்று கேட்டான் !
சேவகன் சொன்ன பதில் தான் என்ன ?
விரைவில் ..
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி
குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

With his Thiruttagappanaar (in the framed photo )


