வேதம் கற்றலின் அவசியம்: ஆச்சார்யாள் அருளமுதம்!

Published:

abinav vidhya theerthar - 2026

ஒரு ஏழை பண்டிதர் தனது புதல்விக்கு திருமணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். ஆனால் திருமணத்திற்கு வேண்டிய பணம் இல்லாததால் மிகவும் கவலைப்பட்டார். நண்பர் ஒருவர் அவரிடம் வந்து இப்பொழுதெல்லாம் சங்கீத வித்வான்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது என்று சொல்ல, நாமும் ஏன் சங்கீதம் கற்றுக் கொண்டு வித்வானாக கூடாது என்று தோன்றியது அந்தப் பண்டிதருக்கு. தனது குரலை வளப்படுத்த வேண்டும் என்றால் நீண்ட நேரம் பாடி பயிற்சி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார். அவர் அதற்காக ஊரின் எல்லைக்கு சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு தனது சங்கீத பயிற்சியைத் தொடங்கினார். ஆனால் அவரிடம் இருந்து வெளிவந்தவை சற்றும் கேட்க சகிக்க முடியாத முரண்பாடான ஓசைகளே ஆகும்.

முன்னர் சங்கீத வித்வானாக இருந்து இறந்து போன ஒருவன் பேய் ரூபத்தில் அம்மரத்தில் வசித்துக் கொண்டிருந்தான். அதனால் இந்த பண்டிதரின் அபஸ்வரங்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே அது அவரைப் பார்த்து நான் சங்கீதம் அறிந்த பேய். இந்த மரம் என்னுடைய வீடு. உன்னுடைய இந்த முரண்பாடான சங்கீதத்தை கேட்டு கொண்டு என்னால் இங்கு நிம்மதியாக வசிக்க முடியவில்லை. ஆகையால் இந்த மரத்தை விட்டு நீ வேறு எங்காவது போய்விடு என்று கூறியது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அதற்கு அந்தப் பண்டிதர் நான் ஏன் இவ்விடத்தை விட்டுப் போக வேண்டும் நான் சங்கீதத்தை கற்றுக்கொண்டு பெரிய வித்வான் ஆகி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அப்படி வித்வான் ஆவதற்காக பயிற்சி செய்ய ஏற்ற இடம் இதுதான் என்று பதிலளித்தார்.

உடனே அந்த பண்டிதரைப் பார்த்து உனக்கு பணம்தானே வேண்டும் நான் அதற்கான வழி உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். நான் இந்த ஊரிலுள்ள இளவரசியை பிடித்துக் கொள்கிறேன். பிறகு அரசன் தனது அரசாங்க வைத்தீர்களை வரவழைத்து அவளுக்கு சிகிச்சை கொடுப்பான். ஆனால் அவர்களால் அவளைக் காப்பாற்றவே முடியாது. அப்பொழுது நீ அரண்மனைக்குச் சென்று அரசனை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள். பிறகு இளவரசிக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி இளவரசியை காப்பாற்ற முடியும் என்று கூறி அனுமதி பெற்றதும் இளவரசியிடம் சென்று இங்கு நீ சங்கீதம் எப்படி பாடுகிறாயோ அப்படியே அங்கு பாடத் தொடங்கு. நான் உடனே உன்னுடைய கொடூரமான இசைக்கு பயந்து இளவரசியை விட்டுப் போய்விடுவேன். இளவரசியும் குணமடைந்து விடுவார். அரசனும் உனக்கு நிறைய வெகுமதிகள் அளிப்பான். அதற்குப் பிறகு இங்கு வந்து சங்கீதத்தை கொலை செய்ய வேண்டிய தேவையே உனக்கு இருக்காது என்று கூறியது.

அதன்படியே நடந்து கொண்டார். இதனால் எதிர்பார்த்ததை விட நிறையவே பணம் கிடைத்தது. மிக விமர்சையாக கல்யாணம் செய்தார். பேரும் மரத்தில் நிம்மதியாக வாழ்ந்து வந்தது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

கதையில் பண்டிதரின் முரண்பாடான சங்கீதத்தால் எப்படி இசை ஞானம் உள்ள அப்பேய் எரிச்சலடைந்ததோ அதேபோல் வேத விற்பன்னர்கள் தங்கள் முன்னிலையில் யாராவது புனிதமான வேத மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் மனவருத்தம் அடைவார்கள். ஏதோ ஒரு தடவை தவறான இசையானது கதையில் சொன்னது போல் மிகுந்த லாபத்தை பெற்று கொடுத்து இருக்கலாம். ஆனால் வேதத்தை சரியாக ஓதாவிட்டால் தவறாக சொல்பவர்களை நிச்சயம் பாவம் சூழ்ந்து கொள்ளும். எனவே வேத மந்திரங்களைப் கற்றுக் கொள்ளும்போது ஸ்வரத்தில் ஆகட்டும் அல்லது வார்த்தைகளை உச்சரிப்பதிலாகட்டும் ஒருவன் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்து தவறில்லாமல் அவற்றைச் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். சங்கீதத்தை ஒருவன் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. ஆனால் தகுதியுள்ள ஒவ்வொருவனும் குருவிடம் சென்று வேதத்தைக் கற்றுக் கொண்டு அதை சரியாக சொல்ல வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இந்த கடமையை நிறைவேற்றுவதால் வேதம் சொல்பவன் புண்ணியத்தை அடைகிறான். இதைச் செய்யத் தவறியவனோ பாவத்தையே அடைகிறான்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img