
பகவான் ஓர் உதாரணம் கொடுத்தார்.
தூமேனாவ்ரியதே வஹ்னிர்யதாதர்சோ மலேன ச I
யாதோல்பேனாவ்ருதோ கர்பஸ்ததா தேனேதமாவ்ருதம் II
ஒரு கண்ணாடியில் நாம் முகத்தைப் பார்த்தால் நம் முகத்தினுடைய பிரதிபிம்பம் அதில் தெரியும். ஒரு பொருளினுடைய பிரதி பிம்பத்தைக் கிரஹிக்கக்கூடிய சக்தி கண்ணாடிக்கு இயற்கையாகவே இருக்கிறது.
ஆனால், கண்ணாடியின் மேல் அழுக்கு மிகவும் படிந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அழுக்காக இருக்கின்ற அந்தக் கண்ணாடியில் முகம் பார்த்தால் பிரதிபிம்பம் தெரிவதில்லை.
ஏனென்றால், அந்த அழுக்கானது அந்த கண்ணாடிக்கு இருக்கக்கூடிய (பிரதி பிம்பத்தைக் கிரஹிக்கக்கூடிய) சக்தியை மறைத்து விட்டது.
அதனால் பிரதிபிம்பம் தெரிவதில்லை. அந்த அழுக்கை எடுத்து சுத்தப்படுத்தினால் அப்பொழுது அந்த கண்ணாடியில் பிரதிபிம்பம் தெரியும். அதேபோல் மனிதனுக்கு இருக்கின்ற ஞானமானது கண்ணாடிக்கு இருக்கக்கூடிய பிரதிபிம்ப கிரஹண சக்தியைப் போன்றது.
ஆனால், அந்த ஞானம் இந்தக் காமக் குரோதங்களினால் மறைக்கப்பட்டுள்ளது. எப்படி அழுக்கினால் கண்ணாடியின் சக்தி மறைக்கப்பட்டதோ அதுபோல் இந்தக் காமக் குரோதங்களினால் நம்முடைய ஞானம் மறைந்துவிட்டது.