*அம்பிகையின் மகிமை – 8
தேவீமாஹாத்மியத்தில் ஒரு வாக்கியம் வருகிறது. அங்கு அம்பாளைப் பற்றி இராக்ஷஸன் :
“ அன்யேஷாம் பலமாச்ரித்ய யுத்யஸே சாதிமானினீ “
என்று சொன்னான்.
“ நீ ஏதோ பெரியதாக போர் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறாயே ! உன்னுடன் எவ்வளவு சக்திகள் இருந்தன? அவைகளுடன் சேர்ந்து போர் செய்து வெற்றி அடைந்த பிறகு, “ நான் தான் போர் புரிந்தேன் “ என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாயே, இது என்ன ஆணவம் தேவி? “ என்றான்.
தேவி பார்த்தாள் ; “இவனுக்கு இப்பொழுதாவது ( அறிவு புகட்டாமல்) போய்விட்டால் இந்த முட்டாள் எவ்வளவோ பிறவிகள் எடுத்துக் கொண்டு நரகத்திற்குச் செல்வான். அது வேண்டாம், இவன் எப்போது என்னைப்பற்றி துச்சமாகப் பேசினானோ அப்பொழுதே இவனுக்கு அறிவு புகட்ட வேண்டும்” என்று தீர்மானம் செய்து அம்பாள்,
“ ஏகைவாஹம் ஜகத்யஸ்மின் த்விதீயாகா மமாபரா “
(நான் ஒருத்தி மட்டும் தான் இந்த உலகில் உள்ளேன். என்னைத்தவிர வேறு இரண்டாவதாக யார் இருக்கிறார்கள்?)
“இல்லை அப்பா ! யார் யாரையோ சேர்த்துக்கொண்டு போர் புரிகிறேன் என்றாயே.
நீ மட்டும் என்ன தனியாகவா இருக்கிறாய்? எல்லாவற்றிலுங்கூட நான்தான் இருக்கிறேன். ஏதோ ஒரு சம்ஸ்கார விசேஷத்தால் நீ தனியாகத் தோன்றிக் கொண்டிருக்கிறாய். என்னை விட்டுத் தனியாக இருக்கக்கூடிய பொருள் ஏதும் கிடையாது” என்று இந்த வாக்கியத்தை அவனுக்குச் சொல்வாள்.