
வள்ளியூரிலிருந்து மேற்கு நோக்கி 24 கி.மீட்டர் தொலைவிலும் நான்குநேரியிலிருந்து மேற்கு களக்காடு – நான்குநேரி பிரதான சாலையில் 12 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது களக்காடு.
நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி, களா மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால், அது திருக்களந்தை என்று அழைக்கப்பட்டது. அந்தக் களக்காடு திருத்தலத்தில், அன்னை கோமதியுடன் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சத்தியவாகீஸ்வரர்.
தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட இந்த ஆலயம் கி.பி. 12ம் நூற்றாண்டில், வீரமார்த்தாண்டவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் ‘சோரகாடவி’ என்றும் அழைக்கப்படுகிறது.
சீதையின் பிரிவால் வருந்திய ராமன், ஒரு புன்னை மரத்தின் நிழலில் குடிகொண்டிருந்த சிவபெருமானை வழிபட, ‘சீதையை மீட்டு வர யாம் துணையிருப்போம்’ என்று சத்தியவாக்கு அருளினார் ஈசன். பின்னர், சீதையை மீட்டுக் கொண்டு ராமன் இத்தலத்துக்கு வந்து, இங்குள்ள இறைவனுக்கு ‘சத்தியவாகீசப் பெருமான்’ எனத் திருநாமம் சூட்டி வணங்கிச் சென்றார் என்பது தல வரலாறு.
ஒரு போரின்போது, தேவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்ட பிறகே, ஈசன் துணையுடன் அசுரர்களைப் போரில் வென்றதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்துக்கு ‘சத்திய தீர்த்தம்’ என்று பெயர்.
இந்த திருக்கோவில் அப்பர் வாக்கினால் பாடப் பெற்ற தேவார வைப்புத் தலமாக திகழ்கிறது.
விந்தைகள்;
இக்கோயிலிலிருந்து சுரங்கப்பாதை ஒன்று திருப்புடைமருதூர் கோயிலுக்குச் செல்வதாகத் தெரிகிறது. இந்தச் சுரங்கப்பாதையின் நடுவில் சுரங்க அறை ஒன்றிருந்ததாம். சுரங்கமாக இருந்தாலும், காற்றும் வெளிச்சமும் தடையில்லாமல் இந்த அறைக்கு வரும். கட்டுமான விந்தைதான்!
மற்றுமொரு விந்தை ஆண்டுதோறும் செப்டம்பர் 20, 21, 22 -ஆகிய தேதிகளில் மூலவர் சிவலிங்கத்தின் மீது விழுகிற சூரிய கிரணங்கள்!!
சிற்பங்கள் ,இசைத் தூண்கள், மூலிகை ஓவியங்கள்:
சிற்ப அழகுடன் கூடிய மண்டபங்களும், அவற்றில் மணி மண்டபத்தில் உள்ள இசைத் தூண்களும் இந்தத் திருக்கோயிலின் தனிச் சிறப்பம்சங்கள் ஆகும்! இந்த இசைத் தூண்களைத் தட்டினால், ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொருவிதமான ஒலி எழுவதைக் கேட்கலாம்.
கோயில் வெளிப் பிராகாரத் தில் அந்நாளில் பயன்படுத்தப் பட்ட தானியக் கூடம் ஒன்று இன்றைக்கும் வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது. இத்திருத்தலத்தில் மகாபாரதக் காட்சிகளை விளக்கும் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன.
இவை மூலிகை வண்ணக் கலவைகளால் தீட்டப்பட்டவை ஆகும். இத்தகைய வண்ண ஓவியங்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்களை நிகர்த்தவை என்று கூறப்படுகிறது. கோயிலின் முன் வாயிலில், இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த வீரமார்த்தாண்டவர்மனுடன், சுந்தரரும் சேரமான் பெருமானும் உள்ளனர்.
நிலக்காட்சிகளை வரைவதில் தேர்ச்சி பெற்ற தாமஸ் டேனியல், வில்லியம் டேனியல் என்ற இரண்டு பிரிட்டிஷ் ஒவியர்கள் 1792ல் கன்னியாகுமரி பகுதியில் பயணம் செய்த போது களக்காடு கோவிலை ஒவியமாக வரைந்திருக்கிறார்கள்.
222 வருஷங்களுக்கு முந்தைய தமிழகத்தின் அரிய ஒவியக்காட்சியிது