அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 2
????????????????????????????????????????????????
பன்னிரு ஆழ்வார்களும் பவனி வரும் பகல்பத்து உத்சவம். திவ்யசூரிகளான ஆழ்வார்களின் பைந்தமிழ் பாசுரத்தைக் கேட்டு ஆனந்திக்க அரங்கன் காத்திருந்தான்.
அணியரங்கனின் திருமுற்றத்தில் அடியார்களும் குழுமியுள்ளனர். அத்யயன உத்சவம் என்னுமிது திருவரங்கத்தின் மிகப்பெரிய கோலாகலம். உலகத்திலுள்ள ஆஸ்திகர்கள் அனைவரின் எண்ணமும் அரங்கத்தையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ரங்கராஜன் முகத்தில் வாட்டமா?
வாட்டமில் திருமேனி எதை நினைத்து இன்று ஏங்குகிறது? அடியாரின் துயர் நீக்கும் துயரறுசுடரடி ஏன் துவண்டு விட்டது? எண்ணற்ற அடியார்களின் எண்ணங்களின் ப்ரதிபலிப்பாக ஏரார் எதிராசர் எம்பெருமானை வினவினார்?
” என் அரங்கா?உன் உள்ளத்தில் என்ன ரங்கா?”
“கருணை பொழியும் திருமுகத்தில் தோன்றிய கலக்கம் கண்டு நாங்கள் கலங்கியுள்ளோம்.”
“மந்தகாசம் தவழும் அத்திவ்ய தாமரை முகம் இன்று தெய்வீகத்திற்கு மாறாகத் தோன்றுகிறதே”
அடுக்கடுக்கான ராமானுஜரின் கேள்விகள் அப் பெருமானை அசைத்ததாகத் தெரியவில்லை.
இது போன்று அடியார்களைக் கண்டால் ஸரஸ ஸல்லாபமாக வேடிக்கை வார்த்தையாடும் வழக்கம் அவனுக்குண்டு. இப்போதுள்ள நிலையைக் கண்டால் வேடிக்கையாகத் தோன்றவில்லை. ஏதோ விரும்பத்தகாத விளைவின் காரணமாக வெற்றிடத்தை நோக்கியிருக்கின்றன அவனது விழிகள்.
மீண்டும் ராமானுஜர் “பொன்னி சூழ் திருவரங்கா!”. என்றழைத்தார்.
சிந்தனை வசத்திலிருந்தவன் இரண்டாவது முறையாக ராமானுஜரின் கேள்விக்கு தன் நினைவு வந்தவனாக பேசினான்.
” என்ன கேட்டாய் ராமானுச?” என்றான்.
“ஸர்வஜ்ஞன் – எல்லாவற்றையும் அறிந்திருப்பவன்; எனும் மஹா குணத்தைக் கொண்டவன் ரங்கநாதன். அது மட்டுமின்றி அனைத்தையும், அனைவரிடமிருந்தும் ஒரே நேரத்தில் ஸாக்ஷாத்காரம் – அநாயாஸமாக அறிபவன் இவன் ஒருவனே. உலகனைத்தையும் தன் வசத்தில் வைத்திருப்பவன் எவனோ! அவன் தன் வசமிழந்து தவிக்கிறானே!” இது விந்தையன்றோ!
ஒரு நொடியில் இப்படி எழுந்த தனது எண்ணங்களை மறைத்துக் கொண்டு மீண்டும் கேள்வி கேட்டார்.
அக்கேள்விகளை தனக்குள் வாங்கிக்கொண்ட வெண்ணையுண்ட வாயனின் திருமுகத்தினின்றும் மிகவும் நெடியதான பெருமூச்சு வெளியேறியது.
கற்பூரம் நாறுமோ,கமலப்பூ நாறுமோ! என்றும், எவனின் மூச்சுக்காற்று வேத பரிமளத்துடன் கூடியதோ என்றும் , வெண்ணை குணுங்கின் வாசனையுடையது என்றும் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அனுபவித்துப் பாடினார்களோ!அந்த மூச்சின் வெம்மை இன்று அனல் வீசியது.
“நம் கண்ணெச்சில் கொண்டதால்தான் தேவதேவன் வாடினானோ!” என பயந்து பெரியாழ்வார் ஆழ்வார்களின் திரளிலிருந்து முன்னே வந்து பல்லாண்டு பாடி பெருமாளுக்கு த்ருஷ்டி வழித்தார்.
மாமனாராம் பெரியாழ்வார் முன்னே வந்து பல்லாண்டு பாடினால் அகமகிழும் அரங்கன் இன்று அதனை துளியும் மதித்ததாகவே தெரியவில்லை.
அவன் விடுத்த வெப்பமூச்சினால் ஏற்கனவே வாடியிருந்த திருமுகத்தாமரை மேலும் வாடியதென்னலாம்.
“ராமானுச” என்று மெலிதான குரலில் அழைத்தான். காளமேகத்தின் இடி போன்ற காம்பீரியம் உடைய பெருமாள். கடற்கரையிலும், தேர்தட்டிலும் உலகறிய ஒருவார்த்தை உரைத்த பெருமாள்.
“இனிய கம்பீரமாகிய மதுரத்வனியால் எனக்கு கைங்கர்யத்திற்கு கட்டளையிட வேண்டும்” என்று முன்பு ராமானுசர் ப்ரார்தித்த அரங்கனின் குரலோசை காற்றில் கரைந்த கற்பூரமாக மெலிதாகக் கரைந்தது.
”ஐயோ! கண்ணன் தன் உள்ளத்தில் எதனாலேயோ கலங்கிப் போயுள்ளானே!” என்று அவர்கள் நினைத்தனர்.
ராமானுச! என்றழைத்தவன் தனது அபயஹஸ்தத்தை வித்யாசமாக மடக்கிக் காட்டினான். “எங்கே அவர்கள்?” என்றான்.
எந்த திருக்கை” அஞ்சேல்” என்று நமக்கு அபயப்ரதானம் செய்யுமோ! மீண்டும் பிறவியெடுப்பதைத் தவிர்க்குமோஅத்திருக்கையில் கட்டைவிரல், சுண்டு விரல் மடக்கி மூன்று விரல்களைக் காட்டினான்.
ஆளவந்தாரின் சரம திருமேனியில் மடங்கியிருந்தன மூன்று விரல்கள். இன்று அபயஹஸ்தத்தில் அவைகள் விரிந்துள்ளன
குணத்ரயமா? தத்வத்ரயமா? ரஹஸ்யத்ரயமா? அல்லது திவ்யதேசத்ரயமா?
ராமானுசர் மீண்டும் சிந்தனை வசப்பட்டார்?
——- அரங்கன் பேசுவான்.
(காத்திருங்கள்… தொடரும்)
இப்படிக்கு,
ஶ்ரீAPN ஸ்வாமி.