சென்னை மயிலாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த கேசவப் பெருமாள் கோயிலில் சினிமா ஷூட்டிங் எடுக்கிறார்கள் என்பது கேள்விப் பட்டு, மிகவும் மனம் வெதும்பி புகார் தெரிவித்துள்ளனர் அன்பர்கள். இந்தக் கோயில் தனியார்களால் நிர்வகிக்கப் பட்டு வந்தாலும், அறநிலையத்துறைக்கு கணக்கு காட்டும் கோயிலாகவே இருந்துவருகிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து திருக்கோயில் பாதுகாப்புப் பேரவையின் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்தவை…!
500 வருடங்கள் பழமையான மயிலாப்பூர் ஸ்ரீ கேசவப் பெருமாள் திருக்கோயிலில் சினிமா படமெடுக்கின்றனர் எனச் சில பக்தர்கள் இன்றுக் காலை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். கோயிலுக்குச் சென்று பார்த்ததில் கோயில் மேலக் கோபுரம் அருகில் மதிலை உடைத்து உருவாக்கிய வாயில் வழியாகச் சென்று ஒரு மிக நீண்ட பஸ் கோயில் உள்ளே நின்று கொண்டு இருந்தது.
அந்தப் பஸ்ஸில் இருந்து மின்சாரம் கொடுக்கப்பட்டு கோயில் உள்ளேயும் வெளியேயும் ஷூட்டிங் நடக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தக் கோயில் தென்கலைச் சம்பரதாயக் கோயில். உத்தமர்கள் துறை கண்காணிக்க மட்டுமே செய்யலாம் என்ற உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு உள்ளது. அந்த அருமையானத் தீர்ப்பைத் மிகத் தவறாகப் பயன்படுத்தும் சில அறங்காவலர்கள்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சேவார்த்திகள் மட்டுமே படபிடிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் திரு. சுதரசன் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அவர் விரைந்து சென்னை இணை ஆணையர் மூலம் நடவடிக்கை எடுத்தார். படபிடிப்பிற்கு வந்த கூட்டம் பஸ்ஸை எடுத்துக்கொண்டு கோயிலை விட்டு வெளியேறியது.
கோவிலில் பாடப்பிடிப்பு என்பது “தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்டம் 1947″ன் கீழ் இயற்றப்பட்ட விதிகள் 8,9ற்கு விரோதமானவை என்பதைப் பக்தர்கள் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டு, திருக்கோயில்களில் படப்பிடிப்பு காண நேரிட்டால் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…. என்கிறார்..!
இந்தச் சம்பவம் மயிலாப்பூர் அன்பர்களை பெரிதும் எரிச்சலடையச் செய்துள்ளது.
கோயிலுக்குள் அறநிலையத்துறை ஈ.ஓ.,க்களும் அதிகாரிகளும் தாங்கள் கார்களில் நேராக வந்து கோயிலுக்குள் இருக்கும் அலுவலகத்துக்கு வாசலில் இறங்கும் வகையில் கோயில் மதில் சுவரை இடித்து, அல்லது வாசல் படிகளில் மாற்றங்கள் செய்து வைத்திருக்கிறார்கள். அதற்கே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், இப்படி கோயிலுக்குள் சினிமா ஷூட்டிங் பஸ் வந்து, பிராகார வலம் வரும் பாதையில் ஷூட்டிங் பஸ்ஸை நிறுத்தி, பொருள்களை இறக்கி வைக்க அனுமதித்து என்று… கோயில் நிர்வாகம் ஈடுபட்டதைக் கண்டு தங்கள் மனக்குமுறலை பக்தர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.!