என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!

Published:

“என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!”
 
( ‘எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம்’ -பரணீதரனுக்கு கிடைத்த அனுக்கிரகம்)
 
சொன்னவர்-எஸ்.கணேச சர்மா62182165 2219747804810112 8874615486919213056 n - 2026
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
பரணீதரனுக்கு ஆர்.கே. நாராயணன் எழுதிய The Guide என்ற நாவலை மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாதமி ஆயிரம் ரூபாய் பரிசளித்தது அவர் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவர்.அப்போது சுவாமிகள் சென்னைக்கு வெளிப்புறத்தில் தங்கியிருந்தார்.பெரியவாளுடைய ஜன்ம நட்சத்திரத்து அன்று, அவரை தரிசித்து, ஒரு மலர் மாலையும்,நூறு ரூபாய் பணமும் சமர்ப்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தார் பரணீதரன்.
 
முதல் நாளே மடத்துக்குச் சென்று, விஸ்வரூப தரிசனமும் செய்து கொள்ளலாமென்று கிளம்பினார்.இரவு பூஜையை முடித்துக் கொண்டு 10 மணி சுமாருக்கு பெரியவா தன் அறைக்குள் சென்று விட்டிருந்தார். நேரே வெளியே ஒரு பவழ மல்லி மரத்தின் அடியில் பரணீதரன் அமர்ந்தார். இரவெல்லாம் விழித்திருந்து விடியற்காலை தரிசனம் செய்யத் துடித்தார். தான்தான் முதன் முதலாக அவருக்கு மாலை தர வேண்டும் என்று ஒரு ஆசை. ‘இது மட்டும் நடந்து விட்டால் எனக்குப் பெரியவாளிடம் உள்ள பக்தி தூய்மையானது, சத்தியமானது என்று அர்த்தம். பெரியவா அருள் எனக்குப் பூரணமாக இருக்கு என்று நினைப்பேன்!’ என்று தனக்குள்ளேயே அவர் ஒரு பரிசோதனைக்கு உட்படத் தயார் செய்து கொண்டார்.அப்படி நடக்கவில்லை என்றால், அது எவ்வளவு பாதிக்குமென்பதை எண்ணிப் பார்க்கவில்லை. இரவு முழுவதும் ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர என்று ஜபித்துக் கொண்டிருந்தார். ஒரு சின்ன சப்தம் கேட்டாலும், சுவாமிகள் விழித்துக் கொண்டு விட்டாரோ! என்று ஓடி,ஓடிப்போய் பார்த்துக் கொண்டிருந்தார்.
 
பொழுது புலர்ந்தது. வயதான ஒரு அம்மா பெரியவா அறையின் கதவுக்கு முன் போய் நின்று கொண்டாள். அவர்தான் வழக்கமா விஸ்வரூப தரிசனம் பார்த்ததும் கற்பூர ஆரத்தி எடுப்பவர். மெள்ள மெள்ள சில பெண்மணிகள் வந்து சேர்ந்து கதவை மறைத்தபடி நின்று கொண்டு பாட ஆரம்பித்தனர் .அவர்களுக்குப் பின்னாலே தான் பரணீதரன் நிற்க முடிந்தது. பெண்களை இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறுவது அவருக்குப் பழக்கமில்லை இரவு கண் விழித்தும் பயனில்லாமல் போய்விடுமோ என்ற ஏக்கம் வந்தது.
 
கதவு திறந்தது. ஒளிவீசும் முகத்துடன் பெரியவா காட்சி தந்தார். கற்பூர ஆர்த்தியால் மேலும் ஒளி வீசியது .தான் .நினைத்தபடி முதல் மாலையைத் தான் போட முடியாமல் போய்விட்டால்…!. இதே எண்ணம் பரணீதரனை நிலைகுலய வைத்தது .அடுத்த நிமிடம் சுவாமிகள் கை நீண்டுகொண்டே வந்து ,ஒரு யானையின் துதிக்கை போல் ஆகி, எல்லாப் பெண்களையும் தாண்டி, அவர் தட்டில் இருந்த மாலையை முதலில் எடுத்துக் கொண்டது. எல்லாரும் ஆச்சர்யத்துடன், ‘யாரந்த அதிர்ஷ்டசாலி!’ என்று திரும்பிப் பார்த்தனர். அப்போது கிடைத்த சிறிய வழியில் பரணீதரன் விடுவிடு என்று, பெரியவா அருகிலேயே போய் அவர் பாதங்களில் கொண்டுவந்திருந்த 101 ரூபாய் நாணயங்களை அர்ப்பணித்துவிட்டு, மெய்சிலிர்த்து நின்றார். பெரியவா,அவர் தந்த மாலையைத் தலைமேல் சாத்திக்கொண்டு அனுக்கிரகம் செய்யவே, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினார்.
 
“என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!” என்று ஒரு அருட்பார்வை பார்த்தார், பெரியவா.
 
‘எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம்’ என்று பரணீதரன் உள்ளம் துதி பாடியது
ALSO READ:  பஞ்சாங்கம் செப்.07 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img