
இறைவனின் முகவரி எது? அவன் எங்கிருப்பான்? இது பற்றி சாஸ்திரங்கள் சிறப்பான குறிப்புகளை நமக்களித்துள்ளன. இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் அதனை எத்தனை பேர் உணர்ந்துள்ளார்கள்? இறைவனை உணரும் இடங்கள் என்று சில உள்ளன.
அது எப்படிப்பட்டதென்றால் நதி எங்கும் பிரவகித்து ஓடினாலும் குளியல் படித்துறைகளில் இறங்கி நதியை அடைய முடியுமே தவிர எங்கென்றால் அங்கே இறங்கி நதியின் பயனைப் பெற முடியாது. அதே போல் பகவான் சர்வ வியாபகம் கொண்டவனாக இருந்தாலும் சிலவற்றின் மூலம் மட்டுமே நாம் அவனைப் பெறுகிறோம். அந்த சில யாவை? அதாவது இறைவன் வசிக்கும் இடங்கள் எவை? அதனை இப்போது பார்ப்போம்!
இந்த விஷயம் எப்படிப்பட்டதென்றால் சூரிய ஒளி எங்கும் பரவி இருந்தாலும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஒளி மட்டுமே மீண்டும் ஒளியை அளிக்க வல்லது. அதைப்போல் இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் ஸத்புருஷர்களின் இதயங்களில் இருந்து கொண்டு அவர் மூலம் நம் அனைவரையும் அனுகிரகம் செய்கிறார். அதனால் சத் புருஷர்கள் கண்ணாடி போன்றவர்கள். இறைவன் அவர்களின் இதயத்திலும் அவர்களின் செயல்களிலும் அவர்களின் சிந்தனையிலும் பிரதிபலிகிறார். அதனால்தான் அவர்கள் பேசினாலும் அவர்கள் பார்த்தாலும் அது இறைவனின் பேச்சே! இறைவனின் பார்வையே! ஏனென்றால் அவர்கள் இதயம் முழுவதும் இறைவன் நிறைந்திருப்பதால் அவர்கள் வெளிப்படுத்துவது அனைத்தும் இறைவனின் வெளிப்பாடாகவே இருக்கும்!
இவ்விஷயத்தைப் பற்றி பாகவதத்திலும் இராமாயணத்திலும் அனேக அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. வாமனன் பலிச்சக்கரவர்த்தியிடம் தன் முகவரியை மிக அழகாகக் கூறுகிறார். இதனை கவி போத்தானா தெலுங்கு மொழியில் இயற்றியுள்ள பாகவதத்தில் அழகாக குறிப்பிடுகிறார். “நான் அதிகமாக சத் புருஷர்களிடம் புகுந்திருப்பேன்” என்கிறார்.
இங்கு வாமனன் ஒரு பிரம்மச்சாரியாக பேசுவது போல் தோன்றினாலும் அவர் சாட்சாத் நாராயணன். அதனால் அவர் வார்த்தைகள் ஒரு பிரம்மச்சாரி கூறும் கூற்று போலவும் பகவான் கூறும் கூற்று போலவும் – இரண்டுமாக வெளிப்படுகின்றன.
பிரம்மச்சாரியின் பார்வைப்படி பார்த்தால், “நிரந்தரம் வேத அத்தியயனமும் சாஸ்திர அத்யயனமும் செய்துவரும் பிரம்மச்சாரி சத் புருஷர்களோடும் மகாத்மாக்களோடும் சேர்ந்து அவர்களிடமிருந்து வித்யையைக் கற்றுக் கொண்டு அவர்களிடம் சாங்கத்தியம் கொண்டிருப்பார்” என்பது ஒரு அர்த்தம்.
“பகவான் சத் புருஷர்களிடம் மட்டுமே இருப்பார்!” என்பது இரண்டாவது அர்த்தம். இதனைக் கொண்டு வித்தியாப்பியாசம் செய்பவர்களான ஸத்புருஷர்களின் சங்கத்தில் இருந்தால் மாணவனுக்கு வித்யை நல்லவிதமாக அறிவில் புகும் என்பது புரிகிறது.
மேலும் விஷ்ணு ஸத்புருஷர்களிடம் மட்டுமே சேர்ந்திருப்பார் என்பது இரண்டாவது பொருள். எனவே விஷ்ணு நம்மோடு எப்போதும் இருக்க வேண்டுமானால் நாம் சத் புருஷர்களாக மாறவேண்டும். இதிலிருந்து அறிய வேண்டிய போதனை இதுவே! பகவான் நம் அருகில் இருக்க வேண்டுமென்றால் அதற்குத் தகுந்த விதமாக நம்மை நாம் பண்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் தொடர்பாக ராமாயணத்தில் ஒரு அழகான காட்சி காணப்படுகிறது. ராமச்சந்திர மூர்த்தி வனவாச சமயத்தில் சித்திரகூட மலையில் நுழைந்த போது, “எங்காவது நல்ல ஆசிரமம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எங்கே அமைத்தால் நன்றாக இருக்கும்?” என்று அங்கிருந்த ருஷிகளைக் கேட்கலாம் என்று கிளம்புகிறார்.
சற்று தூரம் நடந்து சென்றபின் வால்மீகி மகரிஷியின் தரிசனம் கிடைக்கிறது. வால்மீகி மகரிஷியை வணங்கி, சீதா லக்ஷ்மண சமேதராக ராமச்சந்திர மூர்த்தி ஒரு கேள்வி கேட்கிறார். “சுவாமி நான் இருப்பதற்கு ஏதாவது வசதியான இடத்தை காண்பியுங்கள்!” என்கிறார்.
அவர் நாராயணன் என்ற விஷயம் வால்மீகி மகரிஷிக்குத் தெரியும். அவர் புன்னகை செய்து, “சுவாமீ! நீ நரனாக அவதாரம் செய்ததால் மனிதனைப் போல் நடந்து கொள்கிறாய். இல்லாவிடில் நீ அறியாதது ஏதாவது உண்டா? சரி. “நான் எங்கே இருப்பது?” நீ என்று நீ வினவுகிறாய். நீ எங்கே இல்லை? இதற்கு நான் என்ன பதில் கூறுவது?” என்றார்.
“நீ சர்வ வியாபகனாக இருந்தாலும் நீ அவதாரம் எடுத்து ஒரு உடலை ஏற்று சஞ்சாரம் செய்கிறாய். அதனால் நீ எங்கே இருக்க வேண்டும்? நீ எங்கே இருக்கிறாய்? என்று கூறுகிறேன், கேள்!” என்று கூறி பகவான் இருக்கும் இடங்களை வால்மீகி மகரிஷி விவரிக்கிறார்.
இது மிக அழகான கதைப் பின்னணியில் இறைவன் வசிக்கும் இடங்களை நமக்கு உபதேசமாகக் காண்பிக்கும் காட்சி! இதனை துளசிதாசரும் ராமசரிதமானஸ் என்ற துளசி ராமாயணத்தில் மிக அற்புதமாகக் காட்டுகிறார்.
“காமம் குரோதம் அகம்பாவம் அபிமானம் மோகம் லோபம் க்ஷோபம் (க்ஷோபம் என்றால் எப்போதும் ஏதோ கவலையிலேயே ஆழ்ந்திருப்பது) விருப்பு வெறுப்பு துவேஷம் ஆடம்பரம் மாயை – இவை துளிக் கூட இல்லாத மனதில், ராமா! நீ வசிக்கிறாய்!” என்கிறார் வால்மீகி. “இவை இல்லாத இதயமே நீ வசிக்கும் நிலையம்” என்கிறார்.
எனவே இறைவனை சாக்ஷாத்காரம் செய்து கொள்ள வேண்டும் என்றாலோ இறைவனை நம் இதயத்தில் தரிசிக்க வேண்டும் என்றாலோ மேற்சொன்ன துர்க்குணங்கள் இல்லாதபடி கவனமாக இருக்கவேண்டும் என்ற போதனை நமக்குக் கிடைக்கிறது.
அதேபோல், “சர்வ லோகத்துக்கும் நன்மையை யார் விரும்புவாரோ, சுக துக்கங்களைச் சமமாக யார் சகித்துக் கொள்வாரோ, யார் உண்மையையும் பிரியத்தையும் உரைப்பாரோ, யார் எப்போதும் பகவத் சரணாகதியில் வாழ்க்கை நடத்துவாரோ அப்படிப்பட்டவர் இதயத்தில் நீ இருப்பாய்!” என்கிறார்.
இங்கு கூறப்பட்ட குணங்களை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்தால் பகவான் சத் புருஷர்களிடம் இருப்பார்…. அந்த சத்புருஷர்கள் இவ்வாறு இருப்பார்கள் என்ற அற்புதமான செய்தி நமக்குக் கிடைக்கிறது.
துளசிதாசர் “பிற பெண்களைத் தாய் போலவும், பிறர் தனத்தை விஷம் போலவும் நினைப்பவர் யாரோ அப்படிப்பட்டவரின் இதயத்தில் நீ வசிக்கிறாய்! பிறரின் முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள், பிறரின் துயரத்தைக் கண்டு வருத்தமடைபவர்கள், பகவானை உயிருக்கும் மேலாக விரும்புபவர்கள் முதலானோர் மேன்மையானவர்கள். அவர்களின் இதயத்தில் நீ வசிக்கிறாய்!” என்று கூறுகிறார்.
இவ்வாறு கூறுவதன் மூலம் பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று காட்டுகிறார். நாம் பிறரைப் பார்த்து அசூயை கொள்வதோ பொறாமை கொள்வதோ செய்தால் அதனை இறைவன் விரும்புவதில்லை. இறைவனுக்குப் பிடிக்கும்படி வாழ வேண்டும். அதனால் தர்மமயமான வாழ்க்கை, இறைவன் மேல் பக்தி – இவ்விரண்டுமே உண்மையான வாழ்க்கை முறை.
பாரதீய மகரிஷிகள் காட்டியுள்ள ‘ஆதர்ஷ ஜீவன விதானம்’ இது! எந்த மார்க்கத்தில் இருந்தால் இகம் பரம் இரண்டும் கிடைக்குமோ அந்த வாழ்வியலை இத்தனை அழகாக காட்டுகிறார்கள்!
பிறர் துயரத்தைப் பார்த்து பொறுக்க இயலாமல் இருக்கும் குணத்தை தயை என்பார்கள். தயை குணம் இருக்குமிடத்தில் நீ இருக்கிறாய்! பிறர் குற்றங்களைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் நல்ல குணங்களை மட்டுமே யார் ஏற்கிறார்களோ…. நற்குணங்களை மட்டுமே பார்த்து அவர்களை மதிக்கிறார்களோ அவர்களின் இதயத்தில், இறைவா! நீ இருக்கிறாய்!
“சாஸ்திரம் கூறும் நியமங்களையும் நிபந்தனைகளையும் கடைபிடிப்பவர்களிடம் நீ விளங்குகிறாய்! எப்படிப்பட்ட கஷ்டத்தையும் சகித்துக் கொண்டு தர்ம ரட்சணைக்கும் கோ ரட்சணைக்கும் பாடுபடுபவர்களிடம் நீ விளங்குகிறாய்!” என்கிறார். இந்த விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். பசுக்களை பாதுகாத்தால் அது பகவானுக்கு நிவாசம் ஆகிறது. கோமாதாவைக் காப்பதற்கு யார் முயற்சிப்பார்களோ அவர்களிடம் இறைவன் இருப்பான். அதேபோல் பொறுமை குணத்தோடு தர்மத்தை கடைபிடிப்பவர்களிடம் இறைவன் எப்போதும் விளங்குவான்! தர்மத்தைக் கடைப்பிடிப்பது எளிதான காரியமல்ல. சகிப்புத் தன்மை மிகவும் அவசியம். “அப்படிப்பட்ட சகிப்புத் தன்மை உள்ளவர்களிடம் இறைவா! நீ வசிக்கிறாய்! யார் திரிகரணங்களால் உன்னை தியானம் செய்கிறார்களோ அவருடைய இதயத்தில் நீ வசிக்கிறாய்!” என்று இறுதியாகக் கூறுகிறார்.
அதாவது பக்தி உள்ளவர்களிடம் பகவான் திகழ்வார். அதனால் பக்தனின் இதயமே பகவானின் முகவரி! பகவானைக் காண வேண்டுமென்றால் பக்தர்களைப் பார்க்க வேண்டும்!
“அகாயோ பக்த காயஸ்யாத் !” என்கிறது சாஸ்திரம். சரீரம் இல்லாத இறைவனுக்கு பக்தர்களின் உடலே சரீரம்! அவர் எதனை ஏற்றாலும் பக்தர்களின் மூலமே ஏற்கிறார்.
இறைவனின் வசிப்பிடங்களை இங்கு பார்த்தோம். அந்த இடங்கள் நம்மிடமும் நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திலும் விளங்க வேண்டும்! அப்போது இறைவன் நம்மிடமும் சமுதாயத்திலும் விளங்கி உலகிற்கு நன்மை விளைவிவிப்பார் என்று கூறியருளிய ருஷிகளுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


