
மனிதப் பிறவி என்பது இறைவன் அளித்த உயர்ந்த வாய்ப்பு. இவ்விஷயத்தை ஒவ்வொரு கணமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். மீண்டும் இது போன்ற அற்புதமான உடலோ இதுபோன்ற வாய்ப்போ கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை.
படைப்பில் பலவித உயிரினங்கள் உள்ளன. அவற்றின் காலம் அஞ்ஞானத்திலேயே கழிந்துவிடுகிறது. விலங்கு பறவை மரம் போன்ற பிறவிகள் அனைத்தும் தெய்வீகத்தில் மிகக் குறைந்த நிலையில் இருப்பவை.
அப்படிப்பட்ட நிலையிலிருந்து தாண்டித் தாண்டி ஜீவன் பரிணாமமடைந்து மனிதப் பிறவியை எடுக்கிறான். இது மிகச்சிறந்த பரிணாம வரிசை. அத்தகைய பரிணாம வளர்ச்சியில் உத்தமமான உடலை இப்போது எடுத்துள்ளோம்.
முதலில் கல் முதலான உடல்கள். இவற்றை ஸ்தாவரம் என்பர். அதன்பின் விருட்சங்கள். அவையும் ஸ்தாவர வடிவங்களேயானாலும் கல்லை விடச் சிறிது மேல். அதன் பின் வரும் பிறவிகள் பறவைகள் விலங்குகள். இவை சிறிது மேலான பரிணாமம் அடைந்தவை. அவற்றைவிடப் பரிணாமம் அடைந்த பிறவி மனிதப்பிறவி.
மனிதப் பிறவியின் சிறப்பு என்னவென்றால் நல்லது எது? தீயது எது? என்ற பகுத்தறிவு உள்ளது. நித்தியம் எது? அநித்தியம் எது? என்ற விவேகம் பெறுவதற்கு ஏற்புடைய பிறவி இது. அப்படிப்பட்ட மனித உடல் கிடைத்திருக்கும் போது இதனை அதற்காகவே உபயோகிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு சாலையில் பிரயாணம் செய்வதற்கு நமக்கு கார் இருக்கிறது. அதனை சாலையில் எடுத்துச் செல்லாமல் வீட்டில் ஒளித்து வைத்தால் என்ன பயன்? எங்கெங்கோ தேவையில்லாத பாதைகளில் எல்லாம் அதை ஓட்டினாலும் பலன் என்ன இருக்கப் போகிறது? எதற்காக நாம் அந்தக் கருவியை சம்பாதித்தோமோ அதற்குப் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் இந்த உடல் என்னும் கருவியை நாம் நம்மில் உள்ள தெய்வீகத்தை அறிவதற்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இந்த மனித உடல் கிடைத்துள்ளது. அதனை எப்போதோ செய்யலாம்…. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வாய்தா போடக்கூடாது.
அது இப்போதே நடக்க வேண்டும்! இங்கேயே நடக்க வேண்டும்! இங்கேயே என்றால் இந்தப் பிறவியிலேயே நடக்க வேண்டும். எனவே ஆன்மீக சாதனையில் பின்னால் வரப்போகும் பிறவிகளுக்கு வாய்தா விடுவதற்கில்லை. இந்தப் பிறவியிலேயே உய்வித்துக் கொள்ள வேண்டும்.
இது பற்றி பல இடங்களில் உபநிஷத்து ஒரே விதமான போதனையைச் செய்கிறது.
“இஹசேத் அவேதீத தசத்யமஸ்தி நசே திஹா வேதீத் மஹதீ வினஷ்டி: !” என்பது கேனோபநிஷத்தில் உள்ள ருஷி வாக்கியம்.
‘இஹ’ என்றால் இங்கேயே என்று பொருள். இங்கேயே இப்போதே என்று கூறுகிறார் ருஷி. அதாவது இங்கேயே இந்த நிமிடத்திலேயே! இங்கேயே என்றால் இந்த பூமியின் மேல் இந்த மனித உடலை எடுத்திருக்கும் போதே! இந்தப் பிறவியிலேயே என்று பொருள். இப்போதே என்றால் பிறகு எப்போதோ பார்த்துக்கொள்ளலாம் என்று வாய்தா போடாமல் இந்தக் கணத்திலேயே என்று பொருள்.
“இந்தப் பிறவியிலேயே யார் தன்னுள் உள்ள இறைவனை அறிந்து கொள்கிறானோ அவன் மட்டுமே உண்மையில் உடலை பெற்றவனாவான். இல்லாதவர், முழுவதும் நஷ்டமடைந்தவராவார்” என்கிறார். “மஹதீ வினஷ்டி:” என்ற சிறந்த வாக்கியத்தால் இதைத் தெரிவிக்கிறார்.
வாழ்க்கையில் நாம் நஷ்டமடையக் கூடாது. வெற்றியை சாதிக்க வேண்டும். வெற்றியை சாதித்தவர்களாக நாம் எப்போது ஆவோம்? நம்முள்ளே பிரகாசிக்கும் இறைவனின் சைதன்யத்தை அனுபவத்திற்கு கொண்ர்ந்தால்…. நம் சுய ஸ்வரூபத்தை அறிய முடிந்தால்….. அதுதான் வெற்றி!
அதனைப் பெறுவதற்கு இந்த ஜென்மமே மிகப்பெரிய வாய்ப்பு. இந்த ஜென்மத்தில் “எது சொன்னாலும் புரியவில்லை….”, என்றால் இன்னும் கஷ்டப்பட்டு இந்தப் பிறவியிலேயே புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டு.ம் மீண்டும் இது போன்ற பிறவி வரும் என்பதற்கு கச்சிதமான அபிப்பிராயம் நமக்கு இல்லை.
அதே போல் கடோபநிஷத் ‘த்ருதீய வல்லி’யில் ஒரு மந்திரம் வருகிறது.
“இஹ சே தசக்தோ போத்தும் ப்ராக் சரீரஸ்ய விஸ்ரஸ: !
தத: ஸர்கேஷு லோகேஷு சரீரத்வாய கல்பதே !!”
“இந்த உடல் சாய்ந்துவிடும் முன்பாகவே நீ பரமாத்மாவை அறிவதற்கு முயற்சி செய்! ஒருவேளை அதற்கான முயற்சியை நீ செய்யாவிட்டால் மீண்டும் மீண்டும் உலகங்களில் பிறவி எடுத்து கொண்டே இருப்பாய்! பிரயத்தனம் செய்தால் எதைப் பெற வேண்டுமோ அதை பெற்றவனாவாய்! எதற்காக பிறவி எடுத்துள்ளாயோ அதை சாதித்தவனாவாய்! அவனே உய்வடைய கூடியவன்”.
இந்த இரண்டு உபநிஷத்து மந்திரங்களையும் கவனித்துப் பார்த்தால் வாழ்க்கையில் செய்ய வேண்டியது எது என்பது புரியும். ஆனால் இதுபோன்ற போதனைகளை பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். யாரோ ஒருவரோ இருவரோ உணர்ந்து கடைபிடிக்கிறார்கள். அனைவரும் கடைபிடிக்க மாட்டார்கள்.
எத்தனை கூறினாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு உலகியல் விஷயங்களே சத்தியம் என்று நினைத்து அவற்றுக்காகவே வாழ்க்கை முழுவதும் செலவழிப்பார்களே தவிர தம்முள் உள்ள தெய்வீகத்தை அறியும் முயற்சியை யாரும் செய்வதில்லை!
ஆனாலும் உபநிஷத் மாதா கூறிக் கொண்டே இருக்கிறாள்… யாராவது ஒருவராவது காதில் போட்டுக் கொண்டு கடைபிடிப்பார்கள் என்ற ஆசையால்! எனவே ஆயிரம் பேர் கடைபிடிக்காவிட்டாலும் யாரேனும் ஒருவராவது கடைப்பிடித்தால் போதும் என்ற உத்தேசத்தில்தான் மகரிஷிகள் கூட கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஏனென்றால் ஆயிரத்தில் ஒருவருக்குப் புரியும். அந்த ஆயிரம் பேரில் ஒருவர் முயற்சிப்பார். அவ்வாறு முயற்சித்த ஆயிரம் பேரில் யாரோ ஒருவர் பெற்று உய்வடைவார். அவ்வாறு பெறுவதற்காக அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சொல்லிக் கொண்டும் இருக்க வேண்டும்.
அதனால் வேதமாதா சோர்வடையாமல் கூறிக் கொண்டே இருக்கிறாள். “மகனே! இந்தப் பிறவி மீண்டும் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு இல்லை! இதனை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்!” என்று உரைத்துக் கொண்டே இருக்கிறாள்.
அதனால் மனிதப்பிறவி கிடைத்தது நம்முள் உள்ள ஆத்மாவை அறிவதற்கே! அப்படியின்றி இந்த ஜென்மத்தில் இருந்து நாம் வேறொரு லோகத்திற்கு சென்று அங்கே போய் பெறுவதற்கு எதுவும் இல்லை. உன் இதயத்தில் உள்ள இறை தத்துவத்தை அறிய முடிவது இந்த மனித உடலைக் கொண்டுதான்! வேறு எந்த உடலாலும் இதனை அறிய முடியாது!
நம்முள்ளே உள்ள பரமாத்மாவை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதே மிருக குணம். அப்படிப்பட்ட மிருகப் பிறவிகளை இதற்கு முன் நிறைய எடுத்துவிட்டோம். மீண்டும் அதே மிருக குணத்துடனேயே இப்போதும் நடந்து கொண்டால் மீண்டும் நமக்காக காத்திருப்பது மிருகப் பிறவிகளே!
“மீண்டும் மனிதப்பிறவி கிடைக்கும் என்று கூற இயலாது. அதனால் உன்னுள்ளே உள்ள ஈஸ்வர தத்துவத்தை அறிதல் என்பது மிகவும் இன்றியமையாத அம்சம்” என்று உபநிஷத் மாதா அநேக இடங்களில் இது குறித்து போதிக்கிறாள்.
நம் உள்ளேயிருக்கும் பரமாத்மாவை உணராமல் இருப்பதே உண்மையான ‘பயம்’ என்று கூறுகிறார் ருஷி. யார் தன்னுள் உள்ள ஈஸ்வர சைதன்யத்தை அறிகிறாரோ அவர் இனி எதையும் விரும்ப மாட்டார்! அவர் இனி இந்த உடலால் துன்பத்தை அனுபவிக்க மாட்டார்! அதாவது துக்கத்திலிருந்து விமோசனமடைந்து விடுவார்.
ஏனெனில் கோரிக்கை இருந்தால் துயரமும் இருக்கும். தன்னுள் உள்ள அகண்டமான ஈஸ்வர தத்துவத்தை அனுபவத்திற்குக் கொண்டு வந்தவருக்கு இனி எதன் மீது விருப்பம் இருக்கும்? எந்த துக்கம்தான் அவரை பாதிக்கும்? என்று உபநிஷத்து மீண்டும் மீண்டும் ஆயிரக்கணக்கான வாக்கியங்களால் நமக்கு போதனை செய்கிறது.
இந்த வாக்கியங்கள் அனைத்தும் கூட, “வெளிச்சம் இருக்கும்போதே வீட்டை சுத்தம் செய்து கொள்! என்ற பழமொழிக்கேற்ப இந்த மனித உடல் இருக்கும் போதே நீ உன்னுள் உள்ள ஈஸ்வர தத்துவத்தை உணர்ந்து கொள்!” என்று விவரிக்கின்றன.
அற்புதமான சக்தி நிரம்பிய யோக சரீரத்தை பகவான் நமக்கு அளித்துள்ளார். இதனை யோக சாதனையில் ஈடுபடுத்தி நம்முள் உள்ள யோகேஸ்வரனான பரமாத்மாவை அடைய முயற்சி செய்ய வேண்டும்!
அவ்விதமாக பகவானின் அருளும் குரு அருளும் நம் புத்தியை தூண்டட்டும்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


