ஶ்ருங்கேரி வைபவம் 3 ஶ்ரீமடத்தில் நடக்கும் வியாச பூஜையில் , ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்கு அடுத்தபடியாக ஆராதிக்கப்படுபவர் ஶ்ரீ வியாஸ பகவான் .
வேத ,வேதாந்தங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி , பதினெண் புராணங்கள் , மஹாபாரதம் , அதன் அங்கங்களான ஶ்ரீமத்பகவத் கீதை, ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அனைத்தையும் ஆக்கித்தந்தவர் . ஶ்ரீபராசர முனிவர் நதியைப் படகில் கடந்து கொண்டிருக்கும் பொழுது தனது மகனாக மாபெரும் யோகி ஒருவர் உதிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு படகைச் செலுத்திக் கொண்டிருந்த மீனவப்பெண் ஸத்யவதியை அக்கணமே மணந்து கொண்டார் .
நதியின் நடுவிலுள்ள தீவில் அந்த மஹானாகிய வியாஸபகவான் அவதரித்தார் . தீவில் பிறந்ததால் த்வைபாயனன் என்ற பெயரும் இயற்பெயராக ஶ்ரீகிருஷ்ண என்ற பெயரும் ஏற்பட்டது .
ஶ்ரீகிருஷ்ணத்வைபாயனர் வியாசபகவானாக பரிணமித்த பொழுது அவர் தவப் பெரும் செல்வத்தை உடையவராய் இருந்தார் . பிரஹ்ம ஞானம் பிறக்க வழி செய்யும் ப்ரஹ்ம சூத்ரம் போன்ற பல நூல்கள் தோன்ற வழி செய்ததால் ப்ரஹ்மநிதி என்றும் அழைக்கப்படுகிறார். ஶ்ரீசங்கரபகவத்பாதாள் காசி க்ஷேத்திரத்தில் பல செயற்கரிய செயல்களைச் செய்து கொண்டிருந்தார் . அவருக்கு முதலில் எட்டு வருடம் ஆயுள் என்று ஏற்பட்டிருந்தது . முதலை வாயிலிருந்து விடுபட்டு துறவறம் மேற்கொண்ட பொழுது, ஆயுள் இரட்டிப்பாகி பதினாறு ஆகியது .
அப்பொழுது ஶ்ரீவியாசபகவான் அந்தணக் கிழவர் வேடத்தில் ஶ்ரீசங்கரரைச் சந்தித்தார் . ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு உரை எழுதியிருந்த பதினாறு வயது இளைஞனை பல விதத்தில் கேள்விகேட்டு சோதித்தார் . ஶ்ரீ சங்கரர் அனைத்திற்கும் அழகாக விடையிளித்தார் . மிகவும் மகிழ்ச்சி அடைந்த வியாச பகவான் அவரது ஆயுளை(32வயதுவரை)இரட்டிப்பாக்கி ஆசீர்வதித்தார் .
ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி வியாச பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜீலை 16 ம் தேதி வருகிறது.
வ்யாஸாய , விஷ்ணு ரூபாய , வ்யாஸ ரூபாய விஷ்ணவே | நமோவை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:||