“மாண்டவர்…!(?]-மீண்டால்!”
(ஓரு பெண்மனிக்கு கிடைத்த அருள்)
( கை நிறைய குங்குமத்தை கொடுத்து “நெத்தியில இட்டுக்கோம்மா, உன்னோட வருத்தம் தேவை இல்லாதது.உன் கணவர் உயிரோட இருக்கார். கூடிய சீக்கிரமே உங்கிட்ட அவர் திரும்பி வரப்போறார். உன் முகம் பிரகாசம் பெறப்போறது” என்றார் பெரியவர்.-அந்தப் பெண்மனியிடம்)
கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.
(சற்று சுருக்கப்பட்டது)
பல வருடங்களுக்கு முன்னால் காஞ்சி சங்கர மடத்தில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் சுமங்கலி பூஜை ஏற்பாடு ஆகி இருந்தது.அதுவும், மகா ஸ்வாமிகள் இந்த பூஜையில் கலந்து கொள்ளும் சுமங்கலிகளை ஆசிர்வதிப்பதற்காகக் கலந்து கொண்டார்.
இவர்களிடையே, வித்தியாசமாக ஒரு பெண்மணி தெரிந்தார். நடுத்தர வயது இருக்கும்.அவரது நெற்றி மட்டும் மூளியாகக் காணப்பட்டது.குங்குமம் இல்லை. பூஜை செய்ய வந்தது மாதிரியும் தெரியவில்லை.
ஒரு சில பெண்மணிகள் ‘குங்குமம் இட்டுக்கொள்ள இவள் மறந்துவிட்டாள் போலிருக்கிறது’ என்றெண்ணிதாங்கள் கையில் வைத்திருந்த குங்குமச் சிமிழை அவர் பக்கம் நீட்டி “எடுத்துக்கோங்கோ” என்றனர், பரிவூடன்.
ஆனால், அந்த குங்குமச் சிமிழைப் பார்த்த மாத்திரத்திலேயே ஏதோ பார்க்கக்கூடாத ஒன்றைப் பார்த்து விட்டது மாதிரியும், தனக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பொருள் போலவும் விலகி விலகி நடந்தார் அந்தப் பெண்மணி.இனியும் இங்கு நின்று கொண்டிருப்பது சரிப்படாது என்று தீர்மானித்தவராக,பூஜை நடந்து கொண்டிருக்கும் அந்த ஹாலின் ஒரு மூலையை நோக்கி விறுவிறுவென்று நடந்து சென்று நின்றார்.
மகா ஸ்வாமிகளின் பார்வையில் இது படாமல் போகுமா?
தன் பீடத்தில் இருந்தபடியே அந்தப் பெண்மணியைப் பார்த்து அருகே வருமாறு சைகை காட்டினார்,
அந்த பெண்மணி அருகே செல்ல தயங்கி தான் இருந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.கொஞ்சமும் நகரவில்லை.சிலருக்குக் கோபமே வந்தது.
“போங்கோ….அந்தக் கருணைத் தெய்வம் உங்களைத்தான் கூப்பிடறது. சீக்கிரம் போங்கோ” என்றனர் சில சுமங்கலிகள்.
நகராத பெண்மனிக்கு மீண்டும் சைகை காட்டினார் பெரியவா.
அதற்குள் ஒரு சீடன் வேகமாக வந்து ,வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தான். வேறு வழி இல்லாமல் சீடனை பின்தொடர்ந்து நடந்தார்.
“ஏம்மா..சுமங்கலி பூஜை நடக்கற இடத்துல குங்குமம் இல்லாம…மூளி நெத்தியோடநின்னுண்டுருக்கியே..” என்று நிதானமாகக் கேட்டார் மகா பெரியவா.
“இல்லே பெரியவா..நான் குங்குமம் வெச்சுக்கப் படாது” என்றார்.
பெரியவா பதில் ஏதும் பேசவில்லை. பிறகு அந்தப் பெண்மணியே தொடர்ந்தார். “என்னோட கணவர் ராணுவத்துல இருந்தார். எல்லைப் பகுதியில் நடந்த ஒரு சின்ன யுத்தத்துல அவர் இறந்து போயிட்டதா எனக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு சேதி வந்தது.ஆனா அவரோட உடம்பு வரல.முதல்ல இந்தச் செய்தியை நான் நம்பலை. அவர் நிச்சயம் உயிரோட இருப்பார்னு நம்பிண்டு இருந்தேன். வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிண்டு இருந்தேன்.-அவர் பத்திரமா திரும்பி வரணும்னு. ஆனா…”
சற்றே நிறுத்திய அந்தப் பெண்மணி,அடக்க முடியாமல் வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு திடமான குரலில் மீண்டும் பேச ஆரம்பித்தார்.; “என்னோட கணவர் போர்முனைல இறந்துட்டார்னு ரெண்டு மூணு தடவை பேப்பர்ல நியூஸ் வந்துடத்து.அதனோட கட்டிங்கும் இருக்கு.தவிர மிலிட்டரில இருக்கிறவா சிலரும் இதை உறுதிபடுத்திச் சொன்னா அதுக்கு மேல இந்த விஷயத்தை நம்பாம என்னால இருக்க முடியல. என்னோட தலைவிதினு திடப்படுத்திண்டுட்டேன்.
நான் இன்னிக்கு ஸ்ரீமடத்துக்கு வந்ததே அகாலமா மரணமான அவரோட கர்மாவை எப்படி நான் செய்யணும்னு உங்ககிட்டே கேக்கறதுக்குத்தான்.”
அந்தப் பரப்பிரம்மம் சாதுவாக வீற்றிருந்தது. ஹாலே அமைதியாக இருந்தது.
கண்களை மூடிச் சில நிமிடங்கள் தியானத்தில் இருந்த பெரியவா,பிறகு கண் விழித்தார். அப்போது அவருடைய தேஜஸைப் பார்த்தால், சாட்சாத் சிவ சொருபமாகவே தெரிந்தார்.
தன் முன்னால்,குங்குமம் இருந்த மரப் பேழைக்குள் கை விட்டார். தன் கை நிறைய குங்குமத்தை எடுக்கவில்லை; அள்ளினார்.அந்தப் பெண்மணியிடம் புன்முறுவலாக அதை நீட்டினார்.
பெண்மணி விதிர்விதிர்த்து நின்றார்.வெலவெலத்த நிலையில் காணப்பட்ட அந்தப்பெண்மணி குங்குமத்தைப் பெற்றுக்கொள்ள கைகள் முன்வரவில்லை
மற்ற சுமங்கலிகள், “வாங்கிக்கோங்கோ..இதுக்குப் பெரிய பாக்கியம் வேணும்” என்று சொல்ல நடுங்கும் தன் வலக்கையை நீட்டி பெற்றுக்கொண்டார்.
“நெத்தியில இட்டுக்கோம்மா, உன்னோட வருத்தம் தேவை இல்லாதது.உன் கணவர் உயிரோட இருக்கார். கூடிய சீக்கிரமே உங்கிட்ட அவர் திரும்பி வரப்போறார். உன் முகம் பிரகாசம் பெறப்போறது” என்றார் பெரியவர்.
ஒரு வாரம் ஓடிற்று.மகா பெரியவாளின் திருவாக்கு பலிக்கப் போகும் திருநாளாக அந்த நாளின் அதிகாலைப் பொழுது அமைந்தது.
இறந்ததாகக் கருதப்பட்ட அவருடைய கணவர் அன்று- மெலிந்து போய் முகத்தில் பொலிவிழந்து,தேகத்தில்
சுரத்திழந்து- வீட்டுக்குள் நுழைந்தார்.
அள்ளிக்கொடுத்த குங்குமம் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மற்றத்தைக் கண்டு நெகிழ்ந்தாள்; நெக்குருகினாள் ;அதிசயத்துப் போனாள்.
தேம்பினவளை ஆசுவாசப்படுத்திய கணவன்;
“நீ கேள்விப்பட்ட செய்தி எல்லாம் நிஜம்தான். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பையே தொட்டுவிட்ட நான் இறந்ததாகக் கருதப்பட்டேன்.எந்தவிதமான சலனமும்,சன்னமான மூச்சுக்காத்தும் இல்லாமல் இருந்த என்னை எதிரிகள், “இறந்து விட்டான்” என்று கருதி, என் உடலை எங்கோ இழுத்துக் கொண்டுபோய் அநாதரவாகப் போட்டுவிட்டார்கள். யாரோ சில மலைவாசிகளின் புண்ணியத்தால், எனக்கு புனர்ஜன்மம் கிடைத்தது.என்னைக் காப்பாற்றினார்கள். உனது பிரார்த்தனையும், தாலி பாக்கியமும்தான் என்னை மீண்டும் இங்கே கொண்டுவந்தது”
“உடனே புறப்படுங்கள்…காஞ்சிக்குச் செல்வோம். உங்களுக்கு மறுவாழ்வு தந்து இழந்த பிரகாசத்தை என் முகத்தில் மீண்டும் தவழவிட்டது அந்தக் கருணை தெய்வம்தான்.அவருக்கு நன்றி சொல்லி அவரது திருப்பாதம் தொழுது வருவோம்.அதன் பிறகுதான் அன்ன ஆகாரம்” என்று மனைவி சொல்ல அரை மணி நேரத்தில் காஞ்சி வந்தனர்,
தன் பீடத்தில் படு அமர்க்களமாக அமர்ந்திருந்த அந்தப் பரப்பிரம்மம், இவர்களைப் பார்த்துப் பெரிய புன்முறுவல் பூத்தது.”வாம்மா…புருஷனோட சந்தோஷமா வந்திருக்கே.. இனிமே உனக்கு எந்தக் குறையும் இருக்காது” என்று சொல்லி மீண்டும் பிரசாதம் வழங்கியது.
ஆனந்தக் கண்ணீரையும், சாஷ்டாங்க நமஸ்காரத்தையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டு,அங்கிருந்து புறப்பட்டார்கள்


