தென்னழகர் கோயிலின் சிறப்புகள்:

Published:

thennazhagar temple - 2026
#image_title

இத்தலத்தில் பெருமாள் தென்னழகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு காலத்தில் இந்த கோயிலைச் சுற்றி குளம் இருந்ததால் கோயில்குளம் என்று இவ்வூர் அழைக்கபெற்றது. மூலஸ்தானத்தில் பெருமாள் காரை என்னும் கலவையால் செய்யப்பட்ட மூர்த்தியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் சென்றபோது இவ்விடத்தில் சுவாமியை தரிசிக்க விரும்பி, பெருமாளை வேண்டினார். பெருமாள் அவருக்கு தாயார்களுடன் காட்சி தந்தார்.

பிற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். மனதில் பெருமாளை எண்ணி வணங்கி வந்த அவருக்கு, சுவாமியை சிலாரூபமாக தரிசிக்க வேண்டுமென்று ஆசை உண்டானது. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மதுரை அருகிலுள்ள கள்ளழகர் கோயில் மலையில் தான் சிலாரூபமாக இருப்பதாகவும், அச்சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார்.

அதன்படி பக்தர் சிலையை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பின்பு மன்னர் ஒருவரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மூர்த்தி என்பதால் இத்தல பெருமாள் தென்னழகர் என்று அழைக்கப்படுகிறார்.

பலன்கள்: உள்ளம், உருவம் இரண்டும் அழகாக இத்தலத்து பெருமாளை வேண்டி பலனடையலாம் என்பது நம்பிக்கை.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து: அம்பாசமுத்திரத்தில் இருந்து 4KM தொலைவில் இக்கோயில் உள்ளது. அம்பாசமுத்திரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.

தங்கும் வசதி: அருகிலுள்ள திருநெல்வேலியில் தங்கி அங்கிருந்து செல்லலாம். திருநெல்வேலியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.00 மணி முதல் மதியம் 9.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

கோயில் முகவரி: அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கோவில்குளம், அம்பாசமுத்திரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.

thennazhagar temple1 - 2026
#image_title

அத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவில் தென்னழகரை சேவிக்க நேற்றைய தினம் சென்றபோது எந்தவித பராமரிப்புமின்றி பூட்டியிருந்தது. அதிகாலையில் ஒருமுறை திருவாராதனம் செய்வதோடு சரி. உலகுக்கே படியளந்த பெருமாளுக்கு நேரத்திற்கு நைவேத்தியம் செய்யக்கூட முடியாமல் போனது…. கோவில் நிலைமை கண்டு மனம் நொறுங்கியது.

ஒரு காலத்தில் திருவிழாக்கள் சிறப்பாக நடந்து கோலாகலமாக மக்கள் ஆனந்தமடைந்த நிலைமை மாறி கோவில் இருப்பிடம் கூட தெரியாத அளவிற்கு நிலைமை உள்ளது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

கோவிலும் கோவில் சார்ந்த வாழ்க்கையும் என்றிருந்தபோது இருந்த மகிழ்ச்சியும் ஒற்றுமையும் பணமும் பணம் சார்ந்த போகங்களும் என்று மாறிய போது போலி நாடகமாக வாழ்க்கை நோயோடும் புலம்பல்களோடும் சென்று கொண்டிருக்கிறது.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று கூறுவார்கள். தெய்வத்தை கொண்டாடாத இடத்தில் தெய்வம் எவ்வாறு குடிகொள்ளும்! நாம் தந்து தெய்வத்திற்கு எதுவும் ஆகப்போவதில்லை எனினும் நம் தேவைறிந்து அள்ளி அள்ளி கொடுக்கும் தெய்வத்திற்கு நன்றி கூறி விளக்கேற்றி வழிபட கூட நமக்கு இயலவில்லை!

எத்தனையோ சிரமப்பட்டு கோவிலைகட்டிவிட்டார்கள். ஆனால் பராமரிக்கக்கூட நேரமில்லாமல் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்றும் இன்னமும் எவ்வித வேலையும் நடைபெறவில்லை. விரைவில் புனரமைப்பு வேலைகள் நடைபெறும் என்று தகவல் மட்டும் கோவில் அலுவலர் தெரிவித்தார்.

இவ்வூரை சேர்ந்தவர்கள் அல்லது இப்பதிவை வாசிப்பவர்கள் ஏதேனும் முயன்று செய்ய வேண்டுகிறேன். கோவில் உட்பிராகாரம் புதர்மண்டி கிடக்கிறது. உழவாரப்பணி செய்ய யாரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரியவில்லை. யாரேனும் முயற்சி செய்தால் நாங்களும் அங்கு வரத் தயாராக இருக்கிறோம்.

  • ஸ்ரீமதி ப்ரஸன்னா சுப்ரமணிய ராஜா
ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img