சொந்த கணவரையே மகன் மற்றும் மருமகனின் மூலம் மனைவி கொலை செய்திருப்பது நாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடிக்கருகேயுள்ள புதுப்பேட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் மீனவகுடும்பத்தை சேர்ந்தவர். அப்பகுதியில் மேடை அலங்கார கடை நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவியின் பெயர் விஜயலட்சுமி. இவ்விருவருக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு மோனிஷா என்ற மகளும், விமல் மற்றும் வருண் என்ற மகன்களும் உள்ளனர்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி பலத்த சண்டைகள் ஏற்பட்டு வந்ததால், 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர். விஜயலட்சுமி தன்னுடைய மகன்களுடன் வசித்து வருகிறார். கணவருக்கு போட்டியாக மேடை அலங்கார கடையை அமைத்து நடத்தி வந்தார்.
விஜயலட்சுமியின் கடை சற்று நஷ்டத்தில் போக தொடங்கியது உடனடியாக அவர் கணவர் மீது ஆத்திரம் கொண்டு அவருடைய வாகனத்தை தீ வைத்து கொளுத்தி விட்டார். அதிர்ச்சி அடைந்த மதியழகன் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் விசாரணையில் தன் குடும்பத்தினரே இந்த செயலை செய்திருப்பது தெரிந்தவுடன் வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆவணி மாதத்தில் மதியழகனின் வியாபாரம் நன்றாக நடந்தது. ஆனால் விஜயலட்சுமியின் வியாபாரம் சரியாக இல்லாமல் இருந்தது. இதனால் பொறாமை கொண்ட விஜயலட்சுமி தன் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
26-ஆம் தேதியன்று வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மதியழகன் மறுநாள் காலையில் படுகாயமடைந்து சாலையோரத்தில் சடலமாக கிடந்தார் சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மதியழகனின் தாயார் விஜயலட்சுமி தான் தன் மகனுடைய கொலையானதற்குக் காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விஜயலட்சுமியிடம் நெடுநேரம் நடத்திய விசாரணையில் விஜயலட்சுமி தன்னுடைய சதித்திட்டத்தால் தான் மதியழகன் இறந்தார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அன்று இரவு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மதியழகன் விஜயலட்சுமியின் தம்பி மகனான சத்ரியன் என்பவரும் விமலும் முகமூடி அணிந்தபடி பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்ற போது அவரை தாக்கியுள்ளனர். நிலைதடுமாறி கீழே விழுந்தவுடன் தங்களிடம் இருந்த இரும்பு கம்பியால் மதியழகனை தாக்கியுள்ளனர். மதியழகன் படுகாயமடைந்து உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் 3 பேரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.
விஜயலட்சுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது