- டாக்டர் லி-மெங் யான் கோவிட் -19 வைரஸ் குறித்த ஆராய்ச்சி செய்த முதல் நபர்களில் ஒருவராக தாம் இருப்பதாகக் கூறுகிறார்
- ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர், பெய்ஜிங் செய்த கொரோனா பரவல் குறித்து தாம் நன்கு அறிந்திருப்பதாகக் கூறுகிறார், மேலும் இது குறித்த அவரது தொடக்க கால ஆராய்ச்சி புறக்கணிக்கப்பட்டது என்கிறார்..
- ஒரு நேர்காணலில், கோவிட் 19 மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதைப் பற்றி அவர் கூறியிருந்தார்.
- இருப்பினும், அவ்வாறு அவரால் கண்டுபிடிக்கப்பட்டு சிறிது காலம் வரையில், இது சாத்தியம் என்று WHO கூறவில்லை
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீன அரசும் உலக சுகாதார அமைப்பும் உண்மைகளை மூடி மறைத்து விட்டன என்று ஹாங்காங் பெண் விஞ்ஞானி லீ மெங் யான் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுதும் பரவி, அனைத்து நாடுகளையும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டபோது வைரஸ் குறித்த உண்மைகளை வெளியிட்ட மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் பின்னர், திடீரென காணாமல் போயினர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் முன்னரே சீன அரசுக்குத் தெரியும் என்று சீனாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர் தகவல் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஹாங்காங்கை சேர்ந்த மருத்துவர் லீ மெங் யான் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக இருந்தவர்! அவர், வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்து வந்தவர். பின்னர் சீனாவின் அடக்குமுறை காரணமாக், ஹாங்காங்கில் இருந்து தப்பி அமெரிக்காவில் தற்போது அடைக்கலம் புகுந்துள்ளார்.
அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் தனியார் தொலைக்காட்சிக்கு லீ மெங் யாங் பேட்டி ஒன்று அளித்தார். அவர் அளித்த பேட்டியில், சீனா குறித்த பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள லி மெங் யாங், தாம் இருக்கும் இடத்தைப் பற்றி குறிப்பிடாமல் பேசியிருக்கிறார். அதில், கடந்த ஆண்டு டிசம்பரில் வெடித்துக் கிளம்பிய கொரோனா வைரஸ் குறித்து, சீன அதிகாரிகளுக்குத் தெரியும் என்று தெரிவித்திருக்கிறார்.
கொரோனா வைரஸின் தன்மை, அதன் பரவலாக்கம் தொடர்பாக உலகத்துக்கும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை சீனாவுக்கு இருந்தது. அதுகுறித்து மருத்துவர்கள் விஞ்ஞானிகள் சீன அரசுக்கு தெரிவித்த போதும், அவற்றையெல்லாம் அடக்கி, அமுக்குவதிலேயே இருந்தது சீன அரசு
அப்போதே சீன அரசு வைரஸ் பரவல் குறித்து கவனம் செலுத்தியிருந்தால் இன்று லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். வைரஸ் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி செய்ய ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதியளிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது… என்று குற்றம் சாட்டினார் யாங்.
மேலும், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணி செய்த தமது நிறுவனத்தை, கொரோனா பற்றி மௌனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
இவ்வாறு தாம் வாய்மூடி இருக்குமாறு அடக்கி வைக்கப் பட்ட பிறகு, தொடர்ந்து அங்கிருக்க விரும்பாமலும், பிறருக்கு நேரும் சங்கடங்களையும் கண்டு அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் யாங்.
தொடர்ந்து, ஏப்ரல் 28-ஆம் தேதி கேத்தே பசிபிக் விமானம் மூலம் அமெரிக்கா வந்தடைந்தேன் என்று கூறிய யாங், சீன அரசிடம் நான் பிடிபட்டால் மிகவும் மோசமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன்… அல்லது, பிறரைப் போலவே நானும் காணாமல் போயிருப்பேன். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சீன அரசு முயற்சிக்கிறது. என்னையும் எனது குடும்பத்தினரையும் குறி வைத்து சைபர் தாக்குதல்களும் நடத்தப் படுகின்றன என்கிறார் யாங்.
மேலும், இதன் காரணமாக, ஹாங்காங் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எனது பக்கம் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான செய்தியை உலகத்துக்குத் தெரியப் படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நான் அமெரிக்காவுக்கு வந்தேன் என லி மெங் யாங் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் !