
பியோர்ன் போர்க் (ஜான் போர்க்) என்ற டென்னிஸ் வீரரை இந்த உலகம் மறந்திருக்காது. 1970கள் மற்றும் 1980களின் முற்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியவர். 5 விம்பிள்டன், 6 பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென்றவர். தன்னுடைய வெற்றிகளால் மிகப் பெரிய கோடீஸ்வரரானார். சொந்தமாக ஒரு தீவையே வாங்கினார். அதிகமான வெற்றியும், தன்னைச் சுற்றி சூழ்ந்திருந்த புகழ் வெளிச்சமும் அவருக்கு சோர்வைக் கொடுத்துவிட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 27 ஆம் வயதிலேயே ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு உலக வெளிச்சத்தில் அவர் இல்லை. தனது சொத்துக்களை இழக்கத் தொடங்கினார். அதற்கு பல காரணங்கள். 1990ல் அவருக்கு மீண்டும் டென்னிஸ் ஆட வேண்டும், மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மீண்டும் களமிறங்கினார். மீண்டும் களமிறங்கினால் தன்னால் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது அவரது பழைய வெற்றிகளே! ஆனால் இடைப்பட்ட வருடங்களில் டென்னிஸ் உலகம் பல மாற்றங்களை கடந்திருந்தது.
பியோர்ன் போர்க் வெற்றிகளைக் குவித்த காலத்தில் டென்னிஸ் மட்டை மரத்தினால் ஆனது. கால மாற்றத்தால் 1990 களில் அது ஃபைபர் மட்டையாக மாறியிருந்தது. ஆட்டத்திலும் பல மாற்றங்களை கடந்திருந்தது. டென்னிஸ் அதிரடி ஆட்டமாக மாறியிருந்தது. களமிறங்கிய போர்க்’ கினால் ஒரு வெற்றியைக் கூட பெற முடியவில்லை. வெற்றியும், புகழும் தன்னுடனே இருந்த போது அதைச் சுமையாக நினைத்தார். மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்த போது வெற்றி தேவதை அவரை சுமையாக நினைத்தாள். நிச்சயமாக அவருக்குப் புரிந்திருக்கும் வெற்றியும், புகழும் தன்னுடைய நிரந்தர சொத்தல்ல என்பது.
இன்றைய தினத்தில் பியோர்ன் போர்க்கையும், மகாராஷ்டிர தாக்கரே சகோதரர்களையும் ஒரே கோட்டில் வைத்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை உருவாக்கியது மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்.
தமிழகத்தைச் சேர்ந்த திரு. அண்ணாமலை பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
”மும்பை மாநகரம் மகாராஷ்டிரத்திக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது சர்வதேச நகரம்”, என்று பேசினார்.
இந்தப் பேச்சு சர்ச்சையானது. தாக்கரே குடும்பத்தில் ஒருவரும், நவநிர்மாண் சேனை தலைவருமாகிய ராஜ் தாக்காரே, திரு. அண்ணாமலையின் பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்தார்.
”தமிழ்நாட்டில் இருந்து வந்த உங்களுக்கு இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் (அண்ணாமலை என்ற பெயரின் உச்சரிப்பை ரசமலாய் என்று கிண்டல் செய்தார்) மும்பையைப் பற்றி பேசுகிறார். அதனால்தான் உங்களையெல்லாம் பால் தாக்கரே மகாராஷ்டிரத்திலிருந்து விரட்டி அடித்தார்…. மும்பையில் அண்ணாமலை கால் வைத்தால் வெட்டுவோம்” என்றெல்லாம் கூட விமர்சனம் வளர்ந்தது.
பதிலுக்கு அண்ணாமலையும், ”மும்பைக்கு வருகிறேன். வெட்டுங்கள் பார்க்கலாம்”, என்று பேசினார்.
இதையெல்லாம் ஒரு ஓரமாக வைப்போம். இன்று மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நாட்டின் மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியது. கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனைக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சி பாஜக வசம் வந்திருக்கிறது.
உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே போன்றவர்கள் தங்கள் களத்தை இழந்திருக்கிறார்கள். களத்தை இழந்திருக்கிறார்கள் என்பதைவிட தங்களுக்கான காலத்தை இழந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
தமிழகத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம் அவர்கள் 2016ம் ஆண்டு, மகாராஷ்டிராவிலிருந்துதான் ராஜ்ய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் இந்த தாக்கரேக்கள் எங்கு சென்றார்கள்? மற்ற மாநிலத்தவர் மராட்டியர்களின் எம்.பி பதவியை தட்டிப்பறித்தார்கள் என்ற எண்ணம் எங்கே போனது? மொழியும், சொந்த மாநிலப் பற்றும் தனக்கு வேண்டிய போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் அது எத்தகைய சந்தர்ப்ப வாதம்?
மகாராஷ்டிரத்தின் சிங்கம் வீர சாவர்க்கரை, காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி பல நேரங்களில் அவமானப் படுத்தினாரே! அப்போதெல்லாம் சாவர்க்கரை வைத்து அரசியல் வாழ்க்கையை நடத்திவரும் தாக்கரே சகோதரர்கள் ஏன் மெளனமாக இருந்தார்கள்? காங்கிரஸோடு மெளனமாக கூட்டணி அமைத்தார்களே! அது எந்த விதத்தில் ஞாயம்? இன்று அவர்களின் சந்தர்ப்ப வாத மெளனமே அவர்களை அரசியல் களத்தைவிட்டு அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது.
மகாபாரத குருட்சேத்திர போரில் சாகசங்களைச் செய்த அர்ஜுனன் தனது கடைசி நாட்களில் திருடர்களிடம் தோற்றுப் போகிறான். இந்த உலகம் தோல்வியே அறியாத மாவீரன் நெப்போலியனுக்கு வாட்டர்லூ தோல்வியை சுவைக்கக் கொடுத்தது. பியோர்ன் போர்க்கும் இந்த நிலையிலேயே காலத்தின் வசத்தால் தோல்வியைத் தழுவினார். இன்று அந்த நிலையிலேயே தாக்கரே குடும்பம் வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது.
ராஜ்தாக்கரேயின் பேச்சில் கவனிக்க வேண்டியவை :
- தமிழ்நாட்டில் இருந்து வந்த உங்களுக்கு இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு?
- தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் மும்பையைப் பற்றி பேசுகிறார்.
- அதனால்தான் உங்களையெல்லாம் பால் தாக்கரே மகாராஷ்டிரத்திலிருந்து விரட்டி அடித்தார்….
தன்னுடைய மாநிலத்தின் மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கலாம். அதில் தவறில்லை. அவருடைய மாநிலம் அவருடைய மக்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும் என்று நினைக்கலாம். அதிலும் தவறில்லை. ஆனால், அவரது மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த மற்ற மாநிலத்தவர் இருப்பதில் அவர்களுக்குப் பிரச்னை என்றால், அது எத்தகைய மனநிலை?
ஒடிசாவை ஒரு தமிழர் தனது கைப்பாவையாக வைத்திருக்கிறார் என்ற பிரச்னையை பாஜக கையிலெடுத்து, அதையே ஒடிசா தேர்தலில் முன்னிலைப்படுத்தியது. அங்கு பாஜக பெற்ற வெற்றி இதனால்தான் என்று யாரும் சொல்லிவிட முடியாது. முதலமைச்சரை பொம்மையாக வைத்துக் கொண்டு தனது ஆட்டங்களை நடத்திய அந்த ஆலோசகரால் தான் அவரை முன்னிலைப்படுத்தும் நிலை பாஜகவிற்கு ஏற்பட்டது.
ஆளும் வாய்ப்பு கிடைக்கும் போது அதைவைத்து முன்னேற்றத்தை கொண்டுவர வேண்டும். அல்லது அப்படியொரு நம்பிக்கையையாவது ஏற்படுத்த வேண்டும். வெறும் உணர்வுகளைத் தூண்டி வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்புவது ஒருநாள் அவர்களை மூழ்கடித்துவிடும்.
பால்தாக்கரேயின் நாட்கள் வேறு. இப்போது உள்ள சோஷியல் மீடியா நாட்கள் வேறு. இன்னமும் வன்முறை தனக்கு கைகொடுக்கும் என்று யாராவது நினைத்தால் அவர்கள் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது. வன்முறை என்பது காலாவதியான ஆயுதம்.
அடாவடி அரசியல் எல்லா நேரங்களிலும் வெற்றியைக் கொடுக்காது. கடந்த 5 வருடங்களுக்கும் மேல் சிவசேனா தோல்வியை மட்டுமே தழுவியிருக்கிறது. தனது மாநிலம், மொழி என்ற விஷயங்களில் அவையெல்லாம் தன் கட்சிக்கு மட்டுமே சொந்தம் என்பது போல அரசியல் செய்து வந்த தாக்கரே குடும்பம் வீழ்ச்சியை எதிர்நோக்கியிருக்கிறது.
இந்தியா என்ற தேசத்தில் இந்த நிலம் இவர்களுக்கு மட்டும் சொந்தம், மற்றவர்கள் சொந்தமல்ல! என்ற குரல்கள் தோல்வியைத் தழுவத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக பால்தாக்கரே பெயரைச் சொன்னால் எதையும் சாதித்துவிடலாம் என்ற சிந்தனைக்கு இந்தத் தோல்வி சம்மட்டியடி கொடுத்திருக்கிறது.
மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் கொடுத்த வெற்றி பாஜக கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா? திரு அண்ணாமலையின் பிரச்சாரமும் கொடுத்த வெற்றியா? அல்லது தாக்கரே குடும்பத்துக்கு பரிசளிக்கப்பட்ட தோல்வியா என்று கணக்குப் போட்டுப் பார்த்தால், இவை எல்லாவற்றையும் விட வெறுப்புப் பேச்சுக்கு கிடைத்த தோல்வி என்பது தான் யதார்ததமாக இருக்கும். தேசியத்தை மனத்தில் கொண்டு பாஜக தேர்தல்களை அணுகுவதால் கிடைத்த வெற்றி என்றும் சொல்லலாம்.
நம் மாநிலத்தைச் சேர்ந்த அண்ணாமலை மும்பையில் சென்று பிரச்சாரம் செய்து, அந்தப் பிரச்சாரம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்.
வடக்கன், பானிபூரிக்காரன், இந்தி தெரியாது போடா என்றெல்லாம் அவமரியாதையாகப் பேசும் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கும் இப்படிப்பட்ட தோல்வி காத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி செய்ய மக்கள் கொடுக்கும் வாய்ப்பு என்பது அற்புதமானது. அதை சிறப்பாக பயன்படுத்துபவர்களின் வெற்றி தலைமுறை தாண்டிய புகழைக் கொடுக்கும்.
மும்பை உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் செய்து உலக கவனத்தை தன் பக்கம் ஈர்த்த திரு. அண்ணாமலைக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்.
அன்புடன்
சாது ஶ்ரீராம்
saadhusriram@gmail.com




