பரமன் அளித்த பகவத்கீதை (16): ஆதிபர்வம் -1 – சந்திர வம்சம்

Published:

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 16 மகாபாரதக் கதை
ஆதிபர்வம் -1 – சந்திர வம்சம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          ஸ்ரீ ராமர் ரகுவம்சத்தைச் சேர்ந்தவர். ரகுவம்சம் முதலில் இஷ்வாகு வம்சம் என அழைக்கப்பட்டது. அதற்கு முன்னர் சூரிய வம்சம் என அழைக்கப்பட்டது. சூரிய வம்சம் போலவே சந்திர வம்சமும் பிரபலமானது. சந்திரன் தனது குருவாகிய தேவகுருவின் மனைவியான தாரை என்பவரைக் காதலித்து கடத்திக்கொண்டு போகிறார். அவர்களுக்குப் பிறந்தவர்தான் புதன். புதன் இளா என்பவளை மணக்கிறார்.

          இளா சூரிய குலத்தின் இஷ்வாகு வம்ச நிறுவனரான வைவஸ்தமனுவின் மகன்களில் ஒருவர் ஆவார். அவரின் பெயர் இளன். ஒரு முறை இளன் வேட்டையாட காட்டிற்குச் சென்ற போது, காட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரும் ஆண்கள் பெண்களாக மாற நேரிடும் எனும் சாபத்தை அறியாமல், அங்கு சென்றுவிடுகிறார். அதனால் பெண்னாக உருவமாற்றம் அடைந்து இளா என்ற பெண்னாக மாறிவிடுகிறார். இவரைத்தான் புதன் மனக்கிறார். இவர்களுக்குப் பிறந்தவர் புரூரவன் ஆவார்.

          புரூரவன் கேசி என்னும் அரக்கனுடன் போரிட்டு ஊர்வசியை மீட்கிறான். அதனால் இந்திரன் ஊர்வசியை புரூரவனுக்கே அன்பளிப்பாகக் கொடுத்துவிடுகிறான். அவர்களுக்குப் பிறந்த மகன் ஆயு. ஆயுவின் மகன் நகுஷன். இவன் இந்திராணியை அடைய சப்தரிஷிகளை பல்லாக்கில் தன்னைத் தூக்கிச் செல்லச் சொல்லுகிறான். அப்போது ‘சர்ப்ப, சர்ப்ப” என அவர்களை வேகமாகச் செல்லச் சொன்னதால் அகத்தியர் கோபமுற்று அவனைப் பாம்பாக மாற சாபமிட்டார். நகுஷனின் மகன் யயாதி.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

கசன் தேவயானி

          தேவகுரு ப்ருகஸ்பதியின் மகன் கசன். தேவாசுரப் போரில் அசுரர்களை சுக்ரன், தன்னுடைய சஞ்சீவனி மந்திரம் மூலம் உயிர்ப்பித்து விடுவதா, போர் நீளுகிறது. சுக்ரனிடமிருந்து சஞ்சீவினி மந்திரத்தை கற்க கசன் அனுப்பப்படுகிறான். சுக்ரனின் மகள் தேவயானி அவனை விரும்புகிறாள். அசுரர்கள் கசன் சஞ்சீவினி மந்திரத்தை கற்கக்கூடாது என்பதற்காக அவனை கொன்றுவிடுகிறார்கள். ஆனால் தேவயானியின் வேண்டுகோளின்படி சுக்ரன் அவனை உயிர்ப்பிக்கிறார். இது பலமுறை நடக்கிறது. ஒருமுறை கசனைக் கொன்று, துண்டுகளாக்கி, எரித்துச் சாம்பலாக்கி, அந்தச் சாம்பலை ஒரு பானத்தில் கலக்கி சுக்கிரனுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். இம்முறை கசன் எங்கிருக்கிறான் என சுக்கிரன் ஞானதிருஷ்டி மூலமாகப் பார்க்கும்போது அவன் தன் வயிற்றில் இருப்பதை உணர்கிறார். அவனை உயிர்ப்பித்தால் தான் இறந்துவிடுவோம் என உணர்கிறார். அதனால் வயிற்றுக்குள் இருக்கும் அவனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைச் சொல்லிக்கொடுக்கிறார். பின் அவனை உயிர்ப்பித்து இறக்கிறார். வெளியே வந்த கசன் அவரை உயிர்ப்பிக்கிறான்.

          கசனின் குருகுலக் கல்வி முடியும் நிலையில் தேவயானி கசனை அனுகி தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினாள். தேவயானி தனது குருவின் மகள் என்பதாலும் மேலும் தான் குருவின் வயிற்றிலிருந்து மீண்டும் வெளிப்பட்டதால் தேவயானி தனக்கு சகோதரிமுறை ஆவதாலும் கசன் தேவயானியை மணக்க மறுத்தான். இதனால் ஆத்திரம் கொண்ட தேவயானி, தனது தந்தையான சுக்கிராச்சாரியிடம் கற்ற சஞ்சீவினி மந்திரத்தை கசன் பயன்படுத்த முடியாதபடி சாபமிட்டாள். அதற்கு கசன், நான் பயன்படுத்தா விட்டாலும் மற்ற தேவர்களுக்கு இம்மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன் என்று கூறினான். பதிலுக்கு கசன், தேவயானியை நோக்கி உன்னை உன் குலத்தவன் திருமணம் செய்து கொள்ளமாட்டான் எனச் சாபமிட்டான். பின் சுக்கிராச்சாரியாரிடம் விடைபெற்று சஞ்சீவினி மந்திரத்துடன் தேவலோகத்தில் உள்ள பிரகஸ்பதியை அடைந்தான்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

          பின்னாளில் தேவயானி சந்திரகுல மன்னன் யயாதியை மணக்கிறாள்.

Related articles

Recent articles

spot_img