தமிழகத்திலேயே முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் பணியில் சேர ஆசிரியர்கள் மறுப்பதால் மாற்று நடவடிக்கைகளை அரசு விரைவு படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் மான்டிசோரி கல்வி முறையில் மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை தயார் நிலையில் உள்ளன. மழலையர் பள்ளிகளுக்கு வகுப்புகள் காலை 9.30 முதல் மதியம் 4 மணி வரை நடைபெறும். மதியம் 12.10 முதல் 1 வரை மதிய உணவு நேரம் வழங்கப்படும். பகல் 1 முதல் 3 மணி வரை துாங்க வைத்து பின் ஒரு மணி நேரம் பாடம் நடத்தி மாலை 4 மணிக்கு வகுப்புகள் முடிக்கப்படும்.
இந்தக் குழந்தைகளுக்கு 4 செட் சீருடை, காலணி, ஒரு ஸ்வெட்டர், ரெயின்கோட், கலர் பென்சில், பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் 2 ஆண்டுகள் செயல்படுத்தப்படும்.
இதனிடையே மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடை நிலை ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப் படுகின்றனர். இதை எதிர்த்து பெரும்பாலான ஆசிரியர்கள் பணி மாறுதல் உத்தரவை மறுத்து விடுப்பில் சென்று விட்டனர்.
இந்தச் சூழ்நிலையை சமாளிக்க அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் உபரி ஆசிரியர்களை பணி மாற்றம் செய்துள்ளனர். தவிர இடைநிலை ஆசிரியர்களில் இளையவரை தற்காலிகமாக மாற்றும் முயற்சியில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பணி மாறுதலை ஏற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.