நாடாளும் மன்னனுக்கு இருக்கக் கூடாத ராஜ தோஷங்கள் பதினான்கு உண்டு. அவை குறித்து, மகாபாரதத்தில் சபா பர்வம் விளக்குகிறது.
காண்டவ வன தகனத்தின் போது தன் உயிரைக் காப்பாற்றிய அர்ஜுனனுக்கு தக்க கைம்மாறு செய்ய மயன் விரும்பினான். அவன் மிகவும் வற்புறுத்தி வணங்கிக் கேட்டுக் கொண்டதன் பேரில் பாண்டவர்கள் மய சபை அமைக்க ஒப்புக்கொண்டனர். தலை சிறந்த அதிசயமாக விளங்கிய அந்த மய சபையை பார்வையிட்ட பிரமுகர்களுள் நாரதரும் ஒருவர்.
நாரதர் மூவுலகையும் சென்று பார்த்து வந்தவர். விண்ணுலகிலும், மண்ணுலகிலும் எங்குமே இதற்கு நிகரான சபா மண்டபத்தை தான் பார்த்ததில்லை என்று வியந்து கூறினார் நாரதர்.
அப்போது அரசாளும் அரசனுக்கு இருக்க வேண்டிய குணங்களைப் பற்றியும், இருக்கக் கூடாத குறைகளைப் பற்றியும் நாரதர் யுதிஷ்டிரனுக்கு எடுத்து கூறினார்.
நாரதருக்கும் தர்மராஜனுக்கும் நடந்த உரையாடலில் நாடாளும் மன்னனுக்கு இருக்கக்கூடாதவையாக நாரதர் பதினான்கு வகை தோஷங்களை பட்டியலிட்டுள்ளார்.
முதல் தோஷம் – நாஸ்திகம்
அரசாளுபவர் நாஸ்திகனாக இருக்கக் கூடாது. நாஸ்திகம் என்றால் பக்தி இல்லாமல் இருப்பது என்று பொருள் அல்ல. அவர் ஹிந்துவாக இருந்தால் ஹிந்து மத கோவிலுக்குச் சென்று வழிபடவேண்டும். அல்லது அவர் எம்மதத்தைச் சேர்ந்தவரோ அம்மதக் கொள்கையை கடை பிடிக்க வேண்டும். அதே நேரம் பிற மதத்தைச் சேர்ந்த பிரஜைகளும் அவரவர் மதக் கொள்கைகளைக் கடை பிடிக்கும்படி அரச பரிபாலனத்தில் பாதுகாப்பு அளித்து நடந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது தோஷம் – பொய்மை
அரசாளுபவர் பொய் சொல்லக் கூடாது. பொய்யும் புனை சுருட்டும் ஒவ்வாது. சொன்ன சொல்லைக் காக்க வேண்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கடைபிடிக்க வேண்டும்.
மூன்றாவது தோஷம்- மறதி
நாட்டை ஆளுபவர் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஞாபக மறதி கூடாது. இதனால் மிகப் பெரிய அபாயங்கள் நாட்டுக்கு ஏற்படும் ஆபத்து உண்டு.
நான்காவது தோஷம்- சோம்பல்
நாட்டை ஆளுபருக்கு சோம்பேறித்தனம் கூடாது. இப்போது வேண்டாம், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சோம்பி இருக்கலாகாது. மிகச் சிறிய விஷயமானாலும் சரி மிகப் பெரிய விஷயமானாலும் சரி முடிவெடுப்பதில் தாமதம் செய்வது பிழையாகும். சுறுசுறுப்பாக செயல் பட வேண்டும்.
ஐந்தாவது குற்றம் – சதி ஆலோசனை
அரசன் தன்னருகில் positive thinking உள்ளவர்களை ஆலோசனைக்கு அமர்த்திக் கொள்ளவேண்டுமே தவிர சும்மா குரோதம், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை தூண்டும் சதியர்களை ஆலோசனைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது.
ஆறாவது தோஷம்- குரோதம்
நாடாளுபவர் மக்களிடம் தந்தையைப் போல் நடந்து கொள்ள வேண்டும். எவர் மீதும் குரோதம் கொள்ளக் கூடாது. பிரஜைகளிடம் பாரபட்சம் பார்க்கக் கூடாது.
ஏழாவது தோஷம்- நீண்ட யோசனை
தேவையில்லாமல் தீர்கமாக யோசனை செய்வது கூட ஒரு குற்றம்தான். முடிவெடுப்பதை தள்ளிப் போடும் இந்த தீர்க்க ஆலோசனை என்ற பசப்பு குணத்தால் பல அனர்த்தங்கள் விளையும்.
எட்டாவது தோஷம் – தீர்க்க சூத்ரம்
விஷயங்களை உடனுக்குடன் முடிக்காமல் ரப்பர் மாதிரி இழுக்கக் கூடாது. உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டிய செயல்கள் என்று அரசாங்க வ்யவஹாரத்தில் அநேகம் இருக்கும். அவற்றை அவ்வப்போது முடிப்பது தான் ராஜ லக்ஷணம். இல்லாவிடில் விளைவுகள் கடினமாக முடியலாம்.
ஒன்பதாவது தோஷம்- மேதாவிகளை அலட்சியம் செய்வது
தன் கட்சியில் இருப்பவர்களின் சாமர்த்தியம் சுமார்தான் என்று தெரிந்தும் அவர்களையே கலந்தாலோசித்துக் கொண்டு, வெளியில் அல்லது வேறு கட்சியில் இருக்கும் மேதாவிகளின் அறிவுத்திறனை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும் குற்றமே. அறிவாளிகள் என்றுமே நாட்டின் நன்மை கோரி நல்ல யோசனைகளை கட்டாயம் கூறுவர்.
பத்தாவது தோஷம்- தயக்கம்
தைரியமாக முடிவெடுத்து முன்னே செல்ல வேண்டிய தருணங்களில் பயத்தோடு தயங்குவது குற்றம். ஆலஸ்யம் அம்ருதம் விஷம் என்பது இதைத்தான்.
பதினொன்றாவது தோஷம்- செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருப்பது
ஒரு செயல் கச்சிதமாக பலன் அளிக்கும் என்றால் அதனை கட்டாயம் செய்ய வேண்டும். மக்களுக்கு உபயோகமான நல்ல செயல்களை செய்யாமல் இருப்பதும் குற்றம்.
பன்னிரண்டாவது தோஷம்- ரகசியத்தை காக்காமல் இருப்பது
நாடாளும் அரசன் ரகசியங்களைக் காக்கத் தெரிந்தவனாக இருப்பது மிகவும் அவசியம்.
பதின்மூன்றாவது தோஷம்- சுப செயல்களைச் செய்யாமல் இருப்பது
கோவில் திருவிழாக்கள் போன்றவற்றை அலட்சியப்படுத்துவது கூடாது.
பதினான்காவது தோஷம் – புலனடக்கம் இன்றி இருப்பது
இதன் பலா பலன்களை விவரிக்கத் தேவை இல்லை.
பின் நாரதர், தர்ம புத்திரரிடம் கூறினார், “யுதிஷ்டிரா! நான் உன் தந்தை பாண்டுவை யம சபையில் பார்த்தேன். யமனுடைய சபையில் அவருடைய கௌரவத்தை பெற்று வீற்றிருக்கிறார்” என்றார்.
இவற்றையும் படியுங்கள்…
உடனே யுதிஷ்டிரர் மிக மகிழ்ந்தார். நாரதர் மீண்டும் சொன்னார், ‘அரிச்சந்திரனை இந்திர சபையில் பார்த்தேன்,” என்று.
அதைக் கேட்ட தர்ம ராஜன் சிறிது வருத்தமடைந்தான். “என் தந்தை ஏன் இந்திர சபை செல்ல வில்லை?” என்று கேட்டான்.
நாரதர் சொன்னார், ” அரிச்சந்திரன் மிகப் பெரிய வள்ளல். அதோடு கூட ராஜசூய யாகம் செய்தவர். உன் தந்தையார் அதையெல்லாம் செய்ய வில்லை. பாண்டு ராஜா உன்னை ராஜசூய யாகம் செய்து அவரை உயர் உலகங்களுக்கு அனுப்பும்படி உன்னிடம் சொல்லச் சொன்னார்”.
பித்ரு உலகத்தில் உள்ள முன்னோர் கூட தம் சந்ததியிடமிருந்து உதவி எதிர்பார்க்கிறார்கள்.
- தெலுங்கு நன்னய்யா மகா பாரதத்திலிருந்து…
- தமிழில்: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்-62