66. வேதத்தில் பக்தி கூறப்படவில்லையா?
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“தஸ்ய தே பக்திவாம் ஸ: ஸ்யாம”– அதர்வண வேதம்.
“பகவான்! நாங்கள் உன் பக்தர்களாவோமாக!”
பக்தி மார்க்கம் வேதங்களில் இல்லை என்றும் அது பின்னர் வந்ததென்றும் நவீன விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதனை அனுசரித்து நாமும் அது போல் நினைக்கத் தொடங்கி விட்டோம்.
ஆனால் வேதக் கருத்தில் பக்தி தெளிவாக தெரிவிக்கப்படுகிறது. பகவத் சரணாகதி போன்ற தர்மங்கள் வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கர்ம, ஞான, பக்தி மார்க்கங்களின் சமன்வயமே வேத தர்மம். வைதிக கலாச்சாரமான, ‘நமஸ்காரம், சிரத்தை’ போன்ற சொற்கள் பக்திக்கு மூலம்.
‘பஜ்’ என்ற சொல்லுக்கு சரணடைதல் என்று பொருள். பகவானிடம் ஆஸ்ரயம் பெறுவதே பக்தி. அந்த சரணாகதியில் பகவானைத் துதிப்பது, அவருடைய லீலைகளைப் பாடுவது போன்றவை வேகத்தில் காணப்படுகின்றன.
சாம வேதத்தில் இறைவனின் படைப்பில் உள்ள அழகை வர்ணிப்பதைக் காண முடிகிறது.
“ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம்” போன்ற யஜுர்வேத மந்திரங்களில் பகவானை துதிப்பது என்ற ஆத்ம போதனை காணப்படுகிறது.
“யோ பூதம் ச பவ்யஞ்ச சர்வம் யஸ்சாதிதிஷ்டதி!
சர்வம் ச கேவலம் தஸ்மை ஜ்யேஷ்டாய ப்ரஹ்மணே நம:”
“சர்வ காலத்திற்கும் சகல உலகத்திற்கும் தலைவனாக, உயர்ந்தவராக உள்ள பிரம்மத்திற்கு நமஸ்காரம்” என்று இறைவனின் சக்தியை வணங்கும் மந்திரங்கள் வேதத்தில் ஏராளமாக உள்ளன.
வைதீக யக்ஞங்களில் பல்வேறு தேவதைகளுக்கு நமஸ்காரம் செய்வது தெரிந்த விஷயமே!
“கூஹதா குஹ்யம் தமோ வியாத விஸ்வமத்ரிணம், ஜ்யேதிஷ்கர்தா யதுஸ்மஸி” போன்ற வேத மந்திரங்கள் ஹ்ருதய குகையில் உள்ள இருளை அகற்றும்படி ஜோதிர்மயமான பகவானை பிரார்த்திக்கின்றன.
“மா சிதன்யத் வி சம்ஸ்யத ஸகாயோ மா ரிஷிண்யத”
என்பது ருக்வேத மந்திரம். “சைதன்யமயமான பரப்பிரமத்தை விட்டு வேறு எதையும் சரணடைய வேண்டாம்!” என்று அனன்ய பக்தி சிந்தனையை போதிக்கிறது.
பகவத் கிருபையே உண்மையான ஆதாரம் என்று கடோபநிஷத்திலுள்ள “ஏ தலதாலம்பனம்ஸ்ரேஷ்டமே ததாலம்பனம் பரம்” என்ற மந்திரம் தெரிவிக்கிறது.
“என் அறிவின் திறமை, ஆற்றல் இவை அனைத்திற்கும் உய்வு உன்னை துதிப்பதில்தான் உள்ளது. உன் சன்னிதிக்குச் சேருவதில்தான் உள்ளது” என்று கூறும் வேத மந்திரங்கள் உள்ளன.
“நான் கடவுளுடையவன். கடவுள் என்னுடையவன்” என்பது பக்தியில் முக்கியமான சிந்தனை. இறைவனோடு கொள்ளும் தொடர்பு பற்றி நம் புராணங்கள் விரிவாக விளக்கி உள்ளன. வேத தர்மத்தை விளக்கிக் கூறுபவையே இதிகாசங்களும் புராணங்ளும்.
புராணங்கள் வேதங்களை நமஸ்கரித்து, “ஆதௌ வேதமயீ திவ்யாயத: சர்வா: ப்ரவ்ருத்தய:” -“முதலில் இருப்பது வேத மயமான தெய்வீக வாக்கு. அதிலிருந்தே சகலமும் பிறந்தன” என்று வேத தர்மத்தை போற்றின.
“நீ எங்களுடையவன். நாங்கள் உன்னுடையவர்கள்” என்று ருக் வேதம் பக்தியைப் பரம தர்மமாக அறிவித்தது.
வேதவேத்யனான பரமாத்மாவையே சிவன் விஷ்ணு சக்தி என்று வழிபட்டு பக்தியோடு உய்வடைந்த யோகிகள் பலப்பலர்!