கார்த்திகை சோமவார விரதம் ! புராணக் கதையும்! நவீன நடைமுறையும்!

Published:

annamalaiyar - 2026
சோமன் என்றால் சந்திரன், அவனதுநாள் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி. காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அது எவ்வாறு?

ஒருமுறை, கயிலாயத்தில் தனித்திருந்தார் பரமன், தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் என அனைவரும் அவரைச் சுறறிலும் துதித்துக் கொண்டிருந்தனர். அப்போது பார்வதி தேவி அங்கே வந்து பரமனை வணங்கி நின்றாள். முறுவலித்த பரமனின் ஜடாமுடி அசைந்தது. தில் சந்திரன் அமர்ந்திருந்தான். இதைக் கண்ட பார்வதிக்கு ஆச்சர்யம். தன் ஸ்வாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு எப்படி வாய்த்தது என்று ஸ்வாமி சந்திரனைத் தாங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? அதற்கு அவன் செய்த பாக்கியம் என்ன? என்று பரமனிடமே கேட்டாள் பார்வதி. அதற்கு அவர், சந்திரன் என்னைக் குறித்து விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம் என்றார். அதற்கு பார்வதி தேவியும் மற்றுமு் அஙகிருந்தவர்களும், தங்களுக்கும் இந்த விரதம் குறித்துக் கூறி, தாங்களும் பெருமானின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற வழிசெய்யக் கோரினாள். அதன்படி, சிவபெருமானே, பார்வதி தேவிக்கும், மற்றும் அங்கே கூடியிருந்தவர்களுக்கும் இந்த விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார் என்று புராணம் கூறுகிறது.

இந்த சோம வார விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது? கார்த்திகை முதல் திங்கள்கிழமை தொடங்கி கடைசி திங்கள் அன்று இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.விரதம் என்றாலே, நாம் உண்டி சுருக்கி, மற்றவருக்கு உணவு அளித்தல்தானே! முறையாக சிவபூஜை செய்பவர்கள், காலை நன்னீராடி, தினசரி கடமைகளை நிறைவேற்றி, வீட்டில் தீபம் ஏற்றி, சிவபெருமானைக் குறித்து விரதமிருக்க வேண்டும்.வேதியர் ஒருவரை தம்பதியாய் வரவழைத்து, அவர்களையே பார்வதி, பரமேஸ்வரன் என்பதாக பாவனை செய்து அவர்களுக்கு தானம் அளித்து, ஆசிர்வாதம் பெற வேண்டும்.courtallam temple somavara - 2026

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

வீடுகளில் சிவபூஜை செய்து பழக்கமில்லை எனில், அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே அபிஷேகம் நடக்கும்போது, பஞ்சாமிர்த அபிஷேகம்,பாலாபிஷேகத்துக்கு உதவி, அர்ச்சனை செய்து, பின்னர் அடியார்களுக்கும் அன்பர்களுக்கும் அன்னப் பிரசாதத்தை வழங்க வேண்டும். வீட்டுக்கு வந்து, பிராமண போஜனம் செய்து தானம் வழங்கலாம். தாங்கள் ஒருவேளை உணவு மட்டும் உண்டு விரதம் இருக்க வேண்டும்.சிவபூஜை பழக்கத்தில் இல்லாதவர்கள், அருகில் உள்ள சிவாலத்துக்குச் சென்று பஞ்சாமிருதத்தால் அபிஷேகமும், அர்ச்சனைகளும் செய்ய வேண்டும். பிரமாண போஜனம் நடத்தி, சில அடியார்களுக்கும், அங்குள்ள பக்தர்களுக்கும் அன்ன பிரசாதம் வழங்க வேண்டும். பிறகு வீடு வந்து ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். இரவில் உறங்கி, மறுநாள் பொழுது விடிந்ததும் நீராடி, சோம வார விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு விரதம் இருந்தால், கயிலையான் அருள் பூரணமாக கிடைக்கும்.
மேலும் சோம வார விரதத்தை பெருமைப்படுத்தும் கதைகளைப் படித்தும் சிவபெருமான் குறித்த சிந்தனையில் அன்றைய தினத்தைப் போக்க வேண்டும்.
வசிஷ்டருக்கு அருந்ததி வாய்த்ததும், சோம சர்மனுக்கு செல்வம் கிடைத்ததும், தன்மவீரியன் நற்கதி அடைந்ததும், கற்கருக்கு குழந்தைப் பேறு கிட்டியம், கார்த்திகை சோம வார விரதத்தின் மகிமையே என்று புராணக் கதைகள் சொல்கின்றன.

சோம வார மகிமையைக் கூறும் ஒர கதை. மன்னன் சித்திரவர்மனின் மகள் சீமந்தினி. அவள் தன் 14 வயதில் சோம வார விரதம் குறித்து அறிந்து கொண்டு, முறையாகச் செய்யத் தொடங்கினாள். அதன் பலனாக சந்திராங்கதன் என்ற இளவரசன் இவளை மணந்தான். ஒருமுறை நண்பர்களுடன் யமுனை நதியில் பயணித்தபோது, படகு கவிழ்ந்து அனைவரும் உயிர் துறந்தனர். இந்தச் செய்தி கேட்டதும் சீமந்தினி பெரும் துயரம் அடைந்தாள். சந்திராங்கதனின் இறுதிக் கடன்களை பெரியோர் செய்துவிட்டனர். ஆனாலும், விதவைக் கோலத்தில் இருந்தபடியே தன் சோமவார விரத பலனாக, சிவபெருமான் தன்னைக் காப்பார் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து அவள் விரதத்தைக் கடைப்பிடித்தாள்.
சீமந்தினியின் மன திடத்தை சோதிக்க விரும்பிய காசி நகர மன்னன், இரண்டு பிரம்மசாரிகளை அவளிடம் அனுப்பிவைத்தான். அவர்களில் ஒருவனை பெண் வேடமிட்டு அவளிடம் செல்லச் சொன்னான். அதன்படியே இருவரும் வந்தனர். அவர்களை பார்வதி- பரமேஸ்வரனாகவே எண்ணி பூஜையைச் செய்தாள் சீமந்தினி. அவளின் விரத மகிமையால், வேமிட்டு வந்தவன் பெண்ணாகவே மாறிப்போனானாம்!
சீமந்தினியின் விரத பலனாய், படகில் இருந்து யமுனை நீரில் மூழ்கிய சந்திராங்கன், நண்பர்களுடன் நாகர் உலகுக்குச் சென்றான். அவனை நாக மன்னன் விருந்தினனாய் ஏற்றான். சந்திராங்கதனும் நண்பர்களும் மன்னனை மகிழ்வித்து, அவன் ஆசியுடன் பரிசுப் பொருள்கள் பல பெற்று மீண்டும் தம் நகருக்கு வந்தனர். வழியில் விதவைக் கோலத்தில் சீமந்தினி சோம வார விரதம் இருந்தது கண்டு அதிர்ந்து, அவளிடம் நடந்ததை அறிந்தனர். பின், மீண்டும் அவளை திருமணம் செய்து கொண்டு சிவபெருமானின் பணியில் அவன் ஈடுபட்டான் என்கிறது புராணம்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சோமவார விரத மேன்மையைக் குறித்து நாரத மகரிஷியிடம் வினா எழுப்பிய தர்மராஜனுக்கு அவர் இவ்வாறு கூறினார்.
பாண்டுவின் மைந்தனே! சோமவார விரதம் அளவற்ற பயனை அளிக்கும். அதுவும் கார்த்திகை மாத சோமவாரம் சிறப்பானது. கார்த்திகை மாத முப்பது நாட்களுமே சிறந்தவைதான். விஷ்ணு ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபட வேண்டிய நாட்களும் கூட.. இந்த முப்பது நாட்களிலும் கோயிலில் தீபங்களை ஏற்றி வழிபடுபவனின் பித்ருக்கள்,பாவம் பல புரிந்து நரகத்தில் .உழன்ற போதும் விளக்கேற்றிய பலனாய் சுவர்க்கத்தை அடைவார்கள். இம்மாத சோமவாரத்தில் ஈசன் திருச் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றுபவன், தன் குலத்தில் இருந்த பித்ருக்களை நரகத்திலிருந்து விடுவிக்கிறான். அவன் முன்னோர் நற்கதி பெறுவர். இந்த தினத்தில் சிரத்தையுடன் சிவபூஜை செய்பவன், திருடுதல், கள் குடித்தல் முதலான பாவம் செய்திருந்தாலும் அவை விலகும். சோமவாரத்தில் சிவலிங்கத்தை ஓர் அந்தணருக்கு தானம் கொடுத்தால் அது உயர்ந்த தர்மம். அந்த தர்மத்தின் பயனைச் சொல்லவும் முடியாது. பெருமானுக்கு கோயிலில் காட்டப்படும் தீபாராதனை தீபத்தை தம் வீரல்களால் தொட்டு உடலில் தடவிக் கொண்டால் குஷ்டரோகம்கூட நீங்கும். ஜூரம் முதலான நோய்களும் விலகும்.
தர்மபுத்திரனே! நீ நல்லறிவு பெற்று, மோட்சத்தை அடையவும். சம்ஸாரத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்றும் விரும்புவாயானால் உடனே பரமனுக்கு விளக்கேற்றி அர்ச்சிப்பாயாக என்று கூறினார் நாரதர்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

நாமும் கார்த்திகை சோமவார விரதம் இருந்து, இல்லங்களில் அதிகாலையிலும் மாலை வேளையிலும் விளக்கு ஏற்றி வழிபடுவோம். செல்வமும் புகழும் நிலைபெற்று, நல்ல நிலையை அடைவோம்.

  • வரதராஜன்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img