ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை மின் திட்டங்கள் மாற்றம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கடும் ரகளையில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அவர் தொடங்கியதும், ஆளும் கூட்டணி அரசு அறிவித்த குறைந்தபட்ச செயல்திட்டத்தில் ஒன்றைக் கூட செயல்படுத்தவில்லை என தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மின்திட்டங்கள் மாற்றம் உள்ளிட்ட பல விஷயங்களில் அரசு பொய்யான தகவல்களைக் கூறி மக்களை தவறாக வழிநடத்துவதாக, தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலை அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் அவைத்தலைவர் அவர்களை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். ஆனால், எதிர்க்கட்சியினர் இதற்கு ஒத்துழைப்பு அளிக்காததால், காவலர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு எம்,.எல்.ஏ. உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை போர்க்களம் போல் காட்சியளித்தது.
Popular Categories