
பிளாஸ்டிக் பொருட்களால் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து அதன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்பு உணர்வு பிரசாரம் அதிகம் செய்யப் பட்டு வருகிறது.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்பு உணர்வு பிரசாரம் அதிகம் மேற்கொள்ளப் பட்டாலும், அது மக்களிடம் முழுமையாக சென்றடைய வில்லை.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சத்ய நாராயணன் தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளார்.

அதன் படி, அனந்தபூரை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றும் முயற்சியாக ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்துக்கான தொடக்க விழா குண்டக்கல்லில் நடந்தது. இத்திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆட்சியரின் இந்தப் புதுமையான திட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட பல தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.



