ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கி நாடாவில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் ஷீரடிக்கு நேற்று ஷீரடி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் விஜயவாடா அஜித்சிங் நகரில் மெதுவாகச் சென்றபோது திடீரென எஞ்ஜினை விட்டு ரயில் பெட்டிகள் தனியாகக் கழன்று ஓடின.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் எஞ்சின் தனியாகச் சென்ற நிலையில், திடீரென சுதாரித்துக் கொண்ட எஞ்சின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதற்கிடையே ரயில் பெட்டிகள் மட்டும் தனியாகச் செல்வதை அறிந்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு அவசர அவசரமாக கீழே இறங்கினர்.
தகவலறிந்த விஜயவாடா ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரத்தில் எஞ்சினுடன் பெட்டிகளை இணைத்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த ரயில் பெட்டிகள் கழன்றதாகவும் இனி அதுபோன்று நடைபெறாது எனவும் பயணிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் ஷீரடிக்கு ரயிலை அனுப்பி வைத்தனர். ரயில் மெதுவாகச் சென்றதால் அதிகபட்சம் பெரிய அளவில் நடக்கவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது என்று இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.