திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் பலர் தரிசனம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வியாழக்கிழமை முதல் முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 3,000 தரிசன டிக்கெட்டுகள் ‘ஆன்லைன்’ மூலமும் 3,000 டிக்கெட்டுகள் நேரடி முன்பதிவு டோக்கன்கள் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஏற்பாட்டில் ஆன்லைன் டிக்கெட்டுகள் ஜூன் 30ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேரடி தரிசன டோக்கன்கள் ஜூன் 17ம் தேதி வரை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இதை அறியாத பக்தர்கள் சிலர் திருப்பதிக்கு வந்து தரிசன டோக்கன் பெற சீனிவாசம் விஷ்ணுநிவாசம் அலிபிரி உள்ளிட்ட இடங்களில் காத்திருந்தனர்.
பக்தர்கள் வரிசையில் பெருமளவு காத்திருந்ததால் அங்கே வந்த ஊழியர்கள் தரிசன டோக்கன்கள் 17ம் தேதி வரை வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். ஆனால், மேலும் ஐந்தாறு நாட்கள் திருப்பதியில் தங்க முடியாத நிலையில், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பக்தர்கள் சிலர் அடிவாரப் பகுதியான அலிபிரியில் டோக்கன்கள் கிடைக்காது மலைக்கு மேலே சென்றால் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் திருமலை பஸ்ஸில் ஏறி சென்றனர் ஆனால் அங்கும் சென்று உண்மை நிலையை அறிந்த பிறகு ஏமாற்றத்துடன் மீண்டும் அடிவாரத்திற்கு திரும்பி வந்தனர்
இந்நிலையில் பக்தர்களுக்கு தரிசன டோக்கன் அல்லது டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பேருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது